Thursday, January 31, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 2

முந்தைய பகுதி படிக்க

வரதராஜன் அவென்யுவின் வரலாற்றை மேடையில் ஏறி குருமூர்த்தி அங்கிள் சொல்ல ஆரம்பிக்கும் போது மணி சரியா ஆறு...

அதைக் கேட்டு முடிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான பொறுமை வேணும்.. அம்பது வருச வரலாறு ஆச்சே சட்டுன்னு சொல்லிர முடியாது இல்லையா... முடிஞ்ச் வரைக்கும் சுருக்கமாச் சொல்லுறேன் கேளுங்க...

வரதராஜன்ங்கறவர் திருச்சிக்கு பக்கம் இருக்க பெரம்பலூர்காரர்.. நாற்பதுகளின் இறுதியில் சென்னைக்கு வந்து இரும்பு உதிரி பாகம் தயாரிக்குற ஒரு சின்ன லேத்து பட்டறை ஆரம்பிச்சார்.. அதுல்ல அவரையும் சேர்த்து மொத்தம் நாலு வேலைப் பார்த்தாங்க..அதுல்ல ஒருத்தர் குருமூர்த்தி அங்கிள்...அப்போ அங்கிளுக்கு பத்து பன்னிரெண்டு வயசு இருக்கும்... நாளாவட்டத்துல்ல லேத்து நல்லா போகவே... வேலைக்குன்னு திருச்சிகாரவங்க எல்லாம் வரதராஜன் கிட்ட கிளம்பி வர ஆரம்பிச்சாங்க..அப்படி அம்பதுகளின் பிற்பகுதியில் வந்தக் கூட்டத்துல்ல எங்க அப்பாவும் ஒருத்தர்.

பகுதி நேரம் அங்கே வேலைப் பாத்துகிட்டே படிப்பையும் அப்பா தொடர குருமூர்த்தி அங்கிள் கொஞ்சமா உதவுனார்ன்னாலும் பெரிய அளவுல்ல உதவுனது வரதராஜன்.

இப்படி திருச்சியில்ல இருந்து வந்த கும்பல் எல்லாரும் தங்கறதுக்கு லேத்து பட்டறை பக்கத்துல்லயே அறைகள் கட்டிக் கொடுத்தார் வரதராஜன். பின்னர் பட்டறை பெரிதாகி பேக்டரியா மாறி இடம் பெயர்ந்தது.. வெறும் அறைகளாக இருந்த இடம்..கொஞ்சம் கொஞ்சமா வீடுகள் நிறைந்த குடியிருப்பாவே மாறி போனது...

அப்போ அந்த குடியிருப்புக்கு பெயர் எதுவும் கிடையாது...ஆனா பேச்சளவிலே வரதராஜன் காலனின்னும்..வரதராஜன் அவென்யுன்னும் அழைக்கப்பட்டு பின்னாடி சட்டரீதியாக வரதராஜன் அவென்யுவாக கிட்டத்தட்ட அறுபதுகளின் பிற்பாதியில் நிலைப்பெற்றது.. நல்ல மனசு படைச்ச வரதராஜனால் அங்கு பணியாற்றிய அப்பா, குருமூர்த்தி அங்கிள் இன்னும் பலர் சொந்த வீட்டுக்காரர்கள் ஆனார்கள்...

வரதராஜன் தயவாலும் அப்பா, குருமூர்த்தி அங்கிள் போன்றோரின் முயற்சிகளாலும் அவென்யு பெரும் வளர்ச்சிகளை அடைந்தது.. பூங்கா...தார் ரோடு...மரங்கள்...மின் விளக்கு..நீர் வசதி சின்னதாய் ஒரு வணிக வளாகம் விளையாட்டுத் திடல் அப்படின்னு அந்த நற்பணிகளின் விளைவாய் கிடைச்ச பலன்களின் பட்டியல் ஒரளவுக்கு நீளமானது தான்...

நாங்க எல்லாம் ஹஸ்கூல் வந்த காலத்துல்ல தான் இந்த ஆண்டுவிழா கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பிச்சது.. அதுக்கு சங்கீதா அப்பா சந்தானம் அங்கிள் தான் முக்கிய காரணம்... பிற்காலங்களில் வரதராஜனாரை அவ்வளவாய் தெரியாத குடும்பங்கள் எங்கள் அவென்யுக்கு வந்து குடியேறிய போது இந்த ஆண்டு விழாக்கள் மூலம் நாங்கள் ஒன்றுபட உதவியது..

இது தான் வரதராஜன் அவென்யுவின் அம்பது வருட வரலாறு...

"ரஞ்சனி வரல்லயா..." என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சோமுவிடம் கேட்டேன்.

"இல்லப்பா....கணேஸ் வந்திட்டான் பார்..." அப்போது தான் கணேஸ் அவென்யுவிற்குள் நுழைந்தான். எங்களைப் பார்த்து கையை அசைத்தப் படி வந்தான்.

"தொப்பையும் தொந்தியுமா அசல் கணேசனாவே ஆயிட்டான்" சோமு சிரித்தப் படியே சொன்னான்.

கணேசனோடு ஜிம் போன அந்த பொற்காலங்கள் நினைவுக்கு வந்து போகவே நானும் சிரித்தேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின் பேச்சு அவரவர் வேலைப் பக்கம் திரும்பியது.

"என்னடா பேங்க் வேலை எல்லாம் சொகமாப் போவுதா?" சீனியைக் கேட்டான் சுதாகர்

"எங்கேய்யா எல்லாம் ஒரே போட்டா போட்டியாப் போவுது.... கட் த்ரோட் காம்ப்டஷின்... டார்கெட் வேற மாசம் மாசம் மேலேப் போயிட்டே இருக்கு... ஆறு லட்சம் பேர் இருக்க ஏரியாவுல்ல ஆறு கோடி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி டார்கெட்...பாப்புலேசன் கன்ட்ரோல் மாதிரி டார்கெட் கன்ட்ரோல்ன்னு ஒண்ணு வந்தா நல்லா இருக்கும்...."
சீனியின் பாதி பேச்சிலே என் மனம் எங்கெங்கோ அலைய ஆரம்பித்தது.. மேடையில் அப்பா உட்கார்ந்திருந்தார். அப்பாவை நான் பல முறை மேடையில் பார்த்திருக்கிறேன்.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர் கம்பீரம் கூடிக்கொண்டு போவதாகவே எனக்கு படும்...

மாமரத்தில் ஆங்காங்கு இருந்த பிஞ்சுகள் மீது என் கண்கள் போய் வந்தன...இந்த மாமரக் கன்னு நான் நட்டது என நினைக்கும் போது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது...

"நைட் பார்ட்டி இருக்குல்ல...." கணேஸ் கிசுகிசுப்பாய் கேட்டான்.

"அது இல்லாமலா..எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சி" சோமு பதில் சொன்னான்.

"என்னப் பார்டி... அதான் சாப்பாடு எல்லாம் இங்கேயே முடிக்கப் போறோமே..." சீனியின் மனைவி கேட்டாள்.

"ம்ம்ம் அம்மாடி இது இந்த திருட்டு பசங்க பார்ட்டி...நமக்கெல்லாம் அழைப்பு கிடையாது" எனக் கண்ணடித்துச் சிரித்தாள் கார்த்திகா.

"அப்படின்னா?" அவள் லேசான முறைப்போடு சீனியைப் பார்த்தாள்.

"இல்லம்மா வெறும் பியர் மட்டும் தான்...ஒரு வருசமாச்சு நான் பியர் அடிச்சு... ப்ளிஸ்" சீனியின் கெஞ்சல் பார்த்து எல்லாருக்கும் சிரிப்பு வந்தது.எனக்கு வேற என்னவோ ஞாபகம் வந்தது....

"ஒர்ரெ ஒரு பியர் தான்ப்பாஆஆஆஆ......" அந்த ஆ எபெக்ட் அப்பாவின் பெல்ட் என் முதுகின் நடு மத்தியில் கோடு ரோடு எல்லாம் போட்டு போனதால் என் வாயில் இருந்து வந்தது...

"எங்கேயிருந்துடா உனக்கு இந்த தைரியம் வந்துச்சு... நம்ம பரம்பரையிலே யாருமே இதை எல்லாம் தொட்டது இல்ல..." அப்பாவின் கோபம் குறையவில்லை...

"நாட்டுல்ல மக்களை குடிமக்கள்ன்னு அரசாங்கமே கூப்பிடுது..... ஆனா தம் மக்கள் குடிச்சா அப்பாக்களுக்கு பொறுக்க மாட்டேங்குது... அரசாங்கம் சொல்லுறதை கேப்ப்பேனா...இல்ல அப்பா சொல்லுறதைக் கேப்பேனாஆஆஆஆஆஆ" என் பேச்சு முடிவதற்குள் அடுத்த ரவுண்ட் ரோடு போடும் வேலையை ஆரம்பமாக மீண்டும் அதே ஆ எபெக்ட் என்னிலிருந்து வெளிபட்டது...

"டேய் மாப்பிள்ளை.. நீ இவனைப் பெத்ததுக்கு பேசாம நைட் ஷோவுக்குப் போயிருக்கலாம்டா.. விடு விடு இன்னும் எதுக்கு உன் கையை புண்ணாக்கிட்டு இருக்க..." சொன்னது என் மாமா.. அந்த ஆளுக்கும் எனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் தான்.


அந்தாளு என்னை எங்க அப்பா கிட்ட போட்டுக் கொடுக்கறது ஒண்ணும் புதுசு இல்ல..வழக்கமா நடக்குறது தான்... ஆனா எப்பவும் இல்லமா எனக்கு இப்போ அந்த சந்தேகம் ரொம்ப வலுவாச்சு.. நான் பொறந்ததுக்கும் அப்பா நைட் ஷோ போகறதுக்கும் என்ன சம்பந்தம்..அடி வாங்கிய வேகத்தில் மூளை வேறு கொஞ்சம் மெதுவாய் யோசித்தது....பின்னாளில் ஒரு பொழுதில் அந்த விவரமெல்லாம் தெரிந்தப் பின் மாமாவோடு உட்கார்ந்து கள் குடிக்கும் போது மாமாவைப் பார்த்து"யோவ் மாமா உன்னிய பெத்ததுக்கு தாத்தா ராத்திரி வயல் காவலுக்குப் போயிருக்கலாம்ய்யா .. வயலாவது மிஞ்சியிருக்கும்.. குடும்பமாவது செழிச்சுருக்கும்ன்னு " டயலாக் விட்டு நான் தீத்துகிட்டது தனிக்கதை.

"பத்தாம் கிளாஸ் ப்ரீட்சையிலே தேறுவானான்னு தெரியல்ல... பதினைஞ்சு வயசுல்ல பீர் கேக்குது....இவனை எல்லாம்...." மறுபடியும் பெல்ட் உயர கிளம்பியது....

"அப்பா......." அது என் குரல் இல்லை....அவனே தான் .. என் அண்ணன்... அவன் தான் அப்பாவைக் கூப்பிட்டான்.

"ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துருச்சுப்பா....நான் தான்ப்பா ஸ்கூல் பர்ஸ்ட்.... 1200க்கு 1162 மார்க்ப்பா...."

அப்பாவின் பெல்ட் என் மீது லேசாய் உரசியப் படி தரையில் விழுந்து நாதியற்று கிடந்தது... அந்த நிமிடம் எனக்கும் அதுக்கும் அதிக வித்தியாசம் இல்லை..

"உன்னோட இந்தச் சாதனைப் பிரதாபத்தைக் கேக்குறதுக்கு முன்னாடி இன்னும் ஒரு அம்பது நூறு பெல்ட்டடி வாங்கி நான் அல்பாயுசுல்ல போயிருக்கலாம்டா..." எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்

சரவணன் என் அண்ணன் தான் ஆனால் ஏனோ அவனை எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை.. அவனுக்கு என்னைப் பிடிக்குமா நான் என்றுமே தெரிந்து கொள்ள முயன்றதில்லை...

தொடரும்

Thursday, January 24, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 1

வரதராஜன் அவென்யூ.... என் வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான் கழிச்ச இடம்...வரதராஜன் அவென்யு பரபரப்பான சென்னை நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த ஒரு பதட்டமில்லாத குடியிருப்பு பகுதி. வாசலில் எம்.ஜி.ஆர் ஆட்டோ ஸ்டாண்ட். அதுக்குப் பக்கத்துல்ல ஒரு பொட்டி கடை..அந்தக் கடைக்கு பேர் "காகா" கடை.. பெயர் காரணம் இன்னி வரைக்கும் தெரியாது.. நான், சீனி,சோமு, சுதாகர்,கணேஸ் எல்லாம் முதல் முதலா திருட்டு தம் அடிக்க காசு சேர்த்து ஒரு சிசர்ஸ் வாங்குனோம்... அந்த ஒரு சிகரெட்டை அஞ்சு பேர் இழுத்தோம்... அப்புறம் வீட்டுல்ல அகப்பட்டு அகம் புறம் எல்லாம் அல்லல் பட்டது ஒரு தனி புராணம்.

காகா கடைக்கு நாலு கடை தள்ளி மணி சைக்கிள் கடை... ஹவர் சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமிடம்.. அரை ஹவருக்கு எட்டணா.. ஒரு சைக்கிளை இரண்டு பேர் எடுத்துப்போம்.. ஆளுக்கு நாலணா..சீனி தான் நமக்கு செட்... பயலுக்கு சைக்கிள் ஓட்டவே பயம்... அதுன்னாலே நமக்கு எக்ஸ்ட்ராவா அஞ்சு பத்து நிமிசம் சிக்கும்...மாடி வீட்டு கார்த்திகா...கடைசி வீட்டு ரஞ்சனி இந்தக் கும்பல் முன்னாடியும் பின்னாடியும் அந்தச் சைக்கிள்ல்ல போய் தான் சீன் எல்லாம் போடுவோம்...அஞ்சாம் கிளாஸ்ல்ல இருந்து பத்தாம் கிளாஸ் வரைக்கும் இந்த சைக்கிள் சாகசம் எல்லாம் தொடர்ந்தது..அப்புறம் ஏனோ கார்த்திகா, ரஞ்சனி மேல எல்லாம் இருந்த ஈர்ப்பு வெகுவா குறைஞ்சுப் போச்சு... அதுக்கெல்லாம் காரணம் என் கூட கணக்கு ட்யூசனுக்கு வந்த சங்கீதா மேல எனக்கு ஒரு இது வந்தது தான்னு அப்போ நினைச்சேன்...

பத்தாம் கிளாஸ் லீவுல்ல மணி சைக்கிள் கடை மாடியிலே மிலிட்டிரிகாரரு ஒருத்தர் ஜிம் ஆரம்பிச்சார், அர்னால்ட் நடிச்ச காமாண்டோ படத்து போஸ்ட்டரும் ராம்போ படத்து ஸ்டலோன் போஸ்ட்டரும் இன்ன பிற உடை அணிய மறுத்த அந்த கால சல்மான் கான்களும் கை மடக்கி மாரை நிமிர்த்தி கொண்டிருக்கும் போஸ்ட்டர்களும் ஜிம்க்கு எங்களை வா வா என அழைக்க... உள் பனியனை வெளியே போட்டுகிட்டு சாயங்காலம் ஆன நானும் கணேசும் கிளம்பிருவோம்... நான் ஸ்டலோனாவும் அவன் அர்னால்ட்டா ஆவுறதும் எங்க ஒரே லட்சியமா வலம் வந்த காலமது.. இதுல்ல கொடுமை என்னன்னா அர்னால்ட்டோட முழு பெயரை சொல்ல எங்களால் அந்த காலக் கட்டங்களில் முடிந்தது இல்லை... அர்னால்ட் சுவாசினேகர் என்ற அவர் பெயரை அர்னால்ட் சொஜ்ஜிநக்குனார் என்று கணேஸ் தான் கிட்டத்தட்ட வாய் சுளுக்காமல் சொல்லுவான்..

அந்த ஒரே காரணத்துக்காக அர்னால்ட்டின் அடுத்த வாரிசா அவனை அறிவித்து விட்டோம்.. இந்த ஜிம் எல்லாம் நல்லா தான் போச்சு....ஒரு நாள் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகி தூக்க கூடாத பாரத்தை தூக்க முடியாம தூக்கி என் கால் சுண்டு விரல் சிதற நான் சிலிப்பாக்குற வரைக்கும்.. அப்புறம் அடுத்து வந்த ஆஸ்பத்திரி செலவுகளால் என் ஜிம் செலவு நிறுத்தப்பட்டது..தென்னகம் ஒரு சில்வர்ஸ்டர் ஸ்ட்லோனை இழக்க வேண்டியதாய் போனது

வரதராஜன் அவென்யூவைச் சுத்தி ஏகப்பட்ட மரங்கள் இருக்கும்...நானே என் கையால நட்டு வச்ச மரங்களும் இருக்கு.. அப்படி ஒரு மாமரத்துக்கு அடியிலே தான் இப்போ நின்னுகிட்டு இருக்கேன். இதமானக் காற்று வந்து முகத்தில் மோதிப் போனது...நான் கட்டியிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன்.. மணி நாலேகால்... இன்னும் இரண்டு மணி நேரத்துல்ல எல்லாரும் வந்துருவாங்க...சீனி...கணேஸ்..சுதா...சோமு எல்லாரும் வந்துருவாங்க...அப்படியே யோசிச்சுகிட்டே மரத்தடி பெஞ்சுல்ல தலையைச் சாய்த்தேன்...

"சிவா.... சவுக்யமா... இந்த வாட்டியும் வீட்டுல்ல கூட்டிட்டு வர்றல்லயா?" கார்த்திகா இடுப்பில் அவள் இரண்டாவது பொண்ணு.. சின்ன வயசு கார்த்திகா மாதிரியே இருந்தாள்...

"இல்ல கார்த்தி.... அவங்க அப்பாவுக்கு ஓடம்பு சரியில்ல...அதான் வர முடியல்ல... வரணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டாப்பா" சிரித்தப் படி பதில் சொன்னேன்...

"ஹே சிவா...." சீனியே தான்... போன வருசம் வராதவன் இந்த வருசம் சீக்கிரமாவே வந்துட்டான். அவனைப் பார்த்தவுடனே எனக்குச் சந்தோசம் அப்படியே பொங்கிருச்சு. கார்த்திகாவின் வீட்டுகாரரும் எங்களோடு சேர்ந்து கொண்டார்... மரத்தடி கொஞ்சம் கொஞ்சமாய் களை கட்டியது... கார்த்திகா வீட்டில் இருந்து காபி பலகாரம் வந்தது...

சீனிக்கு போன வருசம் தான் கல்யாணம் ஆகி இருந்தது.. அவனோடு அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணையேக் காதலித்து கல்யாணம் பண்ணிகொண்டிருந்தான். அவளையும் கூட்டி வந்திருந்தான். அவளும் சட்டென எங்களோடு பழகிவிட்டாள். நல்ல கலகலப்பான ஜோடியாக தெரிந்தார்கள்... என்னவளின் நினைவு வந்தது.. அவ வந்திருந்தா இன்னும் கலகலப்பா இருந்து இருக்கும்..மனத்திற்குள் சொல்லிக்கொண்டேன்.

மணி அஞ்சரையை நெருங்கும் போது கிட்டத் தட்ட எல்லாருமே வந்து விட்டிருந்தார்கள்..கணேஸ் மட்டும் வரவில்லை.. சோமு அவன் மொபைலுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

முகம் கழுவிட்டு வரலாம்ன்னு எழுந்து வீட்டுக்கு கிளம்பினேன்...அப்போது வழியில் சங்கீதாவைப் பார்த்தேன்....

"ஹேய் சங்கீ என்ன இது.... போனத் தடவைப் பாத்தப்போவும் கேரியிங்க்கா தான் இருந்த.. இப்போவுமா... உன் வீட்டுகாரருக்கு ரொம்ப சவுகரியமான உத்யோகம் போலிருக்கு..."

"அடப்பாவி நீ என்னப் பாத்து ரெண்டு வருசம் ஆச்சு.... ஆனாலும் உனக்கு இன்னும் பழைய நக்கல் குறையல்லடா..... உனக்கு ஒரு அறை கொடுத்தது பத்தாதுடா... பத்து அறை கொடுத்துருக்கணும்..."
பரஸ்பர நல விசாரிப்புக்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கலாம்ன்னு சொல்லிட்டு வீட்டை நோக்கி கொஞ்சம் வேகமாகவே நடந்தேன்.

நடக்கும் போதே சங்கீதா என் கன்னத்தில் அறைந்த அந்த பழைய சம்பவம் மனத்தில் நிழலாடியது..அப்படியே கை அதுவாக கன்னம் சென்று தடவியது. உதட்டில் என்னையுமறியாமல் ஒரு புன்னகை.

காலம் தான் எவ்வளவு மருத்துவம் பார்க்கிறது..மனத்தில் ஏற்படும் எத்தனையோ காயங்கள் காலத்தின் சுழற்சியால் குணப்பட்டு போகிறது....அந்த விதத்துல்ல பத்து வருசத்துக்கு முந்தி சங்கீதா என் கன்னத்துல்ல அடிச்சது அன்னிக்கு ரொம்பவே பெரிய வேதனை...ஆனா இன்னிக்கு நினைச்சா சிரிப்பா வருது... விஷ்யம் பெரிசா ஒண்ணுமில்லங்க.... பார்க்க அழகா இருப்பா சங்கீதா பானுப்பிரியா மாதிரி கண்ணு...கொஞ்சம் மயக்கம்.. ரொம்பவே கிறக்கம்... இதுல்ல கூட இருந்த பசங்க எல்லாம் உசுப்பேத்த..மலையாள கரையோரம் நம்ம காதல் புயல் மையம் கொண்டுருச்சு... அப்போ வேற தலைவரோட முத்து படம் வேற வந்துச்சா.. அதுல்ல தலைவர் கேரளா போய் எல்லாரையும் கேப்பாரே.... ஆங் அதே தான் அதை தான் ஒரு சிகப்பு ஸ்கெட்ச் பேன் வச்சு ஒரு நல்ல ஏ4 பேப்பர்ல்ல எழுதி கீழே சிவா அப்படின்னு ஸ்டைலா கையெழுத்து போட்டு அவ கிட்டக் கொடுத்தேன்..பொண்ணுக்கு பளிச்சுன்னு கோபம் வந்து பளார்ன்னு அறைஞ்சுட்டா..

ஏத்திவிட்ட எல்லா பயல்களும் எட்டப்பனா மாறி ஓட்டமெடுக்க... ஒரு மாதிரியா போயிருச்சு...ஒரு வாரம் வாழ்க்கையே பிடிக்கல்ல..அதுக்கப்புறம் அடுத்த ஞாயித்துகிழமை. சங்கீதாவே என்னைப் பாக்க என் வீட்டுக்கு வந்தா...

"ஏன் ட்யூசனுக்கு வர்றல்ல?" ரொம்ப உரிமையாக் கேட்டா."

" .......... "
பேசல்லன்னா பரவாயில்ல... இந்தா ஏ4 பேப்பர் ரெட் ஸ்கெட்ச் பேன் எழுதிக் காட்டு" என்றாள்

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது...அந்த சிரிப்பின் ஊடே என் ஆயுசுக்கு நான் கொண்டாடும் படியான ஒரு சினேகிதியாய் சங்கீதா எனக்கு கிடைத்தாள்..என்னவளின் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்த மூஞ்சிக்கு ( என் மூஞ்சி தான்) இப்படி ஒரு தேவதை அமையறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்..பேசாம தாலியைக் கட்டுடா என அன்பு கட்டளை போட்டவர்களில் முதன்மையானவள் அவளே....

வீட்டுக்குப் போய் முகம் கை கால் எல்லாம் கழுவிட்டு மதியம் தேய்ச்சு வாங்குன சட்டைப் பேண்ட் போட்டுகிட்டு வாசலுக்கு வந்தேன்....

"இருடா நானும் வர்றேன்" என கிளம்பிய அப்பாவை ஆச்சரியமாய் பார்த்தேன்.

அப்பா வருவதற்குள் நான் சொல்ல வேண்டிய விசயம் ஒண்ணுருக்கு....
"ஆமாங்க என் பேர் சிவகுமார்...சிவான்னு கூப்பிடுவாங்க....சின்ன வயசுல்ல சிறுத்தை சிவான்னு செல்லமாக் கூப்பிடுவாங்க...இப்போ நான் இருக்கது பெங்களூர்ல்ல... வேலை பாக்குறது..பிளாக் எல்லாம் பிளாக் பண்ணாத ஒரு நல்ல ஐடி கம்பெனியிலே... எனக்கு ஒரு தடவை மட்டும் கல்யாணம் ஆயிருச்சு... ஒரு பொண்டாட்டி ஒரு பொண்ணு.. அப்பா..அம்மா இருக்கது சென்னையிலே.. நான் பிறந்து வளந்த வரதராஜன் அவென்யூல்ல...இப்போ நான் இங்கே வந்துருக்குது... வரதராஜன் அவென்யூவோட ஆண்டு விழாவுக்கு....அவென்யூ கட்டி சரியா அம்பது வருசம் ஆயிருச்சு... அம்பதாவது ஆண்டு விழா இன்னும் அரை மணி நேரத்துல்ல துவங்கப் போகுது... அதுக்கு தான் எல்லாரும் வந்துருக்காங்க....

உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் எங்க வீட்டு வேப்பமரத்து காத்து போல வராதுன்னு நான் அடிக்கடி என்னவளிடம் சொல்வது உண்டு... இப்பவும் சொல்லணும் போல இருந்துச்சு...அந்த அளவுக்கு அம்சமா அந்த காத்து என்னச் சுத்தி வந்துச்சு.... ஊருக்குப் போனதும் உன் புராணம அவசியம் பாடுறேன்ப்பா என காற்றின் காதுகளில் மெதுவாக கிசுகிசுத்தேன்..

அப்பாவின் கரம் என் தோள் மேல் விழுந்தது.....அவர் கையில் ஒரு பார்சல்....

"என்னதுப்பா இது?"

"பரிசு....சரவணன் பேர்ல்ல...அவென்யூ பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...." அப்பா என்னோடு நடக்க ஆரம்பித்தார்...

நான் பதில் எதுவும் சொல்லவில்லை... என் முகத்தில் அறைந்த வேப்ப காற்று அந்த நிமிடத்தில் வெப்பம் கொப்பளித்தது....
உங்க கிட்டச் சொல்லுறதுக்கு என்ன..... என் அண்ணன் தான் சரவணன்... என் அண்ணன் பேர் தான் சரவணன்...

தொடரும்