Thursday, December 14, 2006

கவி 26:டிசம்பர் பக்கங்கள்

டிசம்பர் மாதம்..
போர்வைக்குள் தூக்கம்..
மெதுவாய் திறக்கும்
என் இமைகளின்
இடையினில்
பூக்களைச் செருகிச்
செல்கிறாய்...

உன் புன்னகை..

சூடு பறக்கும்
காலைக் காபி..
ம்ம்ம் பருகும் போது
பரவசம்....
கோப்பை நுனியில்
மிச்சமிருப்பது

உன் முத்தம்...

போர்வை விலக்கிச்
சோம்பல் முறிக்க...
தேகம் நெளிக்கிறேன்..
என் செல்கள்
ஒவ்வொன்றிலும்
முந்தைய இரவினில்
குடிப் புகுந்த

உன் வெட்கம்...

ஜன்னல் வழியே
குளிர் காற்று
முகத்தில் அறைய
மூச்சு காற்றில்
மிஞ்சி நிற்கும்

உன் வெப்பம்.....

சன்னமாய் ஒலிக்கும்
சின்னதொரு பறவைக்
குரலின் வழியே
என் விடியல்
அறிவிக்கும்

உன் சிணுங்கல்...

இப்படி
டிசம்பர் மாதம்
என் டைரியின்
மொத்தப் பக்கங்களும்
சேமித்து வைத்திருப்பது

உன் காதல்...

Tuesday, December 05, 2006

கதை11:அப்பா - பாகம் 2

அப்பா பாகம் 1

மறுபடியும் பஸ் கிளம்பிப் போகவும் நான் டீ குடிச்சு முடிக்கவும் சரியா இருந்துச்சு.


சென்னையிலே ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலே எனக்கு வேலைக் கிடைச்சு வாழ்க்கை ஒரு மாதிரி ஓட ஆரம்பிச்சது. ரஞ்சனியும் சென்னைக்கு வந்துட்டா, ஒரு அனிமேஷன் கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்துட்டா. அப்புறம் என்ன எங்கள் காதல் நாளுக்கு நானூறு எஸ்.எம்.எஸ் முந்நூறு மிஸ்ட் கால், இரு நூறு ஈ மெயில்ன்னு எல்லா சாப்ட்வேர் மக்கள் காதல் மாதிரி ரொம்ப ஜோராவே வளர்ந்துச்சு.

ஒவ்வொரு நாளும் ரஞ்சனி என் வாழ்க்கையில் எனக்கு கடவுளால் கிடைத்தப் பொக்கிஷ்ம்ன்னு வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் என்னைப் பார்க்க ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் லேசாப் புன்னகைத்தார். அவர் முகத்தில் அந்த புன்னகையையும் மீறி ஒரு பயங்கர அழுத்தம் இருந்ததை என்னால சட்டுன்னு கவனிக்க முடிஞ்சது. கவனிச்சேன்.

"நீங்க தானே அஸ்வின்?"

"ஆமா.. ஆனா நீங்க யார்ன்னு எனக்குத் தெரியல்லயே? " என்று தாடையில் கை வைத்து சாக்ரட்டீஸ் போஸ் கொடுத்தேன்.

"நான் அப்பா.. ரஞ்சனியோட அப்பா.." என்று மறுபடியும் புன்னகைத்தார் அந்த மனிதர். நான் தடுமாற்றமாய் கைக்குலுக்கினேன்.

"உங்க் கூடக் கொஞ்சம் பேசணும்.." என்றார் ரஞ்சனியின் அப்பா.

"ஸ்யூர்..." என்ற படி அலுவலக நண்பனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் செய்து அவசர வேலையா ஒரு மணி நேரம் வெளியே போறேன் அந்த மொக்கை மேனேஜரை எதாவதுச் சொல்லி சமாளிடான்னு சொல்லிட்டு ரஞ்சனியின் அப்பாவோடு கிளம்பினேன்.


அன்று மாலை ரஞசனியை நுங்கம்பாக்கம் காபி டேவில் சந்திக்கும் போது என் முகத்தில் சந்தோஷம் இல்லை.

"ரஞ்சு உண்மையாவே நீ என்னை லவ் பண்றீயா சொல்லு?"

"ஏன் நாலு வருஷமா வராத சந்தேகம் இப்போ திடீரென்னு வந்து இருக்கு.. உனக்கு என்னாச்சு?" அந்த மீன் கண்கள் என்னைக் கொக்கிப் போட்டப் படி பார்த்தன.

"ரஞ்சு நான் உங்க அப்பாவைப் பார்த்தேன்..பேசினேன்...உனக்கு அப்பா இல்ல செத்துப் போயிட்டார்ன்னு என் கிட்ட எதுக்காகச் சொன்ன?"
அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து திரும்பி கொண்டேன்.. ரஞ்சனி எதுவும் பேசாமல் கட கடவென எழுந்து காபி டேவை விட்டு வெளியே நடந்தாள்.

எனக்கு என்ன செயவது என்றே தெரியவில்லை.. காபி ட்ரேவோடு என் முன் நின்ற சர்வரின் பரிதாபப் பார்வை இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. காபிக்கான பணத்தை அவசரமாய் பர்சில் இருந்து எடுத்து அவனிடம் கீப் த சேஞ்ச் சொல்லிக் கொடுத்து விட்டு ரஞ்சனியைத் தேடி ஓடினேன். பார்க்கிங்ல் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டி பெப்ல் அவள் ஏறி உட்கார போன நேரம் நான் குறுக்கேப் போய் கைக் கட்டிக் கொண்டு நின்றேன்.

"என்னை அப்படிப் பார்க்காதே.. நான் அழுதுடுவேன் " என்றாள் ரஞ்சனி

" ஏய் ஏய் இப்போ எதுக்கு அழுவாச்சி...ஏய் ரஞ்சு"

ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வந்தவள் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

"ப்ளீஸ் எங்க அப்பாவைப் பத்தி என் கிட்ட பேசாதே.. " அவள் கெஞ்சல் பார்வையில் எனக்கு மொத்தமும் உருகிப் போனது.

நான் ரஞ்சனியைத் தான் காதலிக்கிறேன் அவங்க அப்பா கதை எனக்கு எதுக்குன்னு அப்படியே ரஞ்சனியின் அப்பாவோடு எனக்கு நடந்த சந்திப்பை மொத்தமாய் மறந்துப் போனேன். காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை.

பின்னொரு நாளில் மெரீனாப் பீச்சில் ஒரு மாலைப் பொழுதினில் ரஞ்சனி நான் கேட்காமலேப் பேசினாள்...

"அஸ்வின்...எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார்.."

"இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரா?"

"தெரியாது.. எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க"

"எனக்கு அப்பாங்கற மனுஷன் தேவைப் படும் போது அவர் வர்றல்ல.. இப்போ அவர் எனக்குத் தேவையே இல்ல.. "

அப்பா என்ற உறவினை உதறி ஒதுக்கியதற்கானக் காரணத்தை ஒரே வரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டாள் ரஞ்சனி..

"எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணாலும் என்னை ஒதுக்கல்ல.. எதோ ஒரு ஹாஸ்ட்டல்ல சேத்து எதோ ஒரு வழியிலே எனக்குக் கரை சேர வழி காட்டுனாங்க...கண்ணன் சார் எனக்கு அப்பாவாக முடியல்லன்னாலும் ஒரு பாதுகாப்பாவது இருந்தார்"

"கண்ணன் சார் யார்?"

"எங்கம்மாவோட இரண்டாவது புருஷன்"

"அப்பாவாம் அப்பா.. எங்கேப் போனார்.. அவரைத் தேடி நான் காத்திருந்த சாயங்காலங்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் கூட அவருக்கு திரும்பி வர்ணும்ன்னு தோணல்லியே"
ரஞ்ச்னியின் கண்கள் கலங்கவில்லை. உதடுகள் ஒவ்வொரு மூறையும் அப்பா என்ற சொல்லை உச்சரிக்கும் போது துடித்தன.

நான் மௌனமாகவே இருந்தேன்.

"அஸ்வின் உனக்கு இது புரியாது .. இது இருபதைஞ்சு வருஷக் கோபம்... ஏக்கம்... தவிப்பு...வலி.. உறவுகள் வார்த்தையில் மட்டும் இல்ல.. அது ஒரு வாழ்க்கை அஸ்வின்.. பொறுப்புக்களைச் சுமந்து செய்யணும் அஸ்வின்.. இல்லன்னா HELL WITH ALL THE RELATIONS"

பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையன் ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு ஒரிரண்டு சுண்டல் பாக்கெட்டுகளைத் தரையில் சிதற விட்டான்.

அதுக்குப் பிறகு ரஞ்சனியிடம் அவள் அப்பாவைப் பற்றி பேசுவதைக் கூடுமானவரை தவிர்த்தேன். அதையும் மீறி எப்போதாவது அந்தப் பேச்சு வந்தால் ரஞ்சனியின் அப்பா கோபம் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

இதற்கு பிறகு எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடந்தது. கண்ணன் சாரும் ரஞ்சனியின் அம்மாவும் வந்து ஆசிர்வதித்தார்கள். அவங்கப் பசங்க கூட வந்திருந்து வாழ்த்துனாங்க.. ரஞ்சனியின் அப்பாவும் என்னுடைய விருந்தாளியாய் வந்து மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று எங்களை ஆசிர்வதித்தார்.

அதே ஊரில் எங்கள் இல்லறம் இனிதாய் தழைத்து ஓங்கத் துவங்கியது. சின்னச் சின்னச் சண்டைகள் அப்பப்போ ஊடல்கள் பின்னாடியே தொடரும் கெஞ்சல்கள் அப்புறம் கொஞ்சல்கள்ன்னு வாழ்க்கை நல்லாப் போச்சு.

ரஞ்சனிக்குத் தெரியாமல் மாதம் ஒரு முறை அவ அப்பாவை நான் போய் பார்த்துட்டு வர்றதை வழக்கமாக்கிட்டேன். ரஞ்சனிக்கும் அவ அப்பாவுக்கு உள்ள பல் ஒற்றுமைகளை என்னால உணர முடிஞ்சது... நாங்க நல்ல நண்பர்கள் ஆனோம்...எப்படியும் ஒரு நாள் ரஞ்சனியும் அவ அப்பாவையும் ஒண்ணு சேர்த்துடலாம்ன்னு நான் நம்பிகிட்டு இருந்தேன்..

இந்த நிலையிலேத் தான் எனக்கும் அவருக்குமான அந்தக் கடைசி சந்திப்பு நடந்துச்சு...

"அஸ்வின்.. தேங்க்ஸ்.. நீங்க எனக்குச் செயத் எல்லா விஷயங்களுக்கும் நன்றி"

அவர் இப்படி பேசும் போது எனக்கு ஒண்ணும் புரியல்ல. அவர் கையிலே ஒரு பழைய டைரி இருந்துச்சு. அதை என் கிட்ட நீட்டுனார். நான் அதை மறுக்காம வாங்கிகிட்டேன்.

"அஸ்வின் நான் அதிக நாள் இருப்பேன்ங்கற நம்பிக்கை எனக்கு இல்ல.. யூ நோ என் ஹெல்த் என்னுடையக் கன்ட்ரோல்ல இல்ல.. ஐ அம் டையிங்..." மறுபடியும் ஒரு புன்னகை.

"என்னுடைய வாழ்கையை நான் முடிக்கப் போறேன்.. ஆனா அதுல்ல முற்று புள்ளி அரையும் குறையுமாத் தான் இருக்கும்.. இந்த டைரி ரஞ்சனிக்கு நான் எழுதுனது.. ஆனா எந்தக் காரணம் கொண்டும அவ இதைப் படிக்கவோ பார்க்கவோ கூடாது.. என்னுடைய பாரத்தை உங்க மேல இறக்கி வைக்கிறேன்.. ஐ யாம் சாரி...."

"சார்.. உங்களுக்கும் ரஞ்சனிக்கும் ஏன் இந்த இடைவெளின்னு என்னால புரிஞ்சிக்க முடியல்ல.. நீங்க தப்பு பண்றவர் மாதிரியும் இல்ல...பட் இருந்தும்..." என நான் நீட்டி முழக்கினேன்.

"ரஞ்சனி அம்மாவை வேற பொண்ணுக்காக நான் விட்டுட்டு வர்றல்ல.. அவங்க அம்மா தான் என்னை இன்னொருத்தருக்காக விட்டுட்டுப் போயிட்டாங்க.." அதிராமல் அலட்டாமல் பேசினார் ரஞ்சனியின் அப்பா.

"கண்ணன் சாரா..." எனக்கு விக்கி வியர்த்துப் போச்சு.

"ப்ச் அது பத்தி பேச வேண்டாமே...தப்பு சரின்னு எதுவும் இல்ல...LET US GET ON WITH LIFE" மென்மையான குரலில் அமைதியாய் சொன்னார். புன்னகைக்க முயன்றார். அவர் முகம் மேலும் விகாரமடைந்தது.

அப்புறம் அவரோட சதாம் உசேன்ல்ல இருந்து இந்தியன் கிரிக்கெட் வரை பல விஷயங்கள் பேசிகிட்டு இருந்துட்டுக் கிளம்புனேன்.

அதுக்கு பிறகு இப்போ தான் அவரைப் பாக்கப் போறேன்...ஆனா அவர் என்னைப் பார்க்கப் போறதும் இலல் பேசப் போறதும் இல்ல..... கண் முழிச்சுப் பார்த்தப்போ பஸ் சேலம் புறநகரை அடைந்திருந்தது.

அவர் கொடுத்த டைரியை பையிலிருந்து எடுத்துத் திறந்துப் பார்த்தேன்...

அதில் ரஞ்சனிக்கு அவர் சேர்த்து வைத்திருந்த சொத்து விவரம்... ரஞசனியின் எல்.கே.ஜி காலம் முதல் கல்லூரி காலம் வரை அவள் அம்மா அவளுக்குச் செய்ததாய் ரஞ்சனி இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டிருக்கும் அனைத்துச் செலவுகளுக்கான கணக்குகளும் தேதி வாரியாக தக்க ஆதாரங்களோடு இணைக்கப் பட்டிருந்தன...

கடைசி பக்கத்துல்ல அவரோடக் கையெழுத்தில்...

ரஞ்சு நான் உலகத்தின் சிறந்த அப்பாவா இல்லாமப் போயிருக்கலாம் ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசமான அப்பா இல்லம்மா....

எனக்குள் என் உணர்வுகளை அடக்க முடியவில்லை.. என் கிட்ட எதுக்கு இந்த டைரியைக் கொடுக்கணும்.. கொடுக்காமப் போயிருக்கலாமே.. இந்த சுமையை நான் எதுக்கு சுமக்கணும்....

எங்கிருந்தோ ரஞ்சனி அப்பாவின் குரல் என் காதில் கேட்டது...

"அஸ்வின்.. இனிமே நீ தானப்பா ரஞ்சனிக்கு அப்பா.... என்னுடைய அன்பையும் சேர்த்து அவளுக்குக் கொடுப்பீயா"

என்னப் பதில் சொல்வேன்...I THINK I HAVE A LIFE TIME TO ANSWER THAT QUESTION...!!!

Monday, December 04, 2006

கதை11:அப்பா - பாகம் 1

ஜன்னல் ஓரமாய் இருந்த தொலைபேசி அறையின் மௌனத்தைக் கிழிக்கிற மாதிரி அலறியது. வெளியே மழை நின்னும் நிக்காமலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

ரஞ்சனி சோபாவில் காலை மடிச்சுகிட்டு உட்கார்ந்து இருந்தாள். விரல் நகத்தை விடாம கடிச்சுகிட்டே விட்டத்தைப் பார்த்துகிட்டு இருந்தா. தொலைபேசி சத்தம் கேட்டதும் அவளோட அந்த மீன் கண்கள் இன்னும் பெரிசாவே விரிஞ்சுப் போச்சு. அந்தக் கண்ணைப் பார்த்து தானே அவ மேலே காதலாகி கசிந்துருகி இப்போ கணவனாகி..ம்ம்ம் இப்போதைக்கு என் நிலைமையை இதுக்கு மேல விவரிக்க விரும்பல்ல.

தொலைபேசி இன்னும் அலறிகிட்டே தான் இருக்கு... நான் ரஞசனியைப் பார்க்க ரஞ்சனி வேணும்னே என்னையும் தொலைபேசியின் அலறலையும் தவிர்க்கற மாதிரி வேற எங்கேயோ பார்வையைத் திருப்பிகிட்டா.

எனக்கு ரஞ்சனி மேல கோபம் கோபமாய் வந்தது.

"ரஞ்சு.. போன் அடிக்கறது உன் காதுல்ல விழ்றதா இல்லையா?"

பதில் இல்லை.

"ரஞசு நான் உன் கிட்டத் தான் சொல்லுறேன்... "

மறுபடியும் பதில் இல்லை.

இதுக்கும் மேல அவகிட்டச் சொல்லி புண்ணயமில்லன்னு நான் போய் தொலைபேசியைக் கையில் எடுத்து ஹலோ சொன்னேன்...

மறுமுனையில் பேசியவருக்கு ம் கொட்டியபடி ரஞ்சனியை பார்த்தேன். ரஞ்சனி இப்பவும் என்னைப் பார்க்கவில்லை. நான் தொலைப்பேசியைக் கீழே வைச்சுட்டு ஜன்னலைப் பார்த்துட்டு நின்னேன். மழை கொஞசம் வேகமெடுத்த மாதிரி இருந்துச்சு.

ரஞ்சனிப் பக்கம் திரும்பாமல் அறைக்குள் போனேன். அவசர அவசரமா டிராவல் பேக்கல்ல இரண்டு நாளுக்கு தேவையான துணிகளை எடுத்துப் போட்டுகிட்டு மறுபடியும்
ஹாலுக்கு வந்தேன்.

ரஞ்சனி கையிலே டிவி ரிமோட்டை வச்சுகிட்டு கன்னாபின்னான்னு சேனலை மாத்திகிட்டு இருந்தா. என் பக்கம் திரும்பவே இல்லை.

டிவி ரிமோட்டை அவ கையிலே இருந்து வலுக்கட்டாயமாப் பிடுங்கிட்டு அவ கண்களுக்கு நேரா என் கண்களைக் கொண்டு போனேன்...பல முறை நான் பார்த்து பார்த்து பரவசமடைந்த கண்கள் அப்போ அங்கே இல்லை... ஒரு வித வெறுப்பும் கோபமும் எரிச்சலும் அந்தக் கண்களின் அழகினைத் திரைப் போட்டு மறைத்துக் கொண்டிருந்தன.

"லுக் ரஞ்சு... எல்லாம் முடிஞ்சுப் போச்சு... உன்னோட புருஷனா இல்ல.. நல்ல நண்பனாச் சொல்லுறேன்.. எல்லாத்தையும் மறந்துட்டு கிளம்பு"

ரஞ்சனி தன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.. என்னை வெறி வந்தார் போல எட்டிப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவக் கண்களில் கண்ணீர்...

"அஸ்வின்.. யூ நோ...HOW MUCH I HATE HIM..?" ரஞ்சனி கட்டுபடுத்தக் கூடிய நிலையில் இல்லை. வெடிக்க தயாராக் இருக்கும் ஒரு எரிமலை மாதிரி இருந்தா.

"எஸ் ஐ நோ... நல்லாத் தான் தெரியும்.. அதனாலத் தான் சொல்லுறேன்...அந்த வெறுப்பை எல்லாம் நீ சுமந்தது போதும்.. வா..வந்து தூக்கி எறிஞ்சுட்டு வந்துடலாம்"

ரஞ்சனி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...அவள் கோபத்தை என் மீது காட்டாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்து தோத்துக்கிட்டு இருந்தா. அந்த நிமிடம் நான் ரஞ்சனியை இன்னும் அதிக அதிகமாய் காதலிச்சேன்...

அவளை விட்டு இரண்டு அடி தள்ளி நின்னேன்...

"மரணத்துல்லக் கூட மன்னிக்க முடியாத தப்புன்னு எதுவும் இல்ல ரஞ்சு... ப்ளீஸ் உங்க அப்பாவும் ஒரு மனுஷன் தான்..அவரை மன்னிக்க முயற்சி பண்ணு..."

அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் நான் வாசல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போய் சேலம் செல்லும் பேருந்தைத் தேடிப் பிடிச்சு ஏறி உட்கார்ந்துகிட்டேன்.

பஸ் கிளம்புறதுக்கு முன்னாடி என் மனசு கிளம்பிடுச்சு..ரிவர்ஸ் கியர் போட்டுகிட்டு பின்னாடி போக ஆரம்பிச்சுடுச்சு..

1999 எம்.சி.ஏ படிக்க மதுரைப் போயிருந்த நேரம்...அங்கேத் தான் ரஞ்சனிய முதன் முதலாச் சந்திச்சேன்.. ரஞ்சனி நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா கலகலப்பு என்பது மருந்துக்கு கூட அவக் கிட்ட கிடையாது. சரியான் சுடுமூஞ்சி.. சுள்ளுன்ணு கோபம் வரும்...யார் கிட்டயும் பேசமாட்டா.. அப்படியே மீறி பேசினாலும் நறுக் தெறிச்சா மாதிரி வெடுக்குன்னு பேசி காயபப்டுத்திடுவா. எனக்கு கலகலப்பா நம்ம ஜோதிகா மாதிரி பொண்ணுங்க தான் இஷ்ட்டம் அதுனால இவ இருக்கற பக்கம் சைட் அடிக்கக் கூட திரும்புனது இல்ல.

ஆனா எப்போ எப்படி என் கவனம் பக்கம் திரும்பிச்சுன்னு எனக்கேத் தெரியல்ல...ஒரு நாள் எதேச்சையா அவளோட நோட் புக் ஒண்ணைப் புரட்டும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது..அதுல்ல முழுக்க முழுக்க கவிதை.... எல்லாம் அந்த சுடுமூஞ்சி தான் எழுதியிருந்துச்சு.. படிச்ச எனக்குச் சுத்தமா நம்பிக்கையே வர்றல்ல... அப்படி கவிதைகளை அந்தச் சுடு மூஞ்சியால எழுத முடியுமான்னு...

அவ்வளவு ரசனையான வரிகள் படிச்ச என் மனசை என்னவோ பண்ணிடுச்சு...

நான் நல்லா வரைவேன்...உண்மையாவே.. சரின்னு சுடுமூஞ்சி எழுதுன ஒவ்வொரு கவிதைக்கும் உட்கார்ந்து ஏத்த மாதிரி பென்சில் ஸ்கெட்சஸ் வரைஞ்சு... சுடுமூஞ்சி கிட்டக் கொண்டு போய் நீட்டுனேன்.. ஆனாப் பாருங்க அந்த சுடு மூஞ்சி ஈவு இரக்கமில்லாமல் படங்களை அரையும் குரையுமாப் பார்த்துட்டு

"என்ன இது கிறுக்குத் தனமா படமெல்லாம் வரைஞ்சுகிட்டு... லவ் பண்றீயா?" அப்படின்னு வெடுக்குன்னு கேட்டிருச்சு.

எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல்ல...

"ம்ஹ்ம் உன்னை லவ் பண்ணல்ல... ஆனா கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி எல்லாம் பெத்துகிட்டு கடைசி வரைக்கும் நீ எழுதுற கவிதைக்கெல்லாம் இப்படி கிறுக்குத் தனமாப் படம் வரைஞ்சிகிட்டே செத்துப் போயிடணும் அவ்வளவு தான்" அப்படின்னு மூச்சு விடாமச் சொல்லிட்டு சுடுமூஞ்சியைத் திரும்பிப் பார்க்காமல் போயிட்டேன்..

"ஹேய் உனக்குப் பைத்தியமா?" சுடு மூஞ்சி எனக்குப் பின்னால் கத்தியது என் காதில் நல்லாவே கேட்டது. நான் திரும்பவில்லை.

"யூ ... என்னப் பண்ணிட்டு போற...இடியட்.." அன்று வரை சுடுமூஞ்சி அவ்வளவு அலறலாய் கத்தி நான் மட்டுமில்லை எங்க காலேஜ்ல்ல யாருமே கேட்டது இல்ல. மதுரைப் பொண்ணுங்க எல்லாத்துக்கும் சவுண்ட் ஜாஸ்திம்பாம்ங்க.. நம்ம சுடுமூஞ்சியும் அதை அன்னிக்கு நிருபிச்சிடுச்சு.

அதுக்கு அப்புறம் அவ் கிட்ட நான் மூஞ்சிக் கொடுத்துப் பேசவே இல்ல,. ஆனா சுடுமூஞ்சி என்னை ஓரக் கண்ணாலேப் பார்த்துக்கும். அதையே நான் கவ்னிச்சுட்டா அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஒரு போஸ் கொடுப்பா. அவக் கூட வார்த்தையாலேப் பேசல்லயே தவிர அவளை வரையாத நாளே கிடையாதுன்னு சொல்லலாம்.

பச்சைக் கலர் சுரிதார்ல்ல ஒரு படம்...அந்தச் சுரிதார்ல்ல அவ ஒரு தேவதை மாதிரி இருப்பா.. அந்தச் சுரிதார்ல்ல இருக்கும் போது மட்டும அவ உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை இருந்துட்டே இருக்கும் ( எல்லாம் நம்ம நினைப்பு தான்)..முன் நெத்தியிலே முடி கத்தையா வந்து விழுற மாதிரி நான் வரைஞ்சதலே எனக்கு ரொம்ப பிடித்தமான படம்.. தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி அந்த படத்துக் கூட ஒரு ரெண்டு மணி நேரமாவது கடலை போடாமல் நான் தலைச் சாயச்சதாச் சரித்திரமும் இல்ல பூகோளமும் இல்ல.
என் ரூம் மேட் தூக்கம் என்னால் பறி போனது தனி கதை..காதலிச்சுப் பாருங்கப்பா அர்த்த ராத்திரி உளறல்கள் இலக்கியமாத் தெரியும்..

இப்படியே கல்லூரி முடியற நாளும் நெருங்கி வந்துடுச்சு. வெறும் படம் மட்டும் வாழ்க்கைக்குப் போதாதுன்னு முடிவு பண்ணிட்டு நேரா சுடுமூஞ்சியப் பாக்கப் போனேன்.

"ம்ம் சொல்லு எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?" அப்படின்னு தைரியாமவே கேட்டுட்டேன். சுடுமூஞ்சி அடிச்சு வைக்கப் போகுதுன்னு ரெண்டு அடி கேப் விட்டெ நின்னேன். ஆனாப் பாருங்க சுடுமூஞ்சி துளி கூட கோபப் படமா கக்கபிக்கன்னு என்னைப் பார்த்து சிரிச்சுடுச்சு. எனக்கு வானம் தலையிலே முட்டுன மாதிரி இருந்துச்சு.. அந்த கணம் பாய்ஸ் பாட்டு எகிறி குதித்தேன் என்னைச் சுத்தி கேக்குது...

கையிலிருந்து ஒரு கவிதை நோட் புக்கை எடுத்து என் கையிலேக் கொடுத்து
"இந்தக் கவிதைக்கெல்லாம் எப்போ நீ படம் வரைஞ்சு முடிக்கிறியோ அந்த நிமிஷமே நான் உன்னக் கட்டிக்க ரெடி"
அப்படின்னு ரெண்டு கண்ணு முழுக்க சிரிப்பு வழிய என்னைப் பார்த்தா... அந்தப் பார்வை ஒண்ணு போதுமே....இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும் உன்னோடத் தான் என் வாழ்க்கை அமையணும்ன்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டேன்..

பஸ் பிரேக் சத்தம் ஞாபகத்தைக் கலைச்சு விட்டிருச்சு... எழுந்து உட்கார்ந்தேன்...திண்டிவனம் மேம்பாலம் கண்ணில் தெரிந்தது...

பாகம் 2

Friday, November 17, 2006

கவி 25:இன்னும் பெய்யும் மழை - 2

காலம்
உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது
நீ எனக்குக்
காதலை
அறிமுகம் செய்தாய்....

----------------------------

கண்ணாமூச்சி
உனக்கு பிடித்த
விளையாட்டுத் தானே
கண்டுபிடியேன்
எனக்குள் ஒளிந்திருக்கும்
உனக்குரிய காதலை...

---------------------------------


எனக்காக இல்லை...
என்று தெரிந்தும்
எடுத்து பத்திரமாய்
சேமித்து வைக்கிறேன்...
நீ பாதையோரமாய்
வீசிச் செல்லும்
உன் பார்வைகளை..
-----------------------------------

வந்துப் போனது
நீயா....
என்று திரும்பி பார்க்கிறேன்
கேசம் கலைத்துச்
சென்ற காற்றின்
திசை நோக்கி...

---------------------------------
உன் கோபம்
எனக்குப் பிடிக்கிறது
அதன் இலக்கு
நானாக இருப்பதினால்...

----------------------------------

சிலப் போர்கள்
எப்போதும் ஓய்வதில்லை
என் பார்வைகளும்
உன் மௌனங்களும்...

-------------------------

ஒதுங்கிச் சென்றாலும்
அடிக்கடிச் சந்தித்து
சித்ரவதைச் செய்கினறன
உன் பார்வைகள்

------------------------------

பார்வைகளால்
பேசியது போதும்
இதழ்களால்
ஓரிரண்டு வார்த்தைகள்
எழுதக் கூடாதா?

-------------------------------

ம்ம்ம்
என் நிழலுக்கு
கிடைத்தப் பாக்கியம்
எனக்கு இல்லை
உன் நிழலைத்
தழுவிய படி
என் நிழல்

-----------------------------
எதையாவது கேள்
எதையாவது சொல்
...
நீ பேசவில்லை
உன் விழி பேசியது
என் விரல் நுனியில்
உன் கண்ணீர் துளி

Tuesday, November 07, 2006

கவி 24:இன்னும் பெய்யும் மழை - 1

என்னில் இருந்து
உன்னையும்
உன் நினைவுகளையும்
வேரோடுப் பிடுங்கி
எறிந்து விட்டதாய்
நினைத்து
உன்னைப் பார்த்தேன்
உன் பார்வையால்
உன்னை மீண்டும்
எனக்குள்
விதைத்து விட்டு
மழைக்கால மின்னல் போல்
புன்னகைத்தாய்...

-----------------------------

ம்ம் குடை எதற்கு
என் தாவணி போதும்
நம் இருவருக்கு

மழைக்குக் குடை
விரிக்கப் போன
என் மீது கோபப்பட்டாய்...

-------------------------------

சில புயல்கள்
கரையைக் கடப்பதில்லை
தெரியுமா உனக்கு?

அப்படியா?
அகல விரிந்த
உன் விழிகள்
பார்த்து சொன்னேன்..

என் இதயத்தில்
மையம் கொண்டிருக்கும்
நீயும் ஒரு புயல் தானே..

---------------------------


மழை முடிந்தப் பின்னும்
இன்னும் மலர்களில்
மிச்சமிருக்கின்றன
உன் வெட்கத்தின்
வண்ணங்கள்
-----------------

ஒரு வார்த்தைச்
சொல்லிட்டுப் போ

போதுமா!!!

என் உதடுகளில்
ஒரு வாக்கியமே
எழுதிவிட்டு

கேலியாய் கேட்டாய்
என்னிடம்..

-----------------------------

மழைக் காலப் பரிசா
ஏதாவது கொடுக்கச்
சொல்லிக் கேட்டாய்...

கவிதை வேண்டுமா
என்றேன்...

ம்ம்ம் சரி என்றாய்..

மழலைகளை விட
சிறந்தக் கவிதை
வேறு உண்டோ
என்றேன்...

நீயோ
ச்சீ போடா
என்றாய்...
----------------------------

மழை இன்னும் பெய்யும்......

Wednesday, November 01, 2006

கதை10: கதிரேசன் கதை - பகுதி 3

கதிரேசன் கதை - பகுதி 1

கதிரேசன் கதை - பகுதி 2

மாலைக் காற்று முகத்தில் மோதி ஆனந்தனின் கேசம் கலைத்துப் போட்டது. ஆனந்தனின் தோள் பிடித்து மெல்ல மெல்ல நடந்த தாஸ் வாத்தியாரின் நடையில் கொஞ்சம் தெம்புத் தெரிந்தது.

மதிகெட்டான் சோலை நோக்கி இருவரும நடந்துச் சென்ற குறுக்குப் பாதை ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. பாதையில் கட்டுபாடின்றி வளர்ந்திருந்த பச்சை தாவரங்களின் வாசம் உணர்வுகளை வருடியது. அந்த பாதை ஓரங்களில் ஒளிந்திருந்த வருணணைக்கு மீறிய இயற்கையின் அமைதியும் அதன் அர்த்தங்களும் ஆனந்தனின் மனத்தை பாரமாய் அழுத்த ஆரம்பித்தன.

தாஸ் வாத்தியார் அவன் தோள் பிடியில் இருந்து கையை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் நின்றார். நிலத்தைப் பார்த்து எதையோத் தேடினார். இலைகளும் சருகுகளும் கோபுரமாய் குவிந்துக் கிடந்த இடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டார். தீடிரெனத் தன் வயதுக்கும் மீறிய சக்தியோடு கைகளால் அந்தக் குப்பைகளை அப்புறப் படுத்தத் தொடங்கினார்.அந்த குப்பைகளுக்குக் கீழே அழுக்கு அடைந்து உடையும் நிலையிலிருந்த சமாதியை வாஞ்சை ததும்பியக் கண்களோடு பார்த்த வண்ணம் பார்வையை நிறுத்தினார்.

"கதிரேசன் இங்கிட்டுத் தான் தூங்குறான்..." வார்த்தைகள் தெளிவாய் வெளிவந்தன. அவர் குரல் பல வருடங்களுக்கு முன்பிருந்த மாதிரி ஒலித்தது. ஆனந்தன் அதைக் கவனிக்காமல் அந்தச் சமாதியை வேதனைக் கலந்த உணர்வுகளோடு பார்த்தப் படி நின்று கொண்டிருந்தான்.அப்பொழுது அவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் சமாதியின் அழுக்குப் படிந்துப் பழுப்பேறிய இடங்களில் விழுந்துக் கொண்டிருந்தன. அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

கண்ணீர் விழுந்த இடம் கண்டு தாஸ் வாத்தியார் இதழ்களில் ஒரு அழுத்தமான புன்னகை தோன்றியது.

அங்கு சூழந்த அமைதியின் காரணமாய் ஆனந்தன் மனம் பின்னோக்கி பயணமானது. கதிரேசன் உடல் ஊர் வீதியில் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்...

"ககதிரை எப்படியாவது காப்பாத்தணும்... அ அவன் நல்லவன்.." தனக்குத் தானே பேசிக்கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான் ஆனந்தன்.

"மாமா..."

ஆனந்தனின் உயிர் மூலையில் அவன் ரகசியமாய் பதிந்து வைத்திருந்த செண்பகத்தின் குரல் மிகவும் பக்கத்தில் கேட்டப் போது அவன் சிலிர்த்துப் போனான். தன் கவலைகளை ஒரு கணம் காணாமல் அடித்து விட்டு செண்பகத்தின் குரலில் கவனம் பதித்தான்.

தன் திக்குவாய் காரணங்களால் செண்பகத்திடம் ஆனந்தன் அதிகம் பேசுவதில்லை. செணபகம் என்றில்லை யாரிடமும் அந்தக் காரணம் கருதியே அதிகம் பேசுவதில்லை. (அதற்கு கதிரேசன் மட்டும் விதிவிலக்கு.) அவளைப் பார்த்தால் ஒரு அசட்டுச் சிரிப்பு. ஓரிரு வார்த்தைகள் அவ்வளவுத் தான். அப்போதும் அவன் அவளிடம் என்ன என்று வாய் திறந்துக் கேட்கவில்லை, அவள் இருக்கும் பக்கம் தலையை மட்டும் திருப்பினான்.

" மாமா.. இதுல்ல மருந்து இருக்கு.. குண்டு அடிபட்ட உங்க கூட்டாளிக் காட்டுல்ல இருக்காரே அவர் காயத்துக்கு மருந்து..கொண்டு போய் கொடுக்குறீங்களா?"

"இ இதுது.. எல்லாலாம் ஓஒனக்கு எப்பபடி?"
ஆனந்தன் அவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவன் மனத்தில் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுந்தன. அவன் நாக்கு கேள்விகளின் சுழலில் சிக்க செண்பகம் புரிந்துக் கொண்டாள்.

"திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல்ல வச்சு கொடுத்தாய்ங்க.. அவரோட இயக்கத்துக்காரயங்களாம். கதிரேசன் ஊர்கார பொண்ணு தானே நீயு.. ஒன் மாமன் ஆனந்தன் தான் கதிருக்கு ரொம்ப சினேகிதகாரன்.. அவன் கிட்ட இதைக் கொடுத்துரு.. அவன் இதைக் காட்டுக்குள்ளே எப்படியும் கதிர் கிட்டச் சேத்துருவாய்ன்.. கதிரைக் காப்ப்பாத்துணும்.. எங்களை அந்த மிராசு குருப்பும் , போலீஸும் தேடிகிட்டு இருக்கு.. கதிர் கிட்டச் சொல்லு... நெலமைச் சரியானதும் நாங்க அவனைப் பாக்குறோம்ன்னு... அது வரைக் காட்டுக்கு வெளியே கதிர் வர வேணாம்.. வந்த அந்த எஸ்.ஐ அரசுடையப்பன் போட்டுருவான்..... அப்படின்னு சொல்லி இந்த மருந்தைக் கொடுத்துட்டுப் போயிட்டாய்ங்க "
என்று மூச்சு விடாமல் தன்னிடம் அந்த மருந்து வந்து சேர்ந்தக் கதையை ஆனந்தனிடம் சொன்னாள்.

ஆனந்தன் செண்பகம் சொன்ன விசயங்களை மறு சிந்தனையின்றி மனத்தில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு முன்னை விட இன்னும் அதிகமாய் அந்தப் பொழுதினில் செண்பகத்தின் மேல் காதல் பொங்கி வழிந்தது. அது அவன் முகத்தில் தெரிந்தது.

"மாமா.. ஓங்க கூட்டாளிக்கு இந்த மருந்துப் போட ஆராவது இருக்காய்ங்களா..???"

" நானேத் தான் போடணும்..." திக்காமல் பேசினான் ஆனந்தன்

" மருந்துப் போட்டுவிட வேணும்ன்னா நானும் ஓங்க கூட வர்றேன்... இல்ல நர்ஸ் படிப்பு தானே நானும் படிக்கேன்.."

"அது காடு.. அங்கிட்டு நீ எல்லாம் வந்துக்கிட்டு அவ்வளவு உசிதம் இல்ல" மறுபடியும் வார்த்தைகள் தடையின்றி வந்தன.

"எவ்வளவு காடா இருந்தா என்ன.. ஓங்கக் கூடத் தான் வர போறேன்.. என்னிய நீங்க காப்பாத்த மாட்டீங்களா"

"சரி வா" யோசிக்காமல் பளிச்செனச் சொன்னான் ஆனந்தன்.
"உன்னிய காப்பாத்தறதுக்காக தான் இந்த வாழ்க்கையே இன்னும் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்..." தனக்குள் உரக்கச் சொல்லிச் சந்தோஷப் பட்டுக்கொண்டான்.

இந்த முறை மழைக் கொஞ்சம் வெறித்திருந்த நேரமாய் ஆனந்தன் செண்பகத்தைக் கூட்டிக் கொண்டு காட்டிற்குள் போனான்.

தனிமையில் செண்பகத்தோடு இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும்த் தன் பிறப்பின் பயனாய் நினைத்துக் கொண்டாடிய படி நடந்தான். ஒற்றையடி பாதையில் இருவரும் நெருக்கத்தில் நடந்துப் போய் கொண்டிருக்கும் போது ஒரு கணம் செண்பகம் பாதம் இடறி அவன் மீது அனிச்சையாய் சரிந்தாள். அந்த வினாடியில் அவன் மீது படர்ந்த செண்பகத்தின் வாசம் அவன் சித்தத்தைக் கலக்கியது.

"நீ முன்னாலப் போ செம்பகம்...."

அவளைப் பின் தொடர்ந்த அவன் மனம் அவள் அங்க அசைவுகளில் ஆட்டம் போட்டது. அடங்க மறுத்தது. அவனை ஆசை அலைகளில் சிக்கித் தடுமாறிப் போனான்.. அவன் மூச்சு காற்று அந்த குளிர் காட்டைத் தீயிலிடும் நோக்கில் அவன் நாசி விட்டு புறப்பட்டது.

"இல்ல .. இப்போ கதிரைப் பாக்கப் போறோம் .. செம்பகம் என்னிய நம்பி எனக்காக என் நண்பனுக்கு ஒதவி பண்ண எங்கூட வந்து இருக்கா.. கிறுக்குத் தனமா யோசிக்கக் கூடாது.." தனக்குத் தானே லகான் மாட்டிக் கொண்டான்.

"என்னிக்கிருந்தாலும் செம்பகமும் அவ மொத்த அழகும் எனக்குத் தான்..அப்போ அந்த மொத்த அழகையும் கொஞ்சம் கொஞ்சமா......" ரகசியமாய் தன் மனத்திற்குள் சிரித்துத் தொலைத்தான்..அவன் சிரித்த நிமிடம் செண்பகத்தின் விசும்பல் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தான்.

செண்பக்த்தின் நினைப்பில் கொஞ்ச நேரம் தன்னை மறந்த நிலையில் நடந்த வந்த ஆனந்தன் அப்போது தான் சுயநிலைக்குத் திரும்பியிருந்தான்....

"செம்பகம் அழதாடா..."

அந்தக் குரல் தன்னுடையது இல்லையே என்று ஆனந்தன் முழுவதுமாய் யோசித்து முடிக்கும் முன்.. அவன் கண்கள் செண்பகம் கதிரேசனை இறுக கட்டிக் கொண்டு ஓ வென அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டன....

ஆனந்தன் கண்களிலும் கண்ணீர்...

"சீக்கிகிரர்ம் ச்செச்ம்ப்கம் ப்ப்போவ்வல்லாம்"

செண்பகம் கதிரேசனுக்கு மருந்திட்டுப் பணிவிடைகள் செய்து அவன் மார்பைத் தன் மொத்தக் கண்ணீராலும் நனைத்துப் பின் அவன் கன்னங்களில் தன் இதழ்கள் வலிக்க முத்தங்கள் பொழிந்து அவனை விட்டு இன்னும் அகல மனமின்றி நின்று கொண்டிருந்த தருணத்தில் ஆனந்தனின் வாயிலிருந்து வார்த்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாய் திக்கி வந்தன.

அந்த முழுச் சந்திப்பில் ஆனந்தன் கதிரேசனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கதிரேசன் ஆனந்தனை இறுக அணைத்துக் கொண்டான். செண்பகமும் கதிரேசனும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனந்தன் அந்த விவரஙகளைக் காதினில் வாங்கவே இல்லை. அவனுடைய உலகம் அவன் கண்முன்னே இடிந்துக் கொண்டிருந்தது. அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாதவனாய் உண்மையிலே திக்கிப் போயிருந்தான்.

மாலை நேரம் நெருங்கும் போது காட்டை விட்டு செண்பகமும் ஆனந்தனும் கிளம்பினார்கள். கிளம்பும் போது கதிரேசன் ஆனந்தனை இன்னொரு முறை இறுகத் தழுவினான்.

"ஓங்கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லியிருக்கணும்.. நான் சொல்லாதது தப்புத் தான்.. என்னிய மன்னிச்சுரு மாப்பி.. எல்லா விசயம்ங்கறது செம்பகத்தையும் சேத்தி தான் " என்று அவன் காதுகளில் கிசுகிசுப்பாய் சொன்னான்.

ஊர் திரும்பும் வரை ஆனந்தன் செண்பகத்திடம் எதுவும் பேசவில்லை. ஊர் எல்லை நெருங்கும் போது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டது

"திண்டுக்கல்ல கதிரேசன் கூட்டாளிக ஒங்கிட்ட மருந்துக் கொடுத்தனுப்ப நீ க்திரேசன் ஊர்காரிங்கறது மட்டும் தான் காரணமா....."
மழையின் சத்தங்களுக்கு இடையில் ஆனந்தன் நிதானமாய் செண்பகத்தை முகம் பார்த்துக் கேட்டான்.

'மாமா ஓங்க கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லியிருக்கணும் .. சொல்லாதது தப்புத் தான்...எல்லாத்தையும்ங்கற்து அவரையும் சேர்த்தி தான்.. என்னிய மன்னிச்சுருங்க" என்று சொன்ன செண்பகம் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

"அவரை அந்த காட்டுக்குள்ளே யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.. அவர் இருக்க இடம் தாஸ் வாத்தியார் சொல்லித் தான் நமக்கே தெரியும்...அந்த அரசுடையப்பன் எஸ்.ஐயை யாராவது காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போய் காட்டுனாத் தான் உண்டு.. அப்படி யார் இருக்கா இந்த சுத்துப் பட்டு கிராமத்துல்ல...நீங்க கவலைப் படாமப் போங்க..."

ஆனந்தனைச் சகஜ நிலைக்குக் கொண்டு வரச் செண்பகம் சொன்ன அறுதல் இது....

அன்றிரவு ஆனந்தன் தன் அறையைப் பூட்டிக்கொண்டு மவுனமாய் கதறினான். பல வருடங்களாய் செம்பகத்திற்கு கொடுப்பதற்கென அவன் பறித்து வைத்திருந்த ரோஜாப் பூக்களின் காய்ந்த இதழ்கள் மீது படுத்து அப்படியே உறங்கிப் போனான்.

சரியாக அதற்கு ஒரு வாரம் கழித்து கதிரேசனின் உடல் ஊர் வீதியில் கிடந்தது.

அதற்குப் பின் செண்பகத்தின் அப்பா உபயத்தில் ஊர் அரசியலில் சின்னதாய் இடம் பிடித்தது. அவர் கைகாட்டியதில் ஊர் தாண்டி அவன் எல்லைகள் விரிந்தது.. ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் எனப் பெயர் வாங்கிய அவன் சென்னை வரை போனது... பின்னொரு நாளில் செண்பகத்தின் அப்பா அரசியல் காரணுங்களுக்காக செண்பகத்தை அவனுக்குக் கல்யாணம் செயது வைத்தது. செண்பகத்தை மணந்தானே தவிரச் செண்பகத்துடன் அவனுகிருந்த காதல் செத்துப் போயிருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவனுக்கு எல்லாமே ஒரு கனவு போலிருந்தது..

இன்று அவன் மாண்புமிகு தமிழக அரசு அமைச்சர் ஆனந்தன்... அந்த உணர்வு தட்ட கண்களைத் திறந்தப் பார்த்தான்...

அங்கு அவன் முன்னால் சாமாதி மீது, தவத்திலிருக்கும் ஒரு முனிவர் போல தாஸ் வாத்தியார் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். வலது கையில் ஒரு துப்பாக்கியைச் சரித்துப் பிடித்து இருந்தார்.

ஆனந்தனை ஆழ ஊடுருவி பார்த்த தாஸ் வாத்தியார் துப்பாக்கியைத் தூக்கி அவன் முகத்திற்கு நேராக குறி வைத்தார்.

"இங்கிட்டு வச்சுத் தான் எஸ்.ஐ அரசுடையப்பனைப் போட்டேன்... கதிரேசனை வீரனாத் தான் வளத்தேன்.. ஆனா அவன் முதுகுல்ல குண்டு பட்டுச் செத்துருக்கான்ய்ன்.."

தாஸ் வாத்தியார் எழுந்து வந்து துப்பாக்கி முனையை ஆனந்தனின் நெற்றி பொட்டில் வைத்து அழுத்தினார். மறு கையைத் தன் நெஞ்சின் மீது வைத்து இரண்டு தடவை அடித்துக் கொண்டார்.

"ஆனந்தா... எதுக்காக இப்படி பண்ணுன?" கேள்வியில் ஆற்றாமையும் அவதியும் வலியும் கலந்து வழிந்தன.

"க்க்திரேச்சன் செம்பகத்தக் காகாதலிச்ச்சருக்கக் கூடாதுது...காததலிச்ச்" இரண்டாவது முறை அவன் முடிப்பதற்குள் அவன் நெற்றியினை தாஸ் வாத்தியாரின் துப்பாக்கித் தோட்டாத் துளைத்தது....

பறவைகள் கிரிச்சிடும் சத்தம் கேட்டது.

சட்டைப் பையிலிருந்த சிகப்பு ரோஜாவை எடுத்து அவன் உடல் மீது வைத்து விட்டு காட்டை நோக்கி நடந்தார் தாஸ் வாத்தியார்

-The end

Thursday, October 26, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை முதல் பாகம் படிக்க...

"ஏய் திக்குவாயா, வெளியே வாடா"

சத்தம் போட்டுக் கூப்பிட்ட கால்சட்டைச் சிறுவர் கும்பலில் ஒருத்தன் ஒரு கல்லை எடுத்து வீட்டிற்குள் விட்டெறிந்தான்.

கல் விழுந்த வேகத்தை விட அதிகமான வேகத்தோடு வீட்டிற்குள் இருந்து இன்னொரு கால்சட்டை பையன் வெளியே வந்தான். அவன் மற்ற சிறுவர்களை விட நல்ல உயரம். தமிழர் நிறத்திற்கு பொருத்தமில்லாத செவ்வண்ணத்தில் இருந்தான். தீர்க்கமான பார்வை. வேகத்திலும் இடராத நடை.

"ஆனந்தனைத் திக்குவாயன்னு கூப்பிட்டவய்ன் ஆருடா?" சிறுவன் குரலில் கம்பீரம் களைக் கட்டியது. அவன் கண்கள் சிறுவர்கள் மீது சுழன்றன.

பதில் எதுவும் வரவில்லை. "வீட்டுக்குள்ளே கல் விட்டவய்ன் ஆருடா?" அடுத்தக் கேள்விக்கும் பதில் வரவில்லை.

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு அவன் திரும்பி வீட்டிற்குள் நுழையப் போனான். சரியா அந்தத் தருணத்தில் அவன் மீது மழையெனக் கற்கள் வந்து விழுந்தன. அவன் முகத்தை இருகரங்களாலும் மூடிக் கொண்டான். இருந்தும் அவன் நெற்றியில் பட்டு தெறித்த கல் ஒன்று அவன் முகத்தை ரத்தச் சேறாய் அடித்தது.
கல் வீசிய சிறுவர்கள் திரும்பி ஓட ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருத்தன் நின்னு சத்தமாச் சொன்னான்.

"டேய் கதிரு, எங்களுக்கும் அந்தத் திக்கு வாயனுக்கும் தான் சண்டை. நீ குறுக்கால வந்து தர்மத்துக்கு அடி வாங்கிகிட்ட.. இன்னொரு தடவ அந்தத் திக்கு வாயனுக்காக எங்க கூட மோதாதே..சில்லு சிதறிடும்டீயோ புரியுதா?

கதிர் ரத்ததைப் பொருட்படுத்தாமல் எழுந்து அவர்களை விரட்டப் போன அதே நேரம் தாஸ் வாத்தியார் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. கதிர் தன் கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"ஆனந்தா.. !!!" தாஸ் வாத்தியார் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

ஆனந்தன் தான் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான்.

"இங்கிட்டு என்ன நடந்துச்சு .. சொல்லு?" தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அது வந்துங்கப்பா.." என்று ஆரம்பித்த கதிரேசனைப் பேசவிடமால் பார்வையாலேத் தடுத்தார் தாஸ் வாத்தியார். அவர் ஆனந்தனையேப் பார்த்தார். ஆனந்தன் பரிதாபமாய் கதிரேசனைப் பார்த்தான்.

"சொல்லு.. நீ தான் பொய் சொல்ல மாட்டியே... என்ன நடந்துச்சுன்னு அப்படியே சொல்லு" கதிர் ஆனந்தனைப் பார்த்துக் கோபம் கொப்பளிக்கச் சொன்னான். ஆனந்தன் திக்கி திக்கி நடந்த விவரங்களை ஒன்று விடாமல் தாஸ் வாத்தியாரிடம் ஒப்பித்து முடித்தான்.

ஒரு ரோஜாப் பூவுக்காக இவ்வளவு தகராறா? ஏன் நம்ம வீட்டுத் தோட்டத்துல்ல ரோஜா பூவே இல்லையா.. அங்கிட்டு அவிஙக தோட்டத்துல்ல போய் பறிச்சுருக்க..." தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அவிங்கத் தோட்டத்துல்ல தானே சிகப்பு ரோஜாப்பூ வச்சிருக்காயங்க.. அதாய்ன் போய் பறிச்சுருக்காய்ன்"

கதிர் மெல்ல முணுமுணுப்பாய் சொன்னான்.

"இந்தா இங்கிட்டு என் மொகம் பாத்துப் பேசு.. பொட்டப்புள்ளக் கணங்காத் தரையப் பாக்காதே.. சிகப்பு ரோஜாச் செடி தானே வேணும்.. கவுஞ்சியிலே இர்ந்து வாங்கிட்டு வரச் சொன்னா ஆச்சு..இங்கிட்டு நடந்த விசயம் இங்கிட்டோட முடியணும். நீ அவிங்களை அடிக்கக் கிளம்பிறபிடாது ..தெரியுதா...?"

தாஸ் வாத்தியார் கையில் கதிரேசன் காயத்திற்கு மருந்து இருந்தது. ஆனந்தன் கதிருக்கு வலிக்காத வண்ணம் பொறுமையாக அவன் காயத்தைத் துடைத்து மருந்து வைத்தான். ஆனந்தன் சட்டைப் பையில் இருந்த சிகப்பு ரோஜா அவங்க நட்பைப் பார்த்து புன்முறுவல் செயவது போலிருந்தது.
மறுநாள் கதிரேசன் மீது கல் வீசிய பசங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்த அனைத்து ரோஜாச் செடிகளும் எதோ காரணத்தால் பட்டுப் போக ஆரம்பித்தன.

இப்பொழுது தாஸ் வாத்தியார் வீட்டில் கிட்டத் தட்ட ஏழு எட்டு சிகப்பு ரோஜா செடிகள் இருந்தன. எல்லாச் செடிகளிலும் கொத்து கொத்தாய் அழகிய சிகப்பு ரோஜாப் பூக்கள் நித்தம் பூக்கின்றன.

"மாப்பி, பத்து வயசுல்ல ஆரம்பிச்ச ரோஜாப்பூ கிறுக்கு இன்னும் போகல்ல உனக்கு.. தைப் பொறந்தாக் கழுதை உனக்கு இருபதைஞ்சு வயசு ஆயிரும்.."
சிலம்ப பயிற்சி முடித்து விட்டு துண்டால் முகத்தைத் துடைத்தப் படி கேட்டான் கதிர். கதிரின் சிறுவயது அழகு இப்போது பன்மடங்குப் பெருகியிருந்தது. தேகப் பயிற்சி அவன் உடலை இரும்பைப் போல் உறுதிப்படுத்தியிருந்தது.

உதட்டில் சதா நிலைக் கொண்ட அந்த சிறு புன்னகை அவன் வசீகரத்தை மேலும் கூட்டியது.

ஆனந்தன் சட்டைப் பையில் ஒரு சிகப்பு ரோஜா காம்போடு தலை நீட்டியது.
ஆனந்தன் அதிக உயரமில்லை என்றாலும் குள்ளமில்லை. கொஞ்சம் ஒல்லியான தேகம். பொது நிறம். சிறு வயதில் இருந்து அவனை விட்டு இன்றும் அவனோடு இப்போதும் பிரியாமல் இருப்பது ஒன்று அவன் திக்குவாய்.. இன்னொன்று அவன் கதிரோடு கொண்ட நட்பு.

"ஆனந்தா பதில் சொல்லணும்ப்பூ.. கேக்குறோம்ல்ல பதில் சொல்லுப்பூ"

முகத்தைத் துடைத்தக் கையோடு தண்டால் எடுக்கத் தரையில் அமர்ந்தான் கதிர்.

"நீ..நீக் கூடத் தான் வாரத்துக்கு ரெண்டு தரம் திண்டுக்கல்லுக்கு சைக்கிள் எ எடுத்துட்டுப் போயியிடுரே.. நாநான் கேகேட்டாலும் காரணம் சொல்லுறீயாப்ப்பூ"

கதிரேசன் பதில் சொல்லாமல் சிரித்தான். தண்டால் எடுத்து முடித்து விட்டு ஆனந்தன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

"திண்டுக்கல் கடைவீதிப் பக்கம் ஒரு நல்ல சிவத்த புள்ளைய நான் ஆருக்கும் தெரியாம கல்யாணம் கெட்டி வச்சிருக்கேன்.எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு பொட்டப் புள்ளக் கூட இருக்கு, வர்ற சித்திரை வந்தா அந்தப் புள்ளக்கு வயசு ஒண்ணு முடிஞ்சுப் போயிடும்... இந்தச் சேதிய ஓங்கிட்டச் சொன்னா எங்கப்பார் கிட்ட போய் ஒளறி வைக்கமாட்டியா அதான் நான் சொல்லல்ல போதுமா?" என முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஆனந்தன் நம்பும் படி பேசினான்.

ஆனந்தன் அதை நம்பவில்லை.

"சரி ஒன் சிகப்பு ரோஜாக் கதையச் சொல்லுப்பூ"

"நாநான் ஒரு புள்ளயக் காதலிக்கேன்.. அவ ஆசசப் பட்டாங்கறதுக்காக தான் நிதமும் அவளுக்கு சிகப்பு ரோஜா பறிச்சிட்டு போறேன் போதுமா?"

"அடக் கொக்காமக்கா,,, காதலிக்கீயா.. அந்தப் புள்ளக்கி இது தெரியுமாப்பூ..பூக் கொண்டுப் போய் கொடுத்துட்டு இருக்கா..கடைசியிலே அவ கல்யாணத்துக்கு உன்கிட்டயே ரோஜாப் பூ மாலைக்கு ஆர்டர் வைக்கப் போறா..பாத்துப்பூ"

கதிரேசன் சிரித்தான். ஆனந்தன் உதட்டளவில் சிரித்தாலும் உள்ளுக்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டான்.

"எஞ் செண்பகத்துக்கு என் மனசு புரியும்..."

சரி சரி.. ஓம் பஞசாயத்தை வந்து வச்சிக்கிறேன்... இப்போ எனக்கு ஓஞ் சைக்கிளைக் கொஞ்சம் கடனாக் கொடு.. திண்டுக்கல் வரைக்கும் போயிட்டு வர்றேன்..."

கதிரேசன் தேகப் பயிற்சி முடித்து விட்டு குளிக்க்க் கிளம்பினான்.

"க்கதிரு நானும் வரேன்...எனக்கும் இங்கிட்டு மலையிலே எந்த ஒரு வேலயும் இல்ல"

"ம்ம்ம் பொய் சொல்லாதே உனக்கு எம்புட்டு வேலைக் கிடக்குது... அங்கிட்டு அந்த கல்லுல்ல் உக்காந்துக்க அப்படியே கையிலே சிகப்பு ரோசாவைப் பிடிச்சுக்க..அந்தப் புள்ளயப் பத்தி நினைச்சிகிட்டு அப்படியே கனாக் கண்டுகிட்டு இரு அதுக்குள்ளே நான் திரும்பி வந்துருவேன்.."

ஆனந்தனிடம் சைக்கிள் வாங்கிப் போன கதிரேசன் அன்றிரவு ஊர் திரும்பவில்லை... காலையும் வராது போகவே ஆனந்தன் மனம் கலவரமானது...

மதியம் வீட்டுல்ல வச்ச மீன் குழம்பைக் கூட ஏனோ தானோன்னு சாப்பிட்டுட்டு ஒர்ரே சிந்தனையாக் கிடந்தான்.
ஒரு மூணு மணி வாக்குல்ல தாஸ் வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினான். அவர் வீட்டுக்குச் சமீபமாய் போலீஸ் ஜீப் நிற்பதைக் கண்டு ஆனந்தன் அடி வயிற்றில் பயப் பந்து உருண்டு விளையாடியது.

ஆனந்தன் வீட்டுக்குள் போகாமல் சுவத்தோரமாய் பதுங்கி நடப்பதைக் கவனித்தான்..சுருட்டி விட்ட மீசையை நீவிய படி நின்றிருந்த காக்கிச் சட்டைக்காரர் சன்னமான குரலில்தான் பேசிக் கொண்டிருந்தார்.தாஸ் வாத்தியார் முகம் வாடிப் போயிருந்தது. அவர் கைகள் அனிச்சையாய் கட்டிக்கொண்டன. அவர் காக்கிச் சட்டைக்காரரிடம் எதோப் பேசினார். வார்த்தைகள் ஆனந்தன் காதுகளில் சரியாக விழவில்லை.

"வாத்தியாரே.. இது மொத தடவைக் கிடையாது.. ஒங்க மவனை பெரிய இடத்தோடு பிரச்சனைப் பண்ண வேணாம்ன்னு ஒங்களைப் பாக்கும் போதெல்லாம் சொல்லிகிட்டுத் தானே இருந்தேய்ன்... இப்போ எல்லாம் கைமீறி போயிடுச்சுங்க..."

ஆனந்தனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முகம் வேர்வையில் வழிந்தது.

"நேத்து சாயங்காலம் மார்கெட்ல்ல வச்சு மிராசு மருமவனைப் போட்டுருக்காயங்க.. வெட்டியிருக்காயங்க... தப்பி ஓடும் போது மிராசு மருமயன் கூட இருந்த அரசுடையப்பன்.. எங்க ஸ்டேஷன் எஸ்.ஐ சுட்டுருக்காய்ரு... அதுல்ல கதிருக்குத் தோள்ல்ல குண்டு பட்டிருக்கு... இப்போ அவிங்க கோஷ்ட்டியா மதிகெட்டான் சோலைக்குள்ளேப் பதுங்கித் திரியறாய்ங்களாம்..மிராசு இவன் உசுரு வேணும்ங்கிறாரு.. பார்த்த இடத்துல்ல அவனைப் போட்டு தள்ளுறோம்ய்யான்னு அரசுடையப்பன் எஸ் ஐ கங்கணம் கட்டிகிட்டு அலையுறாரு...பெரிய இடத்துல்ல எல்லாம் பகையாப் போயிடுச்சு"

ஆனந்தன் இரண்டு கைகளையும் தலை மீது வைத்துக் கொண்டு மண்ணில் உட்கார்ந்தான்.அவன் கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. அதைத் துடைக்கத் திராணியற்றவனாய் மண்ணில் முகம் புதைத்தான்.

"வாத்தியாரே.. வந்து நேரமாச்சு.. விசாரிக்க வர்றதாச் சொல்லிட்டு தான் வந்தேன்..விசயத்தைச் சொல்லிட்டேன்...இங்கிட்டு வந்தா கதிரேசன் கதை அம்புட்டுத் தான்.. அப்படியே அவனைக் கேரளாவுக்கோ அதையும் தாண்டியும் எங்கிட்டாவதுப் போகச் சொல்லுங்க... உசுராவது மிஞ்சும்.."

"அவன் போக மாட்டான்ய்யா" வாத்தியாரின் குரல் தீனமாய் ஒலித்தது.

"பழகுன்ன பாவத்துக்கு ஒங்ககிட்டத் தகவல் சொல்லத் தான் நான் வந்தேன்..என் சோலி முடிஞ்சுது நான் கிளம்புறேன்.. எஸ்.ஐ எந்நேரம்ன்னாலும் வருவார்.. பார்த்துப் பேசுங்க"

காக்கிச் சட்டைக்காரர் போனதும் அவசரமாய் வீட்டுக்குள் நுழைந்தான் ஆனந்தன்.

தாஸ் வாத்தியார் தூணைப் பிடித்துக் கொண்டு ஆழமானச் சிந்தனையில் இருந்தார்.

"நாநா..ன் கதிரைப் பாக்கப் போறேன்..நா..நான் சொன்னா அவன் கேகேப்பாய்ன்....அவனைக் கேரளாவுக்குப் போச் சொல்லுறேன்..." வழக்கத்தை விட அதிகமாய் திக்கியது ஆனந்தனுக்கு.

தாஸ் வாத்தியார் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.

கதிரேசனின் குரல் அவர் காதுகளில் கேட்டது.

"இது என் ஊர்.. இவிங்க எல்லாம் எம் மக்கள்...இவிங்களை விட்டுட்டு நான் எங்கேப் போவேன்.. அந்த மொதலாளி பயல்வ..இவிங்க ஓடம்புல்ல ஓட்டப் போடதக் கொறையா அவிங்க ரத்தத்தை ஊறிஞ்சுறாயங்க... அதைக் கேள்விக் கேட்டா.. போலீஸை விட்டு மெரட்டுறாயங்க.. நான் பயப்படமாட்டேய்ன்...இங்கிட்டு இருந்து கதிரேசன் போ மாட்டான்... வேணும்ன்னா அவன் உசுருத் தான் போகும்..இனி இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்ய்க.."


"எ என்ன.. எதுவும் பேசமாட்டீங்களா...?"

"ம்ம்.. அவன் யார் சொன்னாலும் கேக்கமாட்டாய்ன்... நான் என்னத்தச் சொல்ல?"

ஆனந்தன் அழுகையும் ஆவேசமும் ஆட்கொள்ள மதிகெட்டான் சோலை நோக்கிப் போனான். வானம் அவனுக்கு வழி காட்ட மறுத்து காற்றுடன் கைக்கோர்த்துப் பெரு மழையெனப் பொழிந்தது. ஆனந்தனுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் அழுகை அதிகமானது.

காற்றும் மழையும் ஓய மூன்று நாட்கள் பிடித்தன.

கதிரேசனைப் பற்றி ஊர்மக்கள் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். கதிரேசன் மீது ஊர் மக்களுக்குப் பிரியம் ஜாஸ்தி. அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன் தான்.ஊர் திருவிழாவில் அவன் கம்பு சுத்துவதைப் பாக்கவே அந்த ஊர்க் குமரிகள் தினம் தினம் திருவிழா வராதான்னு ஏங்குவார்கள். அறிவிக்கப் படாத மகளிர் ரசிகர் மன்றம் ஒன்று கதிரேசனுக்காக மும்முரமாக இயங்கி வந்தது.

கதிரேசன் தங்களுக்கு அடிக்கடி செய்த உதவிகளை எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர்.

"என்னப் பேசி என்ன பிரயோசனம் மிராசு மருமவனை இல்ல கதிரு தம்பி வெட்டியிருக்கு.. எஸ் ஐ அரசுடையப்பன் வேற மிராசுக்கு சொந்தமாமே.. கதிரைப் போடாம விடுறது இல்லன்னுச் சாமி சத்தியம் பண்ணிட்டு அலையுறானாமே..."

"மிராசு மருமவன் என்ன சத்யசீலனா... பொட்டைக் கள்ளன்..வயல் வேலைக்கு வந்தப் பிள்ளையள இழுக்கறவன் தானே.. கதிர் தம்பி சரியாத் தான் போட்டிருக்கு"

"கதிர் தம்பி எதோ இயக்கத்துல்ல இருக்குதாமா.. அந்த இயக்கம் அடுத்த தேர்தல்ல நிக்கப் போவுதாம். அப்போக் கதிர் தம்பிக்குத் தான் ஓட்டுப் போடலாம்ன்னு இருந்தேன்"

ஊருக்கு ஒதுக்குப்புறமானக் குடியிருப்புக்களில் இந்தப் பேச்சு பலமாகவே வீசிக் கொண்டிருந்தது.

ஆனந்தன் சிகப்பு ரோஜா பறிப்பதை மறந்தான்... சதா கதிர் ஞாபகமாவே அலைந்தான்...

சரியாக ஒரு வாரத்துக்குப் பின்..ஊர் மக்கள் கதிரைப் பற்றிய பேச்சைக் குறைத்திருந்த ஒரு அதிகாலை வேளையில்

தாஸ் வாத்தியார் வீட்டு நாய் அவர் வேட்டியைப் பிடித்து இழுத்தது...
நாயை விரட்டிக் கொண்டு தாஸ் வாத்தியார் விழுந்தடித்து ஓடினார்...ஓடும் போதே அவர் மனம் சுக்கு நூறாய் ஒவ்வொரு யோசனையிலும் உடைந்துக் கொண்டிருந்தது...

ஓட்டம் முடிந்த இடத்தில் நாய் சுற்றி சுற்றி வந்தது..

எல்லோரும் பார்த்து பரவசப்பட்ட அந்த முகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கோரச் சேதமடைந்து ரத்தச் சேற்றில் குளித்து கிடந்தது...

நித்தம் நித்தம் தேகப் பயிற்சியினால் உரமேற்றபட்ட அந்த இரும்பு தேகம் உருக்குலைக்கப்பட்டு நடு வீதியில் கிடந்தது...

ஊருக்கெல்லாம் உதவிய அந்தக் கால்களும் கரங்களும் கண்டபடி வெட்டப் பட்டு கிழிந்துத் தொங்கிக் கொண்டிருந்தன....ஈக்கள் அந்த இடத்தில் இறுதி மரியாதைச் செலுத்திக் கொண்டிருந்தன...

தாஸ் வாத்தியார் பார்வை உடலின் கீழ் பாகம் காணும் முன் அவர் கைகள் தானாய் அவர் வேட்டியைக் களைந்து உடல் மீது போர்த்தியது...

ஊருக்கு உதவ நினைத்த உனக்காடா மகனே.. இந்த நிலைமை.... அவர் குரல் எழவில்லை....

அவர் குரல் எழுந்தப் போது அதில் ஒலித்தப் பெயர்......

"உன் நண்பனைப் பாருடா ஆனந்தா.............."


இன்னும் இருக்கு கதிரேசன் கதை...

Wednesday, October 18, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1

"ஏனப்பா... இ இது என்னப் பாட்டு.. தமிழ் தானா.. கேகேட்டா ஒண்ணும் விளங்கல்ல்" குவாலிஸ் காரின் பின் சீட்டில் ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு டிரைவரைக் கேட்டார் ஆனந்தன்.

"ஐயா இதுதானுங்க இப்போ ஹிட் பாட்டு..எளையராஜா மகன் போட்ட பாட்டுங்க,.. ஒரு ரெண்டு தடவைக் கேட்டா உங்களுக்கும் பிடிச்சுப் போகும்ங்க"

"அட என்னமோ போப்பா நமக்கெல்லாம் ககண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி போட்டப் பாட்டுத் தான் பாட்டு மாதிரி இருக்கு..நீ சசவுண்ட்டைச் சசன்னமா வச்சுக்க.. இன்னும் ஊர் போறதுக்கு எவ்வளவு நேரமாகும்?"

ஆனந்தனுக்கு வயசு அம்பதுக்கும் சற்று இருக்கும், டிரைவருக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கும். ரசனையின் இடைவெளிக்கு இந்தக் காரணம் போதாதா? குவாலிஸின் முன்னால் பறந்தக் கட்சிக் கொடி, வண்டி நம்பர் பிளெட்டில் இருந்த என்ற ஒற்றை எழுத்து ஆனந்தன் அதிகார மையத்தின் பிரதிநிதி என்பதை சாமான்யர்க்ளுக்கு விளம்பரப்படுத்தியது.

"திண்டுக்கல் நெருங்கிட்டோம்ய்யா.. இன்னும் மூணு மூணரை மணி நேரத்துல்ல கொடைக்கானல் போயிரலாம்ய்யா.. அங்கிட்டு இருந்து ரோடு நல்லா இருந்தா மதியம் 3 மணிக்கு பூம்பாறைத் தாண்டிரலாம்..பூண்டி அங்கிருந்து பக்கம் தானே!"

"ஏம்ப்பா பூண்டி ரூட் உனக்கு நல்லா தெரியுது விசாரிச்சிகிட்டியா..முன்னாடி டிராவல்ஸ்க்கு ஓட்டுன்னப்போ வந்து இருக்கியோ?" டிரைவரின் பதிலை ஆனந்தன் எதிர்பார்க்கவில்லை.

"நான் லேசா தலையைச் சாச்சுக்கிறேன் நீ ஊர் கிட்ட வரும் போது எழுப்பி விடு" ஆனந்தன் கையைத் தலைக்குக் கொடுத்து இன்னும் வசதியாக இருக்கையில் சாய்ந்துக் கொண்டார்.

அதே சமயம் பூண்டி ஊராட்சி எல்லை.

"அமைச்சர் ஆனந்தன் அவர்களைப் பூண்டி பகுதி கழகம் வரவேற்கிறது" ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி வாசித்து முடித்த பாண்டி முகம் கோபத்தில் சிவந்துப் போனது.

"அந்தப் பெயிண்டர் பன்னி எங்கன இருக்கான்.. விளக்குமாத்து பயல்வளா.. அண்ணனுக்குச் செயல் புயல்ன்னு பட்டமிருக்குல்ல அது அந்த ...(படிப்பவர் ரசனைக் கருதி வார்த்தைகளை சென்சார் செய்கிறேன் &&&&& - என்று குறிக்கப்படும் இடங்கள் தணிக்கைச் செய்யப்பட்டவை என் அறிக) தண்ணியப் போட்டுட்டுச் செத்து ஓழிய வேண்டியது தானே.. செய்யச் சொன்ன ஒத்த வேலையை சொத்தயாப் பண்ணியிருக்கான்.. பாத்தா வெட்டிபுடுவேன்னு சொல்லு.. ஏய்.. கரகாட்டக் குரூப் மருதையிலே இருந்து வாந்தாச்சா..?"

"கொடைக்கானல் வந்துட்டாங்களாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல்ல இங்கே இருப்பாய்ங்கண்ணே"

"செத்த மூதிகளா.. கட்டு கட்டா நோட்டை வேட்டிக்குள்ளே வச்சு அவுத்து விடல்ல.. வட்டிக்கு வாங்கிச் செலவு பண்ணிகிட்டு இருக்கேய்ன்.. நேரத்துக்கு வர்றல்ல.. இந்த மலைக்காட்டுல்ல கேரட் தோட்டத்துல்ல பொதைச்சுருவேன் சொல்லிட்டேன். ஆமா மாலைக்கும் கீரிடத்துக்கும் சொல்லியிருந்தெனே என்னடா ஆச்சு"

"ரெடிண்ணே, கவுஞ்சியிலே இருந்து ஆளு மாலையோடப் பொறப்பட்டாச்சுண்ணே"

"இந்தா &&&&&.. எதாவது நேரம் தப்பிச்சுன்னு வை வர்ற மாலை உன் சவத்துக்குத் தான் போடுவேன் பாத்துக்க...சமையல் ஒழுங்கு எல்லாம் பார்த்தியா...?"

"ஆச்சுண்ணே.. ரெடியாகிட்டு இருக்குண்ணே"

பாண்டி கட்சி அலுவலகம் நோக்கி நடந்தான். ஆபிஸ் வாசல்ல நுழையவும் வழ்க்கம் போல் தாஸ் வாத்தியாரின் இருமல் சத்தம் அவன் காதில் விழுந்து அவன் சிடுசிடுப்பை அதிகப்படுத்தியது.

"&&&&& அந்தக் கிழட்டு வாத்தியானை கொளுத்தி தொலைங்கடா.. &&&& எப்படியும் அவன் செத்தா அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரு &&&& கிடையாது.. அவன் போனா அவன் இருக்க வீட்டையும் ஆபிசோடச் சேத்து வளைக்கலாம்ன்னு பாக்குறேன்.. போவேனாப் பாருன்னு அடம் பிடிக்கிறான்"

அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஊராட்சி அமர்க்களப்பட்டது. தன் சொந்த அக்கா மகன் திருமணத்திற்கு வருகை தரும் அமைச்சர் ஆனந்தனை வரவேற்பதில் கழக கண்மணிகள் கடும் போட்டியில் இருந்தனர்.

"ஓங் கட்சிகாரங்க எல்லாம் ஒன்னிய வரவேக்க வேட்டிய இறக்கிவிட்டுகிட்டு ஊர் எல்லையிலே நிக்குறாய்ங்க.. நீ பூனை மாதிரி பதுங்கி உள்ளே வந்துருக்க..."

"அக்கா நான் ககட்சிக்காரனா வர்றல்ல ஒன் ததம்பியா ஓன் வீடு கல்யாணத்துக்கு இல்ல வந்து இருக்கேன்...எங்கண எம் மருமவளைக் காணும்.."

"இருக்கா காலத்துக்கும் சேத்து வச்சிருந்த வெக்கத்தை மொகத்துல்ல அப்பிகிட்டு பின்னால தான் நிக்கா.. அது கிடக்குது.. செம்பகம் வர்றல்லயா. வருவான்னு ஆசயா இல்ல இருந்தோம்"

ஒரு பெரூமூச்சு மட்டுமே பதிலாய் தந்தார் ஆனந்தன்.

"ஏன் தம்பி செம்பகம் இன்னுமா எல்லா விசயத்தையும் நினைப்பு வச்சுகிட்டு இருக்கு.. 30 வருஷம் ஓடிப் போயிருச்சு.. ஒங்களுக்கும் மூணு புள்ளக இருக்கு... என்ன த்ம்பி இது....?"


"யக்கா.. விவிசேசத்துக்கு வந்துருக்கேன் விசாரணைப் பண்ணிகிட்டு இருக்க.. இந்தூரூக்கு என் மூச்சு இருக்க வரைக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்.. இப்போ ஒம் புள்ளக்கு ககலியாணம்ன்னு சொல்லி வர வச்சுட்ட... சரி..அந்தப் பேச்ச விடு.. ஆவுற வேலையைப் பாப்போம்"

ஆனந்தன் சொல்லிமுடிக்கவும் வாசலில் செயல் புயல் உள்ளிட்ட இதர பட்டப்பெயர்களோடு இணைக்கப்பட்ட ஆனந்தனின் பெயர் கொண்ட கோஷங்கள் பேரிரைச்சலாய் கேட்டது.பாண்டி தலைமையில் கட்சிக்காரகள் வீட்டுக்குள் நுழைய முண்டியடிக்க...வாசலுக்கு வந்தார் ஆனந்தன்

"ய்ப்பா நானே கட்சி ஆஆபிஸ்க்கு வர்றேன்யா.. கல்யாண வீட்டைக் ககட்சி மேடையாக்கிராதீயப்பா..."

"அண்ணனுக்கு நாட்டுக் கோழி குழம்பு, ஆட்டுக் கால் சூப்பு, நண்டு வறூவல், எறா, புறான்னு அம்புட்டு தயார் பண்ணி வச்சிருக்கோம்ல்ல எல்லாம் என் ஏற்பாடு தான்... இன்னும் கரகம் , ஓயிலாட்டம்ன்னு நிறைய ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல்ல..." பாண்டி தன் பிரதாபம் பேச...

"நான் ககவுச்சி சாப்பிடுறது இல்ல.. எதுக்கு இம்புட்டு ஏற்பாடு எல்லாம் வீணாப் பண்ணிகிட்டு... சரி சரி நீங்க ஆபிஸ்க்குப் போங்க நான் வர்றேன்.."

பாண்டி தலைத் தொங்கிப் போனது.

"அண்ணே சைவச் சாப்பாடும் ரெடி பண்ணியிருக்கோம் இல்ல... " பாண்டியின் எடுப்பு எடுத்துவிட பாண்டி முகம் பல்பாய் எரிந்தது.

"சரிய்யா ஓங்களோட வந்துச் சாசாப்பிடுறேன்.. எங்க வீட்டு ஆளுங்களை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்குதேன்.. பேசி இருந்துட்டு வர்றேன்ய்யா"

கட்சி ஆபிஸ் விருந்துக்கு பக்காவாய் தயார் ஆனது.

ஆனந்தன் அந்த வீதியில் நடக்கும் போது அவர் மனத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடின.

செண்பகத்தின் ஞாபகம் அவர் மனத்தில் அதிகமாய் வந்தது. செண்பகம் ஆனந்தனின் மனைவி. ஆனந்தன் மனத்தில் இப்போது தூளி கட்டி ஊஞ்சாலடியது அவ்ரோடு 30 வருடமாய் வாழ்ந்து வரும் அவர் மனைவி செண்பகம் அல்ல. முப்பது சொச்சம் வருடங்களுக்கு முன் தன் உயிரை விடவும் ஆனந்தன் அதிகமாய் காதலித்த அவர் அத்தை மகள் செண்பகம்.

அந்தச் செண்பகத்தை இதே வீதிகளில் எத்தனை நாள் ஆசையோடும் காதலோடும் இரண்டும் கலந்த ஒரு வித ஏக்கத்தோடும் பார்த்திருப்பேன் என நினைத்த வண்ணம் அந்த வீதியில் மெதுவாய் நடந்தார் ஆனந்தன்.

சின்ன வயசுல்ல ரெட்டை சடைப் போட்டுகிட்டு சுட்டித் தனமாய் சிறகடித்தப் பட்டாம்பூச்சி செண்பகம்.
பருவம் வந்ததும் தாவணியில் அழகியத் தீயாய் வலம் வந்த செண்பகம்
திருவிழா சமயங்க்ளில் தேவதையாய் தோழிகளோடு உலா வந்த செண்பகம்
கோலம் போடும் பொழுதுகளில் ஓவியமாய் செண்பகம்

இன்னும் தன் உள்ளத்தின் ஒவ்வோரு ஜன்னல் வழியாகவும் பார்த்துப் பரவசப்பட்ட செண்பகத்தின் ஒவ்வொரு பிம்பமும் ஆனந்தனின் ஒவ்வொரு செல்லையும் செல்லமாய் உசுப்பிவிட்டுப் போனது.

அந்த செண்பகம் இந்த வீதியில் தான் இன்னும் வாழ்கிறாள் என ஆனந்தன் எண்ணிக் கொண்டார். எண்ணங்களின் ஊடே ஆன்ந்தனின் பார்வை ஒரு வீட்டின் மேல் பதிந்து நின்றது. அந்த வீடும் அதன் கோலமும் ஆனந்தனை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியது.
அந்த வீட்டுக்குள் இருந்து லொக் லொக் என்ற இருமல் சத்தம் தொடர்ந்து வந்தது.
வேலிகளில் முழுவதும் படர்ந்திருந்த காட்டுச்செடிகளும் உடைசலாய் விழுந்துக் கிடந்த வேலிக் கதவுகளும் அந்த வீட்டோடு வீட்டிலிருப்பவரின் நிலையையும் ஆனந்தனுக்கு அறிவித்தன.

"தாஸ் வாத்தியார் வீடு தானே இது...ஏன் இப்படி இருக்கு?"

"ஆனந்தனுக்குத் தெரியாதது இல்ல..பேச்சை நிறுத்தி பல வருசம் ஆச்சு... தாஸ் வாத்தியார் உடல் நிலைமையும் அவ்வளவு சீரா இல்ல..சாவுக்கு தான் இழுத்துகிட்டு கிடக்கார் ஆனாலும் எதோ ஒண்ணு அவரைச் சாகவிடாம தடுத்துகிட்டு இருக்கு... பழைய ஆளுங்களுக்கு அவரைப் பத்தி ஓரளவு தெரியும் இப்போ இருக்க இளந்தாரிகளுக்கு அவர் ஒரு சாகக் கிடக்கிற கிழவன்னு மட்டும் தான் தெரியும்...கவனிப்பு இல்ல"

"உனக்கு அவர் யார்ன்னு தெரியும் இல்ல...எனக்குச் சொல்லியிருக்கலாம் இல்ல...என்னய்யா நீங்க? "

"ஆனந்தா இனி ஒண்ணும் பண்ண முடியாது.. வெறும் கூடு தான் இருக்கு உசுரு எப்போ வேணும்ன்னாலும் பறந்துப் போகும்"

ஆனந்தன் கதவை மெல்ல நகர்த்தி விட்டு இருமல் வரும் திசை நோக்கி நகர்ந்தான். சத்தம் வந்த திசையில் பழைய பிரம்பு நாற்காலியில் பள்ளிக்கூட பயலாஜி லேப்களில் இருக்கும் எலும்புக் கூட்டினை ஒத்த மனித உருவம் ஒன்று இருமிக் கொண்டிருந்தது.

தாஸ் வாத்தியார் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனந்தன் அவர் முன்னால் சென்று மண்டியிட்டான். அவர் கையில் ஒரு சட்டம் போட்ட புகைபப்டம் இருந்தது.
அவர் கவனத்தைப் பெற முயன்ற ஆனந்தன் அவர் கையில் இருந்து அந்தப் படத்தை வாங்கினான்.

தாஸ் வாத்தியார் கண்கள் மெல்ல இவன் பக்கம் திரும்பின,. படத்தை திருப்பி அதில் உள்ள படம் தெரியும் படி பிடித்தார் ஆனந்தன்.

"ஆனந்தா இது கதிரேசன் படம்..."

ஆனந்தனின் கண்கள் நீர் வார்த்தது. அவசரமாய் கண்ணீரைத் துடைத்தார். தாஸ் வாத்தியார் கண்களில் அதிசயமாய் ஒரு புன்னகைப் பூத்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனந்தன் எழுந்துக் கொண்டான். வீட்டைச் சுற்றி ஒரு பார்வைப் பதித்தான்.

" தாஸ் வாத்தியார் இப்படி இருக்கக் கூடாது.. எவ்வளவு செலவு ஆனாலும் சரி... அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே இந்த வீட்டை மாத்துங்க.. அவர் கடைசி காலம் இப்படி இருக்கக் கூடாது. உடனே செய்யுங்க" ஆனந்தன் குரல் கிட்டத் தட்ட உடைந்துப் போனது

"தோ பார்டா நாமளும் இந்த வீட்டை அடிக்க என்னவெல்லாமோச் செஞ்சோம்,...அமைச்சர் வந்தார்.. ஓடனே வேலையை ஆரம்பிச்சுட்டார். கிழவனைக் கவனிக்கிற மாதிரி கவனிச்சு அவன் போன ஓடனே வீட்டை அடிக்கிற திட்டமிது" பாண்டியின் ஈன மூளைக்கு இப்படியாகப் பட்டது

தாஸ் வாத்தியார் கண்கள் அசைந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஆனந்தன் மெதுவாய் வாசலை நோக்கி நகர்ந்தார்.

"ஆ..னன்ந்த் தா...." குழறியபடி வார்த்தை வந்த திசையில் தாஸ் வாத்தியார் நாற்காலி விட்டு எழுந்து நின்றுகொண்டிருந்தார்...

கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை - பகுதி 3

Thursday, September 28, 2006

கதை 9:ஆஷிரா

காமராஜ் உள்நாட்டு விமான நிலையத்தின் முன்னால் கம்பெனிக்கு சொந்தமான டாட்டா இன்டிக்கா காரின் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்து மூணாவது சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். நாலாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் செல்போன் சிணுங்கியது.டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மேகமூட்டம் காரணமாக இன்னும் ஒரு இருபது நிமிடங்கள் தாமதமாக வரும் எனற எஸ்.எம் எஸ் படித்து விட்டு செல்போனைச் சட்டைப் பைக்குள் சொருகினேன்.

டெல்லியிருந்து ஆஷிரா வருகிறாள். ஆஷிரா எங்கள் குர்கான் அலுவலகத்தில் ERP பிரிவில் சீனியர் CRM CONSULTANT.வயது 27. அந்த வயதில் கிட்டத்தட்ட நான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கும் படு சாமர்த்தியசாலி. இங்கு நாங்கள் ஏற்று கொண்டு இருக்கும் ஒரு புதிய திட்டத்தைச் செயலாக்கப்படுத்தவும் எங்கள் அலுவலக ச்காக்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்னைக்கு நான்கு மாதப் பயணமாக வருகிறாள்.

பெயரைப் பார்த்தா வடநாட்டுக் காரியாத் தெரியுது. வளமைக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் அரைகுறை உடுப்புக்கும் பஞசமிருக்காது. என் மனத்திற்குள் நானே ஒரு கணக்குப் போட்டுக் கொண்டேன். அவசரப் படாதீங்க.. நீங்க நினைக்கும் கணக்கு அல்ல இது.. இது போன்ற பெண்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னச் செய்ய பொழப்பு அப்படியாகிப் போச்சு.. ஆஷிராவுக்காக இங்கு தேவுடு காத்து நிற்கிறேன். இன்னிக்கு ஞாயிற்று கிழ்மை. ஆபிஸ் டிரைவர் அவசர வேலையாக் கிளம்பிட்டான். அம்மணியோ ரொம்பவும் முக்கியப் புள்ளி. என் தல அதான் பாஸ் எனக்கு அன்புக் கட்டளைப் போட்டுட்டாரு...

"பன்னீர்..MAKE SURE THAT SHE REACHES THE GUEST HOUSE FROM THE AIRPORT SAFELY...SHE DOESNT KNOW CHENNAI"

போடாங்க... என்னப் பண்ண..பாஸ் உத்தரவு.. ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை காலைத்தூக்கம் போச்சு. நாலாவ்து சிகரெட் ஓயவும். டெல்லி விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது. என் கையில் ஆஷிரா என்று எழுதப் பட்டிருந்த அட்டையை வேண்டா வெறுப்பாய் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன்.

"டிரைவர்.. மேரா சாமான் இதர் ஹை.. வண்டி எங்கே இருக்கு?"

அழுத்தமான ஆணவப் பெண்குரல் ஒன்று என் காதுகளைக் கிழித்துச் சென்றது.
மூர்க்கமான முகத்தோடு அவளைப் பார்த்தேன். உச்சி முதல் பாதம் வரை முழுசா உக்கிரமானப் பார்வைப் பார்த்தேன். அவள் அழகு தான்.. அழகை ரசிக்க விடாமல் அவள் ஆணவம் என்னைத் தடுத்தது.

"அரே டிரைவர்.. க்யா தேக் ரஹே ஹோ.. வண்டி சீக்கிரம் எடுப்பா"

என் கை கார் இருக்கும் இடம் நோக்கி சுட்டியது.. அவள் விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தாள். நான் வேறு வழியில்லாமல் அவள் மூட்டைகளை நகர்த்தியபடி காருக்கு வந்தேன். எதுவும் பேசாமல் காரை செலுத்தினேன். கொஞ்சம் வேகமாகவே ஓட்டினேன்.

பின் சீட் கண்ணாடியை அவள் இறக்கிவிட்டாள், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகையை வெளியே விட்டாள்.என்னிடம் எதுவும் பேசவில்லை.

நானும் எதுவும் பேசவில்லை. காரை வேகமாக ஈ.சி.ஆர் ரோட்டை நோக்கி விட்டேன். கார் நீலாங்கரை கம்பெனி கெஸ்ட் ஹவுஸை அடைந்தது. அவள் இறங்கினாள். கெஸ்ட் ஹவுஸ் வேலையாள் இம்முறை என்னை மூட்டைத் தூக்கவிடாமல் காப்பாற்றினான். அவள் சல்லென்று உள்ளேப் போய்விட்டாள். வேலையாளிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு பொடி நடையாய் பஸ் ஸ்டாண்ட நோக்கி நடந்தேன்.எனக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதையும் மீறி பேருந்துப் பயணத்தில் அவள் வளைவு நெளிவுகள் என் சிந்தையில் வந்து மோதி என் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை பத்து மணிக்கு தான் நான் அலுவலகம் போனேன். முன் கூட்டியே காலத் தாமத்திற்கு அனுமதி வாங்கியிருந்தேன்.என்னுடையக் கேபினை அவளுக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனக்கு எரிச்சல் அதிகமானது.எரிச்சலை உள்ளுக்குள்ளேப் புதைத்துவிட்டு எனக்கு ஒதுக்கியிருந்த வேறு இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கிருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது.

கலைந்த கேசம்... மிடுக்கானக் கண்கள்... நெற்றியில் புரளும் கற்றை முடி.. அதில் ஒரு விரல் வைத்த அவள் விளையாடியது.. கூர்மையான மூக்கு... மிருதுவான உதடுகள்.. ம்ம்மம் அம்சமாத் தான் இருக்கா.. அதான் திமிர் எனக்கு நானேச் சொல்லிக்கொண்டேன். பாஸ் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். முந்தைய நாள் என்னைப் பார்த்துப் பேசியதற்கான எந்த அறிகுறியும் அவள் நடவடிக்கையில் தென்படவே இல்லை.அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல் படு யதார்த்தமாகப் பேசினாள்.நானும் பாஸ் முன்னாடி சிரிச்சு வச்சேன்.

மத்தியானம் லஞ்சுக்கு வெளியேப் போயிருந்தோம். சாப்பிட்டு முடித்த உடன் தம் அடிக்க நான் வெளியே ஒதுங்கினேன். அவளும் வந்தாள். பற்ற வைக்க வத்திப் பெட்டி இல்லாமல் அக்கம் பக்கம் பார்த்து விட்டு என்னை நோக்கி வந்தாள். வந்துக் கேட்டாக் கண்டிப்பாக் கொடுக்க கூடாது. எனக்குள் ஒரு வைராக்கியம் நுழைத்துக் கொண்டு இறுக்கமாய் நின்றேன். அவள் என் பக்கமாய் வந்து என்னைக் கேட்காமலே என் வாயிலிருந்த சிகரெட்டை எடுத்து தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாவகாசமாய் புகையை விட்டாள். என் கோபம் என் கட்டுப்பாட்டினை மீற துடித்தது.

"சோ இந்த் ஆபிஸ்ல்ல வாங்குற சம்பளம் உங்களுக்குப் பத்த மாட்டேங்குது அப்படித் தானே? என்று கேட்டு விட்டு தலையை ஸ்டலாக் ஒரு புறம் பார்த்து தாழ்த்தினாள்.
"எனக்குப் புரியல்ல.." என்று நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.

"இல்லை வீக் டேஸ்ல்ல SOFTWARE ஜாப். வீக் என்ட்ஸ்ல்ல டிரைவர் ஜாப்... வருமானம் நல்லாத் தான் இருக்கும் என்று கிண்டலாய் சிரித்தவள்... பட் யூ நோ.. யூ ட்ரைவ் த கார் வெல்" என்றாள்.
எனக்குக் கடுப்பு அதிகமானது. வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் டைட் ஜீன்ஸை என் ஓரக் கண்ணால் அளவெடுத்தேன். அவள் இடுப்பில் சட்டைக்கும் ஜின்ஸ்க்கும் ஒரு நூல் அளவு இடைவெளி. அந்த இடைவெளியில் என் பார்வைப் பதிந்து நின்றது.

மாலை அலுவலக்ம் விடும் நேரத்துக்கு முன்பாக என்னையும் என் சகா கார்த்தியையும் பாஸ் கூப்பிடனுப்பி மாலையில் எங்களுக்கு என்ன வேலை என வினவினார்.
கார்த்தி எப்பவுமே உஷார் பார்ட்டி.. " பாட்டிக்கு கேட்ரக்ட் ஆப்பரேஷ்ன் சார்.. இன்னிக்குப் பாக்கப் போறேன்" டக்குன்னு அள்ளிவிட்டான்.
நான் சாதுவா ஒண்ணுமில்ல சார் என்று தலையாட்டி நின்றேன்.
"மச்சி பெரியப்பா எதாவது டாகுமெண்ட் வேலையை உன் தலையிலேக் கட்டப் போகுதுப் பார்" எனக் கிசுகிசுத்தான் கார்த்தி.

பாஸ் சொன்ன விஷ்யமே வேறு. ஆஷிரா மாலையில் சென்னையில் எங்கோப் போக வேண்டுமாம். அதுக்கு காவலாளி வேலைப் பார்க்க ஆள் வேண்டும். நான் தான் மீண்டும் சிக்கினேன். கார்த்தி கொந்தளித்துவிட்டான்.
"ம்ம் உனக்கு மச்சம்டீ.. அரேபியக் குதிரையை ஓட்டிட்டுப் போறே... ம்ம்ம்" அவன் விட்ட பெருமூச்சை சிலிண்டிரில் பிடித்து வைத்திருந்தால் ஒரு மாதம் சமையலுக்கு ஆகும்.மறுபடியும் அதே இன்டிக்கா... டிரைவர் சீட். இம்முறை அவள் பின்னால் உட்காராமல் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். செம பர்ப்யூம் வாசனை. மனுஷனைக் கும்முன்னு தூக்கிச்சு.

அதிசயமாச் சிகரெட் பிடிக்கவில்லை. கபாலிஸ்வரர் கோயிலுக்குப் போகணும்ன்னு சொன்னாள். வண்டியை மயிலாப்பூருக்கு விட்டேன்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. அவள் என்னைக வரச் சொல்லி கூப்பிடவுமில்லை, காரணுமும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் காத்து இருந்தேன். வந்தாள். நெற்றியில் குங்குமம் இட்டு, பிரசாதம் கையில் ஏந்தி , தலையில் ஒரு முழம் மல்லிகைச் சூடி ஜின்ஸ் அணிந்த ஒரு தேவதையாய் வந்தாள்.

"ARE U AN ATHEIST?" அவள் கேட்டாள்
"நோ.. அடுத்து எஙகப் போகணும்? " என்று கேட்டேன்.
"அடையார் கேன்சர் இன் ஸ்டியூட்டிட்"
"அங்கே யார் இருக்கா?"
"அங்கேப் போகணும்" உறுதியானக் குரல் பதிலாய் வந்தது. அவள் கையில் ஒரு ரோஜாப் பூ இருந்தது. நான் வண்டி நிறுத்துமிடத்தில் நின்று கொண்டேன்.

அவள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னப் புன்னகைப் புதிதாய் பூத்திருந்தது.
"அடுத்து எங்கே?"
"நல்ல ரெஸ்டாரெண்ட் போலாம்"
"நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்குவேன்"
"ரிலாக்ஸ் உங்களைப் பில் எல்லாம் கட்டச் சொல்லமாட்டேன்"
அவள் சிரித்தாள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.
"சிரிக்க வேண்டாம்.. உம்ன்னு இருந்தாலே ஜம்ன்னு இருக்கீங்க"

ஹோட்டலில் சைவ வகைகளை ஆர்டர் செய்தாள். நான் ஜீஸ் சொன்னேன்.

"எப்படியிருக்காங்க?"

"யார்?"

"கேன்சர் இன் ஸ்டிடியூட்ல்ல பாக்கப் போணீங்களே அவங்க.."

"ஓ அதுவா? அங்கே இப்போ யாரும் இல்ல. எங்க அப்பா அங்கே இருந்தார். கடைசியா எட்டு மாசம். வார்ட் நம்பர் 13. அப்போ எனக்கு எட்டு வயசு. நிறைய சிகரெட் பிடிப்பாராம். போயிட்டார். அவருக்கு ரோஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்க,, அதான் அவர் கடைசியா இருந்த ரூம்ல்ல ஒரு ரோஸ் வச்சுட்டு வந்தேன்" என்ற படபடப்பாய் பேசி முடித்தாள்.

"நீங்களும் நிறைய ஸ்மோக் பண்றீங்க?"

"அப்பா கிட்ட போகணும் அவர் கூட மிஸ் பண்ண சைல்ட்ஹூட் டேஸ் எல்லாம் மறுபடியும் வாழணும்ன்னு ஒரு ஆசை.. அதான் நானும் பிடிக்குறேன்.." என்று கலகலவெனச் சிரித்தாள்.எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆர்டர் செயத் அயிட்டங்கள் பரிமாறபட்டன. அவள் ஒவ்வொன்றாய் எடுத்து ருசிக்க ஆரம்பித்தாள்.

"ஜோக் மேன்... காலேஜ் டேஸ்ல்ல ஜாலியா அப்படியே ஆரம்பிச்ச பழக்கம் இப்போ அப்படியே போகுது,,, நீ எப்படி மேன்? ரொம்ப மூடி டைப்பா இருக்கே?"

நீங்க தேயந்து நீயானது. அவள் கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்தேன்.

"உங்க..உனக்கு தமிழ் எப்படி தெரியும்? " நானும் வேண்டுமென்று மரியாதைத் தவிர்த்தேன். என்னை விட ஒரு வயசு சின்னப் பொண்ணு தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

"நான் தமிழ் பொண்ணு தானே.. அப்பாவுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் நன்னிலம். ஆனா இது வரை தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. இது தான் முதல் தடவை. பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் என்னைச் சென்னைப் பக்கம் விட்டதே இல்லை"

ஒரு நீருற்றாய் வார்த்தைகள் அவளை விட்டு புறப்பட்டன. அருவியாய் அவள் பேச்சு பொங்கியது. ஒரு நதியாய் என் காதுகளில் அவள் மொழி நடந்தது. ஒரு சில நிமிடங்களில் அவளைப் பற்றிய என் அபிப்பிராயங்கள் மாறத் துவங்கின. என்னவெல்லாமோ பேசினாள். ஆனால் எதிலும் அவள் தன் தாயைப் பற்றி மறந்தும் குறிப்பிடவில்லை. எனக்குக் கேட்க வேண்டும் என்று உறுத்தியது. ஆனாலும் கேட்கவில்லை.

அலுவலகம் வந்து விட்டால் வேலையில் கில்லியாய் நிற்பாள். வேலையைத் தவிர வேறு சிந்தனை எதுவுமே அவளிடம் இருக்காது. வேலைச் சொல்லிக் கொடுப்பதிலும் அவள் கெட்டிக்காரி.

ஒரு சனிக்கிழமை மாலை என்னை அவள் வீட்டுக்கு அழைத்திருந்தாள். நானும் போனேன்.
கதவைத் திறந்தவள் கால்சட்டையும் டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஒரு நல்ல ஓட்டப் பந்தைய வீராங்கனைக்குரிய கால்களை அவள் பெற்றிருந்தாள்.

"கம் இன்"

அவள் அறையில் புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன. பாதிக்கும் மேல நமக்குப் புரியாத பிரெஞ்சு மொழியில் கிடந்தன.

"புக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மொழி பேதமில்லாமல் படிப்பேன்... படிக்கணும் அப்போத் தான் நம்ம உலகம் இன்னும் பெருசாகும்... பெரிய உலகத்திலே சின்ன சின்ன விஷ்யங்கள் காணாமல் போயிடும்"

நான் கையில் கிடைத்தப் புத்தகங்களைப் புரட்டினேன்.இசைத் தட்டுகளை ஆராய்ந்தேன். சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்தேன். அதில் ஒரு படத்தில் ஒரு அழகானச் சிறுமி இருந்தாள். அது ஆஷிராவாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அவள் குடும்ப படம் இருந்தது. ஆஷிராவின் அம்மா படமும் இருந்தது. ஆஷிராவின் அம்மா கிட்டத்தட்ட ஆஷிராப் போலவே இருந்தாள்.

"சரி என்ன ட்ரிங்க் வேணும் விஸ்கியா ஜஸ்ட் பியரா?"
"நோ தாங்க்ஸ்"
"குடிக்க மாட்டியா? வெறும் தம்மு தானா?"
"இல்ல இப்போ வேணாம்"
"ஓ ஓஓஓஓ... ஏன்? " அவள் குரலில் நக்கல் இருந்தது.

அவள் விஸ்கி ஊற்றி கொண்டாள். கோப்பையிலிருந்து மெதுவாக எடுத்து பருகினாள்.
அவ்ள் கண்களில் ஒரு வித சோகம் இழையோடியது.

"ஹே.. ஒரு அழகான பொண்ணு..நான் அழகாத் தானே இருக்கேன்?"
நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
"அப்புறம் அந்த அழகான பொண்ணு செக்ஸியான டிரெஸ்ல்ல.. தண்ணியடிச்சுட்டு இருக்கா.. அதுவும் தனியா இருக்கா.. உனக்கு செக்ஸ் எண்ணம் வரலியா?"

நான் உள்ளுக்குள் அதிர்ந்துப் போனேன். நம்ம மனசுக்குள்ளே இவ எட்டிப் பாக்குறாளான்னு ஒரு வினாடி திகைச்சுப் போயிட்டேன்.

"ஹே ரிலாக்ஸ் உங்க தமிழ் படத்துல்ல எல்லாம் அப்படித் தானே காட்டுவாங்க... தம் தண்ணி இதெல்லாம் ஒர் பொண்ணு அடிச்சா அவ எதுக்கும் தயார் அப்படி தானே உங்க நினைப்பு"

ஆஷிரா அதுக்கும் மேல் எவ்வளவோ பேசினாள். நான் ம்ம் கொட்டி வைத்தேன்.

"ஹே நீ யாரையாவ்து லவ் பண்ணி இருக்கீயாடா?"
"ம்ம் பண்ணியிருக்கேன்"
அவள் எக்காளமாய் சிரித்தாள்.
"இந்த சுடு மூஞ்சிய யார்ப்பா லவ் பண்ணா?"
"என் காலேஜ் மேட் அவப் பேர் ரஞ்சனி. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. யு.எஸ்ல்ல இருக்கா. அவளுக்கு ஒரு பையன் இருக்கான்"

கோப்பையில் இருந்த மதுவை மெல்ல விழுங்கினாள்.

"அவ பையனுக்கு உன் பெயரா வச்சுருக்கா? உன் காதலி" அவள் பேச்சில் ஒரு விட்டேத்தித் தனம்.

"இல்லை"
"ரொம்ப லவ் பண்ணீயோ?"
"ம்ம்"
"நானும் லவ் பண்ணேன்.. ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நிறைய வாட்டி..இப்போ ஒரு ஆம்பிளைக் கிட்ட என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியும் " என்று என் அருகில் வந்தாள்.

நெற்றி முடியினைக் கையில் பிடித்தப்படி என் விழி பார்த்துச் சொன்னாள்.
"தைரியம்டா.. அது உங்க எவன்கிட்டயும் இல்லடா.. இருட்டல்ல இருக்க தைரியம் வெளிச்சம் வந்தா உங்களுக்குப் போயிடுதுடா..."

என் கன்னத்தில் பளீரென்று யாரோ அறைவதுப் போலிருந்தது. அந்த விடிந்தும் விடியாதுமான இரவினில் ரஞ்சனியை அவள் உறவுக்காரர்கள் வந்து இழுத்துப் போனதும்.. அவரகளுக்குப் பயந்து ரஞ்சனியின் கை உதறி நான் புதருக்குள் போய் பம்மியதும் நினைவுக்கு வந்தது..

"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.

"நான் போகணும் ... ராத்திரி ஒம்போது மணிக்கு அம்மா ஊருல்ல இருந்து பேசுவாங்க.. செல்போனை ரூம்ல்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்ற படி திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

Thursday, September 21, 2006

கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி












என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..

முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...

அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..

சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்

வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்

ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி

Monday, September 11, 2006

கவி 22:வான் தொடும் பொழுது

இன்றும் என் மீது மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த வலி என்னில் இருக்கிறது
மரணத்தோடு ஒரு சந்திப்பு
மௌனங்களின் ஆர்ப்பரிப்பு

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
என்னருகே மரணம்
எல்லாம் முடிந்தது
என்னும் மரணத்தின் ஆணவம்

அறுத்தெறிந்து ஓடினேன்
அழுகையின் ஊடே ஓடினேன்
நிற்கவும் நேரமில்லை
நின்றாலும் ஆவது ஏதுமில்லை

பூக்களின் புன்னகை
பாதையின் ஓரமாய்
கண்ணாடி ஓவியங்கள்
காயங்களின் தோரணமாய்
பொக்கிஷ்மாய் நினைத்ததெல்லாம்
பொருட்டாய் தோன்றவில்லை

இன்னொருத்தனின் வலி
இதயம் தொடவில்லை
இன்னொரு குரல்
இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை

சாவின் சங்கிலிக்கு
சிக்கக் கூடாது
சாத்தான்கள் சத்தம்
சாட்டை சுழற்றியது

என் கைகளில்
என் உயிரின் சுவாசம்
பிழைத்துக் கொண்டேன்
பிறருக்கு இல்லாத பாக்கியம்
பிழைத்துக் கொண்டேன்

உயரங்கள் மிஞ்சவில்லை
உயிர் மட்டும் மிஞ்சியது..
உடைந்தக் கண்ணாடியில்
உடைந்த என் உருவம்

என் அடையாளம்
எனக்குத் தெரியவில்லை
என் முகம்
எனக்குப் பிடிக்கவில்லை

என்னை முத்தமிட வந்து
என்னைத் தேடிய மரணமே
என்னைக் காணாது
எத்தனைக் கோபம் உனக்கு?

அழுத கண்ணீர் காயந்துவிட்டது
அழிந்த உயிர்கள் ???

இன்று காலை இந்து நாளிதழில் 9/11 உலக வியாபார மையம் இடிப்பட்டப் போது அதில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவரது பேட்டியினைப் பிரசுரித்து இருந்தார்கள். கண்ணருக்கே பலரின் மரணம் கண்டு அதில் தான் பிழைத்ததுக் குறித்து அந்த மனிதனால் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. ஒரு வித குற்றயுணர்ச்சியினால் அந்த மனிதர் தவிக்கிறார். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.

Friday, August 25, 2006

கவி 21:கல்லறை

இங்கே புதைக்கப்பட்டது
ஓர் உடல்
ஓராயிரம் கனவுகள்

மண்ணுக்கு உணவானாய் நீ
மண்ணுக்கு இன்னும் நோவாய் நான்

சில கடமைகள்
அவரசமாய் முடிக்கப்பட்டு
சிந்திய கண்ணீரினால்
அதினினும் அவசரமாய் கழுவப்பட்டன

முடிவில்லாப் பயணம்
முந்திக் கொண்டாய் நீ
முறிந்தச் சிறகுகளுக்குள்
முகம் புதைத்தப் படி நான்

உறவுகள் உன்
உறக்கத்தை
அலங்கரித்து விட்டு
அகன்றது

சில நாள் துக்கம்
சில கால ஞாபகம்
அவ்வளவு தான்
நீ அவர்களுக்கு

என் மொழியின்
நிரந்தர மௌனமடி நீ
என் மனத்தின்
ரகசிய ரணமடி நீ
ஒரு ஆயுள் கால
சேதமடி நீ எனக்கு...

கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...

Thursday, August 17, 2006

கவி 20:வாழ்க்கை ஒரு சிறு குறிப்பு

கான்கிரீட் காடுகளில்
கட்டடக் கூடுகள்...
உயரங்களின் தனிமையில்
உள்ளது என் முகவரி...

தொட்டு விடும் தூரத்தில் வானம்
தொலைவினில் எனக்கு நான்...
சாதனையின் தோரணங்கள்
என் வாசலுக்கு வெளியே...
சாகடிக்கும் வேதனைகள்
என் சுவாசத்தின் உள்ளே...

சில்லறைகளின் சிதறலில்
சிக்கிச் சிதறிய என் வாழ்க்கை
கல்லறைக்குப் போகும் வரை
தடுக்க முடியாது அதன் போக்கை

திரும்பிப் பார்க்கவில்லை
திரும்பவும் முடியுமா
தெரியவில்லை....

நின்று நிதானிக்க
நான் நினைத்ததில்லை
நிற்கவும் இல்லை...

எதையெல்லாம் இழந்தேன்
எதையெல்லாம் அடைந்தேன்
கணக்குப் புரியவில்லை
காலம் காத்திருக்கவில்லை...

பற்ற வைத்த சிகரெட்
புகைந்துக் கொண்டே இருக்கிறது
அதினும் வேகமாய்
அவ்வப்போது நானும்...

ஆரம்பம் உண்டென நம்பினால்
ஆண்டவனும் உண்டெனு நம்பு
ஆரோச் சொன்னார்
அப்போது யோசிக்கவில்லை...

இப்போது மட்டும் என்ன?
இன்னும் கொஞ்சம் நேரம்தான்
இதிலாவது வாழ்ந்து விடு
இதயத்தின் வேண்டுகோள்

கேட்கட்டுமா?
கேட்டுத் தான் பார்க்கட்டுமா?

காடு விட்டு மறு காடு
கிளம்பும் அந்த தருணம்..
கண்கள் தேடியது..
பொன்னை அல்ல
பொருளை அல்ல
புகழை அல்ல..

பெருமூச்சு எழும்பி
பெரிதாய் அடங்கியது

"பெரியவர் உறவுக்காரங்க ஆராவது இருந்தா...
பார்த்துடச் சொல்லுங்க..
போகுற உயிர் சந்தோஷமாப் போகும்"


கடைசி வார்த்தைககள்
காதினில் ஒலிக்க
கனவுகள் ஓய்ந்தன..
கதம் கதம்...

Thursday, August 10, 2006

கவி 19:மீண்டும் சென்னையில் ஒரு மழைக் காலம்




















நினைவில் இன்னும்
நனைந்தபடி அந்த நவம்பர் மாதம்..

இரு விழிகளின் ஓரம்
இருண்ட மேகங்களாய்
இமைகள் படபடக்க..

இன்னொரு புயல்
இதயத்தின் வெகு அருகில்
இன்னும் சில நிமிடம்
இதுவும் கடந்துப் போகும்

இடியின் சத்தம்..
இலக்கின்றி தாக்க...
மின்னல் கீற்று
முகத்தில் அறைய...

சோவெனக் கொட்டுது
சாரல் மழை...
இசைக்கும் மழை..
இனிக்கும் மழை...
இன்று இரண்டுமே இல்லை...

வார்த்தைகள்
வீசிய காற்றில்
வீழ்ந்துக் கிடக்க
கட்டியக் கோட்டைகள்
காரண வெள்ளங்களில்
கலங்கிச் சரிய...

வெற்று பார்வைகள்
வெளிறிய கனவுகள்.

கலகலப்பா சொல்லும் வாக்கியம்
காலத்தின் கட்டாயம்
களை இழந்தத் தொனியில்
கேட்க முடிந்தால்
கேட்டுப் போ..

ஜில்லென்று ஒரு காதல்..
ஜம்மென்று ஒரு கல்யாணம்...

ஈரமான அவள் திருமணப் பத்திரிக்கையில்
இடிந்துப் போன என் எதிர்கால உறவுகள்

Wednesday, June 21, 2006

கவி 18:தீவுத் தமிழா


தமிழகக் கரையோரம் மோதும்
தண்ணீர் அலைகள்
சமீபக் காலங்களில்
சற்று அதிகமாய் உவர்க்கிறதாம்...

விசாரித்த வரையில்
விவரங்கள் வியர்க்க வைக்கினறன்
தீவுத் தேசத்தில் தினமும்
தமிழன் கண்ணீர் சிந்துகிறானாம்

கண்ணீரும் கடலும் கைகோர்த்து
கடிதம் எழுதுகிறது
அலை வாயிலாக
அவசர அஞசல் வருகிறது

வாசிக்க வாசிக்க
வலிக்கிறது
வலியின் மிகுதியில்
வார்த்தைகளும் இறக்கின்றன

தேயிலைத் தோட்டங்களில்
தோட்டாக்கள் சாகுபடியா?
இயற்கையின் மடியில்
இன்னும் இனப்படுகொலைகளா?

ஆயுதம் கூட அழுதிருக்கும்
அந்த ஈனச் செயலில் இறங்கியதால்
இன்னும் மலராத மொட்டுக்களை
இரக்கம் பாராமல்
கொய்து எறிய
கொலை ஆயுதமே சம்மதியாதே!!!

உயிரின் மொத்தமும்
உலுங்கிப் போனது
வாழ்க்கையின் மீதான நம்பிக்கை
வழுக்கிப் போகுது

எதைச் சாய்ப்பதாய் உத்தேசம்
எதைச் சாதித்ததாய் எகத்தாளம்
கிழிந்தது மனிதன் என்னும் உங்கள் முகம்
காயப்பட்டது மனிதம் என்னும் மதம்

தீவுத் தமிழா
தீராத உன் ஏக்கம்
உன் ஓலங்களின்
உள்ளது என் மொழி

உன் உறக்கங்கள் ஊனப்பட்டு
உன் கனவுகள் களவாடப்படுகையில்
என்னவோ செய்கிறது
என்னிலும் உன் கண்ணீர் வழிகிறது...


வலை உலகிலும் பத்திரிக்கையிலும் படித்துப் பதறிய இலங்கை நிகழ்வுகளால் தட்டிய வார்த்தைகள்.எல்லாம் வல்ல இறைவனிடம் நம் சகோதர தமிழர்களுக்கு அமைதி தர வேண்டுகிறேன்.

Friday, June 16, 2006

கதை 8:சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

சைக்கிளை மாங்கு மாங்கு என்று மிதித்து விவேகானந்தாக் கல்லூரி வாசலுக்கு நான் வந்து சேர்ந்தப் போது மணி சரியாய் எட்டேமுக்கால்.

அப்போ எனக்கு வயசு 17. பிளஸ் டூ முடிச்சிருந்தேன். கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். ஜீன்ஸ் பேண்ட் பிளாக் கலர் ஷ்ர்ட். கல்லூரி வாசலையே உத்து உத்துப் பாத்துகிட்டு நின்னேன். முதுகுல்ல பட்ன்னு ஒரு அடி. சுளீர்ன்னு கோபத்துல்ல திரும்புனேன். ஒரு நாலுப் பேர் வாட்டசாட்டமா நிக்குறாங்க.

அதுல்ல ஒருத்தன் விறைப்பா என்னை முறைச்சுப் பார்த்தான். நானும் திருப்பி முறைச்சேன்.

"டேய்... பர்ஸ்ட் இயரா"

" "

"த்தா.. கேக்குறோம் முழிக்கிறான் பாரு"

"மச்சி பிசிக்ஸ் ஆர்.ஆர் வர்றார்.. ராகிங்ன்னுப் பிடிச்சு டின் கட்டப் போறான்னுங்க.. வா இடத்தைக் காலி பண்ணுவோம்.. புள்ள எங்கேப் போயிடப் போகுது.. மறுபடியும் மாட்டும் அப்ப வச்சிக்கலாம் நம்ம கச்சேரியை...இப்போ பீரியா விடு"

முறைத்தவன் இன்னும் கடூரமாய் முறைத்தப் படியே நகர்ந்தான். எனக்கு லேசா உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

மறுபடியும் முதுகில் யாரோத் தட்ட கொஞ்சம் தயக்கமாய் திரும்பினேன்.

"பாஸ் ரிலாக்ஸ் நானும் பர்ஸ்ட் இயர் தான்... த்தா...****பசங்க என்ன உன்னக் கலாய்ச்சங்களா.. த்தா.. அவங்களை...." அதற்கு பிறகு அவன் பேசியது எதுவுமே அப்போது எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும் என்னில் அப்போதைக்கு ஓங்கி வளர்ந்தது.

"ஆமா..பாஸ் ஏன் இப்படி முழிக்கிற? புரியல்லயா?"

"நான் இவங்களைப் பத்தி சார் கிட்ட சொல்லப் போறேன்...இது தப்பு..எங்க வீட்டுல்ல சொன்னா அவ்வளவு தான்..."

"தோடா.. பாஸ் நீ சரியான் பால் புட்டியா இருக்கே..சார் கிட்டே சொல்ல போறீயா.. அவனுங்களுக்குத் தெரிஞ்சா உன்னை உருட்டி உருட்டி அடிப் பின்னிடுவானுங்க....அவனுங்க எல்லாம் ....."
மறுபடியும் அதே அர்ச்சனையை அவிழ்த்து விட்டான். நான் லேசாய் முகம் சுளிப்பதை அவன் கவனித்திருக்க வேண்டும்.

"பாஸ் நீ எந்த ஏரியா?"

"மயிலாப்பூர்"

"எவ்வள்வு மார்க்?"

"87%"

"பாஸ் நீ படிக்கிற பார்ட்டியா? அதான் உனக்கு நம்மப் பேச்சு புரியல்ல"

அவன் சினேகமாய் சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன்.

"பாஸ் உனக்குப் பிடிச்ச நடிகர் யார்?"

"என் பேர் தேவ்... எனக்கு ரஜினி பிடிக்கும்"

"சாரிப்பா தேவ்ன்னே கூப்பிடுறேன்.. என் பேர் பாலாஜி... ராயபுரம் தான் நம்ம ஏரியா... தம் அடிப்ப இல்ல"

"அய்யய்யோ அதெல்லாம் கிடையாது" ஏறக்குறைய அலறிவிட்டேன்.

"தம் இல்லயா... அப்புறம் தலைவர் ரசிகன்னு சொல்லுற?"
நக்கலாய் சிரித்தான். " தம் அடிக்க வேணாம்.. டீக்கடைக்கு வருவே இல்ல ஒரு கம்பெனிக்கு"

நான் தலையாட்டினேன். இப்படித் தான் பாலாஜி எனக்கு அறிமுகமானான். அடுத்து வந்தக் காலங்களில் அவனே என் வாழ்வின் ஆசான் ஆனான்.

டீக் கடையில் அண்ணா நகரில் இருந்து வந்த சிவாவும், ஆவடியில் இருந்து வந்த குமாரும் ஒரு குடும்பமாய் ஒன்று சேர்ந்தோம். கோடம்பாக்கம் பழனி எப்போ எங்க குரூப்ல்ல சேர்ந்தான்னு சரியா ஞாபகம் இல்லை.

சரியா மூன்று மாசம் கழிச்சு அதே டீக்கடையில்

"மச்சி... அஞ்சு கிங்ஸ் சொல்லு"
பாலாஜி பற்ற வைத்த சிகரெட்டில் என்னுடைய சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

"எப்படி மச்சி தலைவர் ஸ்டைல்ல பிடிக்கிறேனா?"

"தோடா..." மற்ற நால்வரும் கோரசாய் சிரித்தனர்.

"த்தா ஏன்டா சிரிக்கிறீங்க... இங்கே என்ன ஷோவாக் காட்டுறாங்க"
நான் சீறினேன்.

"மச்சி அன்னிக்கு உன்னை ராக் பண்ணானே அவன் வர்றான் பாரு"

"யார் அந்த டோரி கண்ணனா.. வர்றட்டும்... ஒரு நாளைக்கு அவனுக்கு இருக்கு பாரேன்.. பிஷ்கார்டன் தாண்டி தான் வீட்டுக்குப் போறான்.. ஒரு நாளைக்கு முகத்துல்ல துணிப் போட்டு அவனை அடிப் பின்னப் போறேன் பாரேன்"

"சரி இப்போ போலாம் வா... தேவில்ல எதோ புது இந்தி படம் போட்டு இருக்கான்டா.."

"இந்தி எழவு எவனுக்கு விளங்கும்.?" சிவா சொன்னான்.

"அடேய்.. இந்தி விளங்காட்டி பரவாயில்ல. அங்கே படம் பார்க்க வர்ற சேட்டு குட்டிங்களோட நடை உடை விளங்குனாப் போதாது" பழனியின் கருத்து.

"என்ன இழவுடா அந்த மைதா மாவு மூஞ்சிகளையே எவ்வளவு நேரம் பாக்குறது... வேஸ்ட்டா" குமார் சொன்னான்.

"மூஞ்சியை ஏன்டா பாக்குறீங்க" பாலாஜி எடுத்துவிட்டான்.

"நான் வர்றல்ல.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு"
சிவா ஜகா வாங்கினான். மற்ற நான்கு பேரின் சந்தேகப் பாரவையும் சிவாவின் மீது படிந்தது.

"தோடா கிளாஸ் கட் அடிச்சிட்டு வந்து உக்காந்து இருக்கோம்.. உனக்கு என்னடா பெரிய மசுரு வெட்டுற வேலை" பழ்னி சீண்டினான்.

"மச்சி அது ஒண்ணும் இல்லடா... அந்த எத்திராஜ் காலேஜ் திவ்யா சாயங்காலம் கம்யூட்டர் கிளாஸ்க்கு வருவா.. நம்ம மச்சான் போய் வெளியே நின்னு ஆஜர் கொடுப்பார்.. நம்ம கூட படத்துக்கு வந்தா அந்தப் பொன்னான வாய்ப்பு மிஸ் ஆயிடுமே அதான் வர்றல்ல" நான் சொன்னேன்.

"எத்திராஜ் காலேஜ் திவ்யான்னா... அந்த 27டி பிகரா.. அன்னிக்குக் கூட அபிராமி போறப்போ நீ காட்டுனிய அதுவா.. அந்த ஹட் பிகரையா மாமா நீ லுக் விடுற?" குமார் கொஞ்சம் எகத் தாளமாய் பேசிவிட்டான்.

"டேய் குமார்.. இது என் பர்சனல் மேட்டர்..இன்னொரு வார்த்தை அவளைப் பத்திப் பேசுன.. மவனே உன் கழுத்தை நெறிச்சுக் கொன்னுடுவேன்டா"

சிவா டக்கென எழுந்து அங்கிருந்து வேகமாய் நடந்தான். எங்களுக்கு அவனைத் திருப்பிக் கூப்பிடணும்ன்னு தோன்றவே இல்லை. குமாரின் கண்கள் சட்டேனக் கலங்கி விட்டன. குமார் அழுதது மனசுக்கு ரொம்பவே கஷ்ட்டமாப் போச்சு.

"டேய் அவன் என்னப் பேசிட்டுப் போறான் பார்த்தீயா... உங்களை எல்லாம் எனக்கு மூணு மாசமாத் தான் தெரியும் அவன் என் கூட பிரைமரி ஸ்கூல்லருந்துப் படிச்சான்டா.. ஒரு பொண்ணுக்காக என்னை கொன்னுடுவேன்னு சொல்லுறான்டா"

பாலாஜி தோள்ல்ல குமார் சாய்ஞ்சுக்கிட்டான். அன்னிக்கு நாங்க சினிமாவுக்குப் போகல்ல. முதல் முறையா பாருக்குப் போனோம். நண்பனுடைய துக்கம் எங்க துக்கம்ன்னு முடிவு பண்ணி முதல் முதலாத் தண்ணியடிச்சோம். எவ்வளவு ஒரு கசப்பான அனுபவம். பாலாஜி அவன் மோதிரத்தை அடகு வச்சு எங்களுக்கு தாராளமாத் தண்ணீ ஊத்துனான்.
குமாருக்கு முன்னாடியே லைட்டாப் பழக்கம் இருக்கவே.. குடிச்சுட்டு கும்மாளமாப் பாட்டு பாட ஆரம்பிச்சான். கூட்வே பாலாஜியும் பக்கவாத்தியமா பார் பெஞ்ச்சுல்ல தாளம் கட்டுனான். நானும் பழ்னியும் மோந்துப் பாத்தவுடனேயே மட்டையாகிட்டோம்.

அடுத்த நாளும் நாங்க காலேஜ்க்குப் போகல்ல. சிவாவைப் பார்க்கவே இல்லை. வாரம் தவறாம தண்ணிப் போட ஆரம்பிச்சோம். வாரம் ஒரு காரணம். என்னிக்கோ செத்துப் போன பாலாஜி தாத்தாவுக்கெல்லாம் துக்கம் கொண்டாடி தண்ணியடிச்சோம். அப்படி வளர்ந்தோம்.
அந்த நேரம் காலேஜ் ஒரே போராப் போச்சு. சிவா அவ்வளவாக் காலேஜ்க்கு வர்றதே இல்ல. ஒரு ஓரமா வருத்தப் பட்டாலும் குமாருக்காக அந்த வருத்ததை அமுக்கி வச்சிக்கிட்டோம்.

எங்க காலேஜ்க்கு பக்கத்துல்ல இன்னொரு காலேஜ்க்கும் தகராறு வந்து கலவ்ரமான நேரம்.
"மச்சி ஒரு ரெண்டு பஸ் கண்ணாடியாவது உடைக்கணும்டா... அப்போத் தான் நம்ம பவரைக் காட்ட முடியும்" குமார் சொன்னான்.

" மச்சி நான் கூட ஒரு போலீஸ்காரன் மண்டையாவது உடைக்கணும்டா" பழனியின் ஆசை இது.

"இது தான் சான்ஸ் அந்த ஆர்.கே வாத்தியார் ஸ்கூட்டரை போட்டு உடைக்கணும்டா" என்னுடைய நீண்ட நாள் கோவம் அது.

"ஏன்டா அந்த ஆள் மேல அவ்வளவு கோவம்"

" மச்சி நான் பெயிலான அல்ஜிப்ரா பேப்பரை கிளாஸ்ல்ல வச்சு எல்லாருக்கும் காட்டி என்னை அவமானப் படுத்துன அந்தாளைப் பழிக்குப் பழி வாங்கியே தீரணும்டா" நான் பொங்கினேன்.

அடுத்து அப்படி இப்படி என் ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு வாசலில் இரண்டு போலீஸ் வேன்கள் நிற்பதாய் கேள்விப்பட்டு பம்மி பின் வாசல் வழியாக அவரவர் வீடு போனது வேறு விஷயம். சிவா கல்லூரி பக்கம் வந்து ஒரு மாசம் ஆச்சு.

யாரும் கவலைப் படவே இல்லை. ஸ்டைரக் தீவிரமாப் போன டைம். எங்களுக்கு என்னச் செய்யுரதுன்னு தெரியாத நேரம்.

"மச்சான்... எதாவது படம் போலாமாடா? " பாலாஜி ஆரம்பித்தான்.

"என்ன படம் ஓடுது எல்லாம் கடி படம்" இது நான்.

"அடுத்த வாரம் நம்ம தளபதி படம் ரிலீஸ்...காதலுக்கு மரியாதை... அக்கா ஷாலினி ஜோடி.. கண்டிப்பா ரீலிஸ் அன்னிக்கேப் பார்த்து தியேட்டரை அல்லோல்லப் படுத்தணும் ஓ.கேவா" பழனி தீவிர விஜய் ரசிகனாய் உருவாகி கொண்டிருந்தான்.

"அது அடுத்த வாரம்.. இப்போ இந்த டைனமிக்ஸ் வாத்தி லொள்ளூ தாங்க முடியாது சொல்லுங்கடா" குமார் ஏறக்குறைய கதறினான்.

"என்னடா கெயிட்டிப் போலாமா?" பாலாஜி கண்ணடித்தான்.

"டேய் நான் வர்றல்ல... போன வாரம் அந்தப் பக்கம் போனப்போ எங்க அண்ணன் பிரண்ட் ஒருத்தன் பாத்துப் பெரும் பிரச்சனையகிப் போச்சு" குமார் கும்பிட்டுச் சொன்னான்.

"டேய்.. கெய்ட்டி.. எல்லாம் வேலைக்கு ஆவாது. இன்ட்ர் நெட் போவோம்.. நிறைய மேட்டர் சைட் இருக்காம்... ஒரு மணி நேரத்துக்கு நாப்பது ரூபா... ஒரு ரெண்டு மணி நேரம் குஜால்ஸாப் போகும் என்னச் சொல்லுறீங்க?"

"செல்லம்டா நீ பழனி.. என்னமா ஐடியா கொடுக்குறே?"

"ஆனா பணம்...." பாலாஜி கேட்டான்.

"ஏன்டா உன் கிட்ட இல்லையா?"

"தோடா.. மோதிரத்துல்லருந்து.. எல்லாத்தையும் வித்து கலக்கியாச்சு.. மிச்சமா இப்போ ஒண்ணும் இல்ல.. வீட்டுல்ல எல்லாம் தொலைஞ்சுப் போச்சுன்னு சீன் போட்டிருக்கேன்.. அடுத்த மாசம் எங்க அப்பாவுக்கு எதோ பிசினஸ்ல்ல ஒரு அமவுண்ட் வருதாம் அதுல்ல செயினே செஞ்சிப் போடுறேன்னு சொல்லியிருக்கார்.. அது வரைக்கும் நான் ஆண்டி தான்"

"தேவ் உன் பாக்கெட்ல்ல இருக்க பணம்..அது எக்ஸாம் பீஸ்டா"

"ஒரு எம்பது ரூபா தாண்டா.. நம்ம எல்லார் சந்தோஷமும் உன் கையிலேத் தான் இருக்கு"
நண்பர்களின் சந்தோஷம் முக்கியம், அதற்கு முன்னால் எக்ஸாமவது பீசாவது.. எண்பது ரூபாய்க்கு என்ன கணக்கு சொல்லலாம் வீட்டில் என மூளை முக்காடுப் போட்டு யோசிக்க ஆரம்பித்தது.

அதற்குள் பழனி இணைய உலகில் இன்ப வீதிகளின் விலாசம் தாங்கிய ஒரு நீளப் பட்டிய்லோடு வந்துச் சேர்ந்தான். அடுத்த ரெண்டு மணி நேரத்தை மையிலாப்பூரின் ஒரு முக்கு சந்து இன்டர்நெட் கபேவில் கழிக்க கிளம்பினோம்.

"அடச்சே எந்த சைட் போனாலும் கிரடிட் கார்ட் கேக்குறான்டா"

"எதாவது ஒரு நம்பர் போடுடா"

"போட்டுப் பார்த்துட்டேன்டா.. ஒண்ணும் வேலைக்கு ஆகல்ல"

"மச்சி நான் சொல்லுற மாதிரி செய்... அந்த வெள்ளைப் பொட்டியிலே நாங்க எல்லாம் ஏழைக் குடும்பத்துப் பசங்க.. எதோ எவ்வளவு இலவசமாக் காட்ட முடியுமோ அவ்வளவுக் காட்டுங்கன்னு இங்கீலீஷ்ல்ல டைப் அடிச்சுக் கேளுடா"
இது இன்று இணைய வளர்ச்சியினால் சோத்துப் பாட்டை நகர்த்தும் அன்றைய எனது கணிணி அறிவின் வெளிப்பாடு.

அதையும் நம்ம ஆள் ஒருத்தன் இலக்கணமெல்லாம் சரிப்பார்த்து கீபோர்டில் தட்டி PLEASE ENTER VALID INPUT என்று ஸ்கீரின் தூப்பியதைப் பார்த்துக் கோபம் வேறு கொண்டான்.

"த்தா இன்டர்நெட் எல்லாம் ஏமாத்து வேலை ஒழுங்கா கெயிட்டிக்கு போய் சுவப்பன சுந்தரியின் இந்திர இரவுகள் படம் பார்த்து இருக்கலாம்"
என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான் பாலாஜி. எல்லாரும் அந்த ஏக்கப் பெரூமூச்சில் கலந்துக் கொண்டோம்.

மறு நாள் சிவாவை ஹெச்.ஓ.டி ரூம் வாசலில் பார்த்து நாங்கள் லேசாக் கலவரமானோம். ஒன்றரை மாசத்துக்கு அப்புறம் கல்லூரிக்கு வந்திருந்தான். அவனைப் பார்த்துப் பேசுவதா வேண்டாமா எங்களுக்கும் தயக்கம் அவனுக்கும் தயக்கம். பேசவில்லை.

லஞ்ச் பிரேக்கில் கேன்டீனில் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றான்.நாங்கள் கவனிக்காததுப் போல் எங்கள் உணவு டப்பாக்களைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தோம். எங்க எல்லோருடைய மனசும் கனத்துக் கிடந்தது. ஒருத்தருடைய இதயத்துடிப்பு இன்னொருத்தனுக்குக் கேட்டது.
"நான் லஞ்ச் கொண்டு வர்றல்ல" சிவா மெதுவானக் குரலில் சொன்னான்.
""
"உங்க கிட்டேத் தான் சொல்லுறேன்.. நான் லஞ்ச் கொண்டு வர்றல்லன்னு" அதிகப்படியான சத்தத்தில் கத்தினான் சிவா.

குமார் அவசர அவசரமாய் தன்னுடைய டிபன் பாக்ஸைத் திறந்து மூடியில் சாப்பாட்டைத் தட்டி சிவா பக்கம் எடுத்து வைத்தான். அடுத்த சில வினாடிகளில் எல்லாருடைய சாப்பாடும் சிவாவுக்கு பரிமாறப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் கலகலப்பாய் மதிய உணவை உண்டு முடித்தோம்.

அன்று மாலை நண்பன் ரூமில் அவன் உபயத்தில் தீர்த்தமாடியப் பொழுதினில் சிவா வாயைத் திறந்தான்.

" அவ இல்லாமல் என்னால வாழ முடியாது மச்சி... ஐ லவ் திவ்யா.. ஐ லவ் யூ திவ்யா"
நான் கொஞ்சம் அதிகமாய் ஊற்றினேன்.

"அவளும் உன்னை லவ் பண்றாளாடா"

"இல்லியே... அவ என்னைத் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்குறாளே...."
சிவா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

"அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயாடா உன்னை லவ் பண்ண மாட்டாளாமா.. அவளை...சாரி மச்சி நான் அவளைத் திட்ட மாட்டேன்.. அவளைத் திட்டுனா உனக்குப் பிடிக்காது எனக்குத் தெரியும்...சாரி"
குமார் உளறினான்.

"மச்சி அவளை உனக்குச் சேத்து வைக்கிறோம்டா... நாங்கச் சேத்து வைக்கிறோம்"
இது நான்.

"ஆமாடா மாப்பூ... இப்போ நீ டென்ஷன் ஆவாதே ...கூலா இரு.. அவன் அப்பன் என்னப் பெரிய...*****'"
பாலாஜியின் பைந்தமிழ் செவிகளைத் தீய்த்தது.

"மச்சி எங்கப்பா என்ன படி படின்னு உயிரை வாங்குராருடா... அவர் படிக்காத்தை எல்லாம் என்னப் படிக்கச் சொன்னா என்ன மாப்பூ நியாயம்...நான் மட்டும் பெயில் ஆனா அடுத்த வருஷம் என்னை தஞ்சாவூருக்கு என் மிலிட்டிரி மாமான் வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு மிரட்டுராருடா"
பழனி அவன் சோகத்தை சைடில் சொருகினான்.

"கவலைப்படாதே.. பிட் அடிச்சாவது நீ பாஸ் பண்ணுறே.. உன்னைப் பாஸ் பண்ண வைக்கிறது என் பொறுப்பு...ஆமா உன் மிலிட்டிரி மாமாவுக்கு பொண்ணு இருக்கா?"
நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முன் பழனி மட்டையாகி விட்டான்.

அன்றையப் பொழுது அப்படியே முடிந்தது... கல்லூரி நாட்கள் வேகமாய் ஓடி முடிந்தன..

இன்று நான் ஒரு மென்பொருளாராய் எதோ வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...

பழனி அவனுடைய மிலிட்டிரி மாமாப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு பாரிசில் ஒரு ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வச்சிருக்கான். இரண்டு குழந்தைங்க.

குமார் இப்போ அமெரிக்காவில்ல ஒரு கணிணி நிறுவனத்துல்ல உயர் அதிகாரியா இருக்கான். இன்னும் கல்யாணம் ஆகல்ல அவன் வீட்டுல்ல பொண்ணுப் பார்த்துகிட்டு இருக்காங்க...

பாலாஜியைக் கடைசியாப் பார்த்தது...ஆங் பெரம்பூர்ல்ல

பாலாஜி முதல் வருஷத்தோடக் கல்லூரி படிப்பை நிறுத்திட்டான். எதுக்குன்னு எங்க யாருக்குமே காரணம் தெரியாது. அவன் கூட வர்ற அவன் ஏரியாப் பசங்களை விசாரிச்ச வரைக்கும் ஒரு விவரமும் தெரியல்ல.
எங்க அஞ்சுப் பேர் வட்டத்துல்ல மையப் புள்ளியா இருந்தாப் பாலாஜி எங்க வாழ்கையிலே இருந்துச் சொல்லாமல் கொள்ளாமல் விலகிப் போயிட்டான். ஆரம்பத்துல்ல நாங்க அதைத் தாங்கிக்க முடியாமல் தவிச்சுப் போயிட்டோம். அவனைப் பத்தியே பேசுவோம்... அந்தப் பேச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு ஒரு கட்டத்துல்ல சுத்தமா நின்னுப் போயிடுச்சு...

அப்படி ஒரு நாள் தான் நாங்கப் பாலாஜியைப் பெரம்பூர்ல்ல பார்த்தோம். ஆமா நாலு பேரும் தான் பார்த்தோம். பிருந்தாத் தியேட்டர் வாசல்ல எதோ ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நிக்கும் போது ..


ஒரு அழுக்கு காக்கி டவசர்.. ஒடுங்கி ஒல்லியாப் போன அந்தப் பையன் எங்கப் பாலாஜி தான். ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டோம். நாலுப் பேருக்கும் வாயிலே இருந்து வார்த்தை வர்றல்ல.

"எதிரே இருக்க கேரேஜ்ல்ல தான் வேலை செய்யுறேன்டா"
பாலாஜியின் வேகம் காணாமல் போயிருந்தது. அவன் பேச்சு நடவடிக்கை எதுவுமே எங்களுக்குப் பிடிபடவில்லை.

"டீ சாப்புடுறீங்களா?"
எங்களுக்கு நாக்கு உள்ளுக்குப் போய் ஒட்டிக் கொண்டது

"சாரிடா.. உங்க யார் கிட்டயும் சொல்ல முடியல்ல.. அப்பா தீடிரென்னு சூசைட் பண்ணிக்கிட்டார். பிசினஸ்ல்ல லாஸாம். ஒண்ணும் புரியல்ல. ஓவர் நைட்ல்ல வீதிக்கு வந்துட்டோம். எதுவும் தோணல்ல... அக்கா..தங்கச்சி.. நான் மட்டும் தான் பையன். அம்மா ஒரு ஓரமா உக்காந்து அழுவுறாங்க... எல்லாரும் செத்துப் போயிடலாம்ன்னு சொல்லுறாங்க... எனக்கு என்னப் பண்ணுறதுன்னு தெரியல்ல..எங்கப்பா மாதிரி முட்டாத்தனம் பண்ண எனக்கு மனசு வர்றல்ல.. அதான் இப்படி எங்க மாமா கேரேஜ் தான்.. இப்போ பரவாயில்ல.. அக்காவுக்கு கல்யாணம் பேசியிருக்கோம்.. பத்திரிக்கை வைப்பேன் கட்டாயம் வர்றணும்..."

பாலாஜி எங்களை விட்டு எங்கோ போய்விட்டான் என்பது எங்களுக்குப் புரிந்தது. அவன் பேசினான். நாங்கள் ஆறிய டீயை மெல்ல உறிஞ்சினோம். பேசுவதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை. நாங்கள் தம் அடித்தோம். அவன் அடிக்கவில்லை. ஏனோ அவனை அடிக்கச் சொல்லி நாங்கள் யாரும் வற்புறுத்தவில்லை.

அவனிடம் விடைப் பெறும் போது தவிர்க்க முடியாமல் கேட்டே விட்டான்.
"மச்சி பாலா.. ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசுறடா.. எனக்கு ஒண்ணுமேப் புரியல்லடா"

அவன் சிரித்தான். அவன் அக்காவுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையாத் தெரியாது. அவன் எங்கள் யாருக்கும் பத்திரிக்கை அனுப்பவில்லை. அதற்கு பிறகு இன்று வரை நான் பாலாஜியைச் சந்திக்கவில்லை.

அப்புறம் சிவா...

கடைசி வரைக்கும் சிவாவை திவ்யா காதலிக்கவே இல்லை. அந்த ஏக்கத்தில்ல சிவா ஒரு நாள் ஆவடி டிரெயின்ல்ல போய் விழுந்துச் செத்துப் போயிட்டான்.

அவன் முகத்தைப் பாக்கக் கூட எங்களுக்குக் கொடுத்து வைக்கல்ல. சிவா செத்தப்போ அவன் வீட்டுல்ல அவங்க அம்மா அழுததது இன்னும் நினைவிருக்கு. அந்த ஞாபகம் வரும் போதெல்லாம் அடிவயிறே புரளுது...

"அய்யா... இதுக்கா உன்னைப் பெத்தேன்... பாத்துப் பாத்து வளத்தேன்.... ஏன்ய்யா.. எதுக்குய்யா இப்படிப் பண்ணிக்கிட்டே...."

என் விடலைப் பருவம் என்கிட்டே இருந்துப் போயிடுச்சா இல்ல இன்னும் இருக்கான்னு தெரியல்ல ஆனா..பாலாஜியை அந்த அழுக்கு டவுசர்ல்லப் பார்த்தப்போவும் சிவா செத்தப் போவும்.. எனக்குள்ளே எனக்கே தெரியாம என்னவெல்லாமோ நடந்துப் போனது உண்மை... ஒரு உளி சத்தம் உள்ளுக்குள்ளே ஒலிக்க ஆரம்பிச்சது அப்போத்திலிருந்து தான்னு நினைக்கிறேன்.

Thursday, May 25, 2006

கவி 17: பழையக் கிறுக்கல்கள்



என் மனசு
வெள்ளையாய் தான் இருந்தது..
நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....

------------------------------------------------

உன் கண்ணில்
தூசு விழுந்தாலும்
கலங்கிப் போவதென்னவோ
நான் தான்..
உன் கருவிழி குளத்திற்குள்
கலங்கலாய் என் உருவம்..

-------------------------------------

சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..

---------------------------------------------

உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......

Wednesday, May 17, 2006

கதை 7:நண்பனின் காதலி (3)

நண்பனின் காதலி - பகுதி 1

நண்பனின் காதலி - பகுதி 2

பீச் ரயில் நிலையத்தில் காலையில் இருந்து காக்க காக்க வைத்தான் நண்பன் சிரீஷ்.

"இன்னிக்கு அவ எப்படியும் வ்ருவா...இதை விட்டா எனக்கு வேற வாய்ப்பு அமையாது மாப்ளே.."

மதியம் உச்சி பொழுதுல்ல கொளுத்துற வெயில்ல நண்பனோடக் காதலுக்கு நீர் பாய்ச்சும் வேலைப் பாக்க வந்த என்னை நானே நொந்துக்கறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல்ல.

மூணாவது ஓசி சிகரெட்டும் முழுசா ஊதி முடிச்சு க்டுப்பு தலைக்கேற உக்காந்து இருந்தேன். அந்நேரம் எந்த வடநாட்டுப் புண்ணியவானும் புண்ணியவாட்டியும் பெத்தெடுத்தாயங்களோ அவங்க வாழ்க.... கோதுமை அல்வா கடை ஒண்ணு... டைட்டா ஜீன்ஸ் போட்டுகிட்டு தனியா அங்கே வந்துச் சேர்ந்ததுச்சு.

அந்த கொஞ்ச நேரத்துல்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏற்ப்ட்ட தவிர்க்க முடியாத ஒருதலைக் காதல் காவியத்தைப் பத்திப் பிறகு விரிவாச் சொல்லுறேன். இப்போதைக்கு என் நண்பனின் காதல் கதையிலே கவனம் செலுத்துவோம்

அல்வாக் கடையை வாய் பிளந்துப் பாத்துகிட்டு எனக்குத் தெரிஞ்ச பிராத்மிக் ஹிந்தியிலே ஒரு மூணு ஹிந்திப் பாட்டை அதுல்ல கொஞசம் இதுல்ல கொஞ்சம்ன்னு கலந்துப் பாடிகிட்டு இருந்தேன்.

நண்பன் சிரீஷ் படு டென்சனா வர்ற போற ஒவ்வொரு ரயில் பொட்டியிலும் அவளை அதான் அவன் காதலிக்கற அவளைத் தேடிக்கிட்டு இருந்தான்...

ஒரு சின்ன பிரேக் எடுக்க நம்ம பக்கம் வந்தான். நான் பாட முயற்சி பண்ணிகிட்டு இருந்த ஹிந்திப் பாட்டுக்கு வார்த்தை எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணான். நான் வெட்கம் பார்க்காமல் தேங்க்ஸ் சொன்னேன்.

"ச்சீ... எனக்கு உதவி பண்ண வந்துட்டு....தனியா ரூட் போட்டு... தப்பு தப்பா இந்தி பாட்டுப் பாடிகிட்டு உக்காந்து இருக்க.... இதுல்ல எனக்கு தேங்க்ஸ் வேற சொல்லுற....உன்னை....."
சிரீஷ் கோபத்தையும் எரிச்சலையும் காட்ட ஒரு ஆள் தேவை. அந்த இடத்தில் என்னை விட்டால் அவனிடம் அகப்படுவார் யாரும் இல்ல.

"இந்தா மச்சி இந்த தம் போடு... அப்புறம் கூலா ஆயிடுவே..."

"அடிங்க... என் காதலுக்கு ஆப்பு வைக்கிற முடிவில்ல உறுதியா இருக்க நீயி.. அவ இப்போ வர்ற நேரம் நான் தம் பத்த வக்கணும் அதை அவ பாக்கணும்... அத்தோட எல்லாத்துக்கும் மங்களம் பாடணும் நல்ல நண்பன்டா நீயி.. வாழ்க உன் நட்பு"

ம் எனக்கும் கோவம் வந்தது.. சரி இப்போ வேணாம் அப்புறம் வச்சிக்கிறேன் உனக்கு தனி கச்சேரி. இப்போ நீ வாசிடா மகனே.. என மவுனம் காத்தேன்.

இன்னொரு சிகரெட் எடுத்து பற்ற வைக்கப் போனேன். என் உதட்டில் வைத்த சிகரெட்டை ஈவு இரக்கமின்றி பிடுங்கி எறிந்தான்.

"ப்ளீஸ் அவ வந்துப் போற வரைக்கும்.. என் செல்லம் இல்ல" இருகைக் கூப்பியது என் நட்பு. நான் ஒப்புக் கொண்டேன்.

"வருவாளா?" இது நான்.

"இன்னும் இருபது நிமிஷம் இருக்கு.. அடுத்த ட்ரெயின்ல்ல கண்டிப்பா வருவா" அவன் பதில் சொன்னான்.
"சரி லெட்டரை ஒரு நல்ல கவர்ல்ல போட்டுக் கொடு" நான் ஐடியா கொடுத்தேன்.

"OH MY GOD"அவன் கரண்ட் கம்பியில் கால் வைத்ததுப் போல் அலறினான்.

மொத்த பீச் ஸ்டேஷனும் திரும்பிப் பார்த்தது. ம்ம் மொத்தம்ன்னு நான் சொன்னது அங்கிருந்த ஒரு பத்து பேர். அதுல்ல என்னுடைய அல்வா கடையும் அடக்கம்... யப்பா என்ன ஒரு லுக்..அதை ரசிக்க விடாமல் படுபாவி மறுபடியும் அலறினான்.

"அந்த லெட்டர் தான் அன்னிக்கு தண்ணி அடிக்கும் போது வாங்கி நீ கிழிச்சிப் போட்டுட்டியே"
"ஆமா.. வேற லெட்டர் எழுதிட்டு வர்றல்லயா"

"அப்படின்னு லெட்டர் இல்ல... நேராச் சொல்லிடு"

"நான் மாட்டேன்"
"ஏன்"
"அது வந்து மாட்டேன்னா.. மாட்டேன்"

"ஓ.. செருப்பு டயலாக் ஞாபகம் வந்துருச்சோ"

அவன் பதில் சொல்லவில்லை.
எனக்கென்ன உங்களூக்கும் தான் காரணம் புரிந்திருக்கும்

"ஒண்ணு பண்ணு வீட்டுக்குப் போய் நிதானமா லவ் லெட்டர் எழுதிட்டு வந்து நாளைக்குக் கொடுப்போம்... இன்னிக்கு ஓர்க் அவுட் ஆகாது போ"
என் கண்கள் அல்வா கடையை வட்டம் இட்டன. யப்பா என்ன ஒரு....அவன் மறுபடியும் அலறினான்.

"நீ நினைச்சா எனக்கு உதவி பண்ணலாம்?"
"என்ன உதவி?"

"எனக்கு அவசரமா நீ ஒரு லவ் லெட்டர் எழுதி கொடுடா மாப்பூ.. உம் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா"
"பதினைஞ்சு நிமிசத்துல்ல காதல் கடிதமா? நோ..நோ..."
"ப்ளீஸ் டா.. இதை விட்டா எனக்கு வாய்ப்பு கிடைக்காதுடா"

அவனைப் பார்த்தால் பாவமாய் இருந்துச்சு. ஒத்துக் கொண்டேன்.

"மச்சி நான் சொல்ல சொல்ல நீ எழுதுடா"

"எனக்கு நல்ல நேரத்துல்லயே தமிழ் தகராறு.. அதுவும் இந்த நேரத்துல்ல யுத்தமே வந்துறும்டா.. ப்ளீஸ்டா"

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்ததை என்னால் மறுக்க முடியவில்லை.

ஒரு வெள்ளைப் பேப்பர்... பால் பாயிண்ட் பேனா என் கைக்கு வந்தது.
உபயம் சிரீஷ்.

அல்வா கடையைப் பார்த்ததில் எனக்குள் காதல் மழைப் பொழியத் துவங்கியது.. கூடவே கவிதையும் புயலெனப் புறப்பட்டது.

ஒரு பெண் ஒரு ஆணுக்குள் எப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறாள்.

இரு விழிகளால் ...அவன் இதயம் கிழித்து..
தனக்கென அவனில் ஒரு இடம் பிடித்து...
சின்னச் சிரிப்பினால் அவனைச் சிறையெடுத்து...
அவனைத் தன்னுடையவனாக்கி...
அவனை மெல்ல மெல்ல ஆளுகிறாள்...
இப்படி ஆளப்படுவதையே ஒவ்வொரு ஆணும் உள்ளூர விரும்புகிறான்....

எழுதினேன்... வார்த்தைகளை அப்படி இப்படின்னு புரட்டிப் போட்டு.. என்னமா எழுதினேன் தெரியுமா?

கிட்டத்தட்ட எழுதி முடித்த நிலையில மறுபடியும் அவனிடமிருந்து ஒரு அலறல்...

"அவ வந்துட்டா டா"
நான் லெட்டரை அவனிடம் நீட்டினேன். அவன் வாங்கிக் கொண்டு ஓடினான்.

"டேய் ஒரு தடவப் படிச்சுப் பாத்துட்டு கொடுடா"

"நீ எழுதுனாச் சரியாத் தான் இருக்கும்"
சொல்லிக்கிட்டே அவளை நோக்கி ஓடினான். எனக்குள் ஒரு பெருமிதம்.
நட்பின் பெருமிதம்.

பெருமித உணர்வினில் இருந்து விடுபட்டு அல்வாக் கடைப் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

அங்கே....

ஜாங்கிரி கல்ர்ல்ல ஒரு சேட்டு பையன் அல்வா கடை இடுப்பை வளைச்சி என்னமோ பண்ணிகிட்டு இருந்தான். வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு.

அண்ணா சொன்னார் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்ன்னு.. அது எனக்கே எனக்கு சொன்னார் போலன்னு பாக்கெட்டுல்ல கைவிட்டு சிகரெட் தேடுனேன்.

நான் சிகரெட் தேடவும் சிரீஷ் ஓட்டமா வந்து என்னை இடிக்கவும் சரியா இருந்துச்சு..

பின்னாடி செருப்பு வருதான்னு தலையைச் சாய்ச்சி டவுட்டா நான் பாத்தேன். அப்படி எதுவும் இல்ல.

ஷிரீஷ் சிகரெட் பற்ற வைத்தான் எனக்கும் சேர்த்து. இரண்டு பேரும் படிக்கட்டு மறைவினில் அம்ர்ந்தோம்.

"லெட்டரைக் கொடுத்துட்டேன்"

"என்னச் சொன்னா?"

"எங்கப்பா உங்களுக்குப் பின்னாடி வந்துட்டு இருக்கார்.. அப்படியே போயிடுங்கன்னு சொன்னா"

"அப்புறம்"

"அதான் பாத்தி இல்ல.. ஓடி வந்துட்டேன்..நீ என்ன நினைக்கிற?"

"ம் சோ.. செருப்புத் தூக்கல்ல... உன்னை அவங்க அப்பா கிட்டப் போட்டும் கொடுக்கல்ல..."

"ஆமா"

சிரீஷின் கன்னங்கள் ஆப்பிளாய் சிவந்தன். பொண்ணு வெக்கப் படுறதைவிட ஒரு ஆண் வெட்கப்படுறது இன்னும் அழகு தான். காதலித்தால் ஆணுக்கும் வெட்கம் வரும் போலும்.

மாடிப் படிகளில் ஏறி போன ரஞ்சனி அங்கிருந்து சிரீஷ் தென்படுகிறானா என கண்களை நாலுபுறமும் சுழல விட்டாள்...அவனைக் காணாமல் அவள் முகம் சுருங்கியது. காதலுக்கே உரிய உலக குணங்கள் அவள் முகத்தில் தென்பட்டன.

நான் சிரீஷ் பக்கம் திரும்பினேன்.

சிரீஷ் பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட திருப்தியில் சிக்ரெட்டை ஆழமாய் சுவைத்து வானம் பார்த்து ஊதினான். தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

அவன் சந்தோஷம் என்னையும் தொற்றிகொண்டது.

அப்போதைக்கு ஒலிம்பிக்ல்ல ஓடி கோல்ட் மெடல் வாங்கியிருந்தாக் கூட அவ்வள்வு சந்தோஷப் பட்டிருப்போமோ என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லுவேன்.

" யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" இருவரும் ஒரே சத்தமாய் கத்தினோம்...

நாங்கள் கத்தி முடிக்கவும் .. அந்த அல்வா கடை அவளுடன் இருந்த ஜாங்கிரி தோளில் சாய்ந்துக் கொண்டு எங்களைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது.

"யே லோக் பாகல் ஹெய்ன்" என்று குச் குச் ராணி குரலில் அவனிடம் குறிப்பாக என்னைக் காட்டிச் சொன்னாள்.

"அடிங்க..." என்று எழுந்த சிரீஷின் கையைப் பிடிச்சு இழுத்து உட்கார வைச்சேன்.

"என்னடா?" என்று பரிவாய் கேட்டான் சிரீஷ்.

"விடுடா.. அவளை நான் லவ் பண்ணிட்டேன் .. பொழைச்சுப் போகட்டும் "

நான் சிரியசாச் சொன்னான். படுபாவி சிரீஷ் விழுந்து விழுந்து சிரித்தான். இப்படி அன்று மாலைக் கும்மாளமாய் வீடு திரும்பினோம்.

அது நடந்தது 2000ஆம் வருடம் மே மாதம்....
அன்னிக்கு பீச் ஸ்டேஷ்னில் ரஞ்சனியைப் பாத்ததுக்கு அப்புறம் அவளை சிரீஷ் ம்றுபடியும் பாத்தது...கதையின் முதல் பகுதிக்குப் போங்க...

தன் அலுவலகத்தில் தனக்கு மேலதிகாரியாக தான்...

இடையில் என்ன நடந்திருக்கும்....

எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும் விளங்கல்ல.

அதுக்கு மறுநாள் சிரீஷ் எதோ இன்டர்வியூன்னு அலைஞ்சுட்டு இருந்தான். அவனுக்கு அந்த இன்ட்ர்வியூ கிளிக்காகி மும்பையிலே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திலே வேலைக் கிடைச்சுது.

அந்த நல்ல செய்தியைச் சொல்ல அவளைத் தேடி அவ அட்ர்ஸ் கண்டுப் பிடிச்சு அவ வீட்டுக்கேப் போனான். அவங்க வீட்டோட சம்மருக்கு கும்பகோணம் போயிருக்காங்கன்னு தெரிஞ்சது.

சரி ஒரு மாசம் வந்துறுவாங்கன்னு மனசைத் தேத்திகிட்டு மனசை வேற விஷயத்துல்ல செலுத்திகிட்டு சம்மரை ஜாலியாக் கழிச்சான்.

அவன் மும்பைக் கிளம்புற நாளும் வந்துச்சு...அவக் கும்பக்கோணத்துல்ல இருந்து திரும்பல்ல. அப்போக் கூட நான் தான் அவன் மனசைத் தேற்றி ஒரு வழியா பிளைட் ஏத்தி அனுப்பினேன்..

"மச்சி.. அவளுக்கு என்னைப் பிடிக்கல்லயாடா?" பாவமாய் கேட்டான் சிரீஷ்.
"அப்படி எல்லாம் இல்லடா"

"அவங்க வீட்டுல்ல வேற எதாவது நடந்திருக்குமா?" பதட்டத்தில் சிரீஷ்.
"மாப்பு... சும்மா குழம்பாதே... இப்போ நீ உன் ஜாப்ல்ல கவனம் வை... மும்பைக்குத் தானேப் போற.. நினைச்சாத் திரும்பி வந்துடலாம்... நீ நெக்ஸ்ட் டைம் திரும்பி வரும் போது ஏர்போர்ட்க்கு உன்னை ரீசிவ் பண்ணவே அவ வருவாப் பாரேன்"
இப்படி அவன் மனசுக்கு மருந்துப் போட்டு அனுப்பி வைச்சேன். அவனும் போனான். போய் அடிக்கடி போன் பண்ணுவான். அவனைப் பத்திப் பேசுறதை விட அவளைப் பத்தி அதிகம் பேசுவான்.

அப்படி இப்படி அவ போன் நம்பரையும் மெயில் ஐடியையும் அவனுக்கு வாங்கிக் கொடுத்தேன்...அவன் அனுப்புன எந்த மெயிலுக்கும் அவ பதில் அனுப்பல்ல. அவன் எனோ பிடிவாதமாப் போன் பண்ண மறுத்துட்டான். ( அது அவங்கப் பக்கத்து வீட்டு போன்.. செல் எல்லாம் அப்போ ஏது)
இப்படியே காலம் உருண்டுப் போச்சு...எனக்கும் ஒரு வேலைக் கிடைச்சு அதுல்ல அல்லாடி தள்ளாடி தடுமாறி முன்னேறிகிட்டு இருந்தக் காலம். சிரீஷ் மும்பைப் போன மூணாவது மாசம் இங்கிலாந்துப் போனான் அப்படியே அங்கேயே நாலு வருஷம் இருந்தான். வருஷம் ஒரு தடவ வருவான். அப்படி வரும் போதெல்லாம் அவளைப் பாக்க முயற்சி செய்வான். அது தோல்வியில் முடியும். பின்னர் ஒரு குவார்ட்டர் கண்ணீரிலும் ஊறுகாய் புலம்பலிலும் முடியும்.

இப்படி ஒரு முறை வந்தப் போது சுனிதாவின் புகைப்படததை என்னிடம் காட்டி
"பொண்ணு எப்படி இருக்கா?" என்று கருத்துக் கேட்டான்.
"நல்லா இருக்கா... ஆனா..."
"இவத் தான் எனக்கு எங்க வீட்டுல்ல எனக்குப் பார்த்து இருக்க பொண்ணு... அடுத்த மாசம் கல்யாணம்" என்னைப் பேசவிடாமல் அவனேச் சொல்லி முடித்தான்.

"அப்போ ரஞ்சனி..."
"யார் அவ? எதோ வந்தா... போனா... என்ன போகும் போது காயப்டுத்திட்டுப் போயிட்டா அவ்வளவு தான்"

என்னப் பேசுவதென்று தெரியவில்லை. அது அவன் காதல்...அவன் வாழ்க்கை... நான் .. I KNOW EVERY FRIENDSHIP HAS ITS LIMITS I DIDNT WANT TO CROSS IT.

"எப்பவும் நீ கூப்பிடுவே.. இப்போ நான் கூப்பிடுறேன் வாடா .. போய் மூச்சு முட்ட குடிச்சுட்டுக் கொண்டாடலாம்"

சிரீஷின் அழைப்பை ஏற்று மவுனமாய் அவனைப் பின் தொடர்ந்தேன்.
சிரீஷ் அன்று இஷ்ட்டத்திற்கு குடித்தான்.. நான் அவனைத் தடுக்கவில்லை.

"டேய் மாமா... ஒண்ணு சொல்லுறேன் கேளு.. இது என் சொந்தச் சரக்கு இல்ல எங்கியோ கேட்டது..ஆனா ரொம்பக் க்ரெக்ட்டான மேட்டர் மாமா...ஆமா கேளு....

IF U LOVE SOMETHING SET IT FREE
IF IT COMES BACKTO YOU
IT BELONGS TO YOU

IF IT DOES NOT.. DONT WORRY IT NEVER BELONGED TO YOU...

போதையில் நான் உதிர்த்த தத்துவம் தான்...

"இப்போ இல்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் வருவாடா.... ம்ம்ம் நீ கொஞ்சம் கூட நினைச்சுப் பாக்காத வேளையிலே வருவாப் பாருடீ...."

சிரீஷின் கண்களில் கண்ணீர்... நானும் அழுதேன்....

இதோ அதுக்கு அப்புறம் சிரீஷிற்கும் சுனிதாவுக்கும் கல்யாணம் ஆச்சு. சந்தோஷமா வாழ்க்கைப் போகுது. அழகான குழந்தை.

பிளாஷ் பேக் ஓவர்.

ட்ரிங்..ட்ரிங்.... சிரீஷ் கால் தான்.

"ஹாய் மச்சி...சொல்லுடா.. உன் புது பாஸ் என்னச் சொல்லுறா?"
"எங்க புரொஜக்ட் முடிஞ்சுப் போச்சுடா... இன்னிக்கு டீம் மீட்டிங்... அவப் பேசுனாடா..."
"டீம் மீட்ன்னா டீம் லீட் பேசத் தானேச் செய்வா...அதுல்ல என்ன ஆச்சரியம்"
"எல்லாரையும் தேங்க் பண்ணிப் பேசுனா... அவளுக்கு கல்யாணமாம்டா.. அவ வுட்பீ கூட வந்திருந்தான்.. ஆள் நல்லாத் தான் இருக்கான் அவளுக்குப் பொருத்தமா...மீதிய டிஜில்ல எடுத்து வச்சுருக்கேன் வாயேன் பாக்கலாம் " என்றான்.

"வழக்கமான் டீம் மீட்ன்னா விடியோ எல்லாம் எடுக்க மாட்டோம் ... எங்க கம்பெனிக்கெ பெரிய மைல்ஸ்டோன்டா இந்த புரொஜ்க்ட் சக்ஸஸ். இதுன்னாலே எங்க லாபம் எங்கியோ போகப் போகுது."

ரஞ்சனி புடவைக் கட்டி அழகாய் வந்திருந்தாள். கம்பீரமானப் பெண்.
வழக்கமான் நன்றிகளைச் சொன்னாள். தன் வருங்காலக் கணவனைப் பற்றி சொன்னாள். கடைசியாக...சிரீஷ் கம்ப்யூட்டர் வால்யூமைக் கூட்டினான்...
" Now I should thank and appreciate the most important man of this project.. The ever admirable Sirish Ragahavan(இந்த இடத்தில் கரவொலிகளும் உற்சாகக் குரல்களும் ஏராளமாய கேட்டன.) My college senior... blah blah..........I think hes the most right person to lead this project in the coming years "என்று முடித்தாள்.

முடித்தப் பின் சிரீஷை அவள் பார்த்த பார்வை எனக்குப்
பீச் ஸ்டேஷ்னில் சிரீஷை அவள் தேடிய அந்தச் சிலக் கணங்களை ஞாபகப் படுத்தியது.

நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

"என்னடா?" என்றான் சிரீஷ்.

"ஒண்ணுமில்ல.... ஒண்ணுமில்ல...ப்ச் தண்ணி அடிக்கிறதை நீ நிறுத்திட்டே இல்லன்னா இன்னிக்கு ஒரு பார்ட்டி வச்சு ஜமாய்ச்சுடலாம்" என்றேன்.

அவன் சிரித்தான். நானும் சிரித்தேன்.

ஒரு நெடுநாளையக் கேள்விக்குத் திருத்தாமான விடைக் கிடைச்சிருச்சே.
ம்ம் இந்த விடை எனக்கும் இதைப் படிக்கும் உங்களுக்கும் மட்டும் தெரிந்த ரகசியமா இருந்துட்டுப் போகட்டும்..

சிரீஷ்க்கு தெரிய வேணாம்... ப்ளீஸ்...

நன்றி....:)