Wednesday, January 31, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 2

இது விச்சுவின் கதை - பகுதி 1

விச்சுவின் கதை இந்தப் பகுதியிலிருந்து நந்தினியின் கதையா மாறிடுச்சு... ஆனாலும் இதை நாம விச்சுவின் கதையாவேப் பார்ப்போம் என்ன ரைட்டா? இனி நந்தினியின் கதை உங்கள் பார்வைக்கு...

போட்டோவில் வலது ஓரம் இருப்பவனைப் பார்த்தவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது.

"விச்சு இவன் தான் செல்லப்பனா?"

"ஆமா இவனே தான்... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

"எல்லாம் ஒரு யூகம் தான்..அந்தப் புட்பால் மேட்ச்ல்ல சேம் சைட் கோல் போட்டு உங்க கிட்ட அடி வாங்குன பையன் தானே ஒரு அப்பாவி முழி அப்படியே இருக்கே "

"அவனா அப்பாவி.. அடப் பாவின்னு சொன்னா அவனுக்கு கரெக்ட்டாப் பொருந்தும்.
புட் பால் மேட்ச்க்கு வந்துப் பொண்ணுங்கப் பாக்குறாங்கன்ன ஓடனே பையனுக்கு அடுத்தவன் கோலுக்கும் எங்க கோலுக்கும் வித்தியாசம் தெரியாமப் போச்சு.. ஆர்வத்துல்ல எங்க கோலுக்கே பாலை அடிச்சி.. ஸ்கூலைத் தோக்க வைச்சுட்டான்..."

"ம்ம்ம் அது சரி... விளையாடத் தெரியாதப் பையனை நீங்கத் தானேடா டீம்ல்ல சேர்த்தீங்க..."

"ஆள் கம்மின்னு சேர்த்தோம்...அதுக்குன்னு..." விச்சுவின் மொபைல் சிணுங்கியது. அவன் எழுந்துச் சென்றான்.

செல்லப்பனை எனக்குத் தெரியும். நேரடி அறிமுகம் இல்லையேத் தவிர செல்லப்பனின் கதைகள் அனைத்தும் எனக்கு அத்துப் படி. செல்லப்பன் கிட்டத்தட்ட விச்சுவின் பள்ளிக்கால கைப்புள்ளன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு அப்புராணி. அவனை உசுப்பேத்தி அவன் உடம்பை ரணகளமாக்கிப் பார்ப்பதில் விச்சுவுக்கும் அவன் கடைசி பெஞ்ச் நண்பர்களுக்கும் அலாதி பிரியம்.அந்தக் கதைகளைத் தனியா தொடராவேப் போடலாம். மீண்டும் நந்தினிக்கு வருவோம். விச்சு போன் பேசி முடித்து விட்டு கையில் முறுக்குகள் நிறைந்த தட்டோடு வந்தான்.

"நந்தினி யார்ன்னு சொல்லலியே...கூட வேற நிக்குற..."

"தேவ்.. நம்ம செல்லப்பன் ஒரு பொண்ணைத் தீவிரமாக் காதலிச்சான்னு சொல்லுவேனே அந்தப் பொண்ணு தான் இந்த நந்தினி..."

நான் மறுபடியும் நந்தினியைப் பார்த்தேன்... நம்ம வெயில் படத்துல்ல வர்ற பாவனா மாதிரி பளிச்சுன்னு இருந்தாப் பொண்ணு.. கண்ணுல்ல ஒரு ஈர்ப்பு சக்தி.. உதட்டுல்ல புன்னகைத் தொழிற்சாலைன்னு அழகாப் பாந்தமா இருந்தா.

"செல்லப்பன் எங்க கூட இருந்தாலும் நல்லாப் படிப்பான்.. கிளாஸ் பர்ஸ்ட்.. அந்த நந்தினி கிளாஸ் செகண்ட்.. நான் எல்லாம் எதோ பாஸ் ஆவேன்.. என் கூட இருந்த காசி என்னை விட மோசம்.. இந்த செல்லப்பனாலே எனக்கும் காசிக்கும் எப்பவுமே கெட்டப் பெயர் தான்.. எல்லா வாத்தியார் கிட்டயும் பின்னாலே அடி வாங்கியே காசிக்குப் பழுத்துப் போச்சு.. நான் கொஞ்சம் பட்ட.. கழுத்துல்ல கொட்டைன்னு மெயின்டெயின் பண்ணி பிரம்புக்கு தப்பிச்சுக்குவேன்..."

லாரா இன்னொரு சிக்ஸ் அடிக்க அதில் லயித்த விச்சு கதையைச் நிறுத்திட்டு கைத் தட்ட ஆரம்பிச்சான். அவன் மறுபடியும் கதைச் சொல்ல ஆரம்பிக்கும் வரை நான் இரண்டு நெய் முறுக்கினை எடுத்து வாயில் போட்டேன்.. என்ன ருசிடா சாமி.

"அப்புறம் என்ன நான் ஒரு மாஸ்ட்டர் பிளான் போட்டேன். காசி எனக்கு அதுல்ல கூட்டு.. எங்க கிளாஸேப் பார்த்து மயங்கி நிற்கிற நந்தினி செல்லப்பனை விரும்புறதா அவனை உசுப்பேத்த ஆரம்பிச்சோம்.. காசியும் அதுக்கு ஒத்து ஊதுனேன்..பையன் ஆரம்பத்துல்ல மசியல்ல.. நாங்க மெதுவாப் பல செட் அப் வேலை எல்லாம் செய்து அவன் மனசைக் கெடுத்தோம்.. அப்புறம் என்ன .. ஒழுங்காத் தலைவாரிகிட்டு இருந்தவன் தலையைக் கலைச்சுக் கோதிகிட்டான்... பள்ளிக்கொடம் முடிஞ்சதும் ஜிம்க்கு போக ஆரம்பிச்சான்.. ட்யூஷனுக்கு டைட் ஷ்ர்ட்.. டைட் பேண்ட்.. சைக்கிள்ல்ல எஸ் என் அப்படின்னு ஸ்டிக்கர்ன்னு பயலைக் கிறுக்கு புடிச்சு அலையவிட்டோம்."

"அட பாவிகளா அடுக்குமாடா... ??"முறுக்கைக் கடித்தப் படி நான் கேட்டேன்.

"மச்சி அவ உன்னியத் தான் பாக்குறா.. நீ கிரவுண்ட்ல்ல எக்ஸ்ர்சைஸ் பண்றத அவ நேத்துக் கூடப் பார்த்தாடா..அப்படின்னு நான் சொல்ல..காசி அதுக்கு பயங்கரமா ஆமாப் போடுவான்.. பைய இப்படியே படிப்புல்ல கோல் போட்டுட்டு சதா சர்வ காலமும் நந்தினி நந்தினின்னு திரிய ஆரம்பிச்சான்"

" ம்ம்ம் யப்பா எம்புட்டு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்கடா " தண்ணி சொம்பை வாயில் கவிழ்த்தேன்.

"எங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.. அப்புறம் எங்கக் கூட சேர்ந்து செல்லப்பனும் அடி வாங்க ஆரம்பிச்சான்.. அரையாண்டுல்ல ஒரு பாடத்துல்ல பெயில் வேற ஆயிட்டான்..."

"சந்தோசமா.. அது வேறயா" வாய் விட்டுச் சொன்னேன்

"காசியும் நானும் மரத்தடியிலே உக்காந்து திருட்டு தம் போட்டுகிட்டு இருந்தோம்.. செல்லப்பன் வந்தான்... எனக்கு ஒரு உடனே இப்போ நந்தினி என்னை லவ் பண்றாளா இல்லையான்னு உண்மைத் தெரியணும்ன்னு கோவமாப் பேசிட்டான்."

"பரவாயில்ல பய உஷாரா ஆயிட்டானா? "

"காசியும் நானும் எவ்வளவோ அவனைச் சமாதானப்படுத்திப் பார்த்தும் முடியல்ல.. அவன் நேரா நந்தினியைப் பாக்கப் போயிட்டான்... நானும் காசியும் அவன் பின்னாடி போறதா வேண்டாமான்னு முடிவு எடுக்க முடியாம அங்கேயே நின்னுட்டோம்.."

தட்டில் முறுக்கு தீர்ந்துப் போய் விட்டதால் விச்சு கீழேப் போய் திரும்பி வரும் போது தட்டில் முந்திரி பக்கோடா எடுது வந்தான்.

"அது நடந்து மூணு நாளா செல்லப்பன் ஸ்கூல் பக்கம் வரவே இல்ல... எனக்கும் காசிக்கும் கொஞ்சம் வருத்தமாப் போச்சு.. செல்லப்பன் வீட்டுக்குப் போனா அங்கே செல்லப்பன் படுக்கையிலே கால் ஓடிஞ்சுப் படுத்து கிடந்தான்.. அவ்ங்க அம்மா செல்லப்பன் சிமேண்ட் ரோட்ல்ல வரும் போது தடுக்கி விழுந்துட்டான் அதுன்னால கால் ஒடைஞ்சுப் போச்சுன்னு சொன்னாங்க. நாங்க அதை நம்பல்ல"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"செல்லப்பன் எங்களை முகத்துக்கு முகம் பார்க்காமலே பேசினான்.. ஏன்டா பொய் சொன்னீங்க.. நந்தினி என்னைக் காதலிக்கல்லடா.. அவ்வ்ளவு ஏன் என்னிய சுத்தமாப் பிடிக்காதுன்னு சொல்லிட்டா.. தீயிலே விழுந்த தேவாங்கு மாதிரி இருந்துகிட்டு ஒனக்கு எல்லாம் லவ் கேக்குதான்னு அவன் அண்ணன் வந்து கேட்டுட்டுன்னு மென்னு முழுங்குனான்..."

"ம்ம்ம்"

"எனக்கும் காசிக்கும் செல்லப்பனின் கால் எப்படி உடைஞ்சிருக்கும்ன்னு இப்போப் புரிஞ்சுப் போச்சு... எனக்கு கோவம் தலைக்கேறிப் போச்சு.. காசியும் கொந்தளிச்சுப் போயிட்டான்...செல்லப்பன் பயந்துப் போயிட்டான்.. டேய் எங்க வீட்டுல்ல தெரிஞ்சா எங்கப்பா எனக்கு இருக்க இன்னொரு காலையும் ஓடைச்சு விட்டுருவார்டா இத்தோட இதை மறந்துரலாம்டான்னு சொன்னான். அப்போதைக்குத் தலை ஆட்டிட்டு..செல்லப்பன் கால் குணமடையும் வரை காத்திகிட்டு இருந்தோம். நந்தின் எதுவுமே நடக்காதது மாதிரி ஸ்கூலுக்கு வந்துப் போயிட்டு இருந்தது எங்களுக்கும் இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது."

"என்னடா செஞ்சீங்க?"

"செல்லப்பன் வீட்டுல்ல ஓய்வா இருந்தது நல்லதாப் போச்சு.. விட்டப் பாடத்தை எல்லாம் படிச்சு பழைய அளவுக்குத் தேறிட்டான். அவன் கால் சரியானதும்.. மூணு பேரும் நந்தினி அண்ணன் வழக்கமா காலேஜ் விட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து நின்று கொண்டோம்.. எங்களோடு துணைக்கு காசியின் சித்தி பையனும் வந்திருந்தான். செல்லப்பனுக்கு வெலவெலத்துப் போனது.. நான் போறேன்டா.. என்னை விட்டுருங்க.. இதெல்லாம் வேணாம்..பயம் போகணும்ன்னா இதைக் குடிங்கடா.. காசியின் சித்தி பையன் ஊத்தி கொடுத்த என்ன எழவையோ ( பிற்காலத்துல்லா நான் கொஞ்சி குலாவும் பீர் தான் அந்த எழுவுன்னு எனக்கு அப்போத் தெரியாது). குடிச்சதுல்ல மூணு பேருக்கும் யானை பலம் வந்துருச்சு...அப்புறம் என்ன... நந்தினி அண்ணன் தனியாத் தான் அந்தப் பக்கம் ... நாலு எருமை அவன் மேல ஏறி ஓடுனா என்ன ஆகியிருக்குமோ அந்த அளவுக்கு அவனைச் சேதப் படுத்தி அனுப்புனோம்"

"நந்தினி உங்க மொகத்தைப் பாக்கமலாப் போனான்.?"

"அவன் முகத்தைத் தான் துண்டால்ல நல்லா மூடி கட்டி வச்சு இல்ல உதைச்சோம்... செல்லப்பனுக்கு எங்கிருந்து தான் வீரம் வந்துச்சோ.. ஏறி ஏறி மிதிச்சான்..."

"ம்ம் பழி தீர்த்துட்டீங்க இல்ல?"

"இத்தோடு எங்க ஆத்திரம் அடங்கவில்லை.. நந்தினி ட்யூஷன் முடிந்து தனியா வரும் வீதியில் அவளுக்காகக் காத்திருந்தோம்.. முக்குல்ல அவளை மடக்கி மிரட்டி எச்சரித்து அனுப்புவ்து தான் எங்கள் திட்டம்... ஆனா காசியின் சித்தி பையன் நந்தினி வந்ததும் திட்டத்தை மாத்திட்டான்.. மாப்பூ உன்னிய பார்த்து கருப்புத் தேவாங்குன்னு சொல்லிட்டான் இல்ல இவ அண்ணன்.. கருப்பு தேவாங்கு எப்படி முத்தம் கொடுக்குமோ அப்படி இவளுக்கு இப்போ முத்தம் கொடுடான்னு உசுப்பேத்த நம்ம செல்லப்பனும் போதையின் தயவில் பொங்கி எழுந்து விட்டான்.."

"அட பாவிகளா விவரம் வில்லங்கமா இலல் போயிருக்கு.."

"எனக்குப் பயங்கரமா ஏறிப் போச்சு.. நான் தட்டு தடுமாறி பாக்குறேன்.. ரெண்டு நந்தினி நிக்குறா அவளுக்கு நாலு கண்ணுல்ல இருந்து தண்ணீ வருது.. என் மனசுத் தாங்கல்ல.. டேய் வேணாம்டா பாவம் மிரட்டிட்டு போகச் சொல்லுங்கடான்னு சொல்லிப் பாக்குறேன்.. கைக்கலப்பு ஆகிப் போச்சு.. அந்த காசியோட சித்தி பையன் என்னப் பொழப்புப் பாத்தானோ அப்போ தெரியாது.. சட்டுன்னுக் கத்தி எடுத்து என் தோள்ல்ல குத்திட்டான்.. குப்புன்னு ரத்தம் பாத்ததும் காசி, செல்லப்பன் எல்லோருக்கும் போதை இறங்கிடுச்சு.. படுபாவிக தலை தெறிக்க என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க... கண்ணைக் கசக்கி கசக்கிப் பாக்குறேன் இப்போ என் முன்னாடி நாலு நந்தினி...கண் இருட்டுது.. போயிடு போயிடுன்னு கையைக் காட்டிட்டு மயங்கி விழுந்துட்டேன்.

தட்டில் இருந்த முந்திரி பக்கோடாவும் முடிஞ்சுப் போச்சு...விச்சு வாங்க தேவ் இப்போ கிளம்புனாத் தான் நாம் சாப்பிட்டு படம் பாக்க போக கரெக்ட்டா இருக்கும். டிவியில் மேட்சும் முடிந்துப் போயிருந்தது. காரில் ஏறி கிளம்புனோம்.

"என்னாச்சு ஏதாச்சுன்னு எனக்குத் தெரியாது... எங்க வீட்டு டிரைவர் வந்து என்னியத் தூக்கிட்டு வந்து வீட்டுல்ல சேத்து இருககார். நம்ம கத்தி குத்து மேட்டரைக் கமுக்கமா முடிச்சு நம்ம பேமிலி டாக்டர் என்னைய் முழுசா எங்க வீட்டுல்ல ஓப்படைச்சுட்டார். தண்ணீப் போட்டதுக்காக எங்க அப்பா என் கூடப் பேசுறதையே விட்டுட்டார்..நான் மறுபடியும் ஸ்கூலுக்குப் போனேன்..வீட்டுக்குக் கூட என்னப் பாக்க வராதா பசங்க கிளாஸ் வாசல்ல என் கையைப் பிடிச்சுகிட்டு அழுதாங்க.. மனசு மறுகிருச்சு... பிளஸ் டூ எக்ஸாம் வந்துச்சு... அதுக்கு முன்னாடி எடுத்தப் படம் தான் அது.. பொண்ணுங்க வரிசையிலே இடம் இல்ல என் பக்கம் கொஞ்சம் இடம் இருந்துச்சு.. நந்தினியா வந்து நின்னா.. என்னைப் பார்த்துச் சிரிச்சா.. யாருக்கும் கேக்காத மெதுவா.. அன்னைக்கு நடந்ததுக்கு சாரி அப்புறம் தாங்க்ஸ்ன்னு சொன்னா. எனக்கு ரொம்ப நெருங்கி வந்து நின்னா.. எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு தேவ்.."

இரவுச் சாப்பாடு அதிகம் இல்லை.. ஒரு இரண்டு சப்பாத்தியோட முடிச்சுக்கிட்டு தியேட்டர் நோக்கிக் கிளம்பினோம்...வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆள் கையை ஆட்ட காரை ஓரம் கட்டினான் விச்சு...

"தேவ் இது தான் காசி.. என் ஸ்கூல் மேட்.. தியேட்டர்ல்ல வேலைப் பாக்குரான் ஓனர்.. இவங்க தியேட்டர்ல்ல தான் வேட்டையாடு விளையாடு படம் போட்டிருக்காங்க... மாப்பூ காசி இது நம்ம மெட்ராஸ் ஆபிஸ் பிரெண்ட் தேவ்..."

என்னைப் பார்த்து ஒரு புன்னகையோடு தலையாட்டியக் காசி விச்சுவிடம் எதோச் சொல்லிவிட்டு கிளம்பினான். எதோ அவசரம் என்று புரிந்துக் கொண்டேன்...

"சரி இப்போ செல்லப்பன் எங்கே இருக்கான்?"

"அவன் இப்போ யு-எஸ் போயிட்டான் ஓராக்கிள்ல்ல எதோ பெரிய லெவல்ல இருக்கான் பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு... கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க.. ஆள் தொந்தியும் தொப்பையுமா இருக்கானாம்.. சொன்னாங்க.."

"ஏய்.. என்னப்பா சிமெண்ட் ரோட்டுக்குப் போகமா இப்படி திரும்புற.. நேரு போன ரோட்டுல்ல நானும் போகலாம்ன்னு பாக்குறேன்.. வரும் போதாவது அப்படி வா... சரி சொல்லு இப்போ நந்தினி எங்கே இருக்கா? எப்படி இருக்கா?"

"தேவ்... நந்தினி இப்போ உயிரோட இல்ல்... அந்த சிமெண்ட் ரோட்ல்ல பிளஸ் டூ லீவுல்ல எதிரே வந்த லாரி மோதி ஸ்பாட்ல்லயே இறந்துட்டா...."

கொஞ்ச நேரத்துக்கு என்னால் எதுவும் பேசமுடியவில்லை..

விச்சுவே மௌனம் கலைத்தான்...

"தேவ்.. வரும் போதும் என்னாலே அந்த சிமெண்ட் ரோட்ல்ல வர முடியாது தேவ்.. என்னைத் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே..."

இல்லை என்பதற்கு அடையாளமாய் என் தலையை அசைத்தேன்.. கார் தியேட்டரை நெருங்கி விட்டிருந்தது. எனக்கு எனோ படம் பார்க்கும் ஆசைத் தொலைந்துப் போயிருந்தது...

இது விச்சுவின் கதையா.. நந்தினியின் கதையா.. நீங்களே சொல்லுங்க...ப்ளீஸ்

Sunday, January 28, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 1

மூணு வருஷமா விச்சு காரைக்குடிக்கு வரச் சொல்லி கூப்பிடும் போதெல்லாம் என்னால எதாவது காரணத்துன்னாலே போக முடியாமலேப் காலம் ஓடிகிட்டு இருந்துச்சு.. போன முறை அவங்க பெரிய அண்ணாக் கல்யாணத்துக்குக் கூட எங்க செட் பசங்க எல்லாரும் போயிட்டு வந்தாங்க....

விச்சுக்கு என் மேலக் கொஞ்சம் வருத்தம் தான்.. ஆனாலும் அதை எல்லாம் காட்டிக்க மாட்டான். எப்போவும் போல என்னைப் பார்த்தாக் கலகலப்பாத் தான் பேசிகிட்டு இருக்கான். எனக்கும் வருத்தம் தான்.. எப்படியாவது ஒரு தரமாவது விச்சு வீட்டுக்குப் போயிட்டு வந்துடுணும்ன்னு திட்டம் போட்டுகிட்டேத் தான் இருந்தேன்...அந்த நேரம் பார்த்து தான் என்னோட நெருங்குன சினேகிதன் நாகப்பனுக்கு வலையப்பட்டியிலே கல்யாணம்ன்னு கார்ட் வந்து சேர்ந்துச்சு..

வலையப்பட்டியிலே இருந்து காரைக்குடி ரொம்பப் பக்கமாச்சே... விச்சு வீட்டுக்கு போயிட்டு வந்துர வேண்டியது தான்.. முடிவும் பண்ணிகிட்டேன். விச்சு இப்போ பெங்களூர்ல்ல ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியிலே வேலையா இருக்கான். கை நிறைய சம்பளம். அவனுக்கு ஒரு போனைப் போட்டு அந்த வாரக் கடைசியிலே நான் காரைக்குடி வர்ற தகவலைச் சொன்னேன்.. விச்சுவுக்கு ஒரே சந்தோஷம்.. அவனும் கிளம்பி ஊருக்கு வர்றதாச் சொன்னான்.. ஊர்ல்ல பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனை கீழே வச்சேன்..

அடிச்சிப் பிடிச்சி வினாயகர் சதுர்த்திக்கு ரெண்டு நாள் முந்தி கோயம்பேட்டுல்ல இருந்து திருச்சிக்கு போற ஒரு டப்பா வண்டியிலே இடம் பிடிச்சு உக்காந்துகிட்டேன்...
பொதுவாப் பண்டிகை நேரத்துல்ல பாவப்பட்ட பயணிகள்ட்ட கிட்ட அகப்பட்ட வரையிலே சுருட்டணும்ங்கற முடிவுல்ல டிராவல்ஸ்காரங்க அடிக்கிற கொள்ளைக்கு நானும் தப்பல்ல.. திருச்சிக்கு 500 ரூபா டிக்கெட் செலவு... விச்சுவுக்குத் தெரிஞ்சா பொறிஞ்சுத் தள்ளிருவான்.. எதுவும் சட்டப் படி தான் செய்யணும்ன்னு தீவிரமா இருக்கிறவன் விச்சு...

விச்சுவை எனக்கு ஒரு நாலு வருஷமாத் தெரியும்.. நாங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு வருஷம் ஒரே இடத்துல்ல வேலைச் செஞ்சுகிட்டு இருந்தோம் அப்ப ஆரம்பமான நட்பு.. விச்சுக்கு அது முதல் வேலை... நெத்தியிலே பட்டை.. கழுத்துல்ல உத்திராச்ச கொட்டை.. எளிமையானக் காட்டன் சட்டை.. எப்பவும் முகத்துல்ல ஒரு அமைதி.. உதட்டோரம் தவழும் ஒரு சிரிப்புன்னு விசுவைப் பார்த்த உடனே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு...

எதாவது ஒரு புத்தகம் படிச்சிகிட்டே இருப்பான் விச்சு... ஆன்மீகத்துல்ல ஆழம் எவ்வளவு உயரம் எவ்வளவுன்னு அளக்குற முயற்சியிலே சதா சர்வ காலமும் இருந்தான் விச்சு.. கிட்டத் தட்ட ஆரம்பக் காலத்துல்ல அவனுக்கு எங்க வட்டத்துல்ல சாமியார், ஞானப் பழம்ன்னு பாசமும் பரிகாசமும் சரி சம விகிததுல்ல கலந்தப் பலப் பட்டப் பெயர்கள் இருந்தன... அதுல்ல ஞானப் பழம் என்னுடைய உபயம்..

ஒரு சனிக்கிழமை விச்சு ரூமுக்குப் போனேன்.. ஏழு மணி இருக்கும்.. அதான் விச்சு ரூமுக்கு நான் முதல் முறையாப் போனது... ரூம்ல்ல பெரிய சைஸ்ல்ல திரிஷா படங்க.. 'சாமி' மாமியின் கிளுகிளூ படங்கள் அறையெங்கும் அலங்காரமா இருந்துச்சு...

"ஏன்டா விச்சா.. ரூம்ல்ல நீ தனியாத் தானேடா இருக்க..இதெல்லாம் யார் வேலை உனக்கு முன்னாடி ரூம்ல்ல இருந்தவன் விட்டுடுப் போன மாமி படமாடா..." நான் கேட்டு வைக்க..

"அய்யோ தேவ்.. இதெல்லாம் நானேப் பார்த்து பார்த்து சேர்த்து வாங்குனப் படமாக்கும்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் தலைவியை நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்.. இல்ல 2020ல்ல தமிழ் நாடு சி.எம் ஆக்கிட்டுத் தான் ஓய்வேன் இது சத்தியம்ன்னு கிட்ட வந்து என் தலையிலே கை வச்சான்.."

விச்சுவிடமிருந்து ஒரு கெட்ட வாடை வந்தது. என் பாரவையை அவன் அறையைச் சுத்தி ஓட விட்டேன்.. காலி பாட்டில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய உருண்டுக் கிடந்தன...

தேவ் யார் ஞானப் பழம்... அப்போதும் சிரித்துக் கொண்டிருந்த விச்சு என்னைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது...

காரைக்குடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நான் சேரும் போது மணி கிட்டத்தட்ட நாலு ஆகிப் போச்சு..

மதிய வெயில் கொஞ்சமும் குறையாமச் சுள்ளௌன்னு மொகத்துல்ல அடிச்சிகிட்டு இருந்துச்சு. சர்பத் கடை ஒண்ணு கண்ணுல்ல பட்டுச்சு.. சில்லுன்னு வாங்கிக் குடிக்கவும் விச்சு வந்து என் தோள்ல்ல கை வைக்கவும் சரியா இருந்துச்சு. கூலிங் கிளாஸ்.. பேடட் ஜீன்ஸ் பேண்ட்...கமான் கெட் மீ அயாம் சிங்கிள் ( COME ON GET ME I AM SINGLE)..
அப்படின்னு எழுதுன டீ ஷர்ட்.. ஆளே மாறி போயிருந்தான் விச்சு...

"தேவ்.. நீங்க கொஞ்சம் உடம்புப் போட்டுருக்கீங்கப் போலிருக்கு.. வீட்டுல்ல எல்லரும் சுகமான்னுக் கேட்டுகிட்டே .ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்த வச்சுக்கிட்டான்.

என்னோடச் சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சுதோ என்னவோ... என்னையும் டீ ஷ்ர்ட்டையும் மாறி மாறி பார்த்தான்..

"அய்யய்யோ தேவ்.. அப்படி எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துறாதீங்க... இது என் பர்த் டேக்கு எங்க டீம் பசங்க வாங்கிக் கொடுத்த கிப்ட்.. எங்க டீம்ல்ல நான் மட்டும் தான் பேச்சுலர். அதான் ஓட்டுணும்ன்னு இப்படி வாங்கிக்கொடுத்துட்டாங்க.."

இன்னொரு சர்பத் சொல்லியிருந்தேன் அதுவும் வந்தது.

"ம்ம் கோயிலுக்கு எல்லாம் போற இல்ல?"

"மனமே கோயில் அதுல்ல இருக்க சிந்தனையே இறைவன்... நீங்க படிச்சது இல்லையா... படிக்கணும் தேவ்.." என்ற படி சிரித்தான் விச்சு.

சர்பத்தும் சிகரெட்டும் ஒரே நேரத்தில் முடிந்தன.. விச்சு எனக்கும் சேர்த்து காசுக் கொடுத்தான். சான்ட்ரோ கார் ஒன்று பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்றது. அதில் விச்சுவைத் தொடர்ந்து நான் ஏறினேன்.

கார் காரைக்குடி வீதிகளில் சீறி ஓடியது...

"ம்ம் காரைக்குடி நல்லாத் தான் இருக்கு.. பெரிய பெரிய வீடு... ஹே வேட்டையாடு விளையாடு.. புது படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகுமா?"

"தேவ்.. என்ன நினைச்சிங்க எங்க காரைக்குடி பத்தி... நேருவே நேர்ல்ல வந்துட்டுப் போயிருக்கார் தெரியும் இல்ல.. அழகப்பா செட்டியார் நேரு வரும் போது அவர வர்வேற்க தனியா சிமெண்ட ரோடே போட்டார்ன்னாப் பாருங்க.. எங்க ஊர் பெருமைய..." விச்சு உற்சாகமாச் சொல்லிகிட்டு வந்தான்.

விச்சுவின் வீடு அழகாயிருந்துச்சு. வீட்டு வாசலில் இருந்த பெரிய நாயைப் பார்த்தாக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. விச்சு ராம்போ என்ற அந்த நாயைப் பற்றி ஏற்கனவே என்னிடம் பலக் கதைகள் சொல்லியிருந்தான். ராம்போவிடம் என்னைப் பற்றி சொல்லியிருப்பானோ என்னவோ.. அது என்னைப் பார்த்து வாலாட்டியது.

விச்சுவின் பெற்றோர் அறிமுகம்.. வீட்டைச் சுற்றி பார்க்கும் படலம் என அரை மணி நேரம் செலவானது.. மாடியில் இருக்கும் விச்சுவின் அறைக்க்குப் போய் கால் நீட்டி உட்கார்ந்தோம்.

"அப்புறம் விச்சு.."

"என்ன தேவ் சொல்லணும்.. பெங்களூர் வாழ்க்கையும் அங்கேப் பொங்கி வழியுற டிராப்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாப் பழகிப் போயிருச்சு.. ஆபிஸ் அம்சமா இருக்கு..மாமா வீட்டுச் சாப்பாடு.. ஐ பாட்ல்ல நம்ம இளையராஜா பாட்டு..சுஜாதாவோட திருவரங்கத்து தேவதைகளை நாலாவது வாட்டியாப் படிக்கிறேன்.. வாழ்க்கைப் போயிட்டு இருக்கு.." விச்சு சிரித்தான்.

"அண்ணனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு.. நீ மட்டும் தான் பாக்கி... எப்போ உனக்கு?" நான் மெதுவாக் கொக்கிப் போட்டேன்.

"என்ன அவசரம் தேவ்... மெதுவாப் பண்ணுவோம்..இப்போ இந்தாங்க ஈ.எஸ்.பி.என் பாருங்க.. ஓங்க மெட்ராஸ்ல்ல எல்லாம் இந்த சேனல் வராது..பெஸ்ட் ஆப் லாரா போடுறான் பாருங்க.." என டிவியில் மூழ்கினான் விச்சு..

"ஒரு வேளை நம்ம ஆபிஸ் வனிதா ஓ.கே சொல்லியிருந்தா.. இன்னேரம் ஒரு புள்ளக்கு நீயும் அப்பன் ஆகி இருப்பியோ" நான் அடுத்த கொக்கியைப் போட்டேன்..

"அஹா அந்த மேட்டரை இன்னும் நீங்க மறக்கல்லியா..விடுங்க தேவ் அந்தப் பொண்ணுக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு.. அதுவுல்லாமல் அப்படி எல்லாம் எனக்கு வனிதா மேல எந்த ஆசையும் கிடையாது.. சும்மா நீங்களும் பசஙக்ளும் சேர்ந்து என்ன ஓட்டுறதுக்கு அவ பெயர் ஒண்ணு மாட்டிகிச்சு.." அவன் மறுபடியும் டிவியில் லாரா விளாசுவதை கண் கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தான்.

தட்டில் இருந்த குழி பனியாரங்களின் சுவையில் நாக்கு சற்று களைத்துப் போயிருந்தது. நல்ல ருசி.. செட்டி நாட்டு பக்கம் பலகாரத்துக்கு குறைவு இருக்காதுன்னு தெரிஞ்சவ்ங்கச் சொன்னது சரியாத் தான் இருக்கு.விச்சுவின் ஸ்கூல் போட்டோக்களைப் புரட்ட ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட அவன் பள்ளி நண்பர்கள் எல்லாரையும் பற்றி அவன் என்னிடம் கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறான் என்பதால் ஆர்வத்தோடு படங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. எல்லாப் படங்களிலும் விச்சு பக்தி பழமாய் புன்னகைப் பூத்துக் கொண்டிருந்தான்...

"யார்டா இந்தப் பொண்ணு.. உனக்கு ஸ்கூல் காலத்துல்ல பொண்ணுங்க சினேகிதம் எல்லாம் உண்டா..? அதுவும் இவ்வளவு கிட்டக்க நின்னு எடுத்துக்குற அளவுக்கு நெருங்குன சினேகிதமா?" இது கொக்கியா எனக்கேத் தெரியாத போதும் கேட்டேன்.

"இந்த்ப் போட்டோ இங்கேயா இருக்கு.... நந்தினியோடப் போட்டோவாச்சே...தேவ் அது ஒரு பெரியக் கதை..." விச்சுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு பளிச்சிட்டது. என்னால் அது என்ன வென்று அறிந்துக் கொள்ள முடியவில்லை..

வெயிட்டீஸ் படிக்கிற உங்களூக்கும் சந்தேகம் வந்து இருக்குமே.. இது விச்சுவின் கதைன்னு சொல்லிட்டு இப்போ நந்தினி ஒரு பெரியக் கதைன்னு டிராக் மாறுதேன்னு.. இன்னும் கொஞ்சம் வெயிட்டீஸ்ங்க...

நந்தினியின் கதையும் சொல்லுறேன்...சீக்கிரமாவேச் சொல்லுறேன்.. கதை விரைவில் பக்கம் 78ல் வெளிவரும்...

இது விச்சுவின் கதை - பகுதி 2

Monday, January 22, 2007

கவி 27: இன்னும் பெய்யும் மழை - 3


மழைப் பிடிக்குமா?
என கேட்டேன்
மழையில் முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை தலையில் கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்

சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...

என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?
ம்ம்ம்...அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..
செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..

சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ.. நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...

நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?
ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..
ம்ம்ம்.. அது இல்ல
உடையைச் சொல்லுங்க என்கிறாய்..
அட கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
போய்யான்னு சொல்லிட்டு
போனை வைத்துவிடுகிறாய்..

இன்னும் பெய்யும் மழை - 1 படிக்க

இன்னும் பெய்யும் மழை - 2 படிக்க