Thursday, October 26, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை முதல் பாகம் படிக்க...

"ஏய் திக்குவாயா, வெளியே வாடா"

சத்தம் போட்டுக் கூப்பிட்ட கால்சட்டைச் சிறுவர் கும்பலில் ஒருத்தன் ஒரு கல்லை எடுத்து வீட்டிற்குள் விட்டெறிந்தான்.

கல் விழுந்த வேகத்தை விட அதிகமான வேகத்தோடு வீட்டிற்குள் இருந்து இன்னொரு கால்சட்டை பையன் வெளியே வந்தான். அவன் மற்ற சிறுவர்களை விட நல்ல உயரம். தமிழர் நிறத்திற்கு பொருத்தமில்லாத செவ்வண்ணத்தில் இருந்தான். தீர்க்கமான பார்வை. வேகத்திலும் இடராத நடை.

"ஆனந்தனைத் திக்குவாயன்னு கூப்பிட்டவய்ன் ஆருடா?" சிறுவன் குரலில் கம்பீரம் களைக் கட்டியது. அவன் கண்கள் சிறுவர்கள் மீது சுழன்றன.

பதில் எதுவும் வரவில்லை. "வீட்டுக்குள்ளே கல் விட்டவய்ன் ஆருடா?" அடுத்தக் கேள்விக்கும் பதில் வரவில்லை.

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு அவன் திரும்பி வீட்டிற்குள் நுழையப் போனான். சரியா அந்தத் தருணத்தில் அவன் மீது மழையெனக் கற்கள் வந்து விழுந்தன. அவன் முகத்தை இருகரங்களாலும் மூடிக் கொண்டான். இருந்தும் அவன் நெற்றியில் பட்டு தெறித்த கல் ஒன்று அவன் முகத்தை ரத்தச் சேறாய் அடித்தது.
கல் வீசிய சிறுவர்கள் திரும்பி ஓட ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருத்தன் நின்னு சத்தமாச் சொன்னான்.

"டேய் கதிரு, எங்களுக்கும் அந்தத் திக்கு வாயனுக்கும் தான் சண்டை. நீ குறுக்கால வந்து தர்மத்துக்கு அடி வாங்கிகிட்ட.. இன்னொரு தடவ அந்தத் திக்கு வாயனுக்காக எங்க கூட மோதாதே..சில்லு சிதறிடும்டீயோ புரியுதா?

கதிர் ரத்ததைப் பொருட்படுத்தாமல் எழுந்து அவர்களை விரட்டப் போன அதே நேரம் தாஸ் வாத்தியார் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. கதிர் தன் கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"ஆனந்தா.. !!!" தாஸ் வாத்தியார் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

ஆனந்தன் தான் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான்.

"இங்கிட்டு என்ன நடந்துச்சு .. சொல்லு?" தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அது வந்துங்கப்பா.." என்று ஆரம்பித்த கதிரேசனைப் பேசவிடமால் பார்வையாலேத் தடுத்தார் தாஸ் வாத்தியார். அவர் ஆனந்தனையேப் பார்த்தார். ஆனந்தன் பரிதாபமாய் கதிரேசனைப் பார்த்தான்.

"சொல்லு.. நீ தான் பொய் சொல்ல மாட்டியே... என்ன நடந்துச்சுன்னு அப்படியே சொல்லு" கதிர் ஆனந்தனைப் பார்த்துக் கோபம் கொப்பளிக்கச் சொன்னான். ஆனந்தன் திக்கி திக்கி நடந்த விவரங்களை ஒன்று விடாமல் தாஸ் வாத்தியாரிடம் ஒப்பித்து முடித்தான்.

ஒரு ரோஜாப் பூவுக்காக இவ்வளவு தகராறா? ஏன் நம்ம வீட்டுத் தோட்டத்துல்ல ரோஜா பூவே இல்லையா.. அங்கிட்டு அவிஙக தோட்டத்துல்ல போய் பறிச்சுருக்க..." தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அவிங்கத் தோட்டத்துல்ல தானே சிகப்பு ரோஜாப்பூ வச்சிருக்காயங்க.. அதாய்ன் போய் பறிச்சுருக்காய்ன்"

கதிர் மெல்ல முணுமுணுப்பாய் சொன்னான்.

"இந்தா இங்கிட்டு என் மொகம் பாத்துப் பேசு.. பொட்டப்புள்ளக் கணங்காத் தரையப் பாக்காதே.. சிகப்பு ரோஜாச் செடி தானே வேணும்.. கவுஞ்சியிலே இர்ந்து வாங்கிட்டு வரச் சொன்னா ஆச்சு..இங்கிட்டு நடந்த விசயம் இங்கிட்டோட முடியணும். நீ அவிங்களை அடிக்கக் கிளம்பிறபிடாது ..தெரியுதா...?"

தாஸ் வாத்தியார் கையில் கதிரேசன் காயத்திற்கு மருந்து இருந்தது. ஆனந்தன் கதிருக்கு வலிக்காத வண்ணம் பொறுமையாக அவன் காயத்தைத் துடைத்து மருந்து வைத்தான். ஆனந்தன் சட்டைப் பையில் இருந்த சிகப்பு ரோஜா அவங்க நட்பைப் பார்த்து புன்முறுவல் செயவது போலிருந்தது.
மறுநாள் கதிரேசன் மீது கல் வீசிய பசங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்த அனைத்து ரோஜாச் செடிகளும் எதோ காரணத்தால் பட்டுப் போக ஆரம்பித்தன.

இப்பொழுது தாஸ் வாத்தியார் வீட்டில் கிட்டத் தட்ட ஏழு எட்டு சிகப்பு ரோஜா செடிகள் இருந்தன. எல்லாச் செடிகளிலும் கொத்து கொத்தாய் அழகிய சிகப்பு ரோஜாப் பூக்கள் நித்தம் பூக்கின்றன.

"மாப்பி, பத்து வயசுல்ல ஆரம்பிச்ச ரோஜாப்பூ கிறுக்கு இன்னும் போகல்ல உனக்கு.. தைப் பொறந்தாக் கழுதை உனக்கு இருபதைஞ்சு வயசு ஆயிரும்.."
சிலம்ப பயிற்சி முடித்து விட்டு துண்டால் முகத்தைத் துடைத்தப் படி கேட்டான் கதிர். கதிரின் சிறுவயது அழகு இப்போது பன்மடங்குப் பெருகியிருந்தது. தேகப் பயிற்சி அவன் உடலை இரும்பைப் போல் உறுதிப்படுத்தியிருந்தது.

உதட்டில் சதா நிலைக் கொண்ட அந்த சிறு புன்னகை அவன் வசீகரத்தை மேலும் கூட்டியது.

ஆனந்தன் சட்டைப் பையில் ஒரு சிகப்பு ரோஜா காம்போடு தலை நீட்டியது.
ஆனந்தன் அதிக உயரமில்லை என்றாலும் குள்ளமில்லை. கொஞ்சம் ஒல்லியான தேகம். பொது நிறம். சிறு வயதில் இருந்து அவனை விட்டு இன்றும் அவனோடு இப்போதும் பிரியாமல் இருப்பது ஒன்று அவன் திக்குவாய்.. இன்னொன்று அவன் கதிரோடு கொண்ட நட்பு.

"ஆனந்தா பதில் சொல்லணும்ப்பூ.. கேக்குறோம்ல்ல பதில் சொல்லுப்பூ"

முகத்தைத் துடைத்தக் கையோடு தண்டால் எடுக்கத் தரையில் அமர்ந்தான் கதிர்.

"நீ..நீக் கூடத் தான் வாரத்துக்கு ரெண்டு தரம் திண்டுக்கல்லுக்கு சைக்கிள் எ எடுத்துட்டுப் போயியிடுரே.. நாநான் கேகேட்டாலும் காரணம் சொல்லுறீயாப்ப்பூ"

கதிரேசன் பதில் சொல்லாமல் சிரித்தான். தண்டால் எடுத்து முடித்து விட்டு ஆனந்தன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

"திண்டுக்கல் கடைவீதிப் பக்கம் ஒரு நல்ல சிவத்த புள்ளைய நான் ஆருக்கும் தெரியாம கல்யாணம் கெட்டி வச்சிருக்கேன்.எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு பொட்டப் புள்ளக் கூட இருக்கு, வர்ற சித்திரை வந்தா அந்தப் புள்ளக்கு வயசு ஒண்ணு முடிஞ்சுப் போயிடும்... இந்தச் சேதிய ஓங்கிட்டச் சொன்னா எங்கப்பார் கிட்ட போய் ஒளறி வைக்கமாட்டியா அதான் நான் சொல்லல்ல போதுமா?" என முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஆனந்தன் நம்பும் படி பேசினான்.

ஆனந்தன் அதை நம்பவில்லை.

"சரி ஒன் சிகப்பு ரோஜாக் கதையச் சொல்லுப்பூ"

"நாநான் ஒரு புள்ளயக் காதலிக்கேன்.. அவ ஆசசப் பட்டாங்கறதுக்காக தான் நிதமும் அவளுக்கு சிகப்பு ரோஜா பறிச்சிட்டு போறேன் போதுமா?"

"அடக் கொக்காமக்கா,,, காதலிக்கீயா.. அந்தப் புள்ளக்கி இது தெரியுமாப்பூ..பூக் கொண்டுப் போய் கொடுத்துட்டு இருக்கா..கடைசியிலே அவ கல்யாணத்துக்கு உன்கிட்டயே ரோஜாப் பூ மாலைக்கு ஆர்டர் வைக்கப் போறா..பாத்துப்பூ"

கதிரேசன் சிரித்தான். ஆனந்தன் உதட்டளவில் சிரித்தாலும் உள்ளுக்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டான்.

"எஞ் செண்பகத்துக்கு என் மனசு புரியும்..."

சரி சரி.. ஓம் பஞசாயத்தை வந்து வச்சிக்கிறேன்... இப்போ எனக்கு ஓஞ் சைக்கிளைக் கொஞ்சம் கடனாக் கொடு.. திண்டுக்கல் வரைக்கும் போயிட்டு வர்றேன்..."

கதிரேசன் தேகப் பயிற்சி முடித்து விட்டு குளிக்க்க் கிளம்பினான்.

"க்கதிரு நானும் வரேன்...எனக்கும் இங்கிட்டு மலையிலே எந்த ஒரு வேலயும் இல்ல"

"ம்ம்ம் பொய் சொல்லாதே உனக்கு எம்புட்டு வேலைக் கிடக்குது... அங்கிட்டு அந்த கல்லுல்ல் உக்காந்துக்க அப்படியே கையிலே சிகப்பு ரோசாவைப் பிடிச்சுக்க..அந்தப் புள்ளயப் பத்தி நினைச்சிகிட்டு அப்படியே கனாக் கண்டுகிட்டு இரு அதுக்குள்ளே நான் திரும்பி வந்துருவேன்.."

ஆனந்தனிடம் சைக்கிள் வாங்கிப் போன கதிரேசன் அன்றிரவு ஊர் திரும்பவில்லை... காலையும் வராது போகவே ஆனந்தன் மனம் கலவரமானது...

மதியம் வீட்டுல்ல வச்ச மீன் குழம்பைக் கூட ஏனோ தானோன்னு சாப்பிட்டுட்டு ஒர்ரே சிந்தனையாக் கிடந்தான்.
ஒரு மூணு மணி வாக்குல்ல தாஸ் வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினான். அவர் வீட்டுக்குச் சமீபமாய் போலீஸ் ஜீப் நிற்பதைக் கண்டு ஆனந்தன் அடி வயிற்றில் பயப் பந்து உருண்டு விளையாடியது.

ஆனந்தன் வீட்டுக்குள் போகாமல் சுவத்தோரமாய் பதுங்கி நடப்பதைக் கவனித்தான்..சுருட்டி விட்ட மீசையை நீவிய படி நின்றிருந்த காக்கிச் சட்டைக்காரர் சன்னமான குரலில்தான் பேசிக் கொண்டிருந்தார்.தாஸ் வாத்தியார் முகம் வாடிப் போயிருந்தது. அவர் கைகள் அனிச்சையாய் கட்டிக்கொண்டன. அவர் காக்கிச் சட்டைக்காரரிடம் எதோப் பேசினார். வார்த்தைகள் ஆனந்தன் காதுகளில் சரியாக விழவில்லை.

"வாத்தியாரே.. இது மொத தடவைக் கிடையாது.. ஒங்க மவனை பெரிய இடத்தோடு பிரச்சனைப் பண்ண வேணாம்ன்னு ஒங்களைப் பாக்கும் போதெல்லாம் சொல்லிகிட்டுத் தானே இருந்தேய்ன்... இப்போ எல்லாம் கைமீறி போயிடுச்சுங்க..."

ஆனந்தனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முகம் வேர்வையில் வழிந்தது.

"நேத்து சாயங்காலம் மார்கெட்ல்ல வச்சு மிராசு மருமவனைப் போட்டுருக்காயங்க.. வெட்டியிருக்காயங்க... தப்பி ஓடும் போது மிராசு மருமயன் கூட இருந்த அரசுடையப்பன்.. எங்க ஸ்டேஷன் எஸ்.ஐ சுட்டுருக்காய்ரு... அதுல்ல கதிருக்குத் தோள்ல்ல குண்டு பட்டிருக்கு... இப்போ அவிங்க கோஷ்ட்டியா மதிகெட்டான் சோலைக்குள்ளேப் பதுங்கித் திரியறாய்ங்களாம்..மிராசு இவன் உசுரு வேணும்ங்கிறாரு.. பார்த்த இடத்துல்ல அவனைப் போட்டு தள்ளுறோம்ய்யான்னு அரசுடையப்பன் எஸ் ஐ கங்கணம் கட்டிகிட்டு அலையுறாரு...பெரிய இடத்துல்ல எல்லாம் பகையாப் போயிடுச்சு"

ஆனந்தன் இரண்டு கைகளையும் தலை மீது வைத்துக் கொண்டு மண்ணில் உட்கார்ந்தான்.அவன் கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. அதைத் துடைக்கத் திராணியற்றவனாய் மண்ணில் முகம் புதைத்தான்.

"வாத்தியாரே.. வந்து நேரமாச்சு.. விசாரிக்க வர்றதாச் சொல்லிட்டு தான் வந்தேன்..விசயத்தைச் சொல்லிட்டேன்...இங்கிட்டு வந்தா கதிரேசன் கதை அம்புட்டுத் தான்.. அப்படியே அவனைக் கேரளாவுக்கோ அதையும் தாண்டியும் எங்கிட்டாவதுப் போகச் சொல்லுங்க... உசுராவது மிஞ்சும்.."

"அவன் போக மாட்டான்ய்யா" வாத்தியாரின் குரல் தீனமாய் ஒலித்தது.

"பழகுன்ன பாவத்துக்கு ஒங்ககிட்டத் தகவல் சொல்லத் தான் நான் வந்தேன்..என் சோலி முடிஞ்சுது நான் கிளம்புறேன்.. எஸ்.ஐ எந்நேரம்ன்னாலும் வருவார்.. பார்த்துப் பேசுங்க"

காக்கிச் சட்டைக்காரர் போனதும் அவசரமாய் வீட்டுக்குள் நுழைந்தான் ஆனந்தன்.

தாஸ் வாத்தியார் தூணைப் பிடித்துக் கொண்டு ஆழமானச் சிந்தனையில் இருந்தார்.

"நாநா..ன் கதிரைப் பாக்கப் போறேன்..நா..நான் சொன்னா அவன் கேகேப்பாய்ன்....அவனைக் கேரளாவுக்குப் போச் சொல்லுறேன்..." வழக்கத்தை விட அதிகமாய் திக்கியது ஆனந்தனுக்கு.

தாஸ் வாத்தியார் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.

கதிரேசனின் குரல் அவர் காதுகளில் கேட்டது.

"இது என் ஊர்.. இவிங்க எல்லாம் எம் மக்கள்...இவிங்களை விட்டுட்டு நான் எங்கேப் போவேன்.. அந்த மொதலாளி பயல்வ..இவிங்க ஓடம்புல்ல ஓட்டப் போடதக் கொறையா அவிங்க ரத்தத்தை ஊறிஞ்சுறாயங்க... அதைக் கேள்விக் கேட்டா.. போலீஸை விட்டு மெரட்டுறாயங்க.. நான் பயப்படமாட்டேய்ன்...இங்கிட்டு இருந்து கதிரேசன் போ மாட்டான்... வேணும்ன்னா அவன் உசுருத் தான் போகும்..இனி இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்ய்க.."


"எ என்ன.. எதுவும் பேசமாட்டீங்களா...?"

"ம்ம்.. அவன் யார் சொன்னாலும் கேக்கமாட்டாய்ன்... நான் என்னத்தச் சொல்ல?"

ஆனந்தன் அழுகையும் ஆவேசமும் ஆட்கொள்ள மதிகெட்டான் சோலை நோக்கிப் போனான். வானம் அவனுக்கு வழி காட்ட மறுத்து காற்றுடன் கைக்கோர்த்துப் பெரு மழையெனப் பொழிந்தது. ஆனந்தனுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் அழுகை அதிகமானது.

காற்றும் மழையும் ஓய மூன்று நாட்கள் பிடித்தன.

கதிரேசனைப் பற்றி ஊர்மக்கள் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். கதிரேசன் மீது ஊர் மக்களுக்குப் பிரியம் ஜாஸ்தி. அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன் தான்.ஊர் திருவிழாவில் அவன் கம்பு சுத்துவதைப் பாக்கவே அந்த ஊர்க் குமரிகள் தினம் தினம் திருவிழா வராதான்னு ஏங்குவார்கள். அறிவிக்கப் படாத மகளிர் ரசிகர் மன்றம் ஒன்று கதிரேசனுக்காக மும்முரமாக இயங்கி வந்தது.

கதிரேசன் தங்களுக்கு அடிக்கடி செய்த உதவிகளை எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர்.

"என்னப் பேசி என்ன பிரயோசனம் மிராசு மருமவனை இல்ல கதிரு தம்பி வெட்டியிருக்கு.. எஸ் ஐ அரசுடையப்பன் வேற மிராசுக்கு சொந்தமாமே.. கதிரைப் போடாம விடுறது இல்லன்னுச் சாமி சத்தியம் பண்ணிட்டு அலையுறானாமே..."

"மிராசு மருமவன் என்ன சத்யசீலனா... பொட்டைக் கள்ளன்..வயல் வேலைக்கு வந்தப் பிள்ளையள இழுக்கறவன் தானே.. கதிர் தம்பி சரியாத் தான் போட்டிருக்கு"

"கதிர் தம்பி எதோ இயக்கத்துல்ல இருக்குதாமா.. அந்த இயக்கம் அடுத்த தேர்தல்ல நிக்கப் போவுதாம். அப்போக் கதிர் தம்பிக்குத் தான் ஓட்டுப் போடலாம்ன்னு இருந்தேன்"

ஊருக்கு ஒதுக்குப்புறமானக் குடியிருப்புக்களில் இந்தப் பேச்சு பலமாகவே வீசிக் கொண்டிருந்தது.

ஆனந்தன் சிகப்பு ரோஜா பறிப்பதை மறந்தான்... சதா கதிர் ஞாபகமாவே அலைந்தான்...

சரியாக ஒரு வாரத்துக்குப் பின்..ஊர் மக்கள் கதிரைப் பற்றிய பேச்சைக் குறைத்திருந்த ஒரு அதிகாலை வேளையில்

தாஸ் வாத்தியார் வீட்டு நாய் அவர் வேட்டியைப் பிடித்து இழுத்தது...
நாயை விரட்டிக் கொண்டு தாஸ் வாத்தியார் விழுந்தடித்து ஓடினார்...ஓடும் போதே அவர் மனம் சுக்கு நூறாய் ஒவ்வொரு யோசனையிலும் உடைந்துக் கொண்டிருந்தது...

ஓட்டம் முடிந்த இடத்தில் நாய் சுற்றி சுற்றி வந்தது..

எல்லோரும் பார்த்து பரவசப்பட்ட அந்த முகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கோரச் சேதமடைந்து ரத்தச் சேற்றில் குளித்து கிடந்தது...

நித்தம் நித்தம் தேகப் பயிற்சியினால் உரமேற்றபட்ட அந்த இரும்பு தேகம் உருக்குலைக்கப்பட்டு நடு வீதியில் கிடந்தது...

ஊருக்கெல்லாம் உதவிய அந்தக் கால்களும் கரங்களும் கண்டபடி வெட்டப் பட்டு கிழிந்துத் தொங்கிக் கொண்டிருந்தன....ஈக்கள் அந்த இடத்தில் இறுதி மரியாதைச் செலுத்திக் கொண்டிருந்தன...

தாஸ் வாத்தியார் பார்வை உடலின் கீழ் பாகம் காணும் முன் அவர் கைகள் தானாய் அவர் வேட்டியைக் களைந்து உடல் மீது போர்த்தியது...

ஊருக்கு உதவ நினைத்த உனக்காடா மகனே.. இந்த நிலைமை.... அவர் குரல் எழவில்லை....

அவர் குரல் எழுந்தப் போது அதில் ஒலித்தப் பெயர்......

"உன் நண்பனைப் பாருடா ஆனந்தா.............."


இன்னும் இருக்கு கதிரேசன் கதை...

Wednesday, October 18, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 1

"ஏனப்பா... இ இது என்னப் பாட்டு.. தமிழ் தானா.. கேகேட்டா ஒண்ணும் விளங்கல்ல்" குவாலிஸ் காரின் பின் சீட்டில் ஒய்யாரமாய் சாய்ந்துக் கொண்டு டிரைவரைக் கேட்டார் ஆனந்தன்.

"ஐயா இதுதானுங்க இப்போ ஹிட் பாட்டு..எளையராஜா மகன் போட்ட பாட்டுங்க,.. ஒரு ரெண்டு தடவைக் கேட்டா உங்களுக்கும் பிடிச்சுப் போகும்ங்க"

"அட என்னமோ போப்பா நமக்கெல்லாம் ககண்ணதாசன் எழுதி எம்.எஸ்.வி போட்டப் பாட்டுத் தான் பாட்டு மாதிரி இருக்கு..நீ சசவுண்ட்டைச் சசன்னமா வச்சுக்க.. இன்னும் ஊர் போறதுக்கு எவ்வளவு நேரமாகும்?"

ஆனந்தனுக்கு வயசு அம்பதுக்கும் சற்று இருக்கும், டிரைவருக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கும். ரசனையின் இடைவெளிக்கு இந்தக் காரணம் போதாதா? குவாலிஸின் முன்னால் பறந்தக் கட்சிக் கொடி, வண்டி நம்பர் பிளெட்டில் இருந்த என்ற ஒற்றை எழுத்து ஆனந்தன் அதிகார மையத்தின் பிரதிநிதி என்பதை சாமான்யர்க்ளுக்கு விளம்பரப்படுத்தியது.

"திண்டுக்கல் நெருங்கிட்டோம்ய்யா.. இன்னும் மூணு மூணரை மணி நேரத்துல்ல கொடைக்கானல் போயிரலாம்ய்யா.. அங்கிட்டு இருந்து ரோடு நல்லா இருந்தா மதியம் 3 மணிக்கு பூம்பாறைத் தாண்டிரலாம்..பூண்டி அங்கிருந்து பக்கம் தானே!"

"ஏம்ப்பா பூண்டி ரூட் உனக்கு நல்லா தெரியுது விசாரிச்சிகிட்டியா..முன்னாடி டிராவல்ஸ்க்கு ஓட்டுன்னப்போ வந்து இருக்கியோ?" டிரைவரின் பதிலை ஆனந்தன் எதிர்பார்க்கவில்லை.

"நான் லேசா தலையைச் சாச்சுக்கிறேன் நீ ஊர் கிட்ட வரும் போது எழுப்பி விடு" ஆனந்தன் கையைத் தலைக்குக் கொடுத்து இன்னும் வசதியாக இருக்கையில் சாய்ந்துக் கொண்டார்.

அதே சமயம் பூண்டி ஊராட்சி எல்லை.

"அமைச்சர் ஆனந்தன் அவர்களைப் பூண்டி பகுதி கழகம் வரவேற்கிறது" ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி வாசித்து முடித்த பாண்டி முகம் கோபத்தில் சிவந்துப் போனது.

"அந்தப் பெயிண்டர் பன்னி எங்கன இருக்கான்.. விளக்குமாத்து பயல்வளா.. அண்ணனுக்குச் செயல் புயல்ன்னு பட்டமிருக்குல்ல அது அந்த ...(படிப்பவர் ரசனைக் கருதி வார்த்தைகளை சென்சார் செய்கிறேன் &&&&& - என்று குறிக்கப்படும் இடங்கள் தணிக்கைச் செய்யப்பட்டவை என் அறிக) தண்ணியப் போட்டுட்டுச் செத்து ஓழிய வேண்டியது தானே.. செய்யச் சொன்ன ஒத்த வேலையை சொத்தயாப் பண்ணியிருக்கான்.. பாத்தா வெட்டிபுடுவேன்னு சொல்லு.. ஏய்.. கரகாட்டக் குரூப் மருதையிலே இருந்து வாந்தாச்சா..?"

"கொடைக்கானல் வந்துட்டாங்களாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல்ல இங்கே இருப்பாய்ங்கண்ணே"

"செத்த மூதிகளா.. கட்டு கட்டா நோட்டை வேட்டிக்குள்ளே வச்சு அவுத்து விடல்ல.. வட்டிக்கு வாங்கிச் செலவு பண்ணிகிட்டு இருக்கேய்ன்.. நேரத்துக்கு வர்றல்ல.. இந்த மலைக்காட்டுல்ல கேரட் தோட்டத்துல்ல பொதைச்சுருவேன் சொல்லிட்டேன். ஆமா மாலைக்கும் கீரிடத்துக்கும் சொல்லியிருந்தெனே என்னடா ஆச்சு"

"ரெடிண்ணே, கவுஞ்சியிலே இருந்து ஆளு மாலையோடப் பொறப்பட்டாச்சுண்ணே"

"இந்தா &&&&&.. எதாவது நேரம் தப்பிச்சுன்னு வை வர்ற மாலை உன் சவத்துக்குத் தான் போடுவேன் பாத்துக்க...சமையல் ஒழுங்கு எல்லாம் பார்த்தியா...?"

"ஆச்சுண்ணே.. ரெடியாகிட்டு இருக்குண்ணே"

பாண்டி கட்சி அலுவலகம் நோக்கி நடந்தான். ஆபிஸ் வாசல்ல நுழையவும் வழ்க்கம் போல் தாஸ் வாத்தியாரின் இருமல் சத்தம் அவன் காதில் விழுந்து அவன் சிடுசிடுப்பை அதிகப்படுத்தியது.

"&&&&& அந்தக் கிழட்டு வாத்தியானை கொளுத்தி தொலைங்கடா.. &&&& எப்படியும் அவன் செத்தா அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரு &&&& கிடையாது.. அவன் போனா அவன் இருக்க வீட்டையும் ஆபிசோடச் சேத்து வளைக்கலாம்ன்னு பாக்குறேன்.. போவேனாப் பாருன்னு அடம் பிடிக்கிறான்"

அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஊராட்சி அமர்க்களப்பட்டது. தன் சொந்த அக்கா மகன் திருமணத்திற்கு வருகை தரும் அமைச்சர் ஆனந்தனை வரவேற்பதில் கழக கண்மணிகள் கடும் போட்டியில் இருந்தனர்.

"ஓங் கட்சிகாரங்க எல்லாம் ஒன்னிய வரவேக்க வேட்டிய இறக்கிவிட்டுகிட்டு ஊர் எல்லையிலே நிக்குறாய்ங்க.. நீ பூனை மாதிரி பதுங்கி உள்ளே வந்துருக்க..."

"அக்கா நான் ககட்சிக்காரனா வர்றல்ல ஒன் ததம்பியா ஓன் வீடு கல்யாணத்துக்கு இல்ல வந்து இருக்கேன்...எங்கண எம் மருமவளைக் காணும்.."

"இருக்கா காலத்துக்கும் சேத்து வச்சிருந்த வெக்கத்தை மொகத்துல்ல அப்பிகிட்டு பின்னால தான் நிக்கா.. அது கிடக்குது.. செம்பகம் வர்றல்லயா. வருவான்னு ஆசயா இல்ல இருந்தோம்"

ஒரு பெரூமூச்சு மட்டுமே பதிலாய் தந்தார் ஆனந்தன்.

"ஏன் தம்பி செம்பகம் இன்னுமா எல்லா விசயத்தையும் நினைப்பு வச்சுகிட்டு இருக்கு.. 30 வருஷம் ஓடிப் போயிருச்சு.. ஒங்களுக்கும் மூணு புள்ளக இருக்கு... என்ன த்ம்பி இது....?"


"யக்கா.. விவிசேசத்துக்கு வந்துருக்கேன் விசாரணைப் பண்ணிகிட்டு இருக்க.. இந்தூரூக்கு என் மூச்சு இருக்க வரைக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்.. இப்போ ஒம் புள்ளக்கு ககலியாணம்ன்னு சொல்லி வர வச்சுட்ட... சரி..அந்தப் பேச்ச விடு.. ஆவுற வேலையைப் பாப்போம்"

ஆனந்தன் சொல்லிமுடிக்கவும் வாசலில் செயல் புயல் உள்ளிட்ட இதர பட்டப்பெயர்களோடு இணைக்கப்பட்ட ஆனந்தனின் பெயர் கொண்ட கோஷங்கள் பேரிரைச்சலாய் கேட்டது.பாண்டி தலைமையில் கட்சிக்காரகள் வீட்டுக்குள் நுழைய முண்டியடிக்க...வாசலுக்கு வந்தார் ஆனந்தன்

"ய்ப்பா நானே கட்சி ஆஆபிஸ்க்கு வர்றேன்யா.. கல்யாண வீட்டைக் ககட்சி மேடையாக்கிராதீயப்பா..."

"அண்ணனுக்கு நாட்டுக் கோழி குழம்பு, ஆட்டுக் கால் சூப்பு, நண்டு வறூவல், எறா, புறான்னு அம்புட்டு தயார் பண்ணி வச்சிருக்கோம்ல்ல எல்லாம் என் ஏற்பாடு தான்... இன்னும் கரகம் , ஓயிலாட்டம்ன்னு நிறைய ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல்ல..." பாண்டி தன் பிரதாபம் பேச...

"நான் ககவுச்சி சாப்பிடுறது இல்ல.. எதுக்கு இம்புட்டு ஏற்பாடு எல்லாம் வீணாப் பண்ணிகிட்டு... சரி சரி நீங்க ஆபிஸ்க்குப் போங்க நான் வர்றேன்.."

பாண்டி தலைத் தொங்கிப் போனது.

"அண்ணே சைவச் சாப்பாடும் ரெடி பண்ணியிருக்கோம் இல்ல... " பாண்டியின் எடுப்பு எடுத்துவிட பாண்டி முகம் பல்பாய் எரிந்தது.

"சரிய்யா ஓங்களோட வந்துச் சாசாப்பிடுறேன்.. எங்க வீட்டு ஆளுங்களை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்குதேன்.. பேசி இருந்துட்டு வர்றேன்ய்யா"

கட்சி ஆபிஸ் விருந்துக்கு பக்காவாய் தயார் ஆனது.

ஆனந்தன் அந்த வீதியில் நடக்கும் போது அவர் மனத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் ஓடின.

செண்பகத்தின் ஞாபகம் அவர் மனத்தில் அதிகமாய் வந்தது. செண்பகம் ஆனந்தனின் மனைவி. ஆனந்தன் மனத்தில் இப்போது தூளி கட்டி ஊஞ்சாலடியது அவ்ரோடு 30 வருடமாய் வாழ்ந்து வரும் அவர் மனைவி செண்பகம் அல்ல. முப்பது சொச்சம் வருடங்களுக்கு முன் தன் உயிரை விடவும் ஆனந்தன் அதிகமாய் காதலித்த அவர் அத்தை மகள் செண்பகம்.

அந்தச் செண்பகத்தை இதே வீதிகளில் எத்தனை நாள் ஆசையோடும் காதலோடும் இரண்டும் கலந்த ஒரு வித ஏக்கத்தோடும் பார்த்திருப்பேன் என நினைத்த வண்ணம் அந்த வீதியில் மெதுவாய் நடந்தார் ஆனந்தன்.

சின்ன வயசுல்ல ரெட்டை சடைப் போட்டுகிட்டு சுட்டித் தனமாய் சிறகடித்தப் பட்டாம்பூச்சி செண்பகம்.
பருவம் வந்ததும் தாவணியில் அழகியத் தீயாய் வலம் வந்த செண்பகம்
திருவிழா சமயங்க்ளில் தேவதையாய் தோழிகளோடு உலா வந்த செண்பகம்
கோலம் போடும் பொழுதுகளில் ஓவியமாய் செண்பகம்

இன்னும் தன் உள்ளத்தின் ஒவ்வோரு ஜன்னல் வழியாகவும் பார்த்துப் பரவசப்பட்ட செண்பகத்தின் ஒவ்வொரு பிம்பமும் ஆனந்தனின் ஒவ்வொரு செல்லையும் செல்லமாய் உசுப்பிவிட்டுப் போனது.

அந்த செண்பகம் இந்த வீதியில் தான் இன்னும் வாழ்கிறாள் என ஆனந்தன் எண்ணிக் கொண்டார். எண்ணங்களின் ஊடே ஆன்ந்தனின் பார்வை ஒரு வீட்டின் மேல் பதிந்து நின்றது. அந்த வீடும் அதன் கோலமும் ஆனந்தனை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியது.
அந்த வீட்டுக்குள் இருந்து லொக் லொக் என்ற இருமல் சத்தம் தொடர்ந்து வந்தது.
வேலிகளில் முழுவதும் படர்ந்திருந்த காட்டுச்செடிகளும் உடைசலாய் விழுந்துக் கிடந்த வேலிக் கதவுகளும் அந்த வீட்டோடு வீட்டிலிருப்பவரின் நிலையையும் ஆனந்தனுக்கு அறிவித்தன.

"தாஸ் வாத்தியார் வீடு தானே இது...ஏன் இப்படி இருக்கு?"

"ஆனந்தனுக்குத் தெரியாதது இல்ல..பேச்சை நிறுத்தி பல வருசம் ஆச்சு... தாஸ் வாத்தியார் உடல் நிலைமையும் அவ்வளவு சீரா இல்ல..சாவுக்கு தான் இழுத்துகிட்டு கிடக்கார் ஆனாலும் எதோ ஒண்ணு அவரைச் சாகவிடாம தடுத்துகிட்டு இருக்கு... பழைய ஆளுங்களுக்கு அவரைப் பத்தி ஓரளவு தெரியும் இப்போ இருக்க இளந்தாரிகளுக்கு அவர் ஒரு சாகக் கிடக்கிற கிழவன்னு மட்டும் தான் தெரியும்...கவனிப்பு இல்ல"

"உனக்கு அவர் யார்ன்னு தெரியும் இல்ல...எனக்குச் சொல்லியிருக்கலாம் இல்ல...என்னய்யா நீங்க? "

"ஆனந்தா இனி ஒண்ணும் பண்ண முடியாது.. வெறும் கூடு தான் இருக்கு உசுரு எப்போ வேணும்ன்னாலும் பறந்துப் போகும்"

ஆனந்தன் கதவை மெல்ல நகர்த்தி விட்டு இருமல் வரும் திசை நோக்கி நகர்ந்தான். சத்தம் வந்த திசையில் பழைய பிரம்பு நாற்காலியில் பள்ளிக்கூட பயலாஜி லேப்களில் இருக்கும் எலும்புக் கூட்டினை ஒத்த மனித உருவம் ஒன்று இருமிக் கொண்டிருந்தது.

தாஸ் வாத்தியார் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனந்தன் அவர் முன்னால் சென்று மண்டியிட்டான். அவர் கையில் ஒரு சட்டம் போட்ட புகைபப்டம் இருந்தது.
அவர் கவனத்தைப் பெற முயன்ற ஆனந்தன் அவர் கையில் இருந்து அந்தப் படத்தை வாங்கினான்.

தாஸ் வாத்தியார் கண்கள் மெல்ல இவன் பக்கம் திரும்பின,. படத்தை திருப்பி அதில் உள்ள படம் தெரியும் படி பிடித்தார் ஆனந்தன்.

"ஆனந்தா இது கதிரேசன் படம்..."

ஆனந்தனின் கண்கள் நீர் வார்த்தது. அவசரமாய் கண்ணீரைத் துடைத்தார். தாஸ் வாத்தியார் கண்களில் அதிசயமாய் ஒரு புன்னகைப் பூத்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனந்தன் எழுந்துக் கொண்டான். வீட்டைச் சுற்றி ஒரு பார்வைப் பதித்தான்.

" தாஸ் வாத்தியார் இப்படி இருக்கக் கூடாது.. எவ்வளவு செலவு ஆனாலும் சரி... அவர் எப்படி வாழ்ந்தாரோ அப்படியே இந்த வீட்டை மாத்துங்க.. அவர் கடைசி காலம் இப்படி இருக்கக் கூடாது. உடனே செய்யுங்க" ஆனந்தன் குரல் கிட்டத் தட்ட உடைந்துப் போனது

"தோ பார்டா நாமளும் இந்த வீட்டை அடிக்க என்னவெல்லாமோச் செஞ்சோம்,...அமைச்சர் வந்தார்.. ஓடனே வேலையை ஆரம்பிச்சுட்டார். கிழவனைக் கவனிக்கிற மாதிரி கவனிச்சு அவன் போன ஓடனே வீட்டை அடிக்கிற திட்டமிது" பாண்டியின் ஈன மூளைக்கு இப்படியாகப் பட்டது

தாஸ் வாத்தியார் கண்கள் அசைந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஆனந்தன் மெதுவாய் வாசலை நோக்கி நகர்ந்தார்.

"ஆ..னன்ந்த் தா...." குழறியபடி வார்த்தை வந்த திசையில் தாஸ் வாத்தியார் நாற்காலி விட்டு எழுந்து நின்றுகொண்டிருந்தார்...

கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை - பகுதி 3