Monday, March 05, 2007

கவி 30:காதல் சாதி

காதலுக்குக் கண்ணில்லை
பஞ்சாயத்தில் முடிவானது..
அடப் பாவிகளா..
நீங்கள் எழுதியத் தீர்ப்பில்
தெரிகிறதே
உங்களுக்கு இதயமில்லை
என்று..
கண்ணைத் தொலைத்தாலும்
வாழலாம்..
இதயம் தொலைத்து....
ஊர் பஞ்சாயத்தின்
இறுதி ஊர்வலத்தில்
காதல் கல்லெறிப்பட்டது...

காதலை வெட்டிப் புதைப்பாங்களாம்..
மார்தட்டினார்கள்..
எங்கே வெட்டுங்கள் பார்ப்போம்..
வீசிய அரிவாள்களின் முனையில்
பூக்கள் பூத்த மாயமென்ன..
காதலை உரசியதில்
அரிவாள்களும்
அர்த்தம் பெற்றன...
அதைப் பிடித்தவர்களோ
அர்த்தம் இழந்தனர்...

காதல் செய்தால்
கொளுத்துவோம்
கொளுத்துங்கள்..
கொழுந்து விட்டு
எரியட்டும் காதல் சோதி...
திக்கெட்டும்
தெரியட்டும்
காதலின் சேதி...

கட்டி வச்சி அடிப்போம்..
காதலை காயப்படுத்தி
கலவரப் படுத்துவது
அவர்கள் நோக்கம்
காயம்பட்டால் என்ன
காதலுக்கு காதலே
அல்லவா மருந்து..
காதல் அங்கே
மறுபடி மறுபடி
சுரந்தது.....

ஆயுதங்கள் அனுதாபப்பட்ட
அளவிற்கு
ஆட்கள் அசையவில்லை..
கைகளாலே
காதலுக்கு
எழுப்பினார்கள்
கல்லறை..
காற்றில் உதிர்ந்தப்
பூக்கள் அதில் படர...
கல்லறைக்கு மேல் அமர்ந்து
காதல் சிரித்தது...

காதல் தொலைந்தது
சொல்லியப் படி
கூட்டம் கலைந்தது
ஊர் சுத்தமானதாய்
கொட்டடித்து
முழங்கியது...

உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்
சுத்தமாக்கிய
ஊர் வீதிகளிலே
கைகோர்த்தப் படி
உன் காதலும்
என் காதலும்
நடந்துப் போகிறது...

என்ன செய்ய
முடிகிறது
இவர்களால்...!