Friday, November 21, 2008

ஒரு காதல் குறிப்பு












ஒரு சனிக்கிழமை மதியம் பொழுது போகாமல் இருந்த போது பழைய அலமாரி ஒண்ணு லேசாக தூசு தட்டு வா என்று சங்கேத மொழியில் தூது விட்டது... சரி நல்லா தின்னுட்டு சும்மாத் தானே இருக்கோம்ன்னு அலமாரியின் அலங்கார அழைப்புக்கு ரைட் கொடுத்து களத்தில் இறங்கினேன்...

1992....கவிதைப் போட்டி ஆறுதல் பரிசு..மாணவர் மன்றம்... ஆஹா அப்பவே நான் ஒரு கவிஞன்.. என் மனம் மேடை போட்டு மீண்டும் எனக்கு அந்த சான்றிதழை சகல மரியாதைகளோடும் கொடுத்து கவுரவித்தது... இதழோர புன்னகையோடு இன்னும் துழாவினேன்...

1993...இருக்கும் பள்ளி சுற்றுலாவில் எடுத்த புகைப்படம்.. வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல் அய்யனார் பக்கம் அட்டகாசமாய் போஸ் கொடுத்த படி... நான்...ம்ம்ம் அது பாலா.. அப்புறம் பத்ரி...செந்தில்...சுப்பு... சுப்பு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.. அவனுக்கு இரண்டு மாசம் முன்னாடி தான் ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்தது... ம்ம்ம் செந்தில் டாக்டராயிட்டான்... இன்னும் கல்யாணம் ஆகல்ல.,.. கடைசியாப் பாத்தப்போ அவன் தன்னுடைய நாலாவது காதல் கதையை ரொம்பவே சின்சியராச் சொன்னான்...மத்த மூணு கதையையும் இதே சின்சியாரிட்டி குறையாமல் தான் சொன்னான் என்பது வேறு விசயம்... ம்ம்ம் பாலா...பத்ரி... இரண்டு பேரையும் பாத்து பத்து வருசத்துக்கும் மேல ஆச்சு... அவங்க கிட்டயும் இந்த போட்டோவோட ஒரு காபி இருக்கும்.. எப்போவாது எடுத்துப் பாத்தா என்னை நினைச்சிப்பாங்க.. அப்படின்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்... அடுத்து என்ன சிக்குதுன்னு பாப்போம்...

1995... ஜெயந்தி தியேட்டர் டிக்கெட் ஒண்ணு.... அட தலைவர் படத்து டிக்கெட்.. பாட்சா... 13 ஜனவரி 1995.. மாலைக் காட்சி.. ஆட்டோக்காரன் ஸ்டில்ன்னு அப்போ எடுத்து பத்திரப்படுத்தி வச்ச டிக்கெட்.. வீட்டுல்ல சக்கரை வாங்க கொடுத்து அனுப்புன காசுல்ல... தியேட்டருக்குள் போய் போலீஸ் லத்திக்கு வளைந்து நெளிந்து வேர்த்து விறுவிறுத்து... விசிலடித்து கொண்டாட்டமாய் படம் பார்த்த ஞாபகம் மனத்திரையில் மீண்டும் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டது..

ம்ம்ம் வருசத்துக்கு ஒண்ணா சிக்குன ஞாபகங்களில் நனைந்தப் படி அலமாரியில் ஒளிந்திருந்த நினைவு புதையல்களை ரசித்தப்படி நேரம் போய்கொண்டிருந்தது....

2002... ஒரு ஐடி கார்ட்.. என் கையில் சிக்கியது... ம்ம்ம் ஆறு வருடத்துக்கு முந்தைய முகம்...என் முகம்...ம்ம் பரவாயில்ல.. ரொம்ப மாறல்ல... கொஞ்சம் அழகாயிட்டேனோ.... இருக்கலாம்... அந்த கார்ட் இருந்த டைரி.... பச்சை கலர் டைரி....அந்த வருடம் கம்பெனியில் வழங்கிய டைரி... ஐடி கார்டில் இருந்த அதே லோகோ கொஞ்சம் பெரிதாய் அந்த டைரியின் முகப்பில் இருந்தது...கம்பெனியில் இருந்து விலகி வரும் போது எப்படியோ அந்த ஐடி கார்ட்டை நான் எடுத்து வந்து விட்டது எனக்கு நினைவிருந்தது... அந்த கார்டை கேட்டு அப்போதெல்லாம் அந்த கம்பெனியில் இருந்து அடிக்கடி எனக்கு போன் வரும... அந்த ஆபிஸ் ரிசப்னிஷ்ட் தான் அடிக்கடி போன் பண்ணுவா... அவப் பேர் கூட.... ம்ம்ம் அது இப்போ ஞாபகத்தில் இல்ல.. வரும் போது கண்டிப்பா சொல்லுறேன்...

அந்த டைரியின் பக்கங்களின் படிந்திருந்த தூசியினை மெல்ல விரலால் களைந்தப் படி அதில் என்ன இருக்குன்னு படிக்க ஆரம்பிச்சேன்...

பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

இந்த வரிகளைப் படித்தவுடன் அவசரமாய் தம்மடிக்க வேண்டும் போல இருந்தது.. அவசரத்துக்கு அடிக்க துணிக்கு அடியில் சுருட்டி வைத்திருந்த கடைசி சிகரெட்டை எடுத்து கடைவாய் பல்லுக்குள் செருகினேன்.. பற்ற வைத்த சிகரெட் புகையை உள்ளுக்கு இழுத்து சுவாச பையை அழுக்குப் படுத்தி அப்புறமுமாய் வெளியே வீதியில் வீசி எறிந்தேன்..

சிகரெட்டின் நுனி நாக்கில் எஞ்சியிருந்த நெருப்பு என்னை வெறித்துப் பார்ப்பதாய் எனக்கு தோன்றியது...அந்த சிகரெட்டை அவசரமாய் வெளியில் தூக்கி எறிந்து விட்டு டைரி இருந்த பக்கம் திரும்பினேன்..கலைந்த தலை முடியை கோதிவிட்ட படி மோவாயைத் தடவினேன், முந்தா நாள் முளை விட்ட தாடியின் முட் குத்தல் உள்ளங்கையை அரித்தது... இன்னொரு தம் அடிக்க தேடினேன்....

2003... கம்பெனி ஆண்டு விழா புகைப்படம் என் கண்ணில் பட்டது...அந்த புகைப்படத்தில் அவளும் இருந்தாள்... கண்ணைக் கட்டிப் போடும் வண்ணத்தில் பச்சை சுடிதார்..ஒற்றை வகிடு எடுத்து முன் நெற்றியில் தவழ விட்ட கற்றை முடி... விடியோவாக இருந்திருந்தால்... ம்ம்ம் அந்த முடி அவள் நெற்றி என்னும் மேடையில் மானாட மயிலாட என ஆடி, பார்க்கும் அத்தனை மனங்களையும் ஆட்டியிருக்கும் என்பது மட்டும் கதையல்ல நிஜம்... சரி...இந்த டிவி சேனலில் வரும் கெக்கே பிக்கே தொகுப்பாளினிகளிடம் கஷ்ட்டப் படும் சிரிப்பு என்ற வஸ்து அவள் உதடுகளில் மட்டும் ஆனந்த தாண்டவமாடியது... அழகாய் பூத்து குலுங்கியது.... புகைப்படத்தின் மீது படிந்த தூசி கூட அவள் சிரிப்பு தொட தவிர்த்து தள்ளியே நின்றது.. அப்படி ஒரு அச்சச்சோ சோ சுவீட் புன்னகை....

அவளைப் பத்தி சொல்லியாச்சு.. நம்மைப் பத்தியும் சொல்லணும்ல்ல.. பெரிய அஜித்தோ விக்ரமோ..வாரணமாயிரம் சூர்யாவோ... மேடியோ எல்லாம் இல்லன்னாலும் சுமாரா ஒரு ரேஞ்சுக்கு இருப்பேன்... இந்த ஜிம் எல்லாம் போய் ஜம்ன்னு ஆகல்லன்னாலும் காலையிலே எந்தரிச்சு பீச்சோரமாய் ஓடி அப்புறம் வீட்டுக்குள்ளேயே தண்டால் ப்ஸ்கி எல்லாம் எடுத்து கொஞ்சம் மெயின்டேன் பண்ணுவோம்ல்ல டைப் ஆளுங்க நான்...

பள்ளியிலே பழகலாமான்னு பயந்து... காலேஜ்ல்ல பேசலாமான்னு யோசிச்சு...கோயிலுக்குப் போகும் போது சாமியை சைலண்ட் காரணமா வச்சு பொண்ணுங்களைப் நிமிந்து நிமிராமலும் பார்த்து... அப்படி பாக்குற வேளையிலே, நம்ம பாக்கறதை அக்கம் பக்கம் எவனும் பாத்துருவானோன்னு பயந்து பம்முனது தான் ஜாஸ்தி...

இப்படி காதல் எனக்கு அறிமுகமாகி காதலி யாருமே அறிமுகமாக மறுத்தக் காலக்கட்டத்தில் வேற வழி இல்லாமல்....

மொழி பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை.. காதலிச்சே தீருவது என்ற வெறியில் கல்லூரி காலத்தில் காஜோலைக் கண்டப்படி காதலித்தேன்.... மே தும் சே ப்யார் கர்தா ஹீன் சொல்ல பழகுவதற்குள் அஜய் தேவ்கன் காதல் கல்யாணம் என வேகமாய் போய்விட...
அடுத்து வந்த ஐஸ்வர்யாராயாவது எப்படியும் பேசி மடக்கிரலாம் என தொடை மடக்கி கை இடுக்கி கண் சுருக்கி கனவு கண்ட காலத்துக்கும் சல்மான் கான் கன் வைத்து கலங்க வைக்க...
எதோ அந்த நேரத்தில் அறிமுகமான சினேகாவை குமுதம் ஆவி அட்டைப் படம் நடுப்பக்கம் என பார்த்து பல்லிளித்து காதல கண்ணியம் காத்து வந்தேன்...

அப்படி ஒரு காதல் காலத்தில் கொஞ்சம் காஜோலின் குறுகுறுப்பு... ஐஸ்வர்யா ராயின் மினுமினுப்பு... சினேகாவின் குளிர் சிரிப்பு என என் வாழ்க்கையில் வந்து சேர்ந்தாள் ரஞ்சனி... என் ரஞ்சனி...

ஒரு வெள்ளைக்கார துரை ஆரம்பிச்ச கப்பல் கம்பெனியிலெ கம்ப்யூட்டர் தட்டுர வேலையிலே மாசம் ஒரளவு சம்பளத்துக்கு என்னையும் கூப்பிட்டாங்க... சும்மா ஏரியாவே அதிர டேய் நானும் ஆபிசராயிட்டேன் அப்படின்னு அலறலோட வேலைக்குப் போய் சேர்ந்த இடத்திலே தான் தற்காலிகமாக என் திரையுலக காதலிகள் எல்லாருக்கும் நான் துரோகியாக மாற வேண்டி போச்சு... எஸ் ஐ பெல் இன் லவ்.... லவ்..அப்படி ஒரு லவ்...

அழகானப் பொண்ணைப் பாத்தா ஒரு மயக்கம் வரும் ஒரு கிறக்கம் வரும்... வாலிப வயசுல்ல அதெல்லாம் சகஜம் தானே...எனக்கும் அது பல தடவை வந்து இருக்கு...போயிருக்கு... ரஞ்சனி விஷ்யமும் அப்படித் தானோன்னு கூட முதல்ல யோசிச்சேன்... இந்தப் பாத்த உடனே காதல் வரும்... அப்படிங்கற கருத்துக்கு பெருசா கொடி பிடிக்கிற ஆளு நான் கிடையாது...

ரஞ்சனியைப் பாக்குற வரைக்கும் காதல்ன்னா என்னவோன்னு நினைச்சிட்டு இருந்தேன்... அவளைப் பாத்தப் பிறகு காதல்ன்னா என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்...

தினமும் அவளை ஒரு முன்னூறு முறையாவது ஆபிஸ்ல்ல பாக்குறது உண்டு... போகும் போது வரும் போது... கேன்டீன்ல்ல...பைக் பார்க்ல்ல... மீட்டிங் ஹால்ல.... அவகிட்ட பேசக் கூட செஞ்சு இருக்கேன்...
வழியிலே நிக்கும் போது ஒரு முப்பத்து மூணு தடவை எக்ஸ்க்யூமீ... கேட்டு இருக்கேன்...அப்புறம் கேன்டீன் லைன்ல்ல நிக்கும் போது ப்ளீஸ் இதை பாஸ் பண்ணுறீங்களா.. இப்படி ஒரு இருபது தடவை... ஒரு இரண்டு தடவை குட் மார்னிங் கூட சொல்லியிருக்கேன்...

இப்படி எல்லாம் அவளை நான் சுத்தி இருந்தப்போ ஜில்ன்னு ஐஸ்கிரீம் தொண்டைக்குள்ளே வச்ச எபெக்ட் தான் வரும்.... அது ஒரு வித சுகம்.. அடுத்த தடவை ஐஸ் கிரீம் சாப்பிடும் போது காதலோடு சாப்பிட்டு பாருங்க.. உங்க காதல் உங்க தொண்டைக் குழியோரம் ஜில்லுன்னு வந்து போகும்...

முதல் முறையாக ரஞ்சனி மூணு நாள் ஆபிசுக்கு வரவில்லை....
முதல் நாள் யாரைக் கேட்பது என புரியவில்லை... இரண்டாவ்து யாரைக் கேட்டாலும் விவரம் தெரிஞ்சா பரவாயில்லை என்று ஆனது... மூன்றாவது நாள் சத்தியமாக பொறுக்க முடியவில்லை...

அது தான் காதல் என அந்த வினாடி எனக்குள் எதோ ஒன்று ஊர்ஜிதம் செய்தது... சொல்ல முடியாத வலி என்னைக் கொன்று விழுங்கத் துவங்கியது... அட போங்கடா அவ இல்லாம ஆபிஸ் என்னடா ஆபிஸ் இழுத்து பூட்டுங்கடா... அப்படின்னு மெயில் கூட டைப் அடித்து ட்ராப்ட்ல்ல வச்சுட்டு அவள் ஞாபகத்தில் அதை அனுப்ப மறந்து அப்போதைக்கு என் வேலையையும் காப்பாத்திக் கொண்டேன்,...

அமாவசைன்னு ஒண்ணு இல்லனா பவுணர்மிக்கு ஏதுங்க மரியாதை.... நாலாவது நாள் எங்க ஆபிஸ்க்கு பவுணர்மி வந்துச்சு... அவ கை நிறைய திருச்சூர் நேந்தரங்கா சிப்ஸ்...சீடை.. முறுக்குன்னு எல்லாருக்கும் கொண்டு வந்தா...பொதுவுல்ல இருந்ததை எதோ ஒண்ணு தடுக்க நான் எடுக்காமல் விட்டது எவ்வளவு அபத்தமானது... அடுத்த சில நிமிடங்களில் காலியான வெறும் பாக்கெட்கள் மட்டுமே மிஞ்சின...அதை நான் சேகரித்து எடுத்து சிலாகித்து வைத்தது தனிக்கதை...மூன்று நாட்களாக ரஞ்சனியின் கூந்தல் உதிர்க்கும் மல்லிகை பூக்களுக்கு ஏங்கிய அவள் இருக்கை அன்று அதன் ஏக்கம் தீர்ந்து மல்லிகை வாசனையில் குளித்தது.. தனியாக என்னைப் பார்த்து சிரித்தது...

இப்படியே ஒரு ஏழு எட்டு மாசம் ஓடிப் போச்சு.. டிசம்பர் 31... வேலையை முடிச்சிட்டு நாங்க கிளம்புற நேரம்... எல்லாரும் எல்லாருக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லிகிட்டு இருந்தோம்... ரஞ்சனியை என கண்கள் எல்லாப் பக்கமும் தேடிகிட்டு இருந்தன... ஆனா அவளை கண்டு பிடிச்சது என்னவோ என் காதுகள் தான்..

எனக்குப் பின்னால் அவள் குரல் கேட்கவே கொஞ்சம் நிதானித்து எனக்குள் ஒத்திகை எல்லாம் பார்த்து திரும்பினேன்... சேம் டூ யூ...,சேம் டூ யூ... வெரு ஹேப்பி நியூ இயர்.. சேம் டூ யூ... இப்படி சொல்லி சொல்லி பார்த்துகிட்டு இருந்த என் தோளை யாரோ தட்ட ....அப்படியே டக்குன்னு திரும்பி.... "சேம் டூ யூ....." சொன்னால் அங்கு நின்றது என் நண்பன் அருண்...

"டேய் வாங்குன கடனை திருப்பித் தாடான்னு தோளை தட்டி கூப்பிட்டுக் கேட்டா... சேம் டூ யூவா.... -ஷேம் டு யூடா....." கடுகடுன்னு பையன் கடித்து வைக்க...,நான் அப்படியே கண்ணைப் பொத்த அதே வினாடியில் அருணின் கை குலுக்கி "ஹேப்பி நியூ இயர் அருண்...." சொல்லிட்டு ரஞ்சனி அங்கிருந்து நகர்ந்துப் போனாள்....வினாடிக்கும் குறைவான அந்த கணப்பொழுதில் தீ போல் என்னை கொளுத்தி விட்டு போகும் பார்வை ஒன்றை அவள் என் மீது பாய்ச்சியதாய் எனக்குள் ஒரு உணர்வு...சின்னதாய் ஒரு நிலநடுக்கம் எனக்குள் வந்து போனது..ரிக்டர் ஸ்கேல் ஞானம் இல்லாத காரணத்தால் என்னால் அளவைக் குறிக்க முடியவில்லை

"படுபாவி... ஒரு நூறு ரூபா...அதுக்காக இப்படி மானத்தை வாங்கிட்டானே... அவளுக்கு கேட்டிருக்குமோ... இருக்காது... இருக்குமோ..." இப்படியே யோசிச்சதுல்ல நேரமும் நகர்ந்து போனது... ரஞ்சனியும் கிளம்பி விட்டாள்...

"டேய் கிளம்பலாம் வா... நூறு ரூபா பெட்ரோலுக்கு இல்ல அதான் கேட்டேன் கோச்சுக்காதே மச்சி.. வண்டிக்கும் எனக்கும் சேர்த்து போடணும்ல்ல... நியு இயர் ஆச்சே.." அருண் கூப்பிட்டான்... அவனோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து போதையில் கரையேரிய போது மறு நாள் சூரியன் நடு வானில் நின்று நான் பல் விளக்காமல் காபி குடிப்பதைக் கேலியாய் பார்த்துக் கொண்டிருந்தான்...

"ம்ம்ம் அருண் இது என்னடா.. டேபிள்ல்ல.... ?" புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரம் என்னைக் காய்ச்சலில் கொண்டு விட்டதில் அலுவலகம் செல்லாத நான் என் மேஜை மீது இருந்த பத்திரிக்கை பார்த்து கேட்டேன்...

"கல்யாணப் பத்திரிக்கை... நம்ம ரஞ்சனிக்கு.டா... உனக்கு எங்கே தெரியும்.. நீ தான் அவக் கூட சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டியே.... எப்போ அவளை பாத்தாலும் தலையை குனிஞ்சுட்டு அப்படி போய் நின்னுக்குவீயே... இருந்தாலும் நல்ல பொண்ணுடா.. உங்க பிரெண்ட் அந்த சைலண்ட் பார்ட்டிக்கும் கார்ட் கொடுத்துடுங்கன்னு சொல்லி உன் பேர் எழுதி கார்ட் வச்சிருக்கா... கல்யாணம் கேரளாவில்ல... அவ நேத்தோட ஆபிஸ்ல்ல லாஸ்ட் டே.... வி வில் மிஸ் ஹெர் டா...அப்புறம் நியூ இயர்க்கு ஆபிஸ்ல்ல டைரி கொடுத்துருக்காங்க... ரிசப்ஷ்னிஸ்ட் தன்யா கிட்ட இருக்கு உன் டைரி போய் வாங்கிக்க...." இந்தத் தகவலைச் சொல்லிட்டு அருண் அடுத்த வேலைப் பாக்க போயிட்டான்...

ம்ம்ம் அந்த ரிசப்னிஷ்ட் பேரை சொல்லுறேன்னு சொன்னேனெ இப்போ சொல்லிட்டேன்.. தன்யா கிட்ட டைரி வாங்கிட்டு நேரா பைக் பார்க் போய் உக்காந்தேன்...

டைரியைத் திறந்து.... என்னத் தோணுச்சோ அதை அப்படியே எழுதுனேன்.... அது...

பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

Saturday, March 29, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 8

முந்தைய பகுதி

"நீ அவச் சொன்னதுக்கு என்னப் பதில் சொன்ன?"

சரவணன் அந்தக் கேள்வியை என்கிட்டக் கேட்டப்போ அதுல்ல கோவம் இருந்துச்சா இல்லையான்னு கூட என்னால அனுமானிக்க முடியல்ல. எல்லா விசயங்களையும் அவன் கிட்டச் சொல்லிட்டேங்கற ஒரு திருப்தி இருந்துச்சு. அடுத்து அவன் என்ன செய்வான்னு என்னால கொஞ்சம் கூட ஊகிக்க முடியாத அளவுக்கு இறுக்கமா உக்காந்து இருந்தான் சரவணன்.

அப்படி ஒரு நிலைமையிலே அவன் கேட்டக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுறதுன்னும் எனக்குப் புரியல்ல..

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல்லயே..." சரவணன் என்னைப் பாக்காமலேக் கேட்டான்.

"தெரியல்ல சரவணா" நான் சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே அவன் எழுந்து போயிட்டான். வேகமாப் போயிட்டான். நான் அவன் போனத் திசையைப் பாத்துகிட்டு உக்காந்து இருந்தேன. அதுக்கு அப்புறம் அன்னிக்கு நடந்த காலேஜ் கலாட்டாக்கள் எதுல்லயும் நான் கலந்துக்காம ஒதுங்கியே நின்னேன்.. ரஞ்சனியும் ஒரு ஓரமா ஒதுங்கி நின்னுட்டா.. அடிக்கடி என்னைப் பாத்துகிட்டே இருந்தா.. நான் வேணும்னே அவப் பார்வையைத் தவிர்த்தேன்...

காலேஜ் பேசன் ஷோவுல்ல நம்ம பசங்க தான் பட்டயக் கிளப்புனாங்க...வழக்கம் போல மேடைக்கு கீழே இருந்து தான்... டெல்லியில்ல இருந்து ஒரு குரூப் வந்துருந்துச்சு... ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகு... அப்போதையப் பிரச்சனையை அப்படியே ஓரம் கட்டிட்டு அந்த அழகு வெள்ளத்திலே மனசை அடிச்சுட்டு போக விட்டுட்டு கொஞ்ச நேரம் நின்னேன்..

"சிவா.. நான் வீட்டுக்குப் போகணும்... என்னக் கூட்டிட்டு போ..."

கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கிட்டு என் முன்னால் வந்து நின்னா ரஞ்சனி..

"பஸ் வரும் அதுல்ல போலாமே."

"பஸ் எடுக்க இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.. எனக்கு அவசரமாப் போகணும்.. பசங்க கிட்ட வண்டி வாங்கிட்டு கொண்டு போய் விடு..." கிட்டத்தட்ட ஒரு கட்டளை மாதிரியே போட்டா..

ரஞ்சனியை அவென்யு வாசலில் போய் இறக்கிவிட்டேன்...

"சிவா...நீ எனக்கு இன்னும் பதில் சொல்லல்ல...பிடிக்கும் பிடிக்கல்ல எதுவுமே ஓ.கே தான்.. ஆனா அந்த பதில் உன் மனசுல்ல இருந்து வரணும் சிவா... புத்தியக் கேட்டு வரக்கூடாது..."

சொல்லிட்டு அவப் பாட்டுக்குப் போயிட்டா. அந்த நேரம் பாத்து சரவணனும் அங்கே வந்தான். எங்களை அவன் பார்த்த பார்வையிலே ஒரு நூறு இருநூறு கோழியை உரிச்சுப் போட்டிருந்தா அருமையான தந்தூரி கிடைச்சிருக்கும்.. அப்படி ஒரு நெருப்பு பார்வை அது..

அவன் கையிலே இருந்த டிராவல் பேக் அவன் அவசரமா ஊருக்குக் கிளம்புரான்னு சொல்லிச்சு... அவன் எதுவும் பேசிக்காம ரோட்டைப் பாத்து நடந்துப் போயிக்கிட்டு இருந்தான், நானும் அவனை அந்த நிமிசம் எதுவும் கேக்க வேணாம்ன்னு விட்டுட்டேன்...பைக்கைத் திருப்பிக் கொடுக்க காலேஜ்க்குப் போயிட்டேன்...

இது நடந்து ஆறு மாசம் ஆயிருச்சு.. அது வரைக்கும் சரவணன் வீட்டுக்கே வர்றல்ல.. ஆபிஸ்ல்ல வேலை அதிகம்ன்னு காரணம் சொன்னதா வீட்டுல்ல பேசிகிட்டாங்க. அவனுக்குப் பொண்ணு பாக்கப் பேச்சு எடுத்தப்போவும் அவன் எதுவும் பிடி கொடுக்கல்லன்னு சொல்லிகிட்டாங்க....

என் அண்ணன் சரவணும் நானும் ஆரம்பகாலத்துல்ல எப்படி இருந்தோமோ அந்த நிலைமைக்கே மறுபடியும் போயிட்டோம்.... முன்னாடி மாதிரி இல்லாம இப்போ என் மனசை எதோ ஒரு பாரம் அழுத்துச்சு...சரவணன் கூடப் பேசணும்..கலகலப்பா இருக்கணும்ன்னு எதோ ஒண்ணு எனக்குள்ளே ஏங்குற மாதிரி இருந்துச்சு...

ரஞ்சனியை விட்டு எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகி வந்தேன்...

நான் அவனுக்கு துரோகம் பண்ணல்லன்னு சரவணன் புரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன்... ஆனா அதை எப்படி அவனுக்கு சொல்லுறதுன்னு புரியல்ல...

எப்படியோ ஒரு விடுமுறைக்கு அம்மாவுக்கு உடம்பு முடியல்லன்னு சொல்லி அவனை வர வச்சாங்க... வந்தவனுக்கு ராஜ உபச்சாரம்... வகை வகையா விருந்து வச்சு அவனை திணறடிச்சாங்க... இரண்டு பேரும் ஒண்ணா உக்காந்து தான் சாப்பிட்டோம்.. அவனுக்கு இரண்டு நாட்டு கோழி முட்டை எனக்கு பாதி முட்டை.. இன்னொரு பாதி எங்கப்பாவுக்கு அதையும் அவர் அவனுக்கே வச்சது பெரியக் கொடுமை... முட்டைக் கொடுமையே போதும் மத்த மெனு வெல்லாம லிஸ்ட் போட்டா பதிவு தாங்காது அதுன்னால்ல விடுறேன்..

அவனாப் பேசுவான்னு நான் காத்திருந்து கடுப்பானது தான் மிச்சம்... பொறுத்துப் பாத்துட்டு நானே அவன் முன்னாடி போய் நின்னேன்...

"சரவணா..."

"ம்ம்ம்" அவன் தலையைக் கூடத் தூக்காம முனகுனான்...

"நான் என்னத் தப்பு பண்ணேன்... ஏன் என்னை விரோதி மாதிரி நடத்துற?"

"ம்ம்ம்ம்ம்" தலையை நிமித்துனவன் முகத்தில் அப்படி ஒரு மூர்க்கம். நான் ஒரு நிமிசம் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அடுத்த நிமிசமே மறுபடியும் முகத்தை தரையிலேத் தொங்கப் போட்டுகிட்டான்..

குனிஞ்சத் தலை நிமிரமாலே கேட்டான்....

"ரஞ்சனியை நீ காதலிக்கிறியான்னு அன்னிக்கு நான் உன்னை கேட்டதுக்கு என்னப் பதில் சொன்ன சிவா?"

"தெரியல்லன்னு சொன்னேன் சரவணா"

"உன் கேள்விக்கும் என் பதில் அது தான்..." அப்படின்னு சொல்லிட்டு எந்தரிச்சுப் போயிட்டான்.

கடைசிக் கட்டப் பேச்சு வார்த்தையும் முறிந்த நிலையில் நான் மனத்தை ஆற்ற ஒரு தம் பற்ற வைத்து மாடியில் போய் நின்றேன்.

என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் எங்க அவென்யு தண்ணித் தொட்டி தெரியும்.. அந்தத் தண்ணித் தொட்டிப் படிகளில் உச்சியில் சரவணன் நின்று தம்மடித்து கொண்டிருந்தான்.. இரண்டு பேர் விட்ட புகைக் கூட நேர் எதிர் திசைகளில் பயணித்தன.. அதை யோசிக்கும் போது எனக்கு லேசானச் சிரிப்பு வந்துச்சு...

"என்னடா இது... நான் பாட்டுக்குப் போயிட்டு இருந்தேன்... நூல் இல்லாத பட்டம் மாதிரி... அண்ணனும் இல்ல ஆட்டுக்குட்டியும் இல்லன்னு... தொட்டாலே தகாதுன்னு தள்ளித் தானே நின்னோம்... நீ திருட்டுப் பய மாதிரி அன்னிக்கு ஓடி வர.. எனக்கும் உனக்கும் இனிஷியல் கொடுத்த ஒரு அப்பாவுக்காக உன்னை நான் ஊர் மாத்துல்ல இருந்து காப்பாத்துனேன்... கொஞ்சூண்டு சகோதரப் பாசமும் தான்....பயபுள்ள நீ தானேடா உன் காதலைச் சொல்லி கரையேத்துன்னு என் கிட்டச் சரக்கெல்லாம் வாங்கிக் கொடுத்து ரெக்கமெண்டு கேட்டு நின்ன.... உன் கெட்ட நேரம்.... உன்ன அவளுக்குப் பிடிக்கல்ல... என் கெட்ட நேரம் என்ன அவளுக்குப் பிடிச்சுப் போச்சு... எனக்கும் லேசா அவளைப் பிடிச்சுத் தொலைச்சுருச்சு... ஆனாலும் தம்பி நான் ஜெண்டில் மேன்டா...அண்ணன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு என் லவ்வை டெவலப்பிங் ஸ்டேஜ்ல்ல டிலிட் பண்ணத் தான்டா ட்ரைப் பண்ணேன்... நீ தான் தம்பியைத் தப்பா.......

நடந்த விசயத்தை எல்லாம் கோர்வையா மனசுல்ல அப்படியே ரீல் ஓட்டிகிட்டு வரும் போது இந்த இடத்துல்ல வந்து தட்டிச்சு

"தம்பியா... ஆகா... நீ என்னைத் தம்பியாவே நினைக்கல்லயேடா.. உன் லவ்வைச் சொல்ல ஒரு போஸ்ட்மேனாத் தானே வச்சுருந்து இருக்க... இத்தன வருசம் இல்லாத பாசம் புதுசாப் பொங்குன உடனே நானும் அண்ணன் அண்ணன் காதல்ன்னு மறுகிட்டேன்.... நீ என்னைக் கேவலம் சரக்குக்கு விலைப் போற சல்லி பயலா இல்லப் பாத்து இருக்க...சரவணா... உனக்கு எப்பவும் எதுல்லயும் ஜெயிக்கணும்... அதுக்கு எதையும் யாரையும் வளைக்கலாம் நெளிக்கலாம்..தம்பி கூட உனக்கு வெறும் ..I HAVE BEEN USED BY YOU TO WIN OVER A GIRL " நினைக்க நினைக்க எனக்கே என் மீது அருவெருப்பாய் வந்தது

"ஆனாலும் உன்னாலே ஜெயிக்க முடியல்லயே சரவணா" இந்த எண்ணம் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

அடுத்த நாள் மதியம் மேட்னி ஷோ படம் முடித்து சுற்றி விட்டு அவென்யு வந்து சேரும் போது எங்க வீடு பூட்டியிருந்துச்சு...

"சிவா.. உங்க அண்ணன் சரவணன்.. தண்ணி தொட்டியில்ல இருந்து கால் தவறி கீழே விழுந்துட்டான்.. நிறைய ரத்தம் போயிருச்சு..ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க..." பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க...

அந்த வினாடியில் எனக்குள்ளே ஏற்பட்ட அதிர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.... படம் முடிஞ்சு வந்த மொத்த டீமும் அப்படியே ராயப்பேட்டை நோக்கி கிளம்புனோம்... யார் வண்டியிலே நான் உக்காந்துப் போனேன்ங்கற விசயம் இப்போ வரைக்கும் என் நினைவுக்கு வரவே இல்ல.. அதை யோசிச்சு நினைவுக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் நான் விட்டு ரொம்பக் காலம் ஆச்சு.

அப்பாவோட ரகசிய அழுகை... அம்மாவின் கதறல்.... சரவணன் ஒரு மரக்கட்டை போல் படுத்திருந்த அந்த ஆஸ்பத்திரி அறை... ஒரு பத்து நாட்கள் இப்படியே ஓடிப் போச்சு....

யார் யாரோ வந்து பாத்துட்டுப் போனாங்க... அப்பா கையைப் பிடிச்சு ஆறுதல் சொன்னாங்க.. அம்மா மட்டும் அழுதுகிட்டே இருந்தாங்க... முதல் முறையா அப்பா என் தோளைப் பிடிச்சுகிட்டு ஒரு பத்து நிமிசம் நின்னார்... அவரோட கை ரெண்ட்டும் என் தோளை அழுத்துன விதத்துல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்... MY LIFE WAS NEVER GOING TO BE THE SAME..

அப்பாவோட பேங்க் பேலன்ஸ் கணிசமாக் குறைஞ்சது...ஆனாலும் சரவணன் அசையவும் இல்ல.. பேசவும் இல்ல....

ஒரு பத்து நாளுக்கு அப்புறம் அவென்யுக்குப் போனேன்... ஆள் அரவமில்லாத மதிய நேரம்...மதிய தூக்கம் பழக்கமில்லாதக் காரணத்தாலே.. அப்படியே எழுந்து நடந்தேன்... எதேச்சையாத் தண்ணீர் தொட்டி பக்கம் போனேன்.. சரவணனை நான் கடைசியாப் பாத்த இடம்... சரவணன் கால் தடுக்கி விழுந்த இடம்... மெதுவா படிகள் ஏறி மேலப் போனேன்...

இங்கேத் தான்... இங்கே இருந்து தான் சரவணன் கால் தடுக்கி....அந்த சுவத்தையும் அதனை ஓட்டி இருந்த உச்சிப் படிக்கட்டின் கீழ் ஓரத்தில் மறைவாய் சிக்கியிருந்த அந்தப் பொருளையும் கவனித்த என்னால் அவன் கால் தடுக்கி தான் விழுந்திருப்பான் என சத்யமா நம்ப முடியாமல் போனது...

________________________________________________________________________

நாட்கள் நீண்டு.. வாரங்கள் விரைந்தன... மாதங்கள் கரைந்தன... சரவணன் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை...
"NOW HE IS IN DEEP COMA BUT THERE IS A CHANCE OF HIM SURVIVING IF YOU BELIEVE IN MEDICAL MIRACLES"

எங்க தூரத்து உறவுக்கார டாக்டர் ஒருத்தர் பாக்க நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இருப்பார்... எங்க கிட்டச் சொன்னார்...சரவணனைத் தன்னோட மருத்துவமனையிலே வச்சு கவனிக்கறதுமாச் சொன்னார்.. எதோ ரிசர்ச் ரிசன் அப்படின்னு அவருக்கு அதுல்ல ஒரு லாபம்... அப்பா அம்மா இரண்டு பேரும் மெடிக்கல் மிராக்களோ.. என்னவோ பெத்தப் புள்ள கண்ணைத் தொறப்பான்ன்னு நம்புறாங்க..வருசங்கள் ஓடிப் போயிட்டே இருக்கு....

"ஆகா ரொம்ப் நேரம் படியிலே உக்காந்துட்டேன் போலிருக்கே.... அதே இடம்... இப்பவும் அந்த சுவத்தைத் தான் பாத்துகிட்டு இருக்கேன்.... அதுல்ல சரவணன் கையெழுத்துல்ல
சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்....." அப்படிங்கற கவிதை...
கவிதையைப் படிச்சுட்டு என் பாக்கெட்டுக்குள்ள கைவிட்டு நான் அன்னிக்கு இதே இடத்துல்லப் பாத்த... அந்தப் பொருளை... அந்த உடைந்த வெள்ளிக் கொலுசு மணியை எடுத்து நிலா வெளிச்சதுல்ல பாக்குறேன்... ஒரு பொழுதினில் ரஞ்சனியின் கால்களை அலங்கரித்து என் சித்தம் கொள்ளைக் கொண்ட கொலுசு மணி ஆச்சே அது..."

பிகு: சரவணன் ஆஸ்பத்திரியிலேச் சேந்த அடுத்த நாள் ரஞ்சனி அவென்யு விட்டுப் போயிட்டா. காலேஜ் பைனல் செம் பரீட்சைக்கும் வர்றல்ல. செப்டம்பர்ல்ல எழுதுனதாப் பின்னாடி கேள்விபட்டேன். பின்னாடி அவக் குடும்பமும் மெதுவாக கேரளாவுக்கு இடம்பெயர்ந்துட்டாங்க.. அவென்யு தோழிகள் ஒண்ணு ரெண்டு பேர் கிட்ட எப்போவாது தொடர்பு கொள்ளுரான்னு கேள்வி படுறது உண்டு...அவக் கல்யாணம்... குழந்தை எல்லாம் இப்படி காத்து வாக்குல்ல வந்த செய்திகள் தான்...

நான் , ரஞ்சனி, சரவணன் மூணு பேர் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வுகள்ல்ல எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் உங்க கிட்டச் சொல்லிட்டேன்... எனக்குத் தெரியாத விசயம் ஒண்ணு தான்.. அதைச் சொல்லுற நிலைமையிலே சரவணன் இல்ல... ரஞ்சனி சொல்லுவாளா தெரியல்ல.... ஆனா எனக்குத் தெரிஞ்சிக்கணும் என்னப் பண்ணலாம் சொல்லுங்க...?

Thats all for now folks...

Wednesday, March 19, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 7

முந்தைய பகுதி படிக்க

ரஞ்சனியோட நான் ஓட்டலுக்குப் போன விஷயம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் மூலமா அப்பாவுக்கு போய் அது வீட்டு நடுக்கூடத்துல்ல பெரிய பூகம்பமா வெடிச்சு நம்ம பேர் இன்னும் கொஞ்சம் ஆழமா அகலமா ரிப்பேர் ஆச்சு... சரவணன் காதுக்கும் இந்த விவரமெல்லாம் போச்சு.. ஆனா அவன் பெருசா அலட்டிக்கல்ல.. என் கிட்ட எதுவும் கேக்கல்ல...

அதுக்குப் பிறகு நான் ரஞ்சனியோடப் பேசறதைக் குறைச்சுக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா அதை அவப் புரிஞ்சிக்கவே இல்ல...காலேஜ் கல்சுரல்ஸ் வந்துச்சு.. மெக்கிடோஸ் 2000... அதுக்கு எல்லாரும் தயாராகிட்டிருந்தாங்க...

காலேஜ் ஹாஸ்ட்டல் மொட்டை மாடியிலே முழுசா நாலு சிகரெட்டை நடந்துகிட்டே ஊதி தள்ளூனேன்...பிரச்சனையின் பாரம் உச்சந்தலையை அழுத்துனதுல்ல கத்தையா முடி கொட்டுச்சு...நடந்த நடையிலே செருப்பும் மொட்டை மாடி தரையும் தேஞ்சுப் போச்சு.. ரொம்பவே யோசிச்சதுல்ல மூளையிலே மிச்சம் மீதி எல்லாம் தீஞ்சுப் போயிருமோன்னு பயம் வந்துருச்சு... வர்றது வரட்டும்டா... இனி சரவணன் கிட்டப் போய் இத்தனை நாளும் நான் உன் காதலை ரஞ்சனிகிட்ட சொல்லல்ல... சொன்னதா உங்க கிட்ட ரீல் தான் விட்டேன்னு சொன்னா விளைவு விபரீதமாப் போவுலாம்... இல்ல விவகாரமாவும் போவலாம்... அதுக்குப் பேசாம துணிஞ்சுப் போய் ரஞ்சனி கிட்ட சொல்லிருவோம்...எங்க அண்ணன் உன்னைக் காதலிக்கிறான்... உன்னை அண்ணியாத் தான் நான் பாக்குறேன்னு ( மனசைக் கல்லாக்கி...சரி வர்றல்லன்னா புல்லாக்க்கியாவது) சொல்லிரணும்டா

நாம் எல்லாம் யார்... வந்த வழி என்ன? மன்னன் பூங்குளத்தில் ஒண்ணா ரெண்டா வண்ண மீன்கள்...அட பாவி பைய சரவணன் சென்டிமெண்ட் டைப்... காதல் கருவாடு... சாதல் சடுகுடுன்னு ரைமிங்கா கவிதை எல்லாம் எழுதுறான்... நமக்கு இதயம் பெருசு... இன்னும் எத்தனைப் பேருக்கு அதை ரென்டுக்கு விட வேண்டியிருக்கு...

"டேய் சிவா.. உனக்குப் பாக்குற எல்லாப் பொண்ணுமே பியூட்டிபுல்டா.. கல்லிலும் கலைவண்ணம் காணும் சிற்பி மாதிரிடா நீ.. ஆனா சரவணன்... காதலிச்சு கவுந்துப் போன கப்பிடா... அதுன்னால்ல.... ரூட்டை மாத்து... பாட்டை மாத்து... போயிட்டே இருடா...." உள் மனசு உக்கார வச்சு அம்புட்டு நேர்த்தியாப் புத்தி சொன்னப் பிற்கும் கேக்கல்லன்னா எப்படி... ஒரளவு தெளிவாயிட்டேன்... ரஞ்சனியைப் பாக்கப் கிளம்புனேன்......

பஸ் ஸ்டாப்க்கு எதிரில் வி.ஐ.பி பட போஸ்டர் ஓட்டி இருந்தாங்க...அங்கிட்டும் இங்கிட்டும் மேஞ்சிகிட்டு இருந்த நம்ம கண்ணு போஸ்டர்ல்ல இருந்த பொண்ணு மேல போய் கன்னு மாதிரி குறி வச்சு நின்னுருச்சு.. கையிலே நாயர் கடை டீ சட்டுன்னு ஓவர் சூடு ஆன மாதிரி ஒரு பிலீங்... யம்மாடி ஜீன் ஸ் டைட் பனியன்ன்னு புதுசா ஒரு குட்டி கோலிவுட்டுக்கு அறிமுகம் போலன்னு நெனச்சுகிட்டு டீயை உதட்டுக்கு ஒரு இன்ச் கீழே இறக்கி கொட்டவும்... அந்த நினைப்பு கூட இல்லாம நின்ன என்னை தோள்ல்ல தட்டி ஒரு கை உலுக்கிச்சு....

வூ இஸ் த டிஸ்டர்பன் ஸ் அப்படின்னு ஒரு மாதிரி கோவ எபெக்ட் காட்டி திரும்பிய நான் அப்படியே டீயை மொத்தமா கவுத்துட்டு திறந்த வாய் மூடாமல் நின்னேன்... பின்னே போஸ்ட்டர்ல்ல பார்த்த அதே பொண்ணு என் பக்கத்துல்ல அதே ட்ரெஸ்ல்ல வந்து நின்னா நான் என்ன ஆகியிருப்பேன்ன்னு யோசிச்சுப் பாருங்க....

ஏய்...என்ன.... டீயை எல்லாம் கொட்டிட்டு நிக்குறே..அப்படி என்ன யோசனை?

"இல்ல தீடிரென்னு டீ ஒவராக் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு அதான்.... " என்று கண்ணை இமைக்க மறந்து அவளையே பார்த்தேன்...

அன்னிக்கு சேலையிலே வந்து மனசை கேக்காமலே வாங்கிப் போனா,, அதைத் திருப்பி வாங்கவே நடையா நடந்து செருப்பையும் மொட்டை மாடியையும் தேய்ச்சு இப்பத் தான் கேக்கலாம்ன்னு வந்து நிக்குறேன்.. அதுக்குள்ள ஜீன் ஸ் ஷர்ட்ன்னு மாடர்ன்னா வந்து மனசை இரக்கமில்லாம மர்டர் பண்ணிருவாப் போலிருக்கே.... வி.ஐ.பியில்ல அறிமுகமான அந்தப் புது பொண்ணு யார்ன்னு கண்டுபிடிச்சிங்கன்னு வைங்க.. ரஞ்சனி எப்படி இருப்பான்னு உங்களுக்கும் தெரிஞ்சுப் போகும்...

"என்ன ஆனாலும் சிவா... ரிவர்ஸ் கியர் மட்டும் போடாதே... உனக்குன்னு ஒரு ரூட் இருக்கு.. இந்த கவிதை கதறல் எல்லாம் உனக்கு ஒத்து வராது... அதுன்னால்ல.."

உள்ளே இருந்த மனச்சாட்சி கிட்டத்தட்ட நெஞ்சாங் கூட்டை கிழிச்சிட்டு வெளியே வந்து என் செவட்டுல்ல நாலு அறை விட்டு, சொன்னதை எல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்த முடிவு பண்ணிகிட்டு இருக்கறது எனக்கும் விளங்கிருச்சு...மனச்சாட்சியை உள்ளேயே இருக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுகிட்டு எடுத்த முடிவுல்ல உறுதியா இருக்கறதா இன்னொரு எக்ஸ்ட்ரா முடிவும் பண்ணிகிட்டேன்...

"ரஞ்சனி நான் உன் கிட்டத் தனியாப் பேசணும்....."

"கல்சுரல் முடியட்டுமே..."

"இல்ல அவசரம்..." நான் கொஞ்சம் பிடிவாதமாவே சொன்னேன்...

அதே ஹோட்டலுக்குப் போனோம்... காபியும் அவளுக்குப் பிடித்த வெங்காயத் தோசையும் சொன்னோம்... இரண்டு கைகளால் காபி கோப்பையைப் பிடித்தப் படி பாதி முகம் மறைத்து அந்த பெரிய விழிகளை விரித்து புருவம் உயர்த்தி என்ன என்பது போல் என்னை ரஞ்சனி கேட்ட அழகு இருக்கே.... ஆத்தாடி அதுக்காகவே அவளோட இன்னும் ஆயிரம் காபி குடிக்கலாம் போலிருக்கே...

அவளூடைய அந்த அலட்சியமான பாவனைகள் ஒவ்வொன்றும் என்னையுமறியாமல் என்னை வசப்படுத்திக் கொண்டு இருந்தன...

"என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன.. ஒண்ணும் பேசமா உக்காந்து இருக்க...." ஒரு வித கேலியும் கிண்டலும் கலந்துக் கேட்டாள்..

"அது வந்து.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல்ல" நான் ஒரு ராகமாய் இழுத்தேன்...

"உங்க அண்ணன்ன்னு ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கானே சரவணனா அவன் பேரு... அவன் சொன்னா மாதிரி... நீயும் சொல்லப் போறீயா...?"

எனக்குள் எங்கோ சுருக்கென்று அவள் கேள்வியில்ல ஒளிஞ்சிருந்த ஏளனம் குத்தியிருச்சு...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குள்ளே இருந்த மயக்கம் கிறக்கம் எல்லாம் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிகிட்டு இருந்தன...ஒரு மாதிரியான இறுக்கம் என்னை அப்படியே வந்து பிடிச்சு அழுத்திச்சு...

"என்னை லவ் பண்ணுறானாம்... என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்... என் கூட ரெண்டு குழந்தைப் பெத்துக்கப் போறானாம்... பேர் எல்லாம் கூடச் சொன்னான்... இதை எல்லாம் சொல்லுறதுக்கு அவனுக்கு எப்படி.....இந்த இடத்தில் ஒரு அலட்சிய புன்னகை சிந்தியவள் மேலயும் பேசுனா... உங்க அண்ணன் மாதிரி போன ஒரு வருசத்துல்ல என் கிட்ட ஆறு பேர் வந்து சொல்லிட்டானுங்க...எல்லாவன் மூக்கையும் உடைச்சு அனுப்பிட்டேன்... இப்போ நீயும் எதோ சொல்லணும்ன்னு ஆரம்பிக்குறே... என்னச் சொல்லப் போற.. ஐ லவ் யூ வா....?"

அது என்ன எவனுக்கும் அடங்காதப் பேச்சு..அதுவும் என் அண்ணனையே அவமானப்படுத்துற பேச்சு.. அதுவும் என் கிட்டேயே....எனக்குள்ள.. எங்கேயோ ஓரமா படுத்து கால் நீட்டி படுத்துகிட்டு இருந்த சனியன் சட்டுன்னு என் நாக்குல்ல ஏறி நடுமத்தியிலே கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டான்... அந்த விவரம் தெரியாத நான் படு பந்தாவா மவுத்தை நல்லா ஓப்பன் பண்ணி சவுண்டா ( சினிமான்னா இந்த சீனுக்கு எக்கோ எபெக்ட் எல்லாம் டி.டி.எஸ்ல்ல் பி.ஜி.எம்மா சேத்துருப்பாங்க) சொன்னேன்....

"ஆமா ரஞ்சனி நான் உன் கிட்ட ஐ லவ் யூ சொல்லத் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்... இதோ இப்போவும் சொல்லுறேன்... ரஞ்சனி ஐ லவ் யூ..."

அடுத்து அப்படியே பொங்குவா... வெங்காய தோசையில்ல் மீதி இருந்த தேங்கா சட்னியை எடுத்து முகத்துல்ல வீசுவான்னு ஒரு மாபெரும் யுத்தத்துக்கு ரெடியாவுற போர் வீரன் மாதிரி உள்ளுக்குள்ளே ஒத்திகை எல்லாம் பாத்துட்டு அவளை பாத்தேன்...

அவப் பொங்கவே இல்ல... பொங்குற மாதிரியும் தெரியல்ல... மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை வெக்கம் இல்லாம தின்னுகிட்டு இருந்தா... வெக்கம் எதுக்குன்னாக் கேக்குறீங்க... போருக்கு நான் ஆயத்தம் ஆன கேப்ல்ல என் தட்டுல்ல மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை இல்ல அவ தின்னுகிட்டு இருந்தா..

உள்ளுக்குள்ளே இருந்த மனச்சாட்சிங்கற மானஸ்தன் அன் பிளான்ட்(unplanned) லீவை என் கிட்டச் சொல்லாமலே எடுத்துட்டு ஏழு கடல் தாண்டி ஏழு வருசம் பயணம் கிளம்பிட்டான்...

"எல்லாவனுக்கும் சொன்ன பதிலை உனக்குச் சொல்ல முடியாது சிவா... " அவள் விரல்கள் வெங்காயத் தோசையில் மெல்லிய கோலம் போட்டுக்கிட்டு இருந்தன...

"எங்க அண்ணனுக்கு என்ன குறை...?" எப்படியோ கஷ்ட்டப்பட்டு அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்...

"உன் அண்ணன் கிட்ட என்ன குறைன்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ என் கூட இருந்தா எந்த குறை இருந்தாலும் பெருசாத் தெரியாதுன்னு மட்டும் மனசுக்குப் படுது சிவா..."

எனக்கு என்னச் சொல்லுறது தெரியாம நின்னேன்...

அதிசயமாய் அந்த மார்ச் மாதத்து பகலில் மழை பெய்தது...

ரஞ்சனிக்குக் காத்திருக்காமல் மழையில் நனைந்தப் படி காலேஜ் நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்....

காலேஜ் வாசலில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சரவணன் எனக்காக காத்திருப்பான்னு...

தொடரும்

Saturday, March 08, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 6

முந்தைய பகுதி படிக்க

விழா கிட்டத் தட்ட முடியும் நிலையை எட்டியிருந்தது.மேடையில் சந்தானம் அங்கிள் நன்றியரை சொல்லிகிட்டு இருந்தார்.அப்பாவைப் பார்த்தேன்.. குருமூர்த்தி அங்கிள் கிட்ட சுவாரஸ்யமாப் பேசிகிட்டு இருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை...

"எங்கேடா எந்தரிச்சிட்ட...?" சோமு கையைப் பிடிச்சு இழுத்தான்..

"வந்துடுறேன் மச்சி"

"டேய் பார்ட்டியை மறந்துடாதே...எங்க வீட்டு மாடிக்கு வந்துடு..." சோமு ஞாபகமூட்டி அனுப்பினான்.

நான் தலையாட்டிட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சேன்.

அவென்யு வாட்டர் டேங்க் பக்கம் போய் ஒரு தம் எடுத்து பத்த வச்சேன்.. அவென்யூவிற்கு வரும் போது மட்டும் என்னவளுக்குக் கொடுத்த சத்தியத்தைத் தற்காலிகமாய் மீறுவது என் வழக்கம். மெதுவாக தண்ணீ தொட்டி படிக்கட்டுகளில் ஏறி உச்சி படிகட்டில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

திருவள்ளூர் என்.எஸ்.எஸ் கேம்ப்க்கு மீண்டும் நினைவுகள் போய் வந்தது.

அந்தக் கேம்பில் எவ்வளவோ முயன்றும் என் அண்ணன் கொடுத்த கடிதத்தை ரஞ்சனியிடம் என்னால் கொடுக்க முடியவில்லை...கேம்ப்மும் முடிஞ்சுப் போச்சு..அந்தக் கடிதம் பத்திரமாய் என்னிடமே இருந்தது...

சரவணன் என்னிடம் விசாரித்தப் போது.. கொடுத்தாச்சு என ஒப்புக்கு சொல்லி வைத்தேன்... எப்படியும் கொடுத்துடலாம் என ஒரு நம்பிக்கை தான். சரவணனும் என்னை நம்பிட்டான். இப்படியே நாட்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சு... அவ்வப்போது சரவணன் அவளுக்குக் கொடுக்கச் சொல்லி எதாவது கொடுப்பான்.. நானும் கொடுப்பதாய் வாங்கி வைத்து கொள்வேன்... இது கொஞ்சக் காலம் ஓடியது...

அவ என்னச் சொன்னா அப்படின்னு கேப்பான்... இந்த ஸ்கூல் எக்ஸாம் எல்லாம் முடியட்டும்ன்னு சொன்னா காலேஜ் அட்மிஷ்ன் முடியட்டும்ன்னு சொன்னா.. இன்னும் ஒரு வாரம் போகட்டும்ன்னு சொன்னா... அடுத்த மாசம் பாக்கலாம்ன்னு சொன்னா... இப்படியே வகை வகையா பிட் போட்டு அவன் ஆசையில்ல தண்ணி ஊத்திகிட்டு வந்தேன்... அவன் ஆசை நெருப்பாயிருக்கும் தண்ணி ஊத்துனா தணிஞ்சுப் போயிரும்ன்னு நான் நினைச்சேன்... படுபாவி அண்ணனோட ஆசை செடியா இருந்திருக்கு நான் ஊத்துன தண்ணியில்ல அது பாட்டுக்கு வேர் விட்டு நிலையா வளந்துருக்கு.. இந்த விவரம் எனக்கு கொஞ்சம் லேட்டாத் தான் தெரிய வந்துச்சு...

சரவணன் வேலைக்குன்னு பெங்களூர் போயிட்டான்... நான் உள்ளூர்ல்லேயே நம்ம மார்க்குக்கு தகுந்த ஒரு காலேஜ்ல்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்...ரஞ்சனியும் என் கல்லூரியில் தான் சேர்ந்தாள்... அவ வேற டிப்பார்ட்மெண்ட் நான் வேற டிப்பார்ட்மெண்ட்... ஆனா இரண்டு பேரும் ஒண்ணா ஒரே பஸ்ல்ல தான் காலேஜ்க்கு போவோம் வருவோம்...அவென்யூவில்லே நான் அதிகமாப் பேச்சு வார்த்தை வச்சிக்காத ஒரே பொண்ணு ரஞ்சனி தான்...

அவளைப் பத்தி எல்லாம் நான் அதிகம் யோசிச்சதே இல்ல... ஆனா இந்த அண்ணன் சரவணன் அவளைக் காதலிக்கிறான்ன்னு தெரிஞ்சப் பின்னாடி தான் அவளை நான் கவனிக்கவே ஆரம்பிச்சேன்.. சின்ன வயசுல்ல ரஞ்சனி கூட எவ்வளவோ தடவை விளையாடி இருக்கேன்... அப்புறம் ஒரு கட்டத்துல்ல எதோ ஒரு திரை விழுந்து ரொம்ப பக்கத்துல்ல இருந்தாலும் ரஞ்சனிக்கும் எனக்குமான இடைவெளி ரொம்ப அதிகமாப் போயிருச்சு...பார்த்தாலும் பேசுறது இல்ல... சிரிக்கிறது இல்ல... கிட்டத்தட்ட தெரியாதவங்க மாதிரியே போயிட்டோம்... எப்படி அப்படி ஆனோம்ன்னு எனக்கும் தெரியல்ல.. அதைப் பத்தி எல்லாம் எப்பவும் நான் யோசிச்சதும் இல்ல..

ரஞ்சனிகிட்ட அப்படி என்ன இருக்குன்னு இந்த சரவணன் அவப் பின்னாடி போனான் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. இந்தக் கண்ராவி காதலை எப்படித் தான் பண்ணுறானுங்களோன்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன்...

அன்னிக்கு கல்லூரியிலே எதோ பங்க்சன் போல... பொண்ணுங்க எல்லாம் சும்மா விதம் விதமா புடவைக் கட்டி கல்யாண வீட்டு ரிசப்ஷ்ன்ல்ல நிக்குறதுக்கு கிளம்புன மாதிரி வந்திருந்தாளூங்க... பசங்க எல்லாம் பத்த வச்ச சிவகாசி பூவாணம் மாதிரி வாயெல்லாம் சிரிப்பா விரிய...குஷி ஜோதிகவா தனக்கு எந்தப் பொண்ணு சிக்குவான்னு கண்களை அலை பாய விட்டுகிட்டு இருந்தாங்க.. நானும் தான்...ஒவ்வொரு பொண்ணா பாத்துகிட்டே வந்தேன்...

ஒரு மூணூ நாலு இருக்கை தள்ளி முன்னாடி இருந்த இருக்கையிலே பச்சக் கலர் புடவையிலே ரஞ்சனி...
எனக்கு எப்பவும் நாலு இருக்கைத் தள்ளி தான் ரஞ்சனி பஸ்ல்ல உக்காருவா... நானும் அதிகமா அவ இருக்க பக்கம் பாக்க மாட்டேன்..ஆனா அன்னிக்கி என்னவோ தெரியல்ல அவளைப் பாத்துட்டு கண்ணை வேற பக்கம் திருப்ப முடியல்ல....

பச்சக் கலர் சைனா சில்க் புடவை... அதுல்ல்ல அழகௌ அழகா கண்ணை டேமேஜ் பண்ணாத ஓவியங்கள்... அதுக்கு மேட்சிங்கா ரவிக்கை... ரவிக்கை ஓரம் லேசான தங்க நிறத்துல்ல கொஞ்சம் வேலைப் பாடு... காதுல்ல பச்சக் கல் வச்ச ஜிமிக்கி ரஞ்சனி அப்படி இப்படி தலையை ஆட்டும் போது எல்லாம் அது பாட்டுக்கு ஊஞ்சல் கட்டி ஆட ஆரம்பிசிடுது... அப்புறம் பஸ் போற வேகத்துல்ல ஜன்னல் வழியா நுழைஞ்ச காத்து அவ நெத்தியிலே விழ்ந்த ஒரு கற்றை முடியைக் கலைத்துப் போடுவதும் இவ ஒரு கையால அதை சரிப் படுத்துறதும்ன்னு ஒரு கலைக் கச்சேரியே நடந்துகிட்டு இருந்துச்சு.. நான் வச்ச கண் வாங்கமா இதை எல்லாம் பாத்துகிட்டே இருந்தேன்...என்னையுமறியாமல் என் முகத்துல்ல ஒரு அசட்டு சிரிப்பு தவழ்ந்தது எனக்கே தெரிந்தது...சிரிப்பை அடக்க நான் முயற்சி எதுவும் செய்யல்ல

பஸ் கல்லூரிக்குள்ளே நுழைஞ்சு நின்றது.. எல்லாரும் இறங்கி அவங்க அவங்க பிளாக் பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க.. ரஞ்சனி கிளாசுக்குப் போக எங்க பில்டிங் தாண்டி தான் போகணும்...ரஞ்சனி முன்னால் நடந்துப் போயிகிட்டு இருந்தா நான் கொஞ்சம் மெதுவா அவப் பின்னாடி நடந்தேன்.. இதுக்கு முன்னாடி நான் ரஞ்சனியைப் புடைவையில் பார்த்தது இல்லை... அவென்யு விழாக்களுக்குக் கூட அவளை அப்படி பாத்ததா எனக்கு ஞாபகம் இல்ல

புடவையை இவ்வளவு அழகாக் கட்ட முடியுமான்னு என்னை யோசிக்க வச்சிட்டா...எப்பவோ படிச்ச தேவைதக் கதை எல்லாம் ஞாபகத்துக்கு வந்துப் போச்சு... தேவதைகள் எல்லாம் புடவைக் கட்டுனா இப்படித் தான் இருக்குமோ....அப்படின்னா ரஞ்சனி தேவதையா...?

நான் இதை யோசிச்சுகிட்டே நடந்துட்டு இருக்கும் போது முன்னால் நடந்துகிட்டு இருந்த ரஞ்சனி நின்று கொண்டு இருந்தாள்..அவளைக் கவனித்தும் கவனிக்காத மாதிரி அவளைத் தாண்டி போயிராலம்ன்னு கொஞ்சம் வேகமா அடி எடுத்து போட்டேன்

சிவா.... ரஞ்சனியின் குரல் கேட்கவே... கால் அப்படியே பிரேக் போடு நின்னுருச்சு.

என் நாக்கு உள்ளுக்கு ஒட்டிக் கொண்டது... கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் தடுமாற்றம் என மெதுவாக அவப் பக்கம் நடந்துப் போனேன்... போகும் போது அவ முகம் பாக்குறதைக் கூடுமான மட்டும் தவிர்த்தேன்.. குறிப்பா அவ கண்ணை விட்டு என் கண்ணை விலக்கியே வைத்தேன்... என்னமோ தெரியல்ல அவக் கண்களை என்னால் நேருக்கு நேர் சந்திக்க முடியல்ல...

அவ கட்டியிருந்த புடவையோட நுனி பாதையோரமா இருந்த முள்ளில் சிக்கிட்டு இருந்துச்சு...அவளால்ல அதை குனிந்து எடுக்க முடியாம நின்னுகிட்டு இருந்தா... புடவைக் கட்டிப் அதிக பழக்கமில்ல போல... முந்தானைச் சரிஞ்சுடுமோன்னு கொஞ்சம் தயங்கி நின்ன மாதிரி தெரிஞ்சுது..என் உதவி அவளுக்குத் தேவைப்பட்டதுங்கறதை அவக் கேக்காமலே நான் புரிஞ்சுகிட்டேன்..

அக்கம் பக்கம் அவ வகுப்பு தோழிகள் வேற யாரும் இல்ல.. ரொம்பத் தயங்கித் தான் என்னக் கூப்பிட்டிருக்கான்னும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.. நான் அவக் கால் பக்கம் குனிஞ்சு.. ரொம்ப பக்குவமா அந்த முள்ளுல்ல இருந்து அவப் புடவையை விடுவிச்சேன்.. அக்கம் பக்கம் போனவங்க யாராவது பாக்குறாங்களோன்னு ஒரு சின்ன எச்சரிக்கை வேற எனக்குள்ளே ஓடுச்சு,,,

முள்ளை எடுக்கும் போது தான் அவ பாதங்களை எதேச்சையாப் பாத்தேன்... பாதம் மேல மெல்லிய கொலுசு... பூ வேலைப் பாடு எல்லாம் பண்ணி பிரமாதமா இருந்துச்சு... கலிங்.. கலிங்ன்னு ரொம்ப மெல்லிய ஓசை... காது வச்சுக் கேட்டாத் தான் கேக்கும் போல... அப்புறம் நகத்துல்ல எல்லாம் ஒலிவ் பச்சை நெயில் பாலிஷ் .. நேரம் எடுத்து போடிருக்கா போல... அழகா இருந்துச்சு... இதை எல்லாம் பாக்க கிடச்ச சில் வினாடிகளில் பாத்து ரசித்து சிலாகிச்சுட்டேன்...

"தேங்க்ஸ் சிவா" தெத்துப் பல் தெரிய ஒரு சிரிப்பொடச் சொன்னாப் பாருங்க... ரஞ்சனி சிறு வயசுல்ல பல் கிளிப் இல்ல போட்டிருப்பா.... இப்போ ஒரு சிரிப்புல்லயே கொடைக்கானல் சில்வர் பால்ஸ் காட்டுறாளேன்னு நினைச்சிகிட்டேன்...


அவப் போய் வெகு நேரம் வரை நான் வேற எதோ ஒரு உலகத்துல்ல திரிஞ்சிகிட்டு இருந்தேன்...

எனக்கு பக்கத்துல்லயே இத்தனை வருசம் இருந்த ரஞ்சனி அன்னிக்குத் தான் எனக்கு புதுசா அறிமுகம் ஆனதுபோல இருந்துச்சு.. இந்த அனுபவம் எனக்கு ரொம்பவே புதுசு... கொஞ்சம் கிறுக்குத்தனமா இருந்துச்சு.. ஆனா ரொம்ப நல்லா இருந்துச்சு....


இந்த கிறுக்குத் தனத்துக்குப் பேர் தான் காதலோ... காதல்ங்கற வார்த்தை என் சிந்தனையில்ல விழ்ந்த உடனே நடுமண்டையிலே சுத்தியல்ல அடி வாங்குன மாதிரி இருந்துச்சு..

ரஞ்சனியை நான் எப்படி காதலிக்க முடியும்... என் அண்ணன் சரவணன் இல்ல ரஞ்சனியைக் காதலிக்கிறான்...

இது துரோகம் இல்லையா..எதோ ஒரு கோவத்தில் என் கையை அழுத்தினேன்... ரஞ்சனி புடவையில்ல சிக்கியிருந்த முள் இன்னும் என் கையில் தான் இருந்துச்சு... அது என் விரல்ல குத்தி ரத்தம் வந்துச்சு...

அன்னிக்கே அந்த லெட்டரைக் கொடுத்துருக்கலாம்... இல்ல சரவணன் கிட்டவாது... டேய் அண்ணா இந்த லெட்டர் எல்லாம் கொடுக்குற பொழப்பு நமக்கு சரி வராது ஆளை விடுன்னு சொல்லி ஆட்டத்தை முடிச்சிருக்கலாம்...

என்னமோ புடிக்கப் போய் என்னமோ ஆனக் கதையால்ல இது போவுது....

அன்னிக்கு முழுக்க வகுப்புல்ல எனக்கு எந்த கவனமும் இல்ல... அண்ணனுக்கு நல்ல தம்பியா இருக்கணும்டா... புடவை...ஜிமிக்கி... கொலுசுன்னு... குப்புற கவிழக் கூடாது... கூடவே கூடாது...இது ஒரு சின்ன சத்யச் சோதனைதாண்டா சிவா... இதுல்ல சிலிப் ஆகிடாதே....

அண்ணன் கிட்ட போய் எல்லா உண்மையையு சொல்லிரணும்... அவன் நாலு அடிச்சாக் கூட வாங்கிக்கணும்...உன் காதலை நீயே பாத்துக்கோடா... நமக்கு இந்த காதல் எல்லாம் சரிபடாது சாரின்னு சரண்டர் ஆகி ஜாமீன் வாங்கணும்... என் அண்ணன் என்னை மன்னிச்சுருவான்....

அப்புறம் இனி இந்த ரஞ்சனி பக்கம் திரும்பவே கூடாது.... திரும்பவே கூடாது.... எனக்கு நானே சொல்லி தலையை வேகமாய் ஆட்டினேன்... அது தெர்மோ டயனமிஸ் கிளாஸ்.. நான் தலை ஆடுனது எந்த தெர்மோடயனமிக்ஸ் சிலபஸ்க்குள்ளும் வராத காரணத்தால் குழம்பிய பேராசிரியர் என்னை எழுப்பி விட்டார்.

"என்ன மேன் இங்கெ சீரியசா லெக்சர் போகும் போது.. நோ.நோன்னு மண்டையை ஆட்டுறே..DO U HAVE ANY COUNTER ARGUEMENTS FOR THE CONCEPT I JUST EXPLAINED" அவர் என்ன சொல்லுறார்ன்னே தெரியாமா பல்ப் ஸ்டாண்ட்டில் மிஸ் பிட் ஆன பல்ப் போல நின்றேன்...

"I am Feeling feverish sir" அப்படின்னு பாவமாய் உளறினேன்.

அந்த சமயம் பார்த்து சரியாய் லஞ்ச் மணி அடித்தது. நான் தப்பித்தேன்..

மதியமே வீட்டுக்கு கிளம்ப முடிவெடுத்து நடக்க ஆரம்பிச்சேன்....

"சிவா...." மறுபடியும் ரஞ்சனியின் குரல் கேட்டு அப்படியே நின்னேன்..

திரும்பக் கூடாது திரும்பக் கூடாது அப்படின்னு புத்தி சொன்னாலும் கால் தானாத் திரும்பி அவப் பக்கம் நடக்க ஆரம்பிச்சது..

"எங்கேக் கிளம்பிட்டே?"

"லஞ்ச்" திக்கி திக்கிச் சொன்னேன்...

"நானும் வரலாமா...." ரஞ்சனியின் இந்தக் கேள்வியில் என் மொத்தமும் கலங்கிப் போனது...

தொடரும்

Sunday, February 24, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 5

முந்தைய பகுதி படிக்க

விழா நல்லபடியா போய்கிட்டு இருந்தது...அப்பா இன்னும் பேசிகிட்டு இருந்தார். சரவணனின் பெருமைகளை ரொம்ப பெருமிதமா எடுத்துச் சொல்லிகிட்டு இருந்தார். நான் அதக் கேட்டும் கேக்காமலும் கவனத்தை எங்கெல்லாமோ அலைய விட்டுகிட்டு இருந்தேன்.

ஞாபகத்தை எங்கே நிறுத்திட்டு நிகழ்காலத்துக்கு வந்தேனோ அங்கிருந்து கிளம்பி அந்த வார இறுதி நாட்களின் நிகழ்வுகளுக்கு மறுபடியும் போய் சேர்ந்தேன்.

அன்னிக்கு காலையிலே வீட்டை விட்டு கிளம்புனவன் சாயங்காலம் வரைக்கும் பசங்களோடத் தான் சுத்திகிட்டு இருந்தேன். சாயங்காலம் எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப நான் மட்டும் தனியா ஈவினிங் ஷோ பாக்கப் போயிட்டேன்...ஷாருக்கான் நடிச்ச இந்திப் படம் தில்வாலே துல்கனியா லே ஜாயங்கே... காஜோலுக்காகவே கிட்டத் தட்ட பத்து வாட்டி நான் பாத்த படம் அன்னிக்கு எட்டாவ்து வாட்டியாப் போயிருந்தேன்...அதுக்கப்புறமும் ஒண்ணு ரெண்டு வாட்டி அந்தப் படத்துக்குப் போயிருந்தேன்... அது இப்போ தேவையில்லை...காஜோலும் ஷாரூக்கானும் திரை முழுக்க காதலைக் குழைச்சு பெயிண்ட் அடிச்சுகிட்டு இருக்க என் கவனம் படத்திலே இல்ல...என் அண்ணன் சரவணன் மேலத் தான் இருந்துச்சு...

அவன் கிட்ட என்னத் தான் உன் கதைன்னு கேட்டிரலாமா?
கேட்டாச் சொல்லுவானா?
இல்லை கேட்காம நாமளா கண்டுபிடிக்கலாமா?
என்னையேப் போட்டு குழப்பிகிட்டேன்...குழப்பம் தெளியாமப் படம் முடியறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டேன்..

வீட்டுக்குப் போற வழி எல்லாம் யோசிச்சுகிட்டே தான் போனேன்.. குறுக்கே வந்த நாய் ஒண்ணு கோபமாய் குசலம் விசாரிச்சுட்டு போனதைக் கூட நான் கண்டுக்கல்ல.. சைக்கிளை ஒரே நேர்கோட்டிலே ஓட்டிகிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மணி ஒன்பது ஆகிப் போயிருச்சு.. வீட்டைத் திறந்துட்டு உள்ளேப் போனேன்... ஆள் அரவமே இல்லை... அப்படி இப்படி சுத்திட்டு... பிரிட்ஜ்ல்ல இருந்து ஜில்லுன்னு தண்ணீ எடுத்து தொண்டையிலே இறக்குனேன்... ம்ம் ஒரு மாதிரி லேசா இருந்துச்சு.. இருக்கட்டும் எதுக்கும் மாடிக்குப் போய் ஒரு தம் போட்டுட்டு இன்னும் கொஞ்சம் சீரியசா யோசிக்கலாம்ன்னு படியிலே ஏறுனேன்.

ஒவ்வொரு படியா நிதானமா ஏறும் போதே பத்த வச்சுகிட்டேன்... அக்கம் பக்கம் எல்லாம் நோட்டம் பாத்துகிட்டே மாடியில்ல கால் எடுத்து வச்சா... அங்கே சரவணன்.. என் அண்ணன் சரவணன் தான் சொன்னா நம்புங்க...

பக்கா செட்அப்போட உக்காந்து சரக்கடிச்சுகிட்டு இருந்தான்...ஒரு கணம் நம்பியும் நம்பவும் முடியாமல் நின்றவன் லேசாப் பதுங்கியப் படி அவனைப் பார்த்தேன்..

சைட் டிஷ் எல்லாம் சும்மா சொக்க வைக்கும் ஐட்டங்களா அடுக்கியிருந்தான்...வறுத்தக் கோழி தொடைக்கால்.. மசாலாக் கடலை... நெத்திலி மீன் வறுவல்...மசாலாப் போட்டு வறுத்த முந்திரி பருப்பு தனியா ஒரு பிளேட்... அதுக் கூட நம்ம ரசனைக்குரிய அணீல் பிராண்ட் லோக்கல் மாங்காய் ஊறுகா..பத்தாதுக்கு பாட்டில் பாட்டிலா சரக்கை வேற அடுக்கி வச்சிருந்தான்... மெதுவா ஒவ்வொரு கிளாசா ஊத்தி அடிச்சிகிட்டு இருந்தான்...

நான் அவனைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்.. அதுக்கு மேல முடியல்ல...அவன் என்னைப் பாக்குற மாதிரி அவனுக்கு எதிர்பக்கம் போய் திரும்பி நின்னேன்...பேச்சு எதுவும் கொடுக்கல்ல..

"ஷீவா.. மை பிரதர்... இங்கே வாடா...." சரவணன் தான் என்னைக் கூப்பிட்டான்... அண்ணன் முக்கால் போதையில் முழு வீரனாய் எழுந்து நின்றான்.நான் நிதானமாய் திரும்பினேன்.

"டேய் நான் உன் அண்ணன்டா....வாடா இங்கே..." கையில் கோப்பையோடு அண்ணன் என்னைப் பார்த்து புன்னகைத்தான்..

ஆகா அண்ணா சரவணா.. உன்னை கையிலே எத்தனையோ கோப்பையோட எல்லாம் பாத்துருக்கேன்டா அப்போ எல்லாம் கிடைக்காத பரவசமும் சந்தோசமும் இப்போ எனக்குள்ளேப் பொங்கி வழியுதேடா அப்படின்னு எனக்கு நானே உள்ளுக்குள்ளே சொல்லிகிட்டேன்... ம்ம்ம் ஆனாலும் வாயை திறக்கல்ல

என் கையைப் பிடிச்சி இழுத்து உக்கார வச்சான் சரவணன்.. அப்புறம் அப்படி ஒரு பாசக் கச்சேரி அரங்கேறிடுச்சுங்க..அதை எல்லாம் என்னன்னு சொல்லுரது எப்படின்னு சொல்லுறது.. தமிழ் மட்டும் இல்ல... உலக மொழியிலே அந்த பாசத்தை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லன்னு அந்தப் போதையில்ல அன்னிக்கு தோணிச்சு.. அது ஒரளவு உண்மையும் கூட..சரக்கை ஊத்தி என் வாயிலே வச்சு இறக்குனதும்.. கோழி காலை வாயிலே ஊட்டி விட்டதும்.. புரையேறுனப்போ தலையிலே தட்டணுதும்ன்னு... அத்தனைக் காலமும் சரவணன் தேக்கி வச்சிருந்த சகோதரப் பாசத்தை அப்படியே வெள்ளமா என் பக்கம் திருப்பி விட்டான். நான் கிட்டத் தட்ட மூழ்கி மூச்சு முட்டிப் போயிட்டேன்...

"தம்பி தங்க கம்பி.. என் தம்பி தங்க கம்பி...." பாட்டெல்லாம் வேற பாடி கலக்குனான் சரவணன்... என் மடியிலே தலை வச்சு படுத்துகிட்டான்....நான் அவன் தலையைக் கோதிவிட்டேன்...

"டேய் சிவா... அண்ணனுக்கு நீ ஒரு பாட்டு பாடுரா.. உனக்கு நான் பாடுனேன் இல்ல..." சரவணனின் நேயர் விருப்பம்.

"டேய் அண்ணா.. சரவணா.. எனக்கு பாட எல்லாம் தெரியாது உன்னை மாதிரி... நீ நல்லா பாடுறடா... சூப்பர் வாய்ஸ்டா உனக்கு...."

"உண்மையாவாடா.. இதை எல்லாம் ஏன்டா என்கிட்ட நீ முன்னாடியே சொல்லல்ல..நீ கூடத் தான் அன்னிக்கு கானா எல்லாம் கலக்கலாப் பாடுன.... நல்லாயிருந்துச்சுடா டேய் தம்பி... நீயும் நானும் ஒரே வீட்டுல்ல ஒண்ணா வளர்ந்திருந்தா... இப்படித் தான் ஜாலியா இருந்திருப்போம் இல்லையாடா... எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம்டா நாம... இனி மிஸ் பண்ணக் கூடாதுடா தம்பி.. மிஸ் பண்ணக்கூடாது.. சொல்லிட்டேன்..."

"ஆமா ஆமா..." தலை ஆட்டுவதை பிரதானக் கடமையாய் நினைத்து சும்மா பூமி அதிர தலையாட்டினேன் நான்.. ரொம்ப சந்தோசமாயிருந்துச்சு அந்தப் பொழுது...

இப்படியேப் போயிகிட்டு இருந்தப்போ சந்தோசத்துக்கு சங்கு ஊதுற மாதிரி திடீர்ன்னு சரவணன் கேவி கேவி அழ ஆரம்பிச்சான்...எனக்கு சட்டுன்னு என்னப் பண்ணுறதுன்னு புரியல்ல... கூடச் சேர்ந்து அழதுரலாமான்னு ஒரு கணம் யோசிக்க வேற செஞ்சேன்..... அவன் அழுகையோடு பேச ஆரம்பிச்சான்....

"சிவா... நான் அவளை லவ் பண்றேன்.... உண்மையா.... லவ் பண்ணுறேன்... எனக்கு என்னக் கொறைச்சல்...இன்னும் மூணு மாசத்துல்ல நான் வேலைக்குப் போக போறேன்... என்னை அவளுக்குப் பிடிக்கல்லயாம்.... ஏன் சிவா? .... நான் அவளை நல்லா பாத்துப்பேன்டா.. அவளுக்கு யாராவது சொல்லிப் புரிய வைக்கணும்டா.... சொன்னா புரிஞ்சிக்குவா....சொன்னா புரிஞ்சிக்குவா தானே சிவா... சொல்லுடா...' எனக்குப் போதை சுத்தமாய் இறங்கிப் போனது..

"சொல்லு சிவா... புரியாமத் தானே என்னை பிடிக்கல்லன்னு சொல்லுறா... புரிய வைக்கணும்...நீ புரிய வப்பீயாடா?"

நான் உள்ளுக்குத் தள்ளியிருந்தக் கடைசி பெக் வாயில் இருந்து குப்பென்று கொப்பளித்து வெளியேறியது. என் முகம் அப்படியே கரண்ட் கம்பியில் கால் வைச்ச எபெக்ட்டுக்கு மாறிப்போச்சு. கொஞ்சம் சுதாரிச்சு நான் முதலில் எழுந்துக் கொண்டேன்.. ராத்திரி கரைஞ்சுப் போயிருந்தது.. மணி ரெண்டு இருக்கும்...

"சரவணா.. கீழே போலாமா....நேரமாச்சு..." அவனை எழுப்பப் பார்த்தேன்.

"ம்ஹூம்... நான் நீ புரிய வைக்குறேன்னு சொல்லாட்டி வரமாட்டேன்... எனக்கு யாரும் இல்லடா.. நீ தான் உதவணும்...அவ புரிஞ்சுக்கல்லன்னா நான் செத்துப் போயிருவேன்டா... உண்மையாச் சொல்லிட்டேன்..."

ஆகா இதென்னடா வம்பாப் போச்சு... இப்போ நடந்த எல்லா விவரமும் எனக்கு முழுசாப் புரிய மூணு வருசம் ஆவும் போலிருக்கு.. இதுல்ல நான் யாருக்கு எதை புரிய வைக்கணும்ன்னு தெரியல்லயே...புரிய வைக்கிறேன்ன்னு சொல்லாமா சாமி மலை இறங்காது போலிருக்கே... சரக்கு வாங்கி தந்து சர்க்கஸ் எல்லாம் காட்டச் சொல்லுறானே என எனக்குள்ளேயே புலம்பிகிட்டேன்.

"சரி நான் புரிய வைக்குறேன்ப்பா அண்ணா.. இப்போ வாப்பா போலாம்.. விடிஞ்சா ஊர் போனவங்க திரும்பிருவாங்க..."

அவனை வலுக்கட்டாயமா பிடிச்சு இழுத்து படியில் இறங்கினேன்... அவனை படுக்க வச்சுட்டு நான் படுக்கும் போது பொழுது மெதுவா விடியத் துவங்கியிருந்தது... அதுக்கு அடுத்து இரண்டு நாட்களில் எங்க பள்ளி என்.எஸ்.எஸ் சார்பாக திருவள்ளூர் பக்கம் ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் விசிட்க்கு நாங்க எல்லாம் கிளம்புனோம்...

நான் கிளம்பிகிட்டு இருக்கும் போது சரவணன் என் பக்கம் வந்தான்.. என் கையில் ஒரு காகிதத்தை திணித்தான்...நான் என்ன ஏதுன்னு அப்பிராணியாய் அவனைப் பார்த்து முழித்தேன்...

"நீ தான் புரிய வைக்கணும்.... எப்படியாவது புரிய வை.. இதுல்ல எல்லாம் எழுதியிருக்கேன்... அவக் கிட்டக் கொடுக்கணும்.. புரியுதா?...." அவன் அவசரமாய் கட்டளைகள் போட்ட வண்ணம் இருந்தான்.

அடப்பாவி நீ வாங்கிக் கொடுத்த சரக்கும் சைட் டிஷ்க்கும் கடனை வாங்கியாவது கொடுத்துடுரேன்டா..அதுக்குன்னு என்னை இப்படி போஸ்ட் மேன் வேலை எல்லாம் பாக்க வைக்காதேடா... சொல்ல முடியாமல் வார்த்தைகளை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தேன்...

"உன்னைத் தான்டா நம்பியிருக்கேன்... நீ என் தம்பிடா"

"தம்பிக்குக் கொடுக்குற வேலையாடா இது... வெக்கம் கெட்ட அண்ணா சரவணா" மீண்டும் பாசம் பிரேக்கடித்து போர் மேகம் சூழ ஆரம்பித்தது...

"சரி இதை நான் யார்கிட்டக் கொடுக்கணும்.....?"

"சிவரஞ்சனி கிட்ட..."

"என்னதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ? எங்க சயின்ஸ் சிவரஞ்சனி மிஸ் ஐயா நீ லவ் பண்ணுற....?

என்னை மொத்தமா சூப் வைக்க சூதாத் திட்டம் போடுறீயா நீ..." நான் கொஞ்சம் பொங்கி விட்டேன்.. பின்னே... இப்படி ஒரு அண்ணன் கிடைத்தால் என்ன ஆகும்...

"அடச்சே.. உன் கூட படிக்குறாளே நம்ம அவென்யூ சிவரஞ்சனிடா ..."

இந்தப் பதில் என்னை இன்னும் உசுப்பேத்தியது...இதுக்கு நீ எங்க சயின்ஸ் மிஸ் ஐயே லவ் பண்ணியிருக்கலாம்... இவளை எல்லாம் போய்....என் பரம் விரோதிகிட்டப் போய் நான் வளைஞ்சு நெளிஞ்சு உனக்காக லவ் லெட்டர் கொடுக்கறதா.......?

என் கொள்கையை அவன் அன்பு தளர்த்தியது....அவன் அன்பு என் பாக்கெட்டை நிறைத்தது... இருந்தாலும் ரஞ்சனிகிட்ட நான் போய் லெட்டர் கொடுப்பதை நினைத்தால் எனக்கு தாங்க முடியவில்லை தான்.... என்னச் செய்யறது அண்ணனின் வளமான அன்பு முன்னால் என் கொள்கை முக்காடு போட்டு கும்பிடு போட்டது....

சரக் சரக் என அஞ்சு அம்பது ரூபாய் தாள்களில் அண்ணன் சரவணனின் அன்பு முகம் தெரிந்தது...

என் அண்ணன் சரவணனுக்காக கையில் கடிதம் எடுத்துக் கிளம்பினேன்...

தொடரும்

Saturday, February 16, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 4

முந்தைய பகுதி படிக்க

இரண்டு நாள் முழுக்க மனசெல்லாம் என்ன என்னவோ கேள்விகளால் நிறைஞ்சுப் போயிருந்துச்சு.. இதைப் பத்தி யார்கிட்டவும் முழுசா பேசவும் முடியல்ல...என்னப் பண்ணுறது? அப்படின்னு எனக்கு நானே கேட்டுகிட்டு மொட்டை மாடி.... வீட்டுக்குப் பின்னாடி... தெரு கோடி... இப்படி எல்லா இடத்துல்லயும் நின்னு நடந்து யோசிச்சும் ஒண்ணுமே புரியல்ல...

என்னுடைய கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்குறதுக்குன்னு ஒரு அருமையான் வாய்ய்பு வந்துச்சு.. அந்த வாரம் சனி ஞாயிறு அப்பாவும் அம்மாவும் திருச்சியில்ல நடக்க இருந்த ஒரு கல்யாணத்துக்குக் கிளம்புனாங்க.. வீட்டுல்ல நானும் என் அண்ணனும் மட்டும் தான் இருக்கப் போறோம்.. அந்த வாய்ப்பை வாழைபழத்தை வாயிலே போடுற மாதிரி அழகாக பயன்படுத்திக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்,,, அது வரைக்கும் என் வாழ்க்கையிலே எதையுமே நான் தனியாச் செஞ்சதுல்ல... எல்லாத்துக்கும் என் நண்பர்கள் கூட்டணி கட்டாயம் உண்டு... ஆனா இந்த விசயத்துல்ல யாரையும் கூட்டுச் சேக்க முடியாது... கூடாது...ஏன்னா சரவணன் என் அண்ணன்...

வெள்ளிகிழமை வந்துச்சு..அப்பா அம்மா ஊருக்கு கிளம்புறதுக்கு கொஞ்சம் முன்னாடி சரவணனும் ஒரு சின்ன பையைத் தூக்கிட்டு கிளம்பினான்... அவன் ப்ரண்ட் யார் வீட்டுக்கோ குரூப் ஸ்டடி பண்ணப் போறதா அப்பா கிட்ட அவன் சொன்னது அரசல் பொரசலா என் காதுல்ல விழுந்துச்சு... அப்படின்னா இன்னிக்கு ராத்திரி வீடு மொத்தமும் நம்ம கன்ட்ரோல் தான்... என் மனக் கண்ணில் வீடு அப்படியே ஒரு கிளப் செட்டப்புக்கு மாறுவது தெரிந்தது.. அந்த ஆர்ட் டைரக்ட்டரை அப்படியே ஆப் பண்ணிட்டு உள் மனசு வேற ஒரு திட்டம் போட்டது...

வழக்கமான சட்டத்திட்டங்களை ஞாபகபடுத்திவிட்டு இரண்டு நாள் செலவுக்குன்னு ஒரு சின்னத்தொகையை அப்பா கொடுத்துட்டு கிளம்ம்புனார்... அப்பா அப்படி நகர்ந்ததும் என் பாவமான முகத்தைப் பார்த்து அம்மா பாசத்தோடு அப்பா கொடுத்த சின்னத் தொகையின் இருமடங்கை என் பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு போனார். மொத்தத் தொகையும் கூட்டிக் கழித்து ஒரு பட்ஜெட் போட்டதில் செட்டிநாட் ஓட்டலில் மூணு வேளையும் நல்லா முக்கி கட்டலாம் எனத் திருப்தி பட்டுக்கொண்டேன்.. வெகு நாளாக சாப்பிட நினைத்த முழு கோழி தந்தூரியை இந்த முறை எப்படியும் சாபிட்டரணும் என முடிவு செய்துகிட்டேன்.

ஒரு பத்து மணி வாக்குல்ல வீட்டுல்ல நானும் என் தனிமையும் ஒய்யாரமா உக்காந்துகிட்டு இருக்கோம்.. டேப் ரிக்கார்டர்ல்ல் செந்தூர பூவே பாட்டு ஓடி கிட்டு இருக்கு... எனக்கு இருப்பு கொள்ளவில்லை..

என் அண்ணன் சரவணனுக்குச் சொந்தமான எல்லா பொருட்களையும் ஒரு அலசு அலசி ஓய்ந்திருந்தேன்... அதில் அவனை மாட்டி விடுற மாதிரியான எந்தப் பொருளும் இல்ல... அன்னிக்க்கு நான் பாத்தது சரவணன் தானா... வளையம் வளையமா இல்ல புகையை விட்டான்.... ஓவர் மப்புல்ல நமக்கு அன்னிக்கு பாத்தவன் எல்லாரும் சரவணன் மாதிரி தெரிஞ்சிட்டாங்களா?.... பைய ரூம்ல்ல ஒண்ணும் சிக்கல்லயே... ஒரு தம்... ஒரு வத்திப் பொட்டி...ஒரு லைட்டர்... பைய எமகிராதகனால்ல இருக்கான்.. என் அண்ணன் ஆச்சேன்னு சொல்லிகிட்டேன்...

அவன் மேசை முழுக்க ஒரே புத்தகமா இறைஞ்சு கிடந்துச்சு.... பாதி பொஸ்தகம் பேரை நான் படிக்குறதுக்குள்ளவே நமக்கு நாக்கு தள்ளியிருச்சு... வித விதமான பிசிக்ஸ் புக்...பார்மூலா நோட்ஸ்...எப்படி தான் இதை எல்லாம் படிக்கிறானோ.. நமக்கு இதுல்ல இருக்க நாலு படத்தைக் கூடப் பாக்க முடியல்லயே....

அறை முழுக்க மீண்டும் தேடி ஓயந்தேன்...

மேடையில் அப்பா பேசிகிட்டு இருந்தார்..

"என் பசங்களை உங்க எல்லாருக்கும் தெரியும்.... சிவா அதோ அங்கே உக்காந்து இருக்கான்... போன வருசம் அவன் நம்ம அவென்யூ நூலகத்துக்கு நிறைய கவிதை பொஸ்தகம் வாங்கி கொடுத்தான்... இந்த வருசம் அவங்க அண்ணன் சார்பா நிறைய அறிவியல் புத்தகங்கள் கொடுக்கிறேன்...." ரெண்டு மூணு அட்டைப் பொட்டி நிறைய இருந்த புத்தகங்கள் மேடையில் வைக்கப் பட்டன... பழைய புத்தகம் என சொல்ல முடியாதப் படி அவ்வளவு அழகாக பாதுகாக்கப்பட்டிருந்தது...

மேடையில் இருந்து என் கவனம் எங்கெங்கோ போய் வந்தது... மீண்டும் அந்த அட்டைப் பெட்டிகளைப் பார்த்தேன்...

அன்னிக்கும் அப்படித் தான் ஓய்ஞ்சுப் போய் அவன் கட்டிலில் உட்கார்ந்தப்போ காலுக்கு அடியில் அந்த ஷூ பாக்ஸ் தட்டுப்பட்டுச்சு... அடப்பாவி புது ஷூ வாங்கி ஒளிச்சு வச்சிருக்கான்டான்னு ஆவேசமா அந்தப் பொட்டியைப் பிரிச்சா உள்ளே.. சிகப்பு கலர் டைரி.... மடிச்சு வைக்கப்பட்ட நிறைய காகிதங்கள்.... காய்ந்துப் போன ரோஜாப் பூக்கள்...

டைரியைப் பிரிச்சு வாசிக்க ஆரம்பிச்சேன்....அம்புட்டும் கவிதை... காதல் கவிதை... வரிக்கு வரி வார்ததை அசத்தலான கவிதை... ஆண்டவா... ஆனாலும் நீ ரொம்ப அநியாயம் பண்ணுறடா... ஒருத்தனுக்கே எல்லாத்தையும் வாரிக் கொடுத்துட்டியேடா.. படிப்பு... விளையாட்டு.. பாட்டு... கவிதைன்னு அம்புட்டும் கொடுத்துட்ட... கொடுத்துட்டு போ ஆனா அவனை ஏன்ய்யா எனக்கு அண்ணனாக் கொடுத்து என் வாழ்க்கையை போர்களமா மாத்திட்ட....

எனக்கு கவிதைப் பிடிக்கும்... பத்தாம் கிளாஸ் படிக்கும் போதே சினிமா பாடல்களை இசையயும் தாண்டி வரிகளுக்காக ரசிக்க கத்துகிட்டேன்.. அவன் எழுதுன கவிதை எனக்கு பிடிச்சு இருந்துச்சு.. அந்த கவிதைக் காரணமாய் அவன் மீது ஒரு மரியாதை வந்தது... மரியாதை மட்டும் தான்.. ஆனா அதையும் தாண்டி அவன் மீது கோபம் அதிகமானது...

கடைசி கவிதையைப் படிக்கும் போது எங்கேயோ எதுவோ சரியில்லன்னு என் உள் மனம் சொன்னது...

அந்தக் கடைசி கவிதை....

சாதல் சாதாரணம்... காதல் சதா ரணம்...

என்ன இது அண்ணாத்த இவ்வளவு பிலீங்க்க்கா எழுதியிருக்கான்...யாரையாவ்து லவ் பண்ணுறானோ..நம்ம மண்டைக்குள்ளே விளக்கு பிரகாசமா எரிய ஆரம்பிச்சது...

"டேய் சரவணா.. சிக்கிட்டீயேடா.. வசமா சிக்கிட்டீயே... அந்த 'ரணம்'யாரால்லன்னு நான் குட்டிக'ரணம்' அடிச்சாவது கண்டுபிடிக்குறேன்டா... அப்புறம் பாருடா நீ எனக்கு எவ்வளவு சாதரணம்ன்னு..."

பத்தரை மணி இருக்கும் கதவு தட்டப்பட்டது... சிகப்பு டைரியை ஷூ பாக்ஸ்குள் வைத்து விட்டு பாக்ஸை மீண்டும் கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு... ரொம்ப சாதரணமாய் போய் கதவைத் திறந்தேன்...வாசலில் சரவணன்...அவன் கையில் பை இல்லை...

அவனிடம் நானும் எதுவும் கேட்கவில்லை அவனும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை..உள்ளே வந்தவன் நேரா அவன் கட்டிலுக்குப் போய் படுத்துகிட்டான்... நான் வராந்தாவில்ல உருண்டு பொரண்டு தூக்கம் வராம மோட்டுவளையைப் பாத்துகிட்டு இருந்தேன்... ராத்திரி நீண்டுகிட்டேப் போச்சு..எப்போ தூங்குனேன்னு எனக்கேத் தெரியாது

தீடிரென்னு முகத்துல்ல சில்லுன்னு பீரைத் தெளிச்சாப்பல்ல இருக்கவே மெதுவாக் கண்ணைத் திறந்துப் பாத்தேன்.. வாசல் கதவு திறந்து இருக்கு...அடுத்தாப்பல்ல அவன் கட்டிலைப் பார்த்தா போர்வைக் கலைஞ்சுக் கிடக்கு... அவனைக் காணூம்

ஆகா அவனை யாராவது கடத்தியிருப்பாங்களோ... கடத்தல் காரங்க காசு கேட்டா அவனுங்களுக்கு கடலை மிட்டாய் கூடத் தரப்பிடாது.. தொலையட்டும் சரவணன்.. இப்படித் தான் முதல்ல எக்குத்தப்பா யோசிச்சேன்...தூக்கம் குளிர் காத்து பட்டு தெளியவும் யோசனை ஒழுங்கான வழியிலே போக ஆரம்பிச்சது...சுவத்துல்ல இருக்க கடிகாரத்துல்ல மணியைப் பாத்தேன் மணி அஞ்சு தான் ஆகி இருந்துச்சு.. அஞ்சு மணிக்கு அண்ணன் எங்கெ போறான்... கதவைச் சாத்தி தாழ் போட்டுட்டு சட்டையை மாட்டிகிட்டு கிளம்புனேன்...

ஒரு தோராயமா அன்னிக்கு அவன் புகையைக் கக்குன இடத்துக்கு போனேன்... அங்கே அதே மரத்தடியிலே ஒரளவுக்கும் வளையமாவும் சதுரமாவும் புகையை விட்டுகிட்டு இருந்தான்.... ஆனா அன்னிக்கு விட இன்னிக்கு செம வேகம்... ஒரு சிகரெட் முடிஞ்சதும் அடுத்த சிகரெட் எடுத்துப் பத்த வச்சான் அதையும் அதே வேகம் குறையாமல் இழுத்தான்...

ஆகா குளிருக்கு இதமா நானும் ஒரு தம் போடலாம் போல இருந்துச்சு... வெக்கத்தை விட்டு அவன் கிட்டப் போய் ஒரு தம் கடனாக் கேக்கலாமான்னு நான் யோசிக்கவே ஆரம்பிச்சிடேன்.. புகை ஒரு பக்கம் போனாலும் அவன் பார்வை வேறு ஒரு பக்கம் இருந்தது.. அவன் பார்வை போன பக்கம் நானும் போனேன்.. அதற்குள் அவன் தம்மை மிதித்து விட்டு வேகமான நடையில் எதிர் பக்கம் போனான்... நானும் வேகம் கூட்டி பின்னாடியே போனேன்... அவன் முழுசாய் பிடித்து முடிக்காத இரண்டாம் சிகரெட் தரையில் கிடந்து என்னைப் பார்த்தது.. அதில் ஒரு சில வினாடிகள் தொலைத்து நான் நின்னுட்டேன்...

சரவணன் அந்தக் கேப்புல்ல எதிர்பக்கம் போயிட்டான்... நானும் எதிர் பக்கம் பதுங்கி பம்மி போனேன்..அவன் ஒரு வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளேப் போனான்... அவ்வளவு தான் அடுத்த சில வினாடிகளில் அந்த வீட்டில் லைட் போடப்பட்டது.. கூச்சலும் இரைச்சலும் என அவென்யுவே விழிக்கத் தொடங்கியது...

முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை... அவசரத்தில் நான் பதுங்கிகொள்ள இடம் பார்த்து ஒதுங்கினேன்... மூச்சிரைக்க என்னைத் தாண்டி வேகமாய் போய் கொண்டிருந்த சரவணனை என்ன நினைத்தனோ எனக்கே தெரியாது.. என் முழு பலத்தையும் பயன்படுத்தி நான் பதுங்கியிருந்த மறைவிடத்துக்குள் இழுத்து அழுத்தினேன்... அது ஒரு மரக் கூடாரம்.. இந்த பூக்காரங்க எல்லாம் வச்சிருப்பாங்களே அதை மாதிரி கொஞ்சம் பெரிய சைஸ்...

சரவணணும் நானும் பதுங்க அது போதுமானதாக இருந்தது...

"அந்தப் பக்கம் போனான் சார்..."

"பனியில்ல எந்தப் பக்கம்ன்னு சரியா தெரியல்ல சார்"

"யாருக்கும் எதுவும் ஆகல்லயே...."

"இல்ல என் பொண்ணு தான் பார்த்து பயந்து கத்தியிருக்கா...மத்தப் படி எல்லாம் சேப் தான்"

"I THINK WE NEED TO FILE A COMPLAINT WITH POLICE"

"வேணாம் சார் எதுவும் திருடு போகல்ல... அது வேற வயசு பொண்ணு போலீஸ் ஸ்டேசன் அது இதுன்னு விட்னஸ்க்கு கூப்பிட்டா சரி வராது சார்"

"ம்ம்ம் அதுவும் சரி தான்... பேசமா அவென்யுக்கு ப்ரைவெட் செக்யூரிட்டி போட்டுருவோம்... இந்தத் திருட்டுப் பசங்க திரும்பி வந்தாலும் வருவாங்க..."

அங்கு ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டிருந்தார்கள்... நான் சரவணன் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தேன்.. அவன் முகம் பயத்தில் வெளிறி போயிருந்தது.. மூச்சிரைப்பது நிற்க வில்லை..அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் பார்த்தான்...என்ன இருந்தாலும் அண்ணன் ஆச்சே.. அவன் தர்மசங்கடத்தைத் தவிர்க்க நான் மரக்கூடாரம் ஓட்டை வழியே வெளியே பார்த்தேன்..

ரஞ்சனி வீட்டுக்கு முன்னால் கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா கலைஞ்சுப் போயிட்டு இருந்தாங்க.. எல்லாரும் போனப் பின்னாடி கேட்டைச் சாத்த வந்த ரஞ்சனி மரக்கூடாரம் பக்கமா பார்த்தா.. நான் அசையாம அப்படியே இருந்தேன்...அப்புறம் ரஞ்சனி உள்ளே போயிட்டா...

ஒரு பெருமூச்சு விட்டப் படி சரவணன் பாக்கெட்டுக்குள்ள கை விட்டு மீதி இருந்த கடைசி சிகரெட்டை எடுத்து என் வாயில் வச்சுப் பத்த வச்சு புகையை அந்த ஓட்டை வழியா வெளியே விட்டேன்... சரவணன் கையிலே முந்தா நாள் ராத்திர் அவன் வச்சிருந்த பை இருந்தது..அதை அவன் கெட்டியாகப் பிடித்திருந்தான்...

சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்.... புகைக்கு நடுவே இந்த கவிதையும் என் வாயில் இருந்து வெளியெ வந்துச்சு...


தொடரும்

Monday, February 04, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 3

முந்தைய பகுதி படிக்க

படிப்பை பத்தி மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன்.. விளையாட்டுல்லயாவது எனக்கு எதாவது பெருமை தேறுமான்னு கேட்டா அதுவும் ஒரு பெரிய சோக கதை தான்..சரவணன் டென்னிஸ் கோச்சிங் போனான். அதுல்ல நல்ல தேர்ச்சியும் அடைஞ்சிட்டான். ஸ்கூலுக்காக விளையாடினான்.. கப் எல்லாம் கூடி வீட்டுல்ல வச்சிருந்தான். என்னியும் தான் கோச்சிங்ல்ல சேர்த்து விட்டாங்க... ஆனா முதப் பார்வையிலே எனக்கு அந்த கோச்சுக்கும் பொருந்தாப் பார்வையாப் போயிருச்சு.. அவருக்கு என்னைப் பிடிக்கல்ல எனக்கு அவரைச் சுத்தமாப் பிடிக்கல்ல...

கோச்சிங்கற பேர்ல்ல என்னைய கிட்டத்தட்ட எல்லா நேரமும் பந்து பொறுக்கிவிடுற சாகுல்லயே அலையவிட்டான்... ஒரு நாள் கடுப்பாகி பந்தை எடுத்து திரும்பி நின்னுகிட்டிருந்த அவர் நடு மண்டையில்ல நச்சுன்னு அடிச்சுட்டேன்... சேதராம் ஆகிப் போயிருச்சு... புல் கூட முளைக்க யோசிக்கிற அவர் மண்டையிலே ஒரு எலுமிச்சம்பழம் காய்ச்சுருச்சு.. அதை வீக்கம்ன்னும் சொல்லலாம்...அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் கோச்சிங்ல்ல இருந்து நம்ம நீக்கம் தான்...

சரி டென்னிஸ் தான் சரி வரல்லயேன்னு விளையாட்டுல்ல இருந்து விலகி நிக்க நம்ம வீர மனசு ஓப்பல்ல.. ஸ்கூல்ல்ல ஸ்போர்ட்ஸ் டே வந்துச்சு..அதுக்கான தகுதி சுற்றுகள் ஆரம்பத் தேதி நோட்டீஸ் போர்ட்ல்ல போட்டாங்க.. நமக்கு டக்குன்னு ஆசைப் பொங்கிருச்சு..ஓடத் தானே செய்யணும்..பஸ்ல்ல இருந்து இறங்கி ஓடுறது... மரம் ஏறி குதிச்சு ஓடுறது... எங்கிட்டாவது தாவி ஓடுறது... அது போதுமே தகுதின்னு களத்தில் இறங்க முடிவு பண்ணிட்டேன்..அதுல்லயும் ஒரு தடை வந்துச்சு

ஓட்டப்பந்தயம் தகுதி சுற்றுல்ல கலந்துக்கணும்ன்னா ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் வாங்கணும்ன்னு சொல்லிட்டாங்க... நம்ம கிட்ட இருந்ததோ எல்லா முழு பேண்ட் என்னப் பண்ணுறது யோசிக்க ஆரம்பிச்சேன்... டென்னிஸ்க்கு கூட ட்ராக் சூட் தான் போட்டுகிட்டு போவோம்... நம்ம் தைஸ் எல்லாம் இன்னும் அவ்வளவா டெவலப் ஆகாத நேரம்... பெப்சி செவன் பிடோ டிடோ லெக்ஸ் பாத்து இருக்கீங்களா அப்படி இருக்கும் நம்ம கால்... ரொம்ப நேரம் யோசிச்ச பின்னாடி கணேஸ் என்னைப் பாத்து ரொம்பவும் அக்கறையாக் கேட்டான்... டேய் நீ அவசியமா ஓடித் தான் ஆகணுமா....தேவையான்னு யோசி...நானும் எந்த விளைவைப் பத்தியும் கவலைப்படாம ஆமான்னு திடமாத் தலையாட்டினேன்,, எனக்கு ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் ஏற்பாடு செய்யும் பொறுப்பை அவன் ஏற்று கொண்டான்.

தகுதி சுற்று நாள் அன்னிக்கு எப்படியோ ஒரு ஷார்ட்ஸ் ஏற்பாடு பண்ணி கொண்டு வந்திட்டான் கணேஸ்... சைஸ் தான் கொஞ்சம் பெருசா இருந்துச்சு... இருந்தாலும் நாடாவெல்லாம் போட்டு இறுக்கி கட்டி நானும் கிளம்பிட்டேன்...பசங்க எல்லாம் என்னை உற்சாகப் படுத்த ஒரு கும்பலா வந்து இருந்தாங்க.. எனக்குப் பெருமையா இருந்துச்சு... எனக்காக இல்லன்னாலும் உங்களுக்காகவது ஜெயிக்கிறேன்டா அப்படின்னு சொல்லிட்டு ஓட கிளம்பினேன்.. அன்னிக்கு மட்டும் ட்ரெக்ல்ல அப்படி ஒரு விபத்து நடக்காமப் போயிருந்தா.. இன்னிக்கு ஒரு வேளை இந்தியாவுக்காக ஓலிம்பிக்ல்ல ஓடியிருப்பேனோ என்னவோ... என்னப் பண்ணுறது விபத்து எல்லாம் சொல்லிட்டா நடக்குது.. அது பாட்டுக்கு நடக்குது. நாசங்களை ஏற்படுத்துது..

அந்தக் கோர விபத்துக்கு காரணம் என் பக்கத்து ட்ராக்ல்ல ஓடுன கேசவன்... அவன் சிலிப்பாகி விழப் பார்த்தான்... விழப்போனவன் பிடிக்க எதாவது தேட அவன் கையில் சிக்கியது என் ஷார்ட்ஸ் நாடா... அவ்வளவு தான்... புதுசா எதோ ஒரு சோரூம்க்கு ரிப்பன் கட் பண்ண மாதிரி ஒரே கைத் தட்டல் தான்... நான் ஓப்பன் கிரவுண்ட்ல்ல ஓப்பனாகி நிக்க... அந்த விபத்து எங்க பள்ளி ஸ்போர்ட்ஸ் வ்ரலாற்றுல்ல இன்னும் எதோ ஒரு பக்கத்துல்ல இருக்குதாம்.. இப்படித் தான் என் விளையாட்டு வாழ்க்கை முற்றும் முடிந்து அவிந்துப் போனது...

"புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்... உங்க பேங்க்ல்ல எதாவது லோன் கிடைக்குமா பார்த்து சொல்லேன்" சோமு சீனியிடம் கேட்டான். அதுக் கேட்டு நானும் நினைவுக்கு வந்தேன்

"பண்ணலாம் நல்ல ப்ரொபசல் இருந்தாச் சொல்லு...ட்ராப்ட் பண்ணி எடுத்துட்டு உக்காந்து பேசலாம்.. அந்த டிப்பார்ட்மெண்ட்ல்ல நமக்கு வேண்டிய ஒருத்தர் இருக்கார்"

எஸ்.எஸ் லெண்டிங் லைப்ரரி...ஒரு பழைய அட்டைப் பெட்டியைப் பாதியாப் பிரிச்சு அதுல்ல கீரிஸ் ஆயில் வச்சு பெரிசு பெரிசா கையெல்லாம் மை நிறைஞ்சி இருக்க எழுதி முடிச்சு சோமுவைப் பாத்தேன்.. ஆமா நான் முதல் முதல்ல பண்ண வியாபாரம் அது தான்.. லெண்டிங் லைப்ரரி.. முதல்ன்னு மொத்தம் முப்பது ரூபா போட்டோம். நான் பதினைஞ்சு.. சோமு பதினைஞ்சு.. எங்க வீட்டு முன் ரூம்ல்ல இருந்த மூணு செல்ப் தான் நூலகம்.. அதுல்ல இருந்த 18 புத்தகங்களை வச்சு தான் ஒரு சுபயோக தினத்தில் வியாபாரத்தை ஆரம்பிச்சோம்...முதல்ல நூலகத்தில்ல கோகுலம், அம்புலி மாமா, ட்விங்க்ள், அமர் சித்ரகதா, ரத்னபாலா, சிறுவர்மலர், ஸ்போர்ட்ஸ்டார், இப்படி தான் புக் இருந்துச்சு..அவென்யூ வாண்டுகள் தான் எங்க நிறுவனத்தின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள்.. நாலணா வாடகைக்கு எல்லா புக்கும் கிடைக்கும்.. நாலு நாள்ல்ல திருப்பிக் கொடுத்துரணும் அது தான் சட்டம். வியாபாரம் அமோகமாப் போயிட்டு இருந்த நேரம்... சோமுவுக்கு அப்படி ஒரு யோசனை வந்துச்சு..

சும்மா வைக்கிற குழம்பு இன்னும் கமகமன்னு மணம் வீசணும்ன்னா அப்படி இப்படி மசாலா சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்ன்னு ஆளுக்கு ஆள் ஆலோசனை சொல்லுவாங்களே...அந்த டிப்ஸ் சில சம்யம் நல்லா ஒர்க் அவுட் ஆகும் சில சமயம் குழம்பு குப்பைக்கு போற அளவுக்கு நாக் அவுட்டும் ஆகும்...அது மாதிரி தான் ஆச்சு...இப்படி சின்னப்புள்ளங்க பொஸ்தகம் எல்லாம் போட்டு எப்படி நாம் முன்னேறுவது.. கொஞ்சம் வியாபாரத்தை "பெருசா" பண்ணலாம்ன்னு சொன்னான். சேர்த்து வச்ச துட்டை எல்லாம் எடுத்து அப்படி இப்படி நாலு புக் வாங்கி வச்சோம்... அதுக்கு மட்டும் எட்டணால்ல இருந்து ஒரு ரூபாய் வரைக்கும் ரேட் எல்லாம் வச்சு முதல்ல வியாபாரம் பிச்சுகிட்டுப் போச்சு... ரஞ்சனி வந்து எங்க லைப்ரரில்ல மெம்பர் ஆகுற வரைக்கும்...

பொண்ணுங்க எல்லாம் அந்த மாதிரி புக் படிப்பாங்களான்னு சோதிச்சுப் பாக்குற பாழாப் போன ஆசை சோமுவுக்கு வந்து தொலைச்சுது.. அந்த ஆசையை சோதனையா அவன் செய்ய தோதா ரஞ்சனியின் வரவு அமைஞ்சுப் போச்சு...சோதனையின் முடிவைச் சொல்லணுமா என்ன..

ரொம்ப நாள் வரைக்கும் எங்க வீட்டு வாசல்ல அந்த அட்டைப் பெட்டி பெயர் பலகையில் ஒரு எஸ் மட்டும் கிழிந்து தொங்கி கொண்டிருந்தது...எங்கள் முதல் வியாபார முயற்சி இப்படி ஒரு அல்ப ஆசையில் அல்பாயுசில் முடிந்துப் போனது..அந்தக் கிழிந்த எஸ் அட்டையும் பின்னொரு மழை நாளில் நன்றாக நனைந்துப் போனது மெல்ல மொத்தமாய் கிழிந்துப் போனது...

அதுக்குப் பின்னாடி எனக்கு வியாபார கனவுகள் எதுவும் வர்றதே இல்ல.. ஆனா சோமு இன்னும் அந்த கனவுகளைச் சுமந்துகிட்டு தான் திரியுறான்னு நினைக்கும் போது மெல்ல சிரிச்சுகிட்டேன்.

மேடையில் அப்போது அவென்யு சிறுவர்கள் குழுவாக இணைந்து ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாட்டைப் பாடிகிட்டு இருந்தாங்க...இது போல நாங்களும் எத்தனை தடவைப் பாடியிருப்போம் யோசிச்சுப் பாத்துகிட்டேன். அந்த குழுவில்ல இரட்டை குழந்தைகள் வேறு இருந்தாங்க... ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுகிட்டு அருமையாப் பாடிகிட்டு இருந்தாங்க... இப்படி ஒரு ஆண்டுவிழா நடக்கும் போது... நான் பன்னிரெண்டாம் கிளாஸ் முடிச்சிருந்த நேரம்ன்னு நினைக்கிறேன்... நாங்க ஒரு குழுவா மேடையேறி..அவென்யு வரலாற்றில் முதல் முறையாக சும்மா அதிரும் படியான ஒரு கானாக் கச்சேரியை போட்டு தாக்குனோம்..

சின்னப் பசங்க எல்லாம் செம குத்துப் போட.. அவென்யுவே அல்லோலப்பட்டு அப்படி ஒரு கும்மாளமாப் போச்சு..அன்னிக்கு வாழ்க்கையிலே நான் ரொம்ப சந்தோசப்பட்டேன் ஆனா அந்த சந்தோசம் அதிகப்பட்சம் அஞ்சு நிமிசம் கூட நீடிக்கல்ல... எங்களுக்கு அடுத்து மேடை ஏறுனான் என் அண்ணன் சரவணன்...நம்ம குரல் தேனிசை தென்றல்ன்னா... அவன் குரல் கொஞ்சம் மலையாள தாஸ் ஏட்டன் குரல்... அதுல்லயும் காக்கைச் சிறகினிலே நந்தலாலான்னு ஆரம்பிச்சு அவன் குரல் ஏத்த இறக்கத்துல்ல பெருசு சிறுசு.. முக்கியமா பொண்ணுங்க எல்லாம் சொக்கி சுழண்டாளுங்க...இது எல்லாம் என் கண் முன்னாடியே நடந்துச்சு...

ஹிரோன்னு சொல்லி இன்ட்ரோ கொடுத்து நடுவுல்ல காமெடியன் ஆன மாதிரி இருந்துச்சு எனக்கு.

சரவணா...சரவணா... இன்னொரு பாட்டு பாடுப்பா... எல்லாரும் கேட்க....

ம்ம்ம்ம் நல்ல ரொமான்டிக்காப் பாடுப்பா... பொண்ணுங்க பக்கம் இருந்து குரல் வந்தது...யாராக இருக்கும் என நான் தலையை நிமித்தி பாத்திருப்பேன், ஆனா ஏற்கனவே கடுப்பிலே கண்டப் படி கவுந்து போய் கிடந்தது என் மனசு...

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.. எம் மனசுல் அம்பு விட்ட நிலா.... அவன் குரல் நான் அவென்யு வாசலைத் தாண்டி வந்த பிறகும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு கோவத்துல்ல எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடந்தேன்.. கால் வலிக்கற வரைக்கும் நடந்தேன்..அவன் குரல் என் காதில் விழாத வரை நடந்தேன்.. எனக்கு கிடைக்கிற எல்லாச் சந்தோசத்துல்லயும் பங்கு போடணுமா என்ன.... தலை வலித்தது..

தலை வலிக்கு சிறந்த மருந்து எதுன்னு யோசிச்சு முடிக்கறதுக்கு முன்னாடியே நண்பர்களிடமிருந்து வைத்திய முகாமுக்கு அழைப்பு வந்தது... நல்லா தண்ணியைப் போட்டுட்டு கணேஸ் பைக்ல்ல பின்னாடி உக்காந்து அவென்யுக்குள்ளே நுழையும் போது அவன் தான் என் கண்ணில் பட்டான். பத்து மணியாச்சிருச்சு.. பைய போத்திகிட்டு தூங்குற நேரமாச்சே.. இங்கே என்னப் பண்ணுறான்... தள்ளாட்டமாய் வண்டியின் பின்புறம் இருந்து பார்த்தேன்...

சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் வண்டியை விட வேகமாய் பைய தம் போட்டுகிட்டு இருந்தான்... என் அண்ணன் சரவணன் .. இம்புட்டு அழகா ரவுண்ட் ரவுண்ட்டா புகை விடுவானா.... எனக்கு போதை தெளிந்தது...

தொடரும்

Thursday, January 31, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 2

முந்தைய பகுதி படிக்க

வரதராஜன் அவென்யுவின் வரலாற்றை மேடையில் ஏறி குருமூர்த்தி அங்கிள் சொல்ல ஆரம்பிக்கும் போது மணி சரியா ஆறு...

அதைக் கேட்டு முடிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான பொறுமை வேணும்.. அம்பது வருச வரலாறு ஆச்சே சட்டுன்னு சொல்லிர முடியாது இல்லையா... முடிஞ்ச் வரைக்கும் சுருக்கமாச் சொல்லுறேன் கேளுங்க...

வரதராஜன்ங்கறவர் திருச்சிக்கு பக்கம் இருக்க பெரம்பலூர்காரர்.. நாற்பதுகளின் இறுதியில் சென்னைக்கு வந்து இரும்பு உதிரி பாகம் தயாரிக்குற ஒரு சின்ன லேத்து பட்டறை ஆரம்பிச்சார்.. அதுல்ல அவரையும் சேர்த்து மொத்தம் நாலு வேலைப் பார்த்தாங்க..அதுல்ல ஒருத்தர் குருமூர்த்தி அங்கிள்...அப்போ அங்கிளுக்கு பத்து பன்னிரெண்டு வயசு இருக்கும்... நாளாவட்டத்துல்ல லேத்து நல்லா போகவே... வேலைக்குன்னு திருச்சிகாரவங்க எல்லாம் வரதராஜன் கிட்ட கிளம்பி வர ஆரம்பிச்சாங்க..அப்படி அம்பதுகளின் பிற்பகுதியில் வந்தக் கூட்டத்துல்ல எங்க அப்பாவும் ஒருத்தர்.

பகுதி நேரம் அங்கே வேலைப் பாத்துகிட்டே படிப்பையும் அப்பா தொடர குருமூர்த்தி அங்கிள் கொஞ்சமா உதவுனார்ன்னாலும் பெரிய அளவுல்ல உதவுனது வரதராஜன்.

இப்படி திருச்சியில்ல இருந்து வந்த கும்பல் எல்லாரும் தங்கறதுக்கு லேத்து பட்டறை பக்கத்துல்லயே அறைகள் கட்டிக் கொடுத்தார் வரதராஜன். பின்னர் பட்டறை பெரிதாகி பேக்டரியா மாறி இடம் பெயர்ந்தது.. வெறும் அறைகளாக இருந்த இடம்..கொஞ்சம் கொஞ்சமா வீடுகள் நிறைந்த குடியிருப்பாவே மாறி போனது...

அப்போ அந்த குடியிருப்புக்கு பெயர் எதுவும் கிடையாது...ஆனா பேச்சளவிலே வரதராஜன் காலனின்னும்..வரதராஜன் அவென்யுன்னும் அழைக்கப்பட்டு பின்னாடி சட்டரீதியாக வரதராஜன் அவென்யுவாக கிட்டத்தட்ட அறுபதுகளின் பிற்பாதியில் நிலைப்பெற்றது.. நல்ல மனசு படைச்ச வரதராஜனால் அங்கு பணியாற்றிய அப்பா, குருமூர்த்தி அங்கிள் இன்னும் பலர் சொந்த வீட்டுக்காரர்கள் ஆனார்கள்...

வரதராஜன் தயவாலும் அப்பா, குருமூர்த்தி அங்கிள் போன்றோரின் முயற்சிகளாலும் அவென்யு பெரும் வளர்ச்சிகளை அடைந்தது.. பூங்கா...தார் ரோடு...மரங்கள்...மின் விளக்கு..நீர் வசதி சின்னதாய் ஒரு வணிக வளாகம் விளையாட்டுத் திடல் அப்படின்னு அந்த நற்பணிகளின் விளைவாய் கிடைச்ச பலன்களின் பட்டியல் ஒரளவுக்கு நீளமானது தான்...

நாங்க எல்லாம் ஹஸ்கூல் வந்த காலத்துல்ல தான் இந்த ஆண்டுவிழா கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பிச்சது.. அதுக்கு சங்கீதா அப்பா சந்தானம் அங்கிள் தான் முக்கிய காரணம்... பிற்காலங்களில் வரதராஜனாரை அவ்வளவாய் தெரியாத குடும்பங்கள் எங்கள் அவென்யுக்கு வந்து குடியேறிய போது இந்த ஆண்டு விழாக்கள் மூலம் நாங்கள் ஒன்றுபட உதவியது..

இது தான் வரதராஜன் அவென்யுவின் அம்பது வருட வரலாறு...

"ரஞ்சனி வரல்லயா..." என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சோமுவிடம் கேட்டேன்.

"இல்லப்பா....கணேஸ் வந்திட்டான் பார்..." அப்போது தான் கணேஸ் அவென்யுவிற்குள் நுழைந்தான். எங்களைப் பார்த்து கையை அசைத்தப் படி வந்தான்.

"தொப்பையும் தொந்தியுமா அசல் கணேசனாவே ஆயிட்டான்" சோமு சிரித்தப் படியே சொன்னான்.

கணேசனோடு ஜிம் போன அந்த பொற்காலங்கள் நினைவுக்கு வந்து போகவே நானும் சிரித்தேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின் பேச்சு அவரவர் வேலைப் பக்கம் திரும்பியது.

"என்னடா பேங்க் வேலை எல்லாம் சொகமாப் போவுதா?" சீனியைக் கேட்டான் சுதாகர்

"எங்கேய்யா எல்லாம் ஒரே போட்டா போட்டியாப் போவுது.... கட் த்ரோட் காம்ப்டஷின்... டார்கெட் வேற மாசம் மாசம் மேலேப் போயிட்டே இருக்கு... ஆறு லட்சம் பேர் இருக்க ஏரியாவுல்ல ஆறு கோடி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி டார்கெட்...பாப்புலேசன் கன்ட்ரோல் மாதிரி டார்கெட் கன்ட்ரோல்ன்னு ஒண்ணு வந்தா நல்லா இருக்கும்...."
சீனியின் பாதி பேச்சிலே என் மனம் எங்கெங்கோ அலைய ஆரம்பித்தது.. மேடையில் அப்பா உட்கார்ந்திருந்தார். அப்பாவை நான் பல முறை மேடையில் பார்த்திருக்கிறேன்.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர் கம்பீரம் கூடிக்கொண்டு போவதாகவே எனக்கு படும்...

மாமரத்தில் ஆங்காங்கு இருந்த பிஞ்சுகள் மீது என் கண்கள் போய் வந்தன...இந்த மாமரக் கன்னு நான் நட்டது என நினைக்கும் போது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது...

"நைட் பார்ட்டி இருக்குல்ல...." கணேஸ் கிசுகிசுப்பாய் கேட்டான்.

"அது இல்லாமலா..எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சி" சோமு பதில் சொன்னான்.

"என்னப் பார்டி... அதான் சாப்பாடு எல்லாம் இங்கேயே முடிக்கப் போறோமே..." சீனியின் மனைவி கேட்டாள்.

"ம்ம்ம் அம்மாடி இது இந்த திருட்டு பசங்க பார்ட்டி...நமக்கெல்லாம் அழைப்பு கிடையாது" எனக் கண்ணடித்துச் சிரித்தாள் கார்த்திகா.

"அப்படின்னா?" அவள் லேசான முறைப்போடு சீனியைப் பார்த்தாள்.

"இல்லம்மா வெறும் பியர் மட்டும் தான்...ஒரு வருசமாச்சு நான் பியர் அடிச்சு... ப்ளிஸ்" சீனியின் கெஞ்சல் பார்த்து எல்லாருக்கும் சிரிப்பு வந்தது.எனக்கு வேற என்னவோ ஞாபகம் வந்தது....

"ஒர்ரெ ஒரு பியர் தான்ப்பாஆஆஆஆ......" அந்த ஆ எபெக்ட் அப்பாவின் பெல்ட் என் முதுகின் நடு மத்தியில் கோடு ரோடு எல்லாம் போட்டு போனதால் என் வாயில் இருந்து வந்தது...

"எங்கேயிருந்துடா உனக்கு இந்த தைரியம் வந்துச்சு... நம்ம பரம்பரையிலே யாருமே இதை எல்லாம் தொட்டது இல்ல..." அப்பாவின் கோபம் குறையவில்லை...

"நாட்டுல்ல மக்களை குடிமக்கள்ன்னு அரசாங்கமே கூப்பிடுது..... ஆனா தம் மக்கள் குடிச்சா அப்பாக்களுக்கு பொறுக்க மாட்டேங்குது... அரசாங்கம் சொல்லுறதை கேப்ப்பேனா...இல்ல அப்பா சொல்லுறதைக் கேப்பேனாஆஆஆஆஆஆ" என் பேச்சு முடிவதற்குள் அடுத்த ரவுண்ட் ரோடு போடும் வேலையை ஆரம்பமாக மீண்டும் அதே ஆ எபெக்ட் என்னிலிருந்து வெளிபட்டது...

"டேய் மாப்பிள்ளை.. நீ இவனைப் பெத்ததுக்கு பேசாம நைட் ஷோவுக்குப் போயிருக்கலாம்டா.. விடு விடு இன்னும் எதுக்கு உன் கையை புண்ணாக்கிட்டு இருக்க..." சொன்னது என் மாமா.. அந்த ஆளுக்கும் எனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் தான்.


அந்தாளு என்னை எங்க அப்பா கிட்ட போட்டுக் கொடுக்கறது ஒண்ணும் புதுசு இல்ல..வழக்கமா நடக்குறது தான்... ஆனா எப்பவும் இல்லமா எனக்கு இப்போ அந்த சந்தேகம் ரொம்ப வலுவாச்சு.. நான் பொறந்ததுக்கும் அப்பா நைட் ஷோ போகறதுக்கும் என்ன சம்பந்தம்..அடி வாங்கிய வேகத்தில் மூளை வேறு கொஞ்சம் மெதுவாய் யோசித்தது....பின்னாளில் ஒரு பொழுதில் அந்த விவரமெல்லாம் தெரிந்தப் பின் மாமாவோடு உட்கார்ந்து கள் குடிக்கும் போது மாமாவைப் பார்த்து"யோவ் மாமா உன்னிய பெத்ததுக்கு தாத்தா ராத்திரி வயல் காவலுக்குப் போயிருக்கலாம்ய்யா .. வயலாவது மிஞ்சியிருக்கும்.. குடும்பமாவது செழிச்சுருக்கும்ன்னு " டயலாக் விட்டு நான் தீத்துகிட்டது தனிக்கதை.

"பத்தாம் கிளாஸ் ப்ரீட்சையிலே தேறுவானான்னு தெரியல்ல... பதினைஞ்சு வயசுல்ல பீர் கேக்குது....இவனை எல்லாம்...." மறுபடியும் பெல்ட் உயர கிளம்பியது....

"அப்பா......." அது என் குரல் இல்லை....அவனே தான் .. என் அண்ணன்... அவன் தான் அப்பாவைக் கூப்பிட்டான்.

"ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துருச்சுப்பா....நான் தான்ப்பா ஸ்கூல் பர்ஸ்ட்.... 1200க்கு 1162 மார்க்ப்பா...."

அப்பாவின் பெல்ட் என் மீது லேசாய் உரசியப் படி தரையில் விழுந்து நாதியற்று கிடந்தது... அந்த நிமிடம் எனக்கும் அதுக்கும் அதிக வித்தியாசம் இல்லை..

"உன்னோட இந்தச் சாதனைப் பிரதாபத்தைக் கேக்குறதுக்கு முன்னாடி இன்னும் ஒரு அம்பது நூறு பெல்ட்டடி வாங்கி நான் அல்பாயுசுல்ல போயிருக்கலாம்டா..." எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்

சரவணன் என் அண்ணன் தான் ஆனால் ஏனோ அவனை எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை.. அவனுக்கு என்னைப் பிடிக்குமா நான் என்றுமே தெரிந்து கொள்ள முயன்றதில்லை...

தொடரும்

Thursday, January 24, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 1

வரதராஜன் அவென்யூ.... என் வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான் கழிச்ச இடம்...வரதராஜன் அவென்யு பரபரப்பான சென்னை நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த ஒரு பதட்டமில்லாத குடியிருப்பு பகுதி. வாசலில் எம்.ஜி.ஆர் ஆட்டோ ஸ்டாண்ட். அதுக்குப் பக்கத்துல்ல ஒரு பொட்டி கடை..அந்தக் கடைக்கு பேர் "காகா" கடை.. பெயர் காரணம் இன்னி வரைக்கும் தெரியாது.. நான், சீனி,சோமு, சுதாகர்,கணேஸ் எல்லாம் முதல் முதலா திருட்டு தம் அடிக்க காசு சேர்த்து ஒரு சிசர்ஸ் வாங்குனோம்... அந்த ஒரு சிகரெட்டை அஞ்சு பேர் இழுத்தோம்... அப்புறம் வீட்டுல்ல அகப்பட்டு அகம் புறம் எல்லாம் அல்லல் பட்டது ஒரு தனி புராணம்.

காகா கடைக்கு நாலு கடை தள்ளி மணி சைக்கிள் கடை... ஹவர் சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமிடம்.. அரை ஹவருக்கு எட்டணா.. ஒரு சைக்கிளை இரண்டு பேர் எடுத்துப்போம்.. ஆளுக்கு நாலணா..சீனி தான் நமக்கு செட்... பயலுக்கு சைக்கிள் ஓட்டவே பயம்... அதுன்னாலே நமக்கு எக்ஸ்ட்ராவா அஞ்சு பத்து நிமிசம் சிக்கும்...மாடி வீட்டு கார்த்திகா...கடைசி வீட்டு ரஞ்சனி இந்தக் கும்பல் முன்னாடியும் பின்னாடியும் அந்தச் சைக்கிள்ல்ல போய் தான் சீன் எல்லாம் போடுவோம்...அஞ்சாம் கிளாஸ்ல்ல இருந்து பத்தாம் கிளாஸ் வரைக்கும் இந்த சைக்கிள் சாகசம் எல்லாம் தொடர்ந்தது..அப்புறம் ஏனோ கார்த்திகா, ரஞ்சனி மேல எல்லாம் இருந்த ஈர்ப்பு வெகுவா குறைஞ்சுப் போச்சு... அதுக்கெல்லாம் காரணம் என் கூட கணக்கு ட்யூசனுக்கு வந்த சங்கீதா மேல எனக்கு ஒரு இது வந்தது தான்னு அப்போ நினைச்சேன்...

பத்தாம் கிளாஸ் லீவுல்ல மணி சைக்கிள் கடை மாடியிலே மிலிட்டிரிகாரரு ஒருத்தர் ஜிம் ஆரம்பிச்சார், அர்னால்ட் நடிச்ச காமாண்டோ படத்து போஸ்ட்டரும் ராம்போ படத்து ஸ்டலோன் போஸ்ட்டரும் இன்ன பிற உடை அணிய மறுத்த அந்த கால சல்மான் கான்களும் கை மடக்கி மாரை நிமிர்த்தி கொண்டிருக்கும் போஸ்ட்டர்களும் ஜிம்க்கு எங்களை வா வா என அழைக்க... உள் பனியனை வெளியே போட்டுகிட்டு சாயங்காலம் ஆன நானும் கணேசும் கிளம்பிருவோம்... நான் ஸ்டலோனாவும் அவன் அர்னால்ட்டா ஆவுறதும் எங்க ஒரே லட்சியமா வலம் வந்த காலமது.. இதுல்ல கொடுமை என்னன்னா அர்னால்ட்டோட முழு பெயரை சொல்ல எங்களால் அந்த காலக் கட்டங்களில் முடிந்தது இல்லை... அர்னால்ட் சுவாசினேகர் என்ற அவர் பெயரை அர்னால்ட் சொஜ்ஜிநக்குனார் என்று கணேஸ் தான் கிட்டத்தட்ட வாய் சுளுக்காமல் சொல்லுவான்..

அந்த ஒரே காரணத்துக்காக அர்னால்ட்டின் அடுத்த வாரிசா அவனை அறிவித்து விட்டோம்.. இந்த ஜிம் எல்லாம் நல்லா தான் போச்சு....ஒரு நாள் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகி தூக்க கூடாத பாரத்தை தூக்க முடியாம தூக்கி என் கால் சுண்டு விரல் சிதற நான் சிலிப்பாக்குற வரைக்கும்.. அப்புறம் அடுத்து வந்த ஆஸ்பத்திரி செலவுகளால் என் ஜிம் செலவு நிறுத்தப்பட்டது..தென்னகம் ஒரு சில்வர்ஸ்டர் ஸ்ட்லோனை இழக்க வேண்டியதாய் போனது

வரதராஜன் அவென்யூவைச் சுத்தி ஏகப்பட்ட மரங்கள் இருக்கும்...நானே என் கையால நட்டு வச்ச மரங்களும் இருக்கு.. அப்படி ஒரு மாமரத்துக்கு அடியிலே தான் இப்போ நின்னுகிட்டு இருக்கேன். இதமானக் காற்று வந்து முகத்தில் மோதிப் போனது...நான் கட்டியிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன்.. மணி நாலேகால்... இன்னும் இரண்டு மணி நேரத்துல்ல எல்லாரும் வந்துருவாங்க...சீனி...கணேஸ்..சுதா...சோமு எல்லாரும் வந்துருவாங்க...அப்படியே யோசிச்சுகிட்டே மரத்தடி பெஞ்சுல்ல தலையைச் சாய்த்தேன்...

"சிவா.... சவுக்யமா... இந்த வாட்டியும் வீட்டுல்ல கூட்டிட்டு வர்றல்லயா?" கார்த்திகா இடுப்பில் அவள் இரண்டாவது பொண்ணு.. சின்ன வயசு கார்த்திகா மாதிரியே இருந்தாள்...

"இல்ல கார்த்தி.... அவங்க அப்பாவுக்கு ஓடம்பு சரியில்ல...அதான் வர முடியல்ல... வரணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டாப்பா" சிரித்தப் படி பதில் சொன்னேன்...

"ஹே சிவா...." சீனியே தான்... போன வருசம் வராதவன் இந்த வருசம் சீக்கிரமாவே வந்துட்டான். அவனைப் பார்த்தவுடனே எனக்குச் சந்தோசம் அப்படியே பொங்கிருச்சு. கார்த்திகாவின் வீட்டுகாரரும் எங்களோடு சேர்ந்து கொண்டார்... மரத்தடி கொஞ்சம் கொஞ்சமாய் களை கட்டியது... கார்த்திகா வீட்டில் இருந்து காபி பலகாரம் வந்தது...

சீனிக்கு போன வருசம் தான் கல்யாணம் ஆகி இருந்தது.. அவனோடு அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணையேக் காதலித்து கல்யாணம் பண்ணிகொண்டிருந்தான். அவளையும் கூட்டி வந்திருந்தான். அவளும் சட்டென எங்களோடு பழகிவிட்டாள். நல்ல கலகலப்பான ஜோடியாக தெரிந்தார்கள்... என்னவளின் நினைவு வந்தது.. அவ வந்திருந்தா இன்னும் கலகலப்பா இருந்து இருக்கும்..மனத்திற்குள் சொல்லிக்கொண்டேன்.

மணி அஞ்சரையை நெருங்கும் போது கிட்டத் தட்ட எல்லாருமே வந்து விட்டிருந்தார்கள்..கணேஸ் மட்டும் வரவில்லை.. சோமு அவன் மொபைலுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

முகம் கழுவிட்டு வரலாம்ன்னு எழுந்து வீட்டுக்கு கிளம்பினேன்...அப்போது வழியில் சங்கீதாவைப் பார்த்தேன்....

"ஹேய் சங்கீ என்ன இது.... போனத் தடவைப் பாத்தப்போவும் கேரியிங்க்கா தான் இருந்த.. இப்போவுமா... உன் வீட்டுகாரருக்கு ரொம்ப சவுகரியமான உத்யோகம் போலிருக்கு..."

"அடப்பாவி நீ என்னப் பாத்து ரெண்டு வருசம் ஆச்சு.... ஆனாலும் உனக்கு இன்னும் பழைய நக்கல் குறையல்லடா..... உனக்கு ஒரு அறை கொடுத்தது பத்தாதுடா... பத்து அறை கொடுத்துருக்கணும்..."
பரஸ்பர நல விசாரிப்புக்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கலாம்ன்னு சொல்லிட்டு வீட்டை நோக்கி கொஞ்சம் வேகமாகவே நடந்தேன்.

நடக்கும் போதே சங்கீதா என் கன்னத்தில் அறைந்த அந்த பழைய சம்பவம் மனத்தில் நிழலாடியது..அப்படியே கை அதுவாக கன்னம் சென்று தடவியது. உதட்டில் என்னையுமறியாமல் ஒரு புன்னகை.

காலம் தான் எவ்வளவு மருத்துவம் பார்க்கிறது..மனத்தில் ஏற்படும் எத்தனையோ காயங்கள் காலத்தின் சுழற்சியால் குணப்பட்டு போகிறது....அந்த விதத்துல்ல பத்து வருசத்துக்கு முந்தி சங்கீதா என் கன்னத்துல்ல அடிச்சது அன்னிக்கு ரொம்பவே பெரிய வேதனை...ஆனா இன்னிக்கு நினைச்சா சிரிப்பா வருது... விஷ்யம் பெரிசா ஒண்ணுமில்லங்க.... பார்க்க அழகா இருப்பா சங்கீதா பானுப்பிரியா மாதிரி கண்ணு...கொஞ்சம் மயக்கம்.. ரொம்பவே கிறக்கம்... இதுல்ல கூட இருந்த பசங்க எல்லாம் உசுப்பேத்த..மலையாள கரையோரம் நம்ம காதல் புயல் மையம் கொண்டுருச்சு... அப்போ வேற தலைவரோட முத்து படம் வேற வந்துச்சா.. அதுல்ல தலைவர் கேரளா போய் எல்லாரையும் கேப்பாரே.... ஆங் அதே தான் அதை தான் ஒரு சிகப்பு ஸ்கெட்ச் பேன் வச்சு ஒரு நல்ல ஏ4 பேப்பர்ல்ல எழுதி கீழே சிவா அப்படின்னு ஸ்டைலா கையெழுத்து போட்டு அவ கிட்டக் கொடுத்தேன்..பொண்ணுக்கு பளிச்சுன்னு கோபம் வந்து பளார்ன்னு அறைஞ்சுட்டா..

ஏத்திவிட்ட எல்லா பயல்களும் எட்டப்பனா மாறி ஓட்டமெடுக்க... ஒரு மாதிரியா போயிருச்சு...ஒரு வாரம் வாழ்க்கையே பிடிக்கல்ல..அதுக்கப்புறம் அடுத்த ஞாயித்துகிழமை. சங்கீதாவே என்னைப் பாக்க என் வீட்டுக்கு வந்தா...

"ஏன் ட்யூசனுக்கு வர்றல்ல?" ரொம்ப உரிமையாக் கேட்டா."

" .......... "
பேசல்லன்னா பரவாயில்ல... இந்தா ஏ4 பேப்பர் ரெட் ஸ்கெட்ச் பேன் எழுதிக் காட்டு" என்றாள்

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது...அந்த சிரிப்பின் ஊடே என் ஆயுசுக்கு நான் கொண்டாடும் படியான ஒரு சினேகிதியாய் சங்கீதா எனக்கு கிடைத்தாள்..என்னவளின் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்த மூஞ்சிக்கு ( என் மூஞ்சி தான்) இப்படி ஒரு தேவதை அமையறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்..பேசாம தாலியைக் கட்டுடா என அன்பு கட்டளை போட்டவர்களில் முதன்மையானவள் அவளே....

வீட்டுக்குப் போய் முகம் கை கால் எல்லாம் கழுவிட்டு மதியம் தேய்ச்சு வாங்குன சட்டைப் பேண்ட் போட்டுகிட்டு வாசலுக்கு வந்தேன்....

"இருடா நானும் வர்றேன்" என கிளம்பிய அப்பாவை ஆச்சரியமாய் பார்த்தேன்.

அப்பா வருவதற்குள் நான் சொல்ல வேண்டிய விசயம் ஒண்ணுருக்கு....
"ஆமாங்க என் பேர் சிவகுமார்...சிவான்னு கூப்பிடுவாங்க....சின்ன வயசுல்ல சிறுத்தை சிவான்னு செல்லமாக் கூப்பிடுவாங்க...இப்போ நான் இருக்கது பெங்களூர்ல்ல... வேலை பாக்குறது..பிளாக் எல்லாம் பிளாக் பண்ணாத ஒரு நல்ல ஐடி கம்பெனியிலே... எனக்கு ஒரு தடவை மட்டும் கல்யாணம் ஆயிருச்சு... ஒரு பொண்டாட்டி ஒரு பொண்ணு.. அப்பா..அம்மா இருக்கது சென்னையிலே.. நான் பிறந்து வளந்த வரதராஜன் அவென்யூல்ல...இப்போ நான் இங்கே வந்துருக்குது... வரதராஜன் அவென்யூவோட ஆண்டு விழாவுக்கு....அவென்யூ கட்டி சரியா அம்பது வருசம் ஆயிருச்சு... அம்பதாவது ஆண்டு விழா இன்னும் அரை மணி நேரத்துல்ல துவங்கப் போகுது... அதுக்கு தான் எல்லாரும் வந்துருக்காங்க....

உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் எங்க வீட்டு வேப்பமரத்து காத்து போல வராதுன்னு நான் அடிக்கடி என்னவளிடம் சொல்வது உண்டு... இப்பவும் சொல்லணும் போல இருந்துச்சு...அந்த அளவுக்கு அம்சமா அந்த காத்து என்னச் சுத்தி வந்துச்சு.... ஊருக்குப் போனதும் உன் புராணம அவசியம் பாடுறேன்ப்பா என காற்றின் காதுகளில் மெதுவாக கிசுகிசுத்தேன்..

அப்பாவின் கரம் என் தோள் மேல் விழுந்தது.....அவர் கையில் ஒரு பார்சல்....

"என்னதுப்பா இது?"

"பரிசு....சரவணன் பேர்ல்ல...அவென்யூ பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...." அப்பா என்னோடு நடக்க ஆரம்பித்தார்...

நான் பதில் எதுவும் சொல்லவில்லை... என் முகத்தில் அறைந்த வேப்ப காற்று அந்த நிமிடத்தில் வெப்பம் கொப்பளித்தது....
உங்க கிட்டச் சொல்லுறதுக்கு என்ன..... என் அண்ணன் தான் சரவணன்... என் அண்ணன் பேர் தான் சரவணன்...

தொடரும்