Thursday, May 17, 2007

கவி 32:ஒரு காதலும்.. இன்னுமொரு யுத்தமும்..

நீண்ட இரவுகள்
சட்டென விடியும்
ஒற்றை பொழுதினிலே..

ஆடைகளை மறந்து
முழுக்க முழுக்க
காதலை உடுத்திய
முந்தைய இரவு
கட்டில் முனையில்
காதலியின் கருவிழியோரம்
கண்ணீர் மொட்டுக்களாய்

காதலும் கண்ணீரும்
இயல்பான கூட்டணியோ..
கண்ணீர் பூக்கும் முன்
இதழ் முத்தம் கொண்டு
அதை மூடியதில்.
காதல் பூத்தது..

காதலின் வாசம்..
கட்டி இழுக்க..
இன்னொரு தேரோட்டம்
துவங்கியது..
கெஞ்சலும்..
கொஞ்சலும்..
ஆயுதமென
தாக்குதல் தொடர்ந்தது..

மன்மதப் போரின்
அரைப் புள்ளியில்
மயிலறகாய் வருடியபடி
காதலின் காயங்களுக்கு
மருந்திட்டுப் போனது
காதலியின் குழல்
கலைத்துப் போன
என் தேசத்துக்
குறும்பு காற்று..

காற்று நுழைந்த
ஜன்னல் வழியே
கண் சிமிட்டுகிறது..
காதலி கன்னம் போல்
சிவந்து நிற்கும் ரோசாப் பூ..


மறுபடியும் மறுபடியும்..
காதல் வானிலை
மழை பொழிய
எத்தனிக்க..
வெட்கத்தை
வாரியிறைத்து
விடைப் பெறுகிறாள் காதலி..

படுக்கையில்
களைத்திருக்கும்
காதலை உள்ளுக்குள்
ஓயவெடுக்கச் சொல்லிவிட்டு
கண்கள் கனவுலகம்
பயணம் போகினற
விநாடி பொழுதில்..
எங்கிருந்தோக் கேட்கிறது..

செல்லடிக்கிறாங்க...
செல்லடிக்கிறாங்க..

என் காதல்
ஓய்வெடுக்க மறுத்து
ஓடுகிறது..


கண் சிமிட்டிய
ரோசாப் பூ...

கிழிந்துக் கிடக்கும்
காதலியின் கன்னத்தில்
கசங்கிக் கிடக்கிறது..

காதலின் அலறல்..
அடுத்த குண்டுச் சத்தத்தில்
அமிழ்ந்துப் போகிறது..
யுத்தப் பூமியில்
முத்தச் சத்தங்களுக்கு
என்ன வேலை?

துப்பாக்கியின் கேள்விக்குப்
பதில் சொல்ல
காதல் அங்கு
உயிரோடில்லை...